சிக்கலு சிக்கலு சிக்கலுனாக்கா ஓரமா ஒத்திக்கோமா…” ஓடிக்கொண்டிருந்த பாடலை நிறுத்திய பிரஷாந்த், “இதே தான் வேணுமா உங்களுக்கு?” என்றான் யோசனையாய்.
அவன் எதிரே நின்றிருந்த ஆறேழு பதின் பருவ விடலையர்கள் “இதே தான் வேணும்” என்று சொல்ல, “எல்லாருமே இது மாதிரி தான் எடுப்பாங்க பசங்களா! வரப்போறது செமி ஃபைனல்! நம்ம டேன்ஸ் யூனிக்கா இருக்க வேண்டாமா? நான் சொல்ற பாட்டெல்லாம் எடுத்துப்போம்!” என்றான்.
‘டான்ஸ் மாஸ்டர் சுற்று!’க்காக ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு நடன கலைஞரை தேர்வு செய்திருக்க இவன் அணி பிரபுதேவா’வை தேர்ந்தெடுத்திருந்தனர். பிரஷாந்துக்கு நடனத்தின் மீது ஈர்ப்பு வரவே பிரபுதேவா’வின் நடனம் தான் காரணம் என்பது அவனை சுற்றி இருக்கும் அசையா பொருட்களுக்கு கூட தெரியும். அத்தனை பிடித்தம் அவனுக்கு!
இப்போது நடனமே தனது ஆஸ்த்தான நடன கலைஞரை சுற்றி தான் என்றதும் இயல்பாய் இருக்கும் அவனது உற்சாகமும் துள்ளலும் பத்து மடங்கு ஏறிப்போனதில், எதிரே நிற்ப்பவர்களின் அதிருப்தி அவன் கண்களை எட்டவில்லை.
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்!” என்று ஓட, அப்பட்டமான அதிருப்தி அனைவருக்கும்.
நான்கு வரி போனப்பின், “கட்டான பொண்ணு ரொமேன்டிக்கா… கண்ணால சிக்னல் காட்டிட்டா! என்னோட லவ்வில் செட்டாகிட்டா… நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா!” என்று வேறொன்றை ஓட விட, “ப்ச்!” என சத்தமாய் முனக ஆரம்பித்தனர்.
அப்பவும் அடங்காமல், “வாடி வாடி நாட்டுக்கட்ட… வசமா வந்து மாட்டிக்கிட்ட!” ஒலிக்க விட்டவன் கூடவே சேர்ந்து ஆட, அங்கிருந்து விடலைகளில் ரெண்டு மூன்று நகர்ந்து போனது.
“லவ்’ல இருந்து நேரா டேன்ஸ் பீட்’க்கு போய்டலாம்!” என்றவன், “நான் சால்ட்டு கொட்டா, நீ சைதா பேட்ட… நான் வறுத்தகறி, நீ அவிச்ச முட்ட…” பாடலை ரசித்துக்கொண்டிருக்க, “சார் மொபைல் அடிக்குது!” என்று உலுக்கினர்.
“நீங்க பாட்டு செலெக்ட் பண்ணிட்டு இருங்க, பேசிட்டு வந்துடுறேன்” என்றவன், “ஹலோ, சொல்லுங்க மேடம்” என்றான். மறுமுனையில் அவன் வேலை செய்யும் தொலைக்காட்சியின் ப்ரோக்ராம் ஹெட் தான் அழைத்திருந்தார்.
சிரித்தமுகமாய் ஆரம்பித்த அவன் பேச்சு போகப்போக கூம்பிப்போக, “மேம், அவங்க சொல்றதை விட நான் சொல்ற சாங்க்ஸ் எல்லாம் செம்மையா இருக்கும் மேம்” என்றான் மனம் கேளாமல்.
மறுமுனையோ, “அவங்களுக்கு ட்ரைனிங் குடுக்க தான் உங்களை ஹயர் பண்ணிருக்காங்க! அவங்க கேட்குறத மட்டும் செஞ்சுக்குடுங்க பிரஷாந்த். நம்ம சேனல் பங்க்ஷன்’க்கு எப்போதும் போல உங்க இஷ்டப்படி செய்ங்களேன்!” என்றுவிட, ‘சரியை’ தவிர வேறொன்றும் சொல்ல முடியவில்லை அவனால்.
‘கிளாசிக்’கோட வேல்யூ தெரியாத டு’கே கெடா மாடுங்க! சைடு கேப்ல மிஸ்’க்கிட்ட மாட்டிவிட்டுடுச்சுங்க’ எரிச்சலாய் புலம்பிக்கொண்டே சென்றவன், அவனது அசிஸ்டன்டிடம் அவர்களுக்கு பயிற்சி கொடுக்க சொல்லிவிட்டு வெளியேறினான்.
அவன் நகர்ந்ததும், ‘ட்ரெண்டிங் தெரியாத நைன்ட்டீஸ் அங்கிள் கிட்ட இருந்து தப்பிச்சோம்’ என அவர்கள் கிண்டலடிப்பது இவன் காதுப்படவே கேட்டது. ஆனாலும் கண்டிக்க முடியாத சூழல்.
அவன் ஒன்றும் சினிமா பேக்ரவுண்டில் வளர்ந்து அநாயாசமாய் இதற்குள் நுழைந்தவன் அல்ல… நூறு பேரில் ஒருவனாய் க்ரூப் டேன்சராய், திறமையை மட்டுமே நம்பி வந்து போராடியவனின் திறம் கண்டு, தனக்கு உதவியாளனாய் வைத்துக்கொண்டார் பிரபல டேன்ஸ் மாஸ்டர் சுதர்ஷன். அவரிடம் இருந்து கலை கற்று மேலும் மெருகேறியவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடன அமைப்பாளராக முன்னேறியிருக்க, இப்போது தான் ஒரு படத்தில் நடனம் இயற்ற அவனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
‘படம் ரிலீஸ் ஆகட்டும் டா! அப்போ தெரியும் என் லெவல் என்னன்னு!’ தலைகணமாய் அல்லாது தன்னம்பிக்கைக்காக சொல்லிக்கொண்டு நடந்தவனின் அலைபேசி மீண்டும் இசைத்தது. எடுத்து பார்த்தவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.
“பவித்ரா கூப்பிடுறா?” என ஆச்சர்யப்பட்டவன் உடனே அழைப்பை ஏற்று, “ஹே பவி! மாத்தி கூப்பிட்டுட்டியா?” என்றான் அப்படி தான் இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில்.
“இல்ல இல்ல… உங்கக்கிட்ட பேச தான் கூப்பிட்டேன்!” என்று அவள் சொன்னதும், ‘என்னடா உலக அதிசயம் எல்லாம் நடக்குது இன்னைக்கு!’ என மீண்டும் ஷாக் ஆனவன் அதை மறைத்துக்கொண்டு, “சொல்லு பவி என்ன விஷயம்?” என்றான்.
“அது…” அவள் தயங்க, “நேர்ல பார்த்து பேசலாமா?” என்றான் பட்டென! அதை எப்படி கேட்பது என்ற தயக்கத்தில் இருந்தவளுக்கு அவனே இப்படி ஒரு வாய்ப்பு கொடுக்கவும் உடனே சரியென்றவள் இடத்தையும் நேரத்தையும் சொல்லிவிட்டு, அவனுக்கு முதலாய் சென்று காத்திருக்கலானாள்.
திரைத்துறையின் உச்ச புகழில் நிற்கும் டேன்ஸ் மாஸ்டர் சுதர்ஷனின் ஒரே மகள் தான் பவித்ரா. அம்மா இல்லாத குறை தெரியாது கேட்டதை எல்லாம் செய்து கொடுத்து வளர்த்தவர் முதல் முறையாய் மூக்கை நுழைத்தது பவித்ராவின் திருமண விஷயத்தில் தான்.
சிறு வயதில் இருந்தே பவித்ராக்கு நடனத்தை பயிற்றுவிக்க எத்தனை எத்தனை விதமாய் முயன்றிருப்பார் அவர்? ம்ஹும்! அவர் ஆடுவதை கூட ஆர்வத்துடன் நோக்க மாட்டாள் அவள். ஒரு கட்டத்தில் தன் நடன வாழ்வுக்கு வாரிசே அமையாதோ என்ற தவிப்பில் நடனத்தை அவள் மீது அவர் திணிக்கப்பார்க்க, ஒரு அளவுக்கு மேல் அவளிடம் அவரால் போராட முடியவில்லை. அப்படியே விட்டுவிட்டார்.
ஆனால், தனக்கு கலை வாரிசு இல்லை என்பது அவரது மிகப்பெரும் மனக்குறை. போகும் இடத்தில் எல்லாம் ‘அப்பா நடன சக்கரவர்த்தி… பெண்ணுக்கோ நடனமே ஆகாது’ என்று கிண்டலாய் விமர்சனமாய் பலர் பேச பேச, வருத்தமாய் இருக்கும்! தன் சக கலைஞர்களின் வாரிசுகள் எல்லாம் தந்தையின் பெயர் பறைசாற்ற ஆரம்பித்திருந்த நேரத்தில் தான், அவர் கண்களில் சிக்கினான் பிரஷாந்த்.
கிட்டத்தட்ட அவரை போலவே! அவரை அவனிடம் கண்டார்! இப்படியொரு மகன் தனக்கு வாரிசாய் கிடைத்திருக்கக்கூடாதா என்று சில நாட்களிலேயே அவரை ஏங்க வைத்திருந்தான் பிரஷாந்த். அதே எண்ணத்தில் இருந்தவருக்கு பிரஷாந்தின் நாட்டம் தன் மகள் மீது படிவதை கண்டதும் திடீரென புது எண்ணம்! ஏதோ அவர் கவலைகள் எல்லாம் ஒரு நொடியில் பறந்துவிட்டதை போன்றதொரு பிரம்மை.
‘வேண்டவே வேண்டாம் விருப்பமே இல்லை!’ என்று தீர்மானமாய் சொன்னவளைக்கூட கெஞ்சி மிஞ்சி போன வாரத்தில் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து நிச்சயத்தை முடித்துவிட்டிருந்தார் சுதர்ஷன்.
ஆர்டர் எடுக்க வந்தவரிடம் இன்னொரு ஆள் வரவேண்டும் என்று சொல்லிவிட்டு அமைதியாய் கண்மூடி அமர்ந்திருந்த பவித்ராக்கு சற்று முன்னே தந்தையுடன் நடந்த வாக்குவாதம் நிழலாடியது.
“அப்பா… இது வொர்க் அவுட் ஆகாதுப்பா! பிரஷாந்த் நல்ல பையன் தான்… ரொம்ப ஜோவியல்… பொறுமை அதிகம்… எந்த கெட்ட பழக்கமும் இல்லை! ஆனா…” அவள் சொல்ல வரும்போதே,
“அவனை பத்தி இவ்ளோ சொல்ற… உன்னை விட அவனுக்கு யார் மேட்ச் ஆவா?” என்று மடக்கினார் சுதர்ஷன்.
“அவருக்கு நான் மேட்ச் ஆவேன்! ஆனா எனக்கு தான் அவர் மேட்ச் இல்ல!” என்றவள், “நான் அவரை கம்மியா சொல்லல! நான் எதிர்ப்பார்க்குற குவாலிட்டீஸ் அவர்ட்ட இல்லப்பா!” என்றாள் அலுத்துப்போனவளாய்.
“பழகியே பார்க்காம எப்படி சொல்ல முடியும்?” என்று கேட்ட சுதர்ஷன், “இன்னும் மூனே வருஷம்! நீ வேணுன்னா பாரு சவுத் இந்தியால லீடிங் கொரியோக்ராபர்’ரா வருவான்! ஹி ஹேஸ் தட் பொடென்ஷியல்” என்றார் அத்தனை உறுதியாய்.
“ஐயோ ப்பா! ஏன் ப்பா புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க!” அவள் முகமே வதங்கிப்போனது.
“இங்க பாரு பவித்ரா… சின்னதுல இருந்து எல்லாமே உன் விருப்பத்துக்கு தான் விட்டுருக்கேன்! ஆனா, இந்த கல்யாணம் கண்டிப்பா ப்ரஷாந்த் கூட நடந்தே ஆகணும்! நான் செய்யுறது உனக்கு எவ்ளோ நல்லதுன்னு அவனோட பழகின பிறகு தான் உனக்கு புரியும்!” என்றவர்,
“அவன் தான் என்னோட கலைத்துறை வாரிசு! அதை மாத்தனும்ன்னு யார் நினைச்சாலும் விட மாட்டேன்!” ஒரு மாதிரி கண்டிப்பான குரலில் சொன்னவர் எழுந்து போய்விட்டார்.
அப்படியே தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தவளுக்கு அடுத்த வாய்ப்பாய் பிரஷாந்த் மட்டுமே தோன்ற யோசிக்காமல் அழைத்து நேரில் வர சொல்லிவிட்டாள்.
ஒருவித பரபரப்புடன் அந்த திறந்தவெளி உணவகத்துக்குள் நுழைந்தான் பிரஷாந்த். சுதர்சனத்திடம் உதவியாளனாய் சேர்ந்ததில் இருந்தே அவனுக்கு பவித்ராவை தெரியும். அவள் அழகு தான் முதலில் அவனை ஈர்த்தது என்றாலும் ‘இது தவறு’ என தன்னையே கண்டித்துக்கொண்டிந்தான். ஆனாலும் அவன் சொல் கேட்க்காத மனது சிறுது சிறிதாய் அவளை ரசிக்க ஆரம்பித்து, அவளிலேயே லயிக்க தொடங்கிவிட்டது.
நிச்சயமாய் இது நடக்காது! நடக்க வாய்ப்பே இல்லை என்று முழுமையாய் உணர்ந்து அவளை ‘கிரஷ்’ லிஸ்ட்டில் அவன் தள்ளிவிட்டு ரசிப்பை தொடர, சுதர்சனமோ ‘நீதான்டா என் மருமகன்’ என தெலுங்கு டப்பிங் பட டைட்டில் போல அறிவித்துவிட்டு அவன் ஷாக்கை குறைக்கும் முன்னே ரகசியமாய் நிச்சயமும் நடத்திவிட்டார்.
இதுவரை பெரிதான பேச்சுவார்த்தைகள் என்று இருவருக்குமே இருந்தது இல்லை என்பதால் பவியின் அழைப்பை பெரும் ஆவலுடனே எதிர்க்கொண்டான் பிரஷாந்த்.