பவித்ரா முகத்தில் அடித்தது போல ‘நீ ஏன் இங்க வந்த?’ என்றதும் சில நொடிகள் பேச்சற்று நின்றான் பிரஷாந்த்.
பின், “என்ன விளையாடுறியா? நடுராத்திரில வண்டிய எடுத்துட்டு போயிட்டு இருக்க… கூப்பிட்டா நிக்கவும் இல்ல… இந்த காட்டுக்குள்ள வந்து, என்னையும் அலைய விட்டு…!” அவன் பேச,
“இங்க வந்ததே உன்னால தான்… உன்னை யார் என்னை ஃபாலோ பண்ண சொன்னது? உன்கிட்ட சிக்க கூடாதுன்னு இந்த காட்டுக்குள்ள நுழைஞ்சு இப்போ எப்டி வெளில போறதுன்னு தெரியாம நிக்குறேன்!” ஆத்திரமாய் கத்தினாள்.
அவள் அப்படி கத்தியதுக்கு எதிர்வினையாய், “இல்ல… எனக்கு புரியல!” என்று மலங்க மலங்க விழித்தவனை பார்க்க அவளுக்கு இன்னமும் கோவமாய் வர, எதிரே இருந்த அறை ஒன்றுக்குள் விறுவிறுவென சென்றவள் கதவடைத்துக்கொண்டாள்.
திருவிழா கூட்டத்தில் காணாப்போன குழந்தை போல விழித்துக்கொண்டு நின்றான் அவன். அவர்களை வேடிக்கைப்பர்த்துக்கொண்டு நின்றிருந்த சம்யுக்தாவை, “உன்னை தான் கேட்குறேன், எதுக்கு வந்த இங்க?” என்று முறைத்தான் வித்தகன்.
லேசாக உதறியது அவளுக்கு. கோவத்தில் ஜொலிக்கும் அவன் முகத்தை பார்க்கவே பயமாக இருந்தது.
“இல்ல ஜி… நீங்க ஏதோ எக்ஸ்ப்ளோர் பண்ணனும்ன்னு சொன்னீங்களா? எனக்கும் உங்கக்கூட வந்து அதை என்ஜாய் பண்ணனும்ன்னு தோனுச்சு! அதான் உங்க ஃ’பிரண்ட் கிட்ட பேச்சுக்குடுத்து டீடைல்ஸ் தெரிஞ்சுக்கிட்டு வந்துட்டேன்” என்றாள் தயங்கி தயங்கி.
“என்ஜாய் பண்ணவா?” தலையை அழுந்த கோதிக்கொன்டான்.
‘உப்ப்’ உஷ்ணமாய் வெளியேறிய மூச்சு அவன் கோவத்தை காட்டியது.
இவள் திருதிருவென விழித்துக்கொண்டு அவன் முன்னே நிற்ப்பதை பார்க்க பிரஷாந்துக்கு அப்படியொரு சிரிப்பு! அடக்கிக்கொண்டான்.
‘கொஞ்ச நேரம் முன்ன என்கிட்ட வாய் வங்காள விரிகுடா வரை போயிட்டு இருந்துச்சு! இப்போ கேட்குற கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாம முழிக்குறதை பாரு! ஆண்டவன் ஜோடியை எல்லாம் சரியா தான் சேர்க்குறான்’ என்று எண்ணிக்கொண்டான்.
“எந்த தைரியத்துல நீ இந்த காட்டுக்குள்ள அதுவும் அர்த்த ராத்திரில வந்த?” அவன் கோபத்தில் அவள் மீதான அக்கறை தெளிவாய் தெரிந்தது.
“****” அவன் வாயில் இருந்து சென்சார் ஒலி வெளிப்பட்டது. அவளோ குனிந்த தலை நிமிரவில்லை. எப்போதும் நிதானத்தை பிரதானமாய் நினைப்பவனுக்கு இதற்குமேலும் தன் கொதிநிலையை சமநிலையில் வைத்திருக்க இயலவில்லை. தன்னால் சூடு இறங்கியது. பார்வை சுற்றிலும் போக, அங்கே இவர்களை பார்த்துக்கொண்டு நின்றவனை கண்டதும் இவன் புருவங்கள் நன்கு சுருங்கியது.
பிரஷாந்தை சுட்டிக்காட்டி, “இவன்கூட எப்படி வந்த?” என்றான் அவளிடம்.
“இவன்கூட எல்லாம் வரல ஜி… இவன் அந்த பொண்ணை தேடி வந்தான்… நான் உங்களை தேடி வந்தேன்! ரெண்டு பேரும் இந்த காட்டுக்குள்ள வந்தோம்… அவ்ளோதான்” என்றாள். அவள் சாதூர்ய பேச்சில் வெளிப்படையாகவே வாய் பொத்தி நின்றான் பிரஷாந்த்.
“நேத்து தானே உன்னை இடிச்சான்… பொறுக்கின்னு திட்டுவன் கூட பயமே இல்லாம நடுராத்திரில சுத்திருக்க… அவன் எதாவது மிஸ்பிஹேவ் செஞ்சுருந்தா என்ன பண்ணிருப்ப?” என்று வித்தகன் கேட்ட நொடியில்லாமல், இடுப்பில் இருந்த கத்தியை உருவி, “சொருகிருப்பேன்!” என்றவளை,
“ஆங், நொட்டிருப்ப!” என்று இடைவெட்டிய பிரஷாந்த், “நான் அப்போவே கேட்டேன்ல உன்னை எங்கேயோ பார்த்த மாறி இருக்குன்னு… ‘அமெரிக்காவை கண்டுப்பிடிச்சது கொலம்பஸு… நான் இன்ஸ்டா’ல ஃபேமஸு’ன்னு என்னா உருட்டு உருட்டுன நீ!?” என்று சண்டைக்கு வந்தான் பிரஷாந்த்.
“அலோ பிரஷ்ஷு… நான் நிஜமாவே இன்ஸ்டா’ல ஃபேமஸ் தான்… ஒன் மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்காங்க தெரியுமா? சும்மா புள்ளி விவரம் தெரியாம சண்டைக்கு வரக்கூடாது!” என்றாள் கீழே விழுந்தாலும் மீசையில் புல் முளைக்கவில்லை என.
“ஹான்… ஒரு கிலோ பவுடரும் அஞ்சாறு ஃபில்டரும் போட்டு ஜூமிங்’ல வீடியோ போட்டுருப்ப… நம்ம பயலுங்களும் உண்மைன்னு நம்பி ‘ஈஈ’ன்னு வந்துருப்பானுங்க”
“எப்படியோ…! வந்துட்டானுங்கள்ள…? நான் ஃபேமஸ் தான்!” என்றாள் முடியை சிலுப்பிக்கொண்டு.
“அம்மா தாயி… அகிலஉலக அழகி மீரா மிதுனுக்கு அப்புறம் நீதான்ம்மா உலக பேமஸு… நான் ஒத்துக்குறேன்!” என்றவன், “உன்கிட்ட இனி பேசுனா என்னை ‘என்னா’ன்னு கேளு!” என்றுவிட்டு பவி சென்றடைந்த அறை கதவை தட்ட ஆரம்பித்தான்.
“பவி… ஓபன் பண்ணு… எதுவா இருந்தாலும் நம்ம அங்கிள் கிட்ட பேசிப்போம்” என்றான்.
“ப்ச்.. ஜி… உங்க ஃபிரன்ட் எங்க? வரலையா?” பிரஷாந்தை விட்டு வித்தகனிடம் பேச்சை வளர்த்தாள் சம்யுக்தா. அவனோ தன் மொபைலையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருக்க,
“உன் ஃபோன்’ல டைம் என்ன?” என்றான் மூச்சை பிடித்துக்கொண்டு.
அவன் கேட்டதும் எடுத்து பார்த்தவள், “இட்ஸ் த்ரீ ஓ கிளாக்” என சொல்ல, அங்கே பிரஷாந்த், “கதவை திற பவி… வா நம்ம இங்கிருந்து போய்டலாம்! வெளில போய் தெளிவா யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம்… நீ என்ன சொன்னாலும் நான் கேட்குறேன்!” என்று கத்த ஆரம்பித்திருந்தான்.
உள்ளிருந்து, “நான் எங்கயும் வரல… நீ முதல்ல இங்கிருந்து போ” என்ற குரல் வர, “மாட்டேன்… நீ வராம நான் போகமாட்டேன்!” என்று திடமாய் மறுத்த பிரஷாந்த், கதவருகே அப்படியே அமர்ந்துக்கொண்டு, “நீ வெளில வந்தா தான் நானும் இங்கிருந்து போவேன். இல்லன்னா நீ வர வரைக்கும் இங்கேயே தான் இருப்பேன்” என்றிட,
“யாரு ஜி இவன் ‘டாப் ஸ்டார்’ பேரை வச்சுக்கிட்டு ‘பவர் ஸ்டார்’ மாதிரி செஞ்சுட்டு இருக்கான்?” என்றாள் சம்யு.
அவள் சொன்னது வித்தகனிடம் என்றாலும் பிரஷாந்த் காதில் விழும்படி கத்திதான் சொன்னால் என்பதால் வெடுக்கென திரும்பி அவளை முறைத்தான் பிரஷாந்த்.
அவன் முறைப்பை எல்லாம் தூசி போல தட்டியவள், “ஜி… பசிக்குது ஜி…” என்றாள் அவன் அருகே அமர்ந்துக்கொண்டு.
வித்தகனுக்கு என்ன நடக்கப்போகிறதோ என படபடப்பாய் இருந்தது. பல மணி நேரங்களாய் நகராத மணித்துளிகள், அத்துவான காட்டுக்குள் ஒளிரும் விளக்குகளோடு வீடு, சம்பந்தமே இல்லாது இவனோடு இந்நேரம் சிக்கியிருக்கும் மூவர்…!
“நம்ம இந்த வீட்டை விட்டு வெளில போகணும்” என்று திடீரென சொல்லிவிட்டு எழுந்த வித்தகன் சம்யுக்தாவின் கரத்தை கெட்டியாய் பற்றிக்கொண்டு வாசல் நோக்கி செல்ல,
“பவி… இவ்ளோ சொல்றேனே கேட்குறியா நீ? வெளில வா!” என்று கத்திக்கொண்டே கதவை படபடவென பிரசாந்த் அடிக்க, மற்ற இருவரும் வாசல் நோக்கி விரைய, நொடிப்பொழுதில் வாசல் கதவுகளை திறந்துக்கொண்டு மூச்சு வாங்க வந்து நின்றாள்….. ‘பவித்ரா’
பார்த்த மூவரில் யார் அதிகம் அதிர்ந்தனர் என்றே கணக்கே இல்லை.
பிரஷாந்த் விக்கித்த நிலையில் அவளை பார்த்து அதிர்ந்து நிற்க, அந்த அறைக்குள் இருந்து, “என்னால வெளில வரவே முடியாது” என்று ஒலித்தது பவித்ராவின் குரல்.
கண்முன்னே நிற்ப்பவளின் குரல், கதவுக்கு பின்னிருந்து வந்தது.
உண்மையில் அந்த நிமிடங்கள் மூவருக்கும்… திக்…திக்…திக்…!
மூச்சு வாங்க வந்து நின்றவளோ, பிரஷாந்திடம் “நீங்க எப்படி இங்க? உங்ககிட்ட இருந்து தப்பிக்க தானே நான் இந்த காட்டுக்குள்ளையே வந்தேன்!” என்று சலித்துக்கொண்டவள், “இவங்க யாரு?” என்றாள் வித்தகனையும் சம்யுக்தாவையும்.
யாருக்கு பேச்சு வரும் அங்கே…!? இமைக்கக்கூட மறந்துப்போய் விக்கித்து நின்றிருந்தனர்.
அதே நேரம், அறைக்கதவு வேகமாய் திறக்கப்பட, அதிலிருந்து புயலென வெளியே வந்தாள் பவித்ரா. மூவர் பார்வையும் அவளிடம் போக, “எதுக்கு சும்மா கதவை தட்டிட்டே இருக்கீங்க?” என்றாள் பிரஷாந்திடம் ஆத்திரத்துடன்.
அனிச்சையாய் அவளை பார்த்த கண்கள், அடுத்து வாசல் புறம் போக… அங்கே ‘அவள்’ இல்லை!!! மீண்டும் கண்கள் இவளை சந்தித்தபோது, “கேட்குறேன்ல? எதுக்கு கதவை அப்படி தட்டுனீங்க?” என்றாள்.
“நா…நான் கதவை தட்…டுறதை நிறுத்தி பத்து நி..மிஷம் ஆச்சு” தட்டுதடுமாறி சொன்னவனை, “பொய் சொல்றீங்க… கதவே உடையுற மாதிரி தட்டவும் தானே திறந்தேன்?” என்று பவி சொல்ல, இதற்குமேல் நொடியும் தாமதிக்க கூடாதுன்னு என்றெண்ணி,
“இங்கிருந்து வெளில போய்டலாம்… வாங்க” என்ற வித்தகன் சம்யுக்தாவின் கரத்தை பற்றிக்கொண்டு வெளியேறப்போக, பவியை இழுத்துக்கொண்டு பிரஷாந்த் அவன் பின்னோடு ஓட, கண்ணிமைக்கும் நேரத்தில் பெரும் சத்தத்தோடு அடித்து சாற்றப்பட்டது அந்த வாயில் கதவுகள். அழகிய விளக்குகளால் ஒளிர்ந்துக்கொண்டிருந்த அந்த வீடு மொத்தமும் இருள் கவ்வியது.
தங்கள் இணைகளின் கரத்தை கெட்டியாய் பற்றிக்கொண்டு நின்ற நால்வரின் நெஞ்சுக்கூடும் பயத்தில் விம்மி குதித்தது.
பேரமைதி…!!! மூச்சு விடும் சப்தம் கூட அப்போது அங்கே இல்லை.
அவன் கரத்தை இறுக்கி பிடித்த சம்யுக்தா, “யார்க்கிட்ட ஜி பேசுறீங்க?” என்று கலங்க, அவள் கரத்தை அழுத்தமாய் பற்றிக்கொண்டவன், “நாங்க இங்கிருந்து போகணும்” என்றான் மீண்டுமாய்.
பிரஷாந்துக்கு ஏதோ பெரிய சிக்கலில் சிக்கிக்கொண்டோம் என்று மட்டும் தான் புரிந்தது. பவிக்கோ அதுக்கூட புரியவில்லை. இருட்டின் பயத்தில் அவன் கரத்தை பற்றிக்கொண்டிருந்தாள்.
வித்தகன் மீண்டுமாய் ‘நாங்க இங்கிருந்து போகணும்’ என்று உரைத்தபோது, மொத்த வீடும் இருளில் இருந்து வெளிச்சத்திற்கு உருமாறியிருந்தது.
‘நாம் இந்த வீட்டில் மாட்டிக்கொண்டோம்… இனி நம் பிரேதம் கூட இங்கிருந்து வெளியேறாது’ என்றா!?
“நம்ம இங்கிருந்து போய்டலாம் ஜி! வாங்க” என்ற பிரஷாந்த், கதவை திறக்க முயல, அவனால் ஒரு மில்லிமீட்டர் கூட அதை நகர்த்த முடியவில்லை.
“பார்த்துட்டே இருக்கீங்களே… வந்து ஒரு கை புடிங்க” என்று வித்தகனை அவன் அழைத்தபோது…
“வெல்கம்…” என்ற குரல்.
ஸ்தம்பித்தது நால்வருக்கும்…!
“வெல்கம் டு ‘எ லவ் வீடு” கரகரப்பான ஒரு குரல் வீட்டின் அத்தனை மூலைகளில் இருந்தும் எதிரொலித்தது.
சில நிமிடங்கள் அங்கே அசைவே இல்லை யாரிடமும். முதலில் தெளிந்தது பிரஷாந்த் தான்.
“ஹஹா… ஜி… தெரில? ஏய் சம்ஸு… உனக்கும் தெரியலையா? இது நம்ம பிக் பாஸ் வீடுப்பா! சஸ்பென்ஸா ஆளெடுக்குறாங்க போல…” என்றவன், “நமக்கு இண்டரஸ்ட் இல்லன்னு சொல்லிட்டு போய்டலாம்! வாங்க” என்று மீண்டும் கதவில் கை வைத்தபோது, வீட்டின் உச்சியில் தொங்கிக்கொண்டிருந்த சாண்டலியர் தரையில் விழுந்து நொறுங்கியது.
கண்கள் தெறிக்க கீழே கிடந்ததை அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோது, பிரஷாந்த் கதவில் இருந்து கையை எடுத்த நொடி, தரையில் சுக்குநூறாய் நொறுங்கிக்கிடந்த சாண்டலியர் உருபெற்று வந்த வேகத்தில் மேலே போய் ஒளிர ஆரம்பித்தது.