“ஜோக். அவங்க ப்ரபசனல் கில்லர்ஸா? வாட் எ ஜோக்?…” என்றவனின் இதழ்கள் லேசாய் நெளிந்தது.
“ஹைடெக் கில்லர்ஸ் டீடெய்ல்ஸ் வேணும்னா நீ அனுப்பேன் பவன். கூடவே பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்ன்ற கேப்ஷனோட என் சார்பா ஒரு பொக்கே…” என்றான் அமைதியாக.
அவனின் அமைதியும் ஒருவகையில் அச்சமூட்டுவதாய் இருந்தது அங்கே சுற்றி இருந்தவர்களுக்கு.
“ட்ரஸ்ட் தான் பாஸ் அவரோட எய்ம்…”
“ஐ க்னோ பவன்…” சொல்லிக்கொண்டே அடுத்த காயை கவனமாய் நகர்த்தினான்.
“ஆல்ரெடி டூ அட்டம்ப்ட். இது தேர்ட் டைம்…”
இதை சொல்லும் பொழுதே நக்ஷத்ராவின் பேச்சும் ஞாபகம் வந்தது. அவளுக்கும் தன்னை கொல்ல சதி நடந்திருப்பது தெரிந்திருப்பதை போல் இருக்கிறதே? எப்படி? என்ற யோசனையும் ஒட்டிக்கொண்டது.
“பவன், அட்டம்ப்ட் கார்ல மட்டுமில்லை. தெரியும் தானே? அன்னைக்கு அந்த பார்ட்டில இன்விடேஷன் இல்லாம யாரும் வந்திருக்க முடியாது. செர்ச்…”
“ஓவர் பாஸ். ஆள் எப்படியோ எஸ்கேப். பட் டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணியாச்சு. யார் வேலைன்னும் தெரிஞ்சிருச்சே….” பவன் ஷேஷாவின் பதிலுக்காக காத்திருக்க அவன் தீவிரமான யோசனையில் இருந்தவன் உடனே,
“செக்…” என்றான்.
செக் வைத்தது என்னவோ விளையாட்டில் தான். ஆனால் சொல்லியதன் அர்த்தம் பவனிற்கு புரிந்தது.
“எஸ் பாஸ்…” என பவன் திருப்தியுடன் சொல்லியதும், உணவை திரும்பி பார்த்த ஷேஷா அதை கொண்டுவரும்படி சைகை காண்பிக்க அவனின் டேபிளில் வைக்கப்பட்டது.
“ட்ரக் இன்ஜெக்ட் பன்ற அளவுக்கு தைரியம் வந்திருச்சே. என்னை தொட யோசிச்சிருக்கனுமே. இனி யோசிக்கட்டும். இப்படி முட்டாள்தனமான காரியம் செஞ்சதுக்கு கண்டிப்பா அனுபவிக்கனுமே?…”
“எஸ் பாஸ்…” என்றான் பவன்.
“நானும் அந்த நேரம் பிசகிட்டேன். சீட்பெல்ட் போட்டிருந்திருக்கலாம். பட்…” என்று பேச்சை முடித்தான்.
“எஸ் பாஸ்…” வழக்கம் போல பவன்.
ஆனால் மனதிற்குள் அவனுக்கு சிறு ஆதங்கமும் கூட. அன்று தனியே அப்படி கிளம்பி செல்லாமல் இருந்திருந்தால் அந்த விபத்தையே தவிர்த்திருக்கலாமே? நொடியில் கண்ணை மறைத்து கிளம்பியதை போல அல்லவா சென்றான்.
ஆனால் அதை ஷேஷாவிடம் கேட்க முடியாது. அந்த அதிகாரம் யாருக்கும் இல்லை.
புதிய ரக கார் அத்தனை பாதுகாப்புகள் கொண்டதிலேயே கைவரிசையை காட்டியிருக்கிறார்களே? எத்தனை துணிச்சல் என தோன்றியது.
அன்று இருந்தவர்களை விசாரிக்கும் பணி துரிதமாக ரகசியமாகவும் நடந்துகொண்டிருந்தது. நிச்சயம் இங்கே மும்பையிலும் அவருக்கு உதவ ஆள் இல்லாமல் இல்லை.
இந்த கழுகு கூட்டத்தில் பல கறுப்பாடுகள். அதில் எந்த ஆடு என்று கண்டுபிடிக்க வேண்டும்.
அதனுடன் ஷேஷாவுக்கு பாதுகாப்பையும் அதிகப்படுத்த வேண்டும் என நினைத்தான்.
“பவன்…”
“எஸ் பாஸ்…”
“நக்ஷத்ரா…” என்றதுமே ஷேஷாவின் கைகளுக்குள் சில புகைப்படங்கள் வந்துவிட ஒவ்வொன்றாய் பார்த்தான்.
முகத்தில் எந்த உணர்வும் இல்லை. விழிகள் மட்டும் தனக்குள் ஓரமாய் வலிக்கு இடம்செய்து தந்தது.
———————————————————–
அந்த ரெக்கார்டிங் தியேட்டரின் அறைக்குள் தனியே திரையில் பாவனைகளை சுமந்தபடி மௌனமாய் வாயசைத்த பெண்ணுக்கு உயிரை கொடுத்து குரல் கொடுத்துக்கொண்டு இருந்தாள் நக்ஷத்ரா.
உருக உருக காதல் ரசம் சொட்டும் வசனங்கள். அத்தனை உணர்வுப்பூர்வமாக மொத்த உணர்ச்சிகளையும் தன் குரலில் நிரப்பி பேசிக்கொண்டிருக்க அவளின் டப்பிங் பகுதி நிறைவுற்றது.
அத்தனை திருத்தமாக இருந்தது அவளின் ஹிந்தி உச்சரிப்பு. அத்தனை அட்சுரசுத்தமாக பொருந்தியும் வந்தது.
பேசி முடித்து வெளியே வந்தவள் தொண்டையை சுடுநீரினால் இதமாக்கிக்கொண்டாள்.
“பையா, கிளம்புறேன். அடுத்து நாளை மறுநாள் தானே டப்பிங்?…” என்று கேட்க,
“என்ன நக்ஷத்ரா அதுக்குக்குள்ள கிளம்பிட்ட? உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும். நீ என் ரூமுக்கு வரனும்…” என்று அசடு வழிய அவளின் தோளை தடவியபடி பேசினான் அந்த ஐம்பது வயது கிழவன்.
அவனின் தொடுகையை நாசூக்காக விலக்கியவள் அங்கிருந்து சென்றால் போதும் என்பதை போல ஆகிற்று.
கடந்த சில நாட்களாகவே அவன் அப்படித்தான் நடந்துகொள்கிறான். பகைத்துக்கொள்ளவும் முடியாமல் எதிர்த்து கேள்வி கேட்கவும் முடியாமல் தவித்து வருகிறாள்.
“இல்ல பையா. இங்கயே சொல்லுங்க. எனக்கு நேரமாகுது…” என்று பார்வையை சுழற்றியபடி பேச தன்ராஜ் மொத்த பற்களையும் காட்டி சிரித்தான்.
“இன்னொரு சீரியலுக்கு டப்பிங் பண்ண சான்ஸ் கேட்டிருந்தியே. பழைய டப்பிங் லேடி ரிலீவ் ஆகிட்டாங்க போல. உன்னை தான் ரெக்கமண்ட் பண்ணலாம்ன்னு இருக்கேன். நீ என்னன்னா?…” என்று அவளுக்கு ஆசை காண்பிப்பதை போல சொல்ல,
“அதான் இங்க சொல்லிட்டீங்களே பையா…” என்றவள் எந்த சீரியல் என்று கேட்டு சம்பளம் என்ன ஏதென்று அங்கேயே கேட்க எரிச்சலானது தன்ராஜ்க்கு.
“ரூம்க்கு வான்னு சொல்றேன்ல. இதை இங்க வச்சே பேசனுமா?…” என்றான் தன் முகத்தை காண்பித்து.
முன்பு போல என்றால் கூட நம்பி சென்றிருப்பாள். இப்போது அவனின் நோக்கம் புரிந்திருக்க நிச்சயம் தன்னை காத்துக்கொள்ளவேண்டியே முடிந்தளவு தனியே சந்திக்கும் வாய்ப்புகளை தவிர்த்து வந்தாள்.
அப்படியும் சிலநேரங்களில் தனிமையை அவன் ஏற்படுத்த கண்ணீர் முட்டிக்கொண்டு வரும். ஏதேதோ பேசி பேசி தப்பித்துவிடுவாள்.
இன்றைக்கு இப்படி கட்டாயப்படுத்தி பேசுகிறானே என்று ஆத்திரமும் கிளம்ப அவனை எப்படி கையாள்வது என்று தெரியாமல் பரிதவித்து நின்றாள்.
“தீதி, உங்க ஆட்டோ ட்ரைவர் வந்துட்டாரு. வேற சவாரி இருக்காம். வெரசா வர சொன்னாரு…” என ஆபீஸ் பாய் வந்து நக்ஷத்ராவை அழைத்ததும்,
“நான் கிளம்பறேன் பையா. அவர் போய்ட்டா இந்த நைட்ல வேற ஆட்டோ கிடைக்கிறது கஷ்டம்…” என்று தனது வாட்டர் பாட்டில் சகிதம் தன் பொருட்களை எடுத்து உள்ளே வைத்துக்கொண்டு தன்ராஜ் பதிலுக்கு காத்திராமல் கிளம்பிவிட்டாள்.
“என்ன நினைச்சுட்டு இருக்க? நான் பேசிட்டு இருக்கும் போது இப்படித்தான் வருவியா?…” என்ற கேட்டு இன்னும் இரண்டு அறை கொடுக்க வாங்கிக்கொண்டவன் அமைதியாக நின்றான்.
தெரிந்துதானே அவன் செய்ததும். நக்ஷத்ராவின் கலங்கிய முகத்தை பார்த்துவிட்டு தானே ஓடிவந்தான்.
“இனி இன்னொருதடவை இப்படி செஞ்ச?…” என்று எச்சரித்துவிட்டு அவர் கிளம்பிவிட அங்கிருந்த டெக்னீஷியன்ஸ் அவனை ஒரு பரிதாப பார்வை பார்த்துவிட்டு தங்கள் வேலையில் மூழ்கிவிட்டார்கள்.
தன்ராஜ் இணை தயாரிப்பாளரும், ரெக்கார்டிங் ஒருங்கிணைப்பாளர் சங்கத்தில் முக்கிய பதவியில் இருப்பவன்.
அந்த துறையில் இப்படி நிறைய பெண்களை தனது இச்சைக்கு பலியாக்கிக்கொண்டிருப்பவன்.
சமீபமாக தான் அந்த சீரியலில் சில மாதமாக டப்பிங் பேசி வரும் நக்ஷத்ராவின் பக்கம் பார்வை திரும்பியது.
வேறொரு சீரியலிலும், இன்னும் ஒருசில சீரியலிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தவளுக்கு குரல் வளத்துக்காக தன் சீரியலில் நாயகிக்கு குரல் கொடுக்க பேசப்பட்டு வந்தவள் தான் நக்ஷத்ரா.
தன்ராஜ் தமிழாக இருந்தாலும் நக்ஷத்ரா தமிழகத்தை சேர்ந்தவள் என்று கொஞ்சமும் கண்டுகொள்ளமுடியவில்லை.
தெளிவான இந்தி பேச்சும், சரளமான உச்சரிப்பும் அவளுக்கு கைகொடுக்க அவளை முதலில் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தவன் காலபோக்கில் கொஞ்சம் கொஞ்சமாய் அவளின் மீது பார்வையை பதிக்க துவங்கியிருந்தான்.
அதன் பின்னர் இன்னுமே பையா என்று அழைக்க துவங்க முதலில் ஸார் என்று சொல் என்று ஆட்சேபித்தவன் பின் கூப்பிட்டால் கூப்பிட்டுகொள் என்பதை போல அதையும் துடைத்துவிட்டான்.
அந்த ரெக்கார்டிங் தியேட்டர் சென்றுவிட்டு வீடு திரும்பும் ஒவ்வொரு நாளும் போராட்டமானது நக்ஷத்ராவிற்கு.
நேரடியாக இன்னும் அதை வெளிப்படுத்தாத ஒரு நம்பிக்கையில் அவள் சென்றுவர இப்போதோ வலுக்கட்டாயமாக அழைக்க மிரண்டுபோனாள்.
ஒரு அவசியத்திற்கு என வாங்கியிருந்த அட்வாஸ் தொகை, கையெப்பமிட்டு தந்திருக்கும் பாண்ட் என்று அவளின் பயம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.
இன்னும் சில நாட்களே. வாங்கிய தொகையை திருப்பி கட்டிவிட்டு இதற்கு ஒரு கும்பிடு போட்டுவிடவேண்டும் என்ற முடிவில் இருந்தாள்.
இந்த ஐந்து வருடத்தில் எத்தனை எத்தனை சோதனைகள், இழப்புகள். நாடோடி வாழ்க்கை, இப்போது இருக்கும் இக்கட்டு நிலை.
ஆட்டோவில் வழிந்த கண்ணீரை துடைத்தபடியே அவள் வர முதலில் ஒன்றும் கேட்காமல் இருந்தவர் பின் மனது கேட்காமல்,
“ம்மா, உன் மூஞ்சியே சொல்லுது சரியில்லன்னு. எதுவும் பிரச்சனையா சொல்லும்மா என்னால முடிஞ்சதை பன்றேன்…” என்று ஆதரவாக பேச இன்னும் உடைந்துபோய்விடுவோமோ என்றளவிற்கு தொய்ந்து போனாள் மனதளவில்.
எத்தனை எத்தனையை தான் தாங்கும் தன் மனமும்? ரணமாய் வலித்தது. இப்படி ஒரு சூழ்நிலை தனக்கு வருமென்பதும் அதை யாரிடமும் சொல்ல கூட ஆளின்றி அநாதையாவோம் என்றும் அவள் நினைத்ததே இல்லை.
வெடித்து வந்த அழுகையை இதழ் கடித்து அடக்கியவள் தண்ணீரை பருகி கண்ணீரை விழுங்கினாள்.
வரும் வழியில் அன்று ஷேஷாவின் கார் விபத்துக்குள்ளாகியிருந்த இடம் இன்று அகற்றப்பட்டு சுத்தமாக இருந்தது. அவள் பார்த்ததும்,
“அந்த புள்ளை பெரிய இடம் போலம்மா. மறுநாளே வந்து எல்லாத்தையும் எடுத்துட்டானுங்க. ஆமா அந்த பையன் இப்ப எப்படி இருக்கான்னு தெரியுமா?…” என்றார்.
“இல்ல பையா, தெரியாது. நான் அட்மிட் பண்ணினதோட சரி. அப்பறம் பார்க்கலை…”
“ஹ்ம்ம், இந்நேரம் எங்க அங்க இருக்க போறான்? சொகுசா ஒரு குளுகுளு ஆஸ்பத்திரில சோக்கா படுத்திருப்பான்…” என்றவர்,
“ஆமா நீ காப்பாத்துனதுக்கு எதாச்சும் குடுத்தானாமா?…” என கேட்க அன்று ஷேஷா அழைத்த தன் பேர் ஞாபகம் வந்தது.
“என்னம்மா தூங்கிட்டியா?…” என்றார்.
“இல்ல பையா. நான் அவங்க முழிக்கிறதுக்குள்ள கிளம்பிட்டேன்…”
“ஹ்ம்ம், பாக்க நல்லா வாட்டசாட்டமா இருந்துச்சே. சினிமா ஹீரோ மாதிரி…” என்றும் சொல்ல மௌனமாகவே வந்தாள்.
“இருட்டுக்குள்ள பாத்தாலும் ஆஸ்பத்திரில கொண்டுபோய் இறக்கும் அந்த முகத்த எங்கையோ பாத்திருக்கேன். ஞாபகம் தான் வரமாட்டிக்குது…” என்று தலையை சொரிந்தபடி அவர் பேச ‘ஹ்ம்ம்’ என்று மட்டுமே சொல்லிக்கொண்டு வந்தாள்.
அவளின் வீடிருக்கும் தெருவில் ஆட்டோ நின்றதும் இறங்கிக்கொண்டவள் அவருக்கு பணத்தை தெருவில் நடக்க தொடங்கினாள்.
அவள் வீட்டை அடையும் வரை அவர் இருந்து பார்த்துவிட்டு அவள் மாடி ஏறி விளக்கை போட்ட பின்னர் தான் ஆட்டோவை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
ஆட்டோ கூட உள்ளே நுழைய முடியாத தெரு. சாக்கடை ஒரு ஓரத்தில் ஓட அங்கே ஈயும், கொசுவும் மொய்யென்று மொய்த்துக்கொண்டு இருக்கும். அங்கேயும் மக்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
தகரத்தால் ஆன வீடு. வீடு என்றும் சொல்லமுடியாது ஒரு அறை. அதுதான் அவளுக்கான வீடு. அதில் கீழே ஒரு பாயும், அதன் தலைமாட்டில் நான்கு துணிப்பையில் போட்டுக்கொள்ளும் உடைகளும் இருந்தது.
அறையின் மூலையில் சின்ன ஸ்டவ். பால்கனி போன்று இருக்கும் பகுதியில் மறைவு ஏற்படுத்தி அங்கே பாத்ரூம். அங்கேயே கொடியை கட்டி தினசரி துவைக்கும் துணிகளை காயபோட்டுவிடுவாள்.
குடிநீர்க்கு இரு நாட்களுக்கு ஒரு முறை வண்டி தண்ணீர். முண்டிமுயன்று அதை வாங்கி வைத்துவிட்டால் இரண்டு நாட்களுக்கு பிரச்சனை இல்லை.
அதிலும் மழை என்று வந்துவிட்டால் அத்தனை சிரமம். அந்த ஒற்றை அறையில் குளிரில் படாதபாடுபடும் நேரமெல்லாம் மனது ஏங்கி போய்விடும்.
அவளறையில் மெத்தையை கூட அத்தனை தரம் மாற்றிக்கொண்டே இருப்பவள் இப்போது தரையில்.
தண்ணீரை குடித்துவிட்டு கீழே அமர்ந்தவள் ஆசுவாசம் அடையவே நேரம் பிடித்தது.
பின் எழுந்து சென்று முகத்தை கழுவிவிட்டு வந்து படுத்தவள் உறங்குவதற்கு அத்தனை நேரம் ஆகியது.
மெதுவாக ஓடும் அந்த டேபிள் பேனில் வந்த காற்று பத்தவில்லை என்றாலும் அதற்கு பழகி போயிருந்தாள்.
இன்றைய நிகழ்வு வேறு கண்முன் வந்து வந்து போக இன்னும் இருநாளில் அங்கே செல்லவிருப்பதை நினைக்கும் பொழுதே நெஞ்சம் நடுங்கியது.
எப்படி சமாளிக்க போகிறோமோ என்ற நினைப்பிலேயே மிக தாமதமாக உறங்கி போனாள்.
காலை எழுந்துகொள்ளும் பொழுதே கீழே தண்ணீர் வண்டி வந்துவிட்ட சத்தம் கேட்க தண்ணீர் குடங்களையும், அதற்கான பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடினாள்.
கூட்டத்தில் சிரமப்பட்டு முட்டி மோதி தண்ணீரை பிடித்து தூக்கிகொண்டு அந்த சாக்கடையை தாண்டி வந்து மாடியில் கொண்டுவந்து வைப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்தது.
அதிலும் அவளது அறைக்கு குறுக்கலான மாடிப்படி வேறு. தண்ணீர் நழுவினால் எல்லாம் முடிந்தது.
மேலே வந்து தண்ணீரை மூடி போட்டு மூடி வைத்தவள் சமைக்க அரிசியை எடுத்து வைத்துவிட்டு என்ன இருக்கிறது என்று பார்த்தாள்.
காய்கறி என எதுவும் இல்லாமல் வெங்காயம், தக்காளி மட்டும் இருக்க தாளித்து சாதத்தில் கிளறியவள் ஊறுகாய் வைத்து உணவை முடித்தாள்.
வேலை இல்லாத நாட்களில் இப்படித்தான் மூன்றுவேளையும் சாதம். ஏதேனும் கைக்கு வந்த சமையல்.
விதவிதமாய் மட்டுமல்ல, அதிசயமாய் எப்போதாவது தான் உப்மா மாதிரியான வகைகளும்.
ஒரே நேரத்தில் சமையலை முடித்த மாதிரியும் இருக்கும், வேலையும் குறைவு, எரிவாயுவும் மிச்சம். செலவும் குறைவு என்று கணக்கிட்டு இருப்பதை உண்டு வாழ்ந்து வந்தாள்.
அன்று வேறொரு ரெக்கார்டிங் தியேட்டர் செல்லவேண்டிய கட்டாயம் இருக்க எந்த வாய்ப்பையும் இழக்கவிரும்பாமல் ஓயாது உழைத்தாள்.
அன்று காலை விழிக்கும் பொழுதே தன்ராஜ் போன் செய்து அன்று காலையே ஸ்டூடியோவிற்கு வர சொல்ல,
“ஈவ்னிங் தானே ரெக்கார்டிங். இப்போவேவா?…” என மெதுவாய் அவள் கேட்க,
“நக்ஷத்ரா உன்னை வேலைக்கு வச்சிருக்கறது நான். நான் எப்போ கூப்பிடறேனோ நீ வந்துதான் ஆகனும். உன் இஷ்டத்துக்கு என்ன இது எதிர்கேள்வி எல்லாம் கேட்கிற?…” என கோபமாய் பேச அந்த பேச்சிலேயே தூக்கிவாரிபோட்டது.
“ஹ்ம்ம், வரேன் பையா…” என பயந்துகொண்டே கிளம்பி சென்றாள் அவள்.