அப்போது லிங்கம் தன்னுடைய சட்டப்படிப்பை முடித்துவிட்டு, திருநெல்வேலியில் ஒரு வழக்கறிஞரிடம் ஜூனியராக பயிற்சி மேற்கொண்டிருந்த காலம்.
அவனும் மீனாட்சி செல்லும் அதே பேருந்தில் தான் திருநெல்வேலிக்கு பயணம் செய்வான்.
ஒரே ஊர்க்காரன் என்ற போர்வையில் மீனாட்சியிடம் பேச்சுக்கொடுத்தவன், நாளடைவில் அவரிடம் தன் காதலைச் சொல்ல, “எனக்கு அப்படி எந்த எண்ணமும் உங்கள் மீதில்லை” என்று மறுத்த மீனாட்சி, இப்படி ஒரு எண்ணம் வந்தபிறகு எப்போதும் போல லிங்கத்திடம் பேசுவது சரிவராது என்ற எண்ணத்தில் அவனிடம் சாதாரணமாக பேசுவதைக் கூட விட்டுவிட்டார்.
ஆனால், லிங்கம் அப்படி ஒதுங்கவில்லை. திரும்பத் திரும்ப தன் காதலைச் சொல்லி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மீனாட்சியை வற்புறுத்த ஆரம்பித்தான்.
ஒருவர் மீது கண்டதும் கண்மூடித்தனமாக காதல் வருவதற்கு, எப்படி காரண காரியங்கள் தேவையில்லையோ, அப்படித்தான் ஒருவரை மனதுக்கு பிடிக்காமல் போவதற்கும் காரணங்கள் தேவையில்லை.
அது தெரியாமல் அவன் பல நேரங்களில் பஸ் பிரயாணத்தின் போது மீனாட்சியிடம் அத்துமீற முயற்சிக்க, பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மீனாட்சி, தன் செல்ல சித்தப்பா சுப்பிரமணியனிடம் விஷயத்தை சொல்லிவிட்டார்.
அவரும் தன் அண்ணன்மார்களுக்கு தெரியாமல் காதும் காதும் வைத்தது போல, ஒருநாள் அந்த லிங்கத்தை பிடித்து வார்த்தைகளால் உண்டு இல்லை என்று ஆக்கியதுமில்லாமல், அண்ணன் மகள் வரும் நேரத்துக்கு பேருந்து நிறுத்தத்துக்கு வந்து மகளை கையோடு கூட்டிச் செல்ல ஆரம்பித்தார்.
இதெல்லாம் அந்த மூர்க்கன் லிங்கத்துக்கு வெறியேற்றியது.
அன்றும் அப்படித்தான், பேருந்து நிலையத்தில் சுப்பிரமணியன் காத்து நின்றார். பேருந்திலிருந்து தன் சித்தப்பாவைப் பார்த்து புன்னகை முகத்தோடு இறங்க முற்பட்ட மீனாட்சியின் புடவை முந்தானை, அவள் கைகளிலிருந்து நழுவி பேருந்தின் படிக்கட்டில் விழுந்தது.
அவள் பின்னோடு இறங்கி கொண்டிருந்த லிங்கம் சற்றும் தயங்காமல் சட்டென்று அந்த முந்தானையை தன் காலால் அழுத்தி மிதிக்க, பேருந்து படியிலிருந்து பாதம் தரையைத் தொட்டிருந்த மீனாட்சியின் முந்தானை இழுபட்டது.
அவ்வளவு தான்… புடவையில் குத்தியிருந்த சேஃப்டி பின் தெறித்து ஓட, கழன்றுவிழ இருந்த முந்தானையை தன் இருகரம் கொண்டு பதட்டத்தோடு பிடித்துக்கொண்ட பெண்ணவளின் கண்களிலிருந்து சரசரவென்று கண்ணீர் வடிந்தது.
லிங்கம் இறங்க முயற்சி செய்யும் போதே அவன் செய்யப்போகும் காரியம் சட்டென்று அந்த சித்தப்பனுக்கு புரிந்து போக, “ஏய்… என்ன பண்ணுற நீ?…” என்று பதறிப்போய் அவர் முன்னே வரும் முன் எல்லாம் முடிந்திருந்தது.
அவ்வளவு தான்… நொடிப்பொழுது கூட யோசிக்காமல் சட்டென்று லிங்கத்தின் கன்னத்தில், எட்டி தன்கையால் ஆவேசமாக அறைந்திருந்தார் சுப்பிரமணியன்.
ஆக, பெண்ணவளை அவமானப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில், தானே அவமானப்பட்டு நின்றான் லிங்கம்.
விஷயம் இருவீட்டாருக்கும் தெரியவந்து, பிரச்சினை வெடித்தது.
வெட்கமே இல்லாமல், “என் மகன் உங்க பொண்ணைக் காதலிக்கிறான், அதனால கல்யாணம் பண்ணி தாங்க” என்று தன்மகனுக்காக மீனாட்சியை பெண்கேட்டு வந்தார்கள் அவன் பெற்றோர்கள்.
“எங்க பொண்ணுக்கு கல்யாணம் செய்ய உலகத்துல மாப்பிள்ளையே கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை, உங்க காவாலி மகனுக்கு மட்டும் கல்யாணம் பண்ணி தரவே மாட்டோம்” என்று இவர்கள் தரப்பில் ஆணித்தரமாக மறத்து விட்டார்கள்.
அதனால், மீனாட்சியின் திருமண ஏற்பாடுகளில் அந்த குடும்பமே சேர்ந்து கொண்டு செய்த குழப்பங்கள் ஏராளம்.
எல்லாவற்றையும் தாண்டி அமெரிக்காவில் பணிபுரியும், சபரீஷுடன் மீனாட்சியின் திருமணம் நடந்து முடிந்த மறுவாரமே, சொந்தத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான் லிங்கம்.
ஆனால், கேவிஎஸ் குடும்பத்தின் மீதான பழியுணர்ச்சியை மட்டும் அவன் மாற்றிக்கொள்ளவே இல்லை.
அடுத்ததாக நடந்த கயல்விழியின் திருமண ஏற்பாடுகளும் லிங்கத்தின் திருவிளையாடல்களை சந்தித்து தான் இருக்கிறது.
இப்போது சசிதரனின் திருமணத்தில், தன் அடுத்த இன்னிங்ஸ்ஸை தொடங்கியிருக்கிறான் லிங்கம்.
எல்லாவற்றையும் நாயகி கூற, கேட்டுக்கொண்டிருந்த ராதாவுக்குமே முகம் தெரியாத அந்த லிங்கத்தின் மீது வெறுப்பு தோன்றியது.
மறைக்காமல் அதை நாயகிடம் சொல்ல, “நாய் குலைக்குதுன்னு சொல்லி நாமளும் அது கூட சேர்ந்து குலைக்க முடியாது ராதா. விட்டுத்தள்ளிட்டு நம்ம வேலையை பாத்துட்டு போய்ட்டே இருக்கணும்” என்று அமைதியாகச் அவர் சொல்ல, எப்போதும் போல இப்போதும் நாயகி மீதான பிரமிப்பு கூடிக்கொண்டே சென்றது ராதாவுக்கு.
திருநெல்வேலியில், முகூர்த்த பட்டுகளுக்கு புகழ்பெற்ற ஆரெம்கேவி ஜவுளி நிறுவனத்தின் முன் நின்ற காரிலிருந்து இறங்கினார்கள் ராதாவும், சந்த்ரிகாவும்.
அவர்களைக் கண்டதும், அருணின் தங்கை ராகினி கடையின் வரவேற்பு பகுதியிலிருந்து ஓடிவந்து, சந்த்ரிகாவின் கையைப் பற்றிக்கொண்டு,
“வாங்க ண்ணி, எல்லாரும் உங்களுக்காகத் தான் வெயிட்டிங்” என்றபடியே அழைத்துக் கொண்டு செல்ல, உடன் நடந்தாள் சந்த்ரிகா.
தங்களுக்காக ஒரு குடும்பமே அந்த வரவேற்பு பகுதியில் கிடந்த நாற்காலியில் காத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும், தங்களின் தாமதம் ராதாவுக்கு ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தியது.
“மன்னிக்கனும், நாங்க சரியான நேரத்துக்கு வீட்டுலயிருந்து கிளம்பிட்டோம், டவுனுக்குள்ள என்டர் ஆகும்போது கொஞ்சம் ட்ராஃபிக் ஆகிடிச்சி, அதான் லேட்டாகிடிச்சி” என்றார் பவ்யமாக.
“பரவாயில்லை சம்மந்தி அம்மா… ரொம்பல்லாம் நாங்க காத்திருக்கலை, ஒரு ஐந்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் நாங்களும் வந்தோம்” சசிதரனின் அப்பா வேலுச்சாமி சொன்னார்.
“உங்க சின்ன பொண்ணை கூட்டிட்டு வரலையா?” என்றார் சசிதரனின் அம்மா ராஜேஸ்வரி.
ராஜேஸ்வரியின் கேள்வியில் சட்டென்று ராதா தன் பக்கத்தில் நின்றிருந்த மகளைத் திரும்பி பார்த்தார். அவளோ, சசிதரனின் பக்கத்தில் போய் நின்று கொண்டு, எல்லையில்லா ஆனந்தத்தோடு பேசிக்கொண்டு நின்றிருந்தாள்.
இன்றுகாலை, தன் மூத்தமகள், வீட்டில் நடந்து கொண்ட விதத்தில் உள்ளம் கசந்து வழிந்தாலும், அதை தன்முன்னே நிற்பவர்களிடம் மறைத்து, “இன்னைக்கு கிளினிக்ல ஏற்கனவே இரண்டு பேர் லீவாம் அண்ணி. அதனால லீவ் எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டா” என்று வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்தார் ராதா.
ஆனால் உண்மையில் நடந்தது அதுவல்ல. ஆசையோடு கிளம்பி நின்ற தங்கையைப் பார்த்ததும், “இப்போ இவளுக்கு கல்யாணமா? இல்லை எனக்கா? இவளையும் கூட்டிட்டு வர்றதா இருந்தா நீங்க ரெண்டுபேரு மட்டும் போங்க, நான் வரலை” என்று உக்கார்ந்து கொண்டாள் சந்த்ரிகா.
“சிவாவும் நம்மகூட வந்தா, அவளுக்கும் ட்ரெஸ் எடுத்துட்டு வந்திடலாம் சந்த்ரி. இன்னொரு தடவை நான் மெனக்கெட்டு அலைய வேண்டாம் பாரு” என்று பொறுமையாக ராதா சொல்லிய பிறகும்,
“உங்க சின்ன மகளை மட்டும் கூட்டிட்டு தாராளமா போங்கன்னு தானே நான் சொல்லுறேன்” என்று சந்திரிகா சிடுசிடுக்க, தாயை சங்கடப்படுத்தாமல் தானே வேலைக்கு கிளம்பி சென்று விட்டாள் சிவரஞ்சனி.
திருமணம் முடிவான நாளிலிருந்து, கொஞ்சம் பொறுமையாக நடமாடிக் கொண்டிருந்த மகளைப் பார்த்த ராதாவுக்கு கூட, ‘திருமணம், கண்டிப்பாக மகள் குணத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும்’ என்ற நம்பிக்கை பிறந்திருந்தது.
ஆனால், சந்த்ரிகாவின் இன்றைய பேச்சும், நடவடிக்கையும் அதை தவிடு பொடியாக தகர்த்தெறிந்திருந்தது.
‘உடன்பிறந்த தங்கையையே, ஒரு போட்டியாளரைப் போல பார்க்கும் இந்த பெண்ணின் குணம், புகுந்த வீட்டில் உள்ளவர்களிடம் எப்படி பொருந்தி போகும்?’ என்ற கவலை இன்று காலையிலிருந்தே அரித்து தின்கிறது ராதாவை.
‘இவ்வளவு சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் இருக்கும் இந்த குடும்பத்தின் நிம்மதி, தன் மகளால் சிதைந்து போகுமோ?’ என்ற பயம் வேறு புதிதாக ஆட்டிப் படைத்தது அவரை.
தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக் கொள்ளமுடியாதே.
தன் பிள்ளை என்பதற்காக அவளின் குறைகள் இல்லையென்று ஆகிவிடாதே. அதற்காக தேங்காய் உடைப்பது போல அவளின் குணங்களை அடுத்தவர் முன்போட்டு உடைத்து விடவும் முடியாதே.
இருதலைக்கொள்ளி எறும்பின் மனநிலையிலேயே அங்கே அந்த முகூர்த்தபட்டு செக்ஷனில் எல்லோருடனும் உட்கார்ந்திருந்தார் ராதா.
சசிதரனையும் சந்த்ரிகாவையும் நடுநாயகமாக அமர்த்தி அவர்களை சுற்றி அமர்ந்து கொண்டு முகூர்த்த பட்டுகளை பார்வையிட்டு கொண்டிருந்தனர் எல்லோரும்.
நல்ல அகலகரை பார்டரில் சாஃப்ட் சில்க்ஸ் சாரீஸை, அலுத்துக் கொள்ளாமல் எடுத்து விரித்து காட்டிக் கொண்டிருந்தார் விற்பனையாளர்.
சசிதரன் அவனுக்கு பிடித்த புடவைகளை காட்டி சந்த்ரிகாவிடம் மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டிருக்க, அவளின் பார்வையையோ அடுத்தாற்போல் டிஸ்ப்ளே செய்து வைத்திருந்த ப்ரைடல் லெஹங்காக்களையே தொட்டு தொட்டு மீண்டு வந்தது.
“ஏன் சசி? பட்டு சாரி கட்டிகிட்டு தான் கல்யாணம் பண்ணனுமா? லெஹங்கா எல்லாம் உடுத்திட்டு கல்யாணம் பண்ணிக்க கூடாதா என்ன?”
அருகில் அமர்ந்திருந்தவனின் சட்டையை யாருமறியாமல் லேசாக இழுத்து அவன் காதுகளில் முணுத்தவளின் செயலில், மெல்லியதாக சிரித்த சசிதரன், “பட்டுசாரியில நீ ரொம்ப அழகா இருப்படா” என்றான் மெதுவாக.
அழகழகான புடவைகள் தன்முன் கடை பரப்பபட்ட பின்பும் அதன் மீது கவனத்தை செலுத்தாமல் லெஹங்காவின் மீது தன் பார்வையை பதிக்கும் சந்த்ரிகாவின் செயலிலேயே, அவளின் மனம் நாயகிக்கு புரிந்துவிட,
“உனக்கு அந்த ட்ரெஸ் வேணும்னா எடுத்துக்கோ ம்மா. ஆனா, கல்யாணத்துக்கு பட்டுசாரி தான் கட்டணும். அதனால நல்லதா ஒண்ணு இதுலயும் செலக்ட் பண்ணிடு.”
இதுதான் இறுதி முடிவு என்பது போல பெரியநாயகியின் குரல் இருக்க, சந்த்ரிகாவின் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து முரண்ட ஆரம்பித்தது…