செல்லும் வழியெல்லாம் நக்ஷத்ரா கண்ணை மூடியே இருக்க அவளை பார்த்தவன் அமைதியாய் இருந்துகொண்டான்.
அங்கே செல்லும் வரை இப்படியே வரட்டும் என விட்டுவிட்டவன் மொபைலில் கிருஷிற்கு குறுஞ்செய்தி அனுப்பியபடியே இருந்தான்.
அதில் வந்த தகவல் ட்ரஸ்ட்டிற்கு அன்று யார் வந்திருக்கிறார்கள் என தெரிய யோசனையுடன் அதை பார்த்தபடி இருந்தான்.
வெகு தூரம் கழித்து கார் சென்று நின்றதும் அதன் உணர்வில் மெல்ல கண்ணை திறந்து ஜன்னல் ஓரம் பார்த்தாள்.
வெளியே தெரிந்த இடத்தை பார்த்ததுமே முகம் வெளுத்து போனது. உதடுகள் துடிக்க வரண்டுவிட்ட தொண்டையை செருமி சரி செய்துகொண்டாள்.
“ஷக்தி…” என்று அவளின் கை மேல் தன் கையை வைத்து அழைக்கவும் அவன் பக்கம் திரும்பினாள்.
“இறங்கு…” என்றவன் மறுபக்கம் இறங்கி வரவும் அவளும் வந்து நிற்க அவர்களை தொடர்ந்து வர இருந்த பாதுகாவலர்களை அங்கேயே நிறுத்தினான்.
“ஸ்டே ஹியர்…” என சொல்லிவிட்டு அவளுடன் நடந்தான்.
உணர்வுகள் இழந்தவளாக நடைபிணமாய் அவள் உடன்வர ஷேஷாவிற்க்கு அவளை அப்படி பார்க்க முடியவில்லை.
“ஸ்டே ஸ்ட்ராங் ஷக்தி…” என்றான் மெல்லிய குரலில்.
“அவங்க உயிர் பிரியற நிலமையை கண் முன்னாடியே பார்த்தேன். அப்பவே தைரியமா தான் இருந்தேன். இப்போ மட்டும் என்ன?…” என்றாள் ஒரு இகழ்ச்சியான புன்னகையுடன் அவன் பக்கமாய் திரும்பி.
“உனக்கு எப்படி ஆறுதல் சொல்லன்னே தெரியலை. அந்த நேரம் உன்னை ரொம்பவே தேடுனேன். யாரும் இல்லைன்னதும் தான் நம்ம ட்ரஸ்ட் சார்பா காரியங்களை நானே செஞ்சிட்டேன்…” என்றான்.
அது தான் அவளுக்கு தெரியுமே. அந்த நேரம் தாயின் இறுதிசடங்கை செய்யும் நிலையிலா இருந்தாள்?
அந்த அகத்தியனிடம் அகப்பட்டு நிராயுதபாணியாய், பெற்ற தாயின் முன்னால் இருக்கவே கூச்சப்படும் நிலையிலல்லவா இருந்தாள்.
ஒவ்வொன்றாய் தொடர்ந்து ஞாபகத்தில் வர வர அவளின் நடை சீரான வேகத்தில் இருந்து தடுமாறி கால் இடறியது.
“ஷக்தி பார்த்து…” என அவன் பிடித்துக்கொள்ள,
“ஐ கேன் மேனேஜ்…” என்றாள் அவனின் பிடியில் இருந்து நழுவியவளாக.
“நீ பார்க்க நினைப்பன்னு தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன்…”
“ஹ்ம்ம், நினைச்சிட்டே தான் இருந்தேன். அஞ்சு வருஷமா நினைச்சுட்டே மட்டும் தான் இருந்தேன். இன்னைக்கு தான் முடிஞ்சிருக்கு…”
மயான அமைதியை பலமுறை தன் வாழ்கையில் அனுபவித்திருக்கிறாள் தான். ஆனால் அன்று தான் கண்கூடாக காண்கிறாள்.
அமைதியான மயானம். அடக்கம் செய்யப்பட்ட பல உயிர்களின் நித்திரைகளுக்கு மத்தியில் தன் தாயின் இடமும் அங்கே அவற்றில் ஒன்றாக.
பெற்ற தாயை கடைசியாக தொட்டு தடவி பார்த்து தன் கண்ணீரால் கழுவி வழியனுப்ப கூட முடியாத துரதிர்ஷ்டசாலி அவள்.
ஷேஷா தன் கையில் இருந்த பூங்கொத்தை அவளிடம் நீட்ட அதனை வாங்க மறுத்தாள்.
“நீ என்ன நினைக்கிற ஷக்தி? இதுவும் மறுத்தா எப்படி?…”
“நினைக்க எதுவும் இல்லை. எனக்கும் எதுவுமில்லை, யாருமில்லை தானே?…” என்று சொல்லும் போதே அவனுக்கு உள்ளுக்குள் உருகி போனது.
“என்ன ஷக்தி இது? இட்ஸ் ஹார்ட் ஃபார் மீ…” என்றான் வருத்தமாய்.
“இல்லை நான் உங்களை கஷ்டப்படுத்தனும்னு சொல்லலை. ஆனா உண்மை அதானே?…” என்றவளுக்கு எப்படி புரிய வைக்க என அவன் தான் அயர்ந்து போனான்.
“இந்த மேரேஜ் அதை இதுல கொண்டு வராதீங்க. இது ஜஸ்ட் ஒரு அக்ரிமென்ட் மாதிரி…”
“ஷக்தி ஸ்டாப் இட்…” என்று சொல்லியவன் கையில் இருந்த பூங்கொத்தை சமாதியில் வைத்தவன் கண்ணை மூடி நின்றுவிட்டான்.
அவனின் கோபம் புரிந்தவளும் எதுவும் பேசாமல் சமாதியின் மேல் பார்வையை பதித்தாள்.
“என்ன ஷக்திம்மா, மேல இப்படி விழாதன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்…” என தான் வேகமாய் தாயின் மேல் விழும் பொழுதெல்லாம் பூஞ்சை உடல் கொண்டவருக்கு தாளமுடியாமல் தன்னிடம் கொஞ்சலாய் இறைஞ்சியதெல்லாம் தோன்றி அவளை வதைத்தது.
“அம்மா, உள்ள இருக்கியாம்மா நீ? இங்க ரொம்ப கஷ்டமா இருக்காம்மா? உனக்கு இருட்டுன்னா பயம் தானே? எப்படி இருக்க? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா. உன்னோட வந்துரனும் போல இருக்கே…”
மனதிற்குள் பேசுவதாக நினைத்து வாய்விட்டு அவள் அரற்றிக்கொண்டிருக்க அருகில் நின்றவனின் உடல் விரைத்தது அவளின் மொழிதலில்.
“ம்மா…” என்றவளை மேலும் எங்கே இருக்க விடாமல் கை பிடித்து அழைத்துக்கொண்டு காருக்கு வந்துவிட்டான்.
“ஷேஷா ஒரு மாதிரி இருக்கு. தண்ணி தாங்களேன்?…” என்றாள் அவனிடத்தில் அழுகையை வெளிவரவிடாமல் அடக்கியவாறு.
“தண்ணி வேணும். இங்க என்னவோ பண்ணுது…” என தன் குரல்வளையை மேலும் கீழுமாய் கை நடுங்க தேய்த்தபடி இன்னொரு கையை அவனிடம் நீட்டினாள்.
கண்ணீர் கரைகட்டி நிற்க கண்சிமிட்டி அதை தடுத்து நிறுத்தினாள். அவளின் முயற்சியை கண்டவனுக்கு மனதினுள் அத்தனை வேதனை.
தண்ணீரை எடுத்து நீட்டியவன் அவள் குடித்து முடிக்கும் வரை மௌனமாக இருந்தான்.
“தேங்க்ஸ்…” என்று அவனிடம் திரும்பி கொடுத்தாள்.
“ஷிட். ஒன்னொண்ணுக்கும் தேங்க்ஸ் சொல்லுவியா நீ?…” என்றவனின் கோபம் சிறிதும் அவளை பாதிக்கவே இல்லை.
“பவன்…” என்று கார் கண்ணாடியை இறக்கி அவன் கத்த உடனே வந்து வண்டியை எடுத்தனர்.
இப்போது கார் ட்ரஸ்ட் நோக்கி செல்ல மீண்டும் நக்ஷத்ரா கண்ணை மூடியபடி தான் வந்தாள்.
ட்ரஸ்ட்டுக்கு செல்வதை அறியாமல் வீட்டிற்கு தான் போகிறோம் என நினைத்துக்கொண்டு அவள் இருக்க இங்கே இவன் அன்றே அவளுடைய உரிமையை மீட்க அழைத்து சென்றுவிட்டான்.
வந்த நேரத்தை விட இப்போது கூடுதலாக பயணம் நீள்வதை குறித்துக்கொண்டவள் கண்ணை திறந்து பார்த்தாள்.
இப்போது கார் சென்றுகொண்டிருக்கும் பாதையை ஓரளவு அனுமானித்தவளின் முகம் இருண்டது.
“ஷேஷா…” என்று வேகமாய் அவன் பக்கம் திரும்ப நிதானமாகவே அவள் பக்கம் ஏறிட்டான்.
“ட்ரஸ்ட் போற வழி தானே இது?…” என்று படபடப்புடன் கேட்டவளிடம் விரல் நீட்டி முன்னால் அமர்ந்திருப்பவர்களை காண்பித்து,
“கீப் கொய்ட் ஷக்தி…” அடிக்குரலில் அவளை அடக்கினான்.
“சோ வாட்? யார் இருந்தா எனக்கு என்ன?…” என இப்போது மிதமிஞ்சிய ஆத்திரம் அவளின் குரலில்.
“ஷக்தி…” என்றான் சீற்றத்துடன்.
“யார் பேச்சையும் நான் கேட்கனும்னு இல்லை. என்னை கொண்டு போய் வீட்டுல விடுங்க. இல்லைன்னா எங்கையாவது போக விடுங்க…” என்று சொல்லியவளின் குரலில் அத்தனை கடினம்.
அதற்குள் ட்ரஸ்ட் வளாகத்திற்குள் கார் நுழைந்து வழக்கமாய் ஷேஷா இறங்குமிடத்தில் கார் சென்று நின்றுவிட உள்ளிருந்த பவனும், ட்ரைவரும் இறங்கிவிட்டார்கள்.
“ஷக்தி சொன்னா கேளு. உள்ள வா. இது உன்னோட உரிமை…”
“எனக்கு அது தேவை இல்லைன்னு தூக்கி போட்டு ரொம்ப நாள் ஆச்சு…”
“தப்பு, இப்போ நீ வேண்டாம்னு சொல்றதால தான் யார் யாரோ இதை தப்பான வழில யூஸ் பண்ண பார்க்கறாங்க ஷக்தி…”
“அதுக்கு தான் நீங்க இருக்கீங்களே. நல்லது செய்யத்தானே ஆரம்பிச்சீங்க? அந்த வேலையை நீங்க பாருங்க. உங்களை மீறி இங்க யாரும் ஒன்னும் பண்ணமுடியாது…” என்றாள் ஆணித்தரமாக.
“ப்ளீஸ் ஷேஷா, அந்த சொத்து காசு எல்லாம் என் கால் தூசிக்கு சமம். எனக்கு தெரியாதா அதோட மதிப்பு என்னன்னு. ஆனாலும் வேண்டாம். என்னோட அம்மாவை காப்பாத்த முடியாத பணம் இப்போ மீட்டு என்ன பிரயோஜனம்?…” என விரக்தியாய் அவள் சொல்ல அவளை சமாளிக்கவே முடியவில்லை அவனால்.
“இப்போ நீ உள்ள வரியா இல்லையா?…”
“முடியாதுன்றதை நான் பலவிதமா உங்ககிட்ட சொல்லியாச்சு. என்னை கட்டாயப்படுத்தாதீங்க…” என்றுவிட்டாள் முடிவாக.
எத்தனை அழைத்தாலும் அவள் வரப்போவதில்லை என்று தெரிந்திருந்தவனுக்கு ஒருவேளை இங்கே வந்தால் மனது மாறுமோ என நினைத்து தான் அழைத்து வந்தான். அப்படியும் முடியவில்லை.
“ஓகே, ஒரு பிப்டீன் மினிட்ஸ் வெய்ட் பண்ணுவியா?…” என கேட்டதும் அதுவரை அத்தனை கோபமாக, ஆவேசத்துடன் பழைய திமிருடன் பேசியவளின் முகம் அரண்ட பாவனைக்கு மாறியது.
“ப்ச், என்ன இது? இது நம்ம இடம். ஷேஷாவை மீறி என்ன நடந்திரும்?…” என்று அவளின் கையை அழுத்தியவன்,
“சுத்திலும் நம்ம பவுன்சர்ஸ் இருக்காங்க. பவன் இங்க தான் இருப்பான். போய்ட்டு வந்திடறேன். ஓகே…” என்று அவளை தைரியமூட்டிவிட்டு காரை விட்டு அவன் இறங்கி செல்வதை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
விழிகள் நாலாபக்கமும் சுழன்றுகொண்டே தான் இருந்தது. யார் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்று பார்த்துக்கொண்டே இருந்தவளின் பார்வை கூர்மையடைய தன்னையறியாமல் மடங்கி கீழே சீட்டினுள் நுழைந்து பார்வையை மட்டும் மேலே நீட்டினாள்.
அந்த ஆடம்பரமான வாகனம் வந்து ஷேஷாவின் காருக்கு சற்று தள்ளி நிற்க அதிலிருந்து இறங்கினான் எழிலரசன்.
இறங்கியவன் அங்கிருந்தே ஷேஷாவின் காரை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல நக்ஷத்ராவிற்கு உயிரே போய்விட்டது.
தன்னை கண்டிருப்பானோ என பயத்துடன் அவர்களை பார்த்தபடி இருந்தாள். எழிலரசன் உள்ளே செல்ல மீண்டும் அந்த கார் கதவு திறக்கப்பட்டு காரினுள் இருந்து இன்னொருவன் இறங்கி செல்ல அதை பார்த்தவளின் விழிகள் இப்போது கண்ணீரில் நனைந்தது.