அகத்தியனுக்கு ஒரே பதட்டம். காலை மருத்துவமனையில் இருந்து உடனடியாக இன்னொரு விழா இருப்பதாக சொல்லிவிட்டு பாதியில் கிளம்பிவிட தூரத்தில் ஷேஷா பிரஸ், மீடியாவிடம் பேசிக்கொண்டிருப்பதை கண்டுவிட்டுத்தான் சென்றான்.
ஆனால் அது தன்னை குறித்து இருக்கும் என்று அப்போது நினைக்கவில்லை. ஷேஷாவை பொறுத்தவரை முடிந்தளவிற்கு எந்த தனிப்பட்ட விஷயங்களை பொதுவில் பகிர கூடியவன் இல்லை.
அந்த நம்பிக்கை தான் அவன் ஷக்தியை பற்றி சொல்ல விரும்பமாட்டான் என நினைத்திருக்க இப்படி ஒரு திருப்பத்தை அகத்தியன் எதிர்பாக்கவே இல்லை.
தன்னுடைய பி.ஏவிடம் இருந்த தனது பர்சனல் போனை வாங்கியவன் அதை உயிர்ப்பிக்க வரிசையாக அழைப்புகள் வீட்டில் இருந்து.
அதை விடுத்து யூட்யூப்பில் அந்த நிகழ்ச்சியை எடுத்து பார்க்க ரத்த அழுத்தம் ஏறியது.
“ஷேஷா…” பல்லை கடித்த அகத்தியன் தனது கட்சி அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டிற்கு சென்றான்.
வீட்டில் அத்தனைபேரும் குழுமி இருந்தார்கள். அகத்தியன் வரவுமே எழில் வெடித்தான்.
“பார்த்தீங்களா மாமா, அவன் எப்படி கிளப்பி விட்டிருக்கான்னு. மாத்தி மாத்தி போன். பிரஸ்ல இருந்து வீட்டுக்கு வரனும்னு கேட்கறாங்க. இதுல ஷேஷா போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்தா விசாரிக்க வேண்டியதிருக்கும்னு வேற கமிஷனர் சொல்றார்…”
எழிலின் கோபத்தில் அந்த வீடே அதிர்ந்தது. அவனின் கோபம் அறிந்தது தான். அன்று அது அளவை கடந்தது.
“அஞ்சு வருஷமா கமுக்கமா எங்கையோ இருந்துட்டு இன்னைக்கு வந்து எல்லாத்தையும் பறிச்சதோட இல்லாம என்ன காரியம் பண்ணிருக்கா பாருங்க. இவளா தானே ஓடி ஒளிஞ்சா…” என்றான் எழில்.
‘எல்லாரும் சேர்த்து துரத்திட்டு இன்னைக்கு தானா போன மாதிரி பேசறாங்களே?’ என எண்ணியதுடன் இளவேந்தன் அமைதியாக நின்றான்.
அகத்தியன் மகனை முறைக்க அவன் இன்னும் முறைத்து பார்த்தான். அவரால் வேறு என்ன செய்ய முடியும்?
மகனை ‘உன்னால் தானே அவள் கைவிட்டு போனாள்’ என்றால் வீட்டினர் என்னவென்று கேள்வி எழுப்புவார்களே?
அதன் பின் அகத்தியனால் யாரின் முகத்திலும் விழிக்க முடியுமா? இளவேந்தன் இப்போது எதற்கும் அஞ்சவில்லை.
ஆனாலும் தந்தையையும் எழிலையும் காக்கவேண்டிய கடமை தனக்கிருப்பதாக அவன் நினைத்தான்.
அடுத்து ஷேஷா எதுவும் செய்வதற்குள் இதற்கான மறுப்பு செய்தியை தங்கள் தரப்பில் இருந்து வெளியிட வேண்டும். இளவேந்தன் நினைத்துக்கொண்டு இருக்க வடிவழகி சொல்லிவிட்டார்.
“இப்போ கோபப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை. நாளைக்கு காலையில நம்ம வீட்டுல பிரஸ் பீப்பிள்ஸ் வரனும். எல்லா மீடியாவுக்கும் சொல்லிருங்க. காலையில பத்து மணிக்கு. அதுக்குள்ளே என்ன செய்யனும்னு நான் யோசிக்கிறேன். இப்போ போங்க…” என சொல்லி அனைவரையும் கலைந்து போக சொல்லி சென்றுவிட்டார்.
வடிவழகி சொல்லியிருக்க, இளவேந்தன் மறுநாள் எப்படி அறிக்கை விட்டால் சரியாக இருக்கும் என எழிலுடன் விவாதித்துக்கொண்டு இருந்தான்.
மறுநாளைக்கான திட்டத்தில் இவர்கள் இருக்க அப்படி ஒன்று நடக்கவே போவதில்லை என்பதை போல அன்றே அடுத்த திட்டத்தை வெற்றிகரமாய் செயல்படுத்தி இருந்தான் ஷேஷா.
யோசிக்க கூட அவர்களுக்கு கால அவகாசம் தர ஷேஷா விரும்பவில்லை. அடி, எழுந்துகொள்ள முடியாதபடி ஒரு அடி. ஆனால் ஒன்றில், ஒரு அடியில் முடிய கூடியதா ஷேஷாவின் கோபம்?
————————————————–
ஷக்தி அறக்கட்டளை வந்ததில் இருந்து மதிய உணவையும் மறுத்து அங்கேயே அமர்ந்திருந்தாள்.
கிருஷ் ஷேஷாவிற்கு அழைத்து சொல்ல அவன் விட்டுவிடு என்றுவிட்டான். ஒவ்வொன்றிகும் போய் தான் நிற்க முடியாது. தானாக தான் அவள் தெளிய வேண்டும் என நினைத்தான்.
மாலை முகாம் நிறைவுறும் தருவாயில் இருக்க ஷேஷா பவனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
அறக்கட்டளைக்கு வர சோர்வுடன் அமர்ந்திருந்தவளை பார்த்ததும் எதுவும் பேசாமல் எழுப்பிக்கொண்டு வந்தவன் கார் ஜெகதாம்பாள் உறங்கிக்கொண்டிருந்த அந்த மயானத்திற்கு சென்று நின்றது.
ஜெகதாம்பாள், அம்பாள் மணிவாசகம் ஆசையுடன் அழைக்கும் பெயர். அழைக்க அவரும் இல்லை. கேட்க ஜெகதாம்பாளும் இல்லை.
அங்கே தான் தாங்கள் வருவதை அந்த வழியை வைத்தே கண்டுகொண்ட ஷக்தி நன்றியுடன் ஷேஷாவை பார்த்தாள்.
“இன்னைக்கு முழுக்க உன்னோட நினைப்பு இங்க தானே ஷக்தி?…” என்றவனுக்கு ஆமோதிப்பாய் அவள் தலையசைக்க,
“கூல்…” என்றான் அவளின் கை பற்றி.
மருத்துவமனை சென்றதில் இருந்து ஒவ்வொன்றாய் ஞாபகங்கள். அத்தனையும் வலியையும், வருத்தங்களையும் தர அது எதிரானவர்களின் மேல் வன்மத்தை வளர்த்தது.
தாயின் சமாதியின் முன் சென்று நின்றவளின் விழிகள் வற்றிப்போன கண்ணீரை மீட்டெடுக்க முயன்று தோற்றது.
‘யாரின் வாழ்க்கையிலும் இடையிடாத தங்களுக்கு ஏன் இந்த தண்டனை?’ என நினைத்தவளுக்கு நெஞ்சில் ஊசியென அந்த வார்த்தை கிழித்தது.
“ஷக்திம்மா, அம்மாவுக்கு மூச்சு விட முடியல. தாகமா இருக்குடா. அம்மா கூடவே இருடா…” என இறைஞ்சிய அந்த உயிரின் பார்வையும், பரிதவிப்பும் இன்றளவும் அவளை தாக்கியது.
“போலாம் ஷேஷா…” என்ற அங்கே நிற்க முடியாமல் தள்ளாடியபடி நடந்தவளை தன் மேல் சாய்த்துக்கொண்டு நடந்தான்.
வீட்டை நெருங்கும்வரை வெறித்த பார்வையும் அதற்குள் சுழலும் நினைவுகளுமாய் ஷக்தி.
அவர்கள் அறைக்குள் நுழையவும் அவள் எப்போதும் அமரும் இடத்தில் அமர்ந்துகொள்ள,
“போய் ப்ரெஷாகிட்டு வா…” என எழுப்பினான் அவளை.
“ப்ளீஸ், லீவ் மீ அலோன் ஷேஷா…”
“நோ. கெட் அப் ஷக்தி…” அவளை பாத்ரூமினுள் சென்று விட்டுவிட்டு வெளியேறினான்.
பவனுக்கு அழைத்து பேசிக்கொண்டிருக்க அவன் சொல்லிய பதிலில் இதழ்கள் வளைந்தன.
“குட், எனக்கு எந்த நேரமா இருந்தாலும் கால் பண்ணிடு பவன்….” என சொல்லி வைத்துவிட்டு ஷக்தியை தேடினான்.
அதற்குள் அவள் குளித்து உடை மாற்றி அதே இடத்தில் அமர்ந்திருந்தாள் எந்த மாற்றமும் இன்றி.
உணவு வந்ததும் அவன் அழைக்காமலே எழுந்து வந்துவிட்டாள். நிச்சயம் உண்ணாமல் தன்னை விடமாட்டான் என்று தெரிந்திருந்தது ஷக்திக்கு.
இப்போது ஷேஷாவின் இறுக்கமான முகத்தில் தன்னையே நிந்தித்துக்கொண்டாள் ஷக்தி.
தன்னுடைய சோர்வு அவனையும் பாதிக்கிறது என உணர்ந்துகொண்ட பல தருணங்களில் இதுவும் ஒன்று. மனது லேசானது போல இருந்தது.
சென்றவர்களை பற்றி நினையாதே, கொன்றவர்களை விடாதே, என்ற சிந்தனையுடன் தன்னை கொண்டாடுபவனை வருத்தவும் கூடாது என நினைத்தாள்.
மௌனமாக உணவு நேரம் முடிந்து இருவரும் விரைவிலேயே படுக்கைக்கு செல்ல அதுவரை பேசாமல் இருந்தவள் அவனும் மௌனம் சாதிக்கவே தானே பேசினாள்.
“இன்னைக்கு கேம்ப் எத்தனை மணிக்கு முடிஞ்சது ஷேஷா?…” ஷக்தி அவனிடம் கேட்க,
“நம்ம இங்க வந்த நேரம் அங்க முடிஞ்சது…”
“அதுக்குள்ளே நீங்க வந்துட்டீங்க?…” என்றவளை திரும்பி பார்த்தவன் பார்வையில் ஷக்தி மீண்டும் மௌனமானாள்.
“நியூஸ், சோஷியல் மீடியா எதுவும் பார்க்கலையா ஷக்தி?…”
“இல்லையே…” புரியாமல் கேட்டாள் ஷக்தி.
“மார்னிங் நான் பேசினது இப்போ வைரல் ஆகியிருக்குது…”
“ஓஹ்…”
“சி.எம் கால் பண்ணியிருந்தார்…” அவரிடம் பேசியதை பற்றி ஷேஷா சொல்ல வெறுப்பாய் முகம் சுளித்தாள்.
“என்னோட அப்பா பேரை வச்சு இவங்க அரசியல் பண்ணுவாங்க. அதே அவர் பொண்ணு எனக்கு நடந்த அநியாயம் அவங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. இல்லையா ஷேஷா?…”
“கூல் ஷக்தி…” என்றவன் தனது மொபைலில் அன்றைய செய்திகளை எல்லாம் காண்பித்தான்.
“ஈவ்னிங் நியூஸ் பேப்பர் ஃபுல்லா இதுதான் ஹாட் நியூஸ்…”
“இதை தெரிஞ்சும் எப்படி அவங்க எந்த மறுப்பும் சொல்லாம இருக்காங்க?…”
“நீங்களும் நல்லா அரசியல் பன்றீங்க…” இலகுவாய் சொல்லியவளின் நெருக்கம் அவனை இன்னும் ஷக்தியிடம் நெருங்க கூறியது.
“ஓகே ஷக்தி, குட்நைட்…” ஷேஷா சொல்லியும் அவனை விட்டு அவள் நகரவில்லை.
அசையாமல் அவனின் கையை அணைத்துக்கொண்டு அவள் உறங்க முயன்றாள்.
அந்த முயற்சியுமே தாயின் இழப்பின் வேதனைகளை சேர்த்து மற்றதையும் மனதில் இருந்து தற்காலிகமாக அகற்றவே.
முயன்று பார்த்தவளின் முயற்சியில் சிறு துரும்பென ஷேஷாவின் கைகள் கிடைக்க ஆறுதலாய் பற்றிக்கொண்டாள்.
ஒரே படுக்கையில் இருவரும் இருந்தாலும் அத்தனை நெருக்கமில்லை இத்தனை நாட்களில்.
“ஷக்தி நான் என் கன்ட்ரோல்ல இல்லை. தள்ளி படு…” சொல்லிவிட்டான் தன் மனதை.
ஷக்தி அவனின் பேச்சில் ஸ்தம்பித்தது சில நொடிகள். ‘ஷேஷாவா சொல்லியது?’ என அவனையே பார்க்க அந்த விழிகள், நெற்றியில் பொட்டில்லாத அவன் ரசிக்கும் அந்த நட்சத்திர குறியீடு.
பார்த்தவன் யோசிக்கவில்லை, தன் இதழ்களை அதன் மீது அழுத்தமாய் பதித்து விலகினான் ஷேஷா. அவள் விலகவில்லை.
“ஷக்தி…” என்றவன் தோளில் அவள் தன் முகத்தை அழுத்த,
“நோ, இந்த நிமிஷம் ரெண்டுபேரும் எமோஷனலா இருக்கோம். ஆனா இன்னைக்கு ஆரம்பிச்சா அதுக்கப்பறம் என்னை நீ ஸ்டாப் பண்ண முடியாது. சாய்ஸ் இஸ் யுவர்ஸ்…”
ஷேஷா சொல்லவும் மனதிற்குள் எரிமலை ஒன்று மின்னலடிக்கும் வெளிச்சத்துடன் தனது ஜுவாலையை வெளியிட்டது.
அவளின் இறுக்கம் உணர்ந்தவன் ஷக்தி எதை நினைத்து இறுகுகிறாள் என புரிந்துகொண்ட நொடி,
“உன் சாய்ஸ் வேண்டாம். யூ ஆர் மைன் ஷக்தி…” ஷேஷாவின் வாய்மொழியில் தனது இறுக்கம் தளர்ந்து அவனை பார்த்தாள்.
ஒரு கையால் அவளை அணைத்து இன்னொரு கரத்தை அவள் முன் நீட்டினான் அவளின் சம்மதம் வேண்டி.
நிதானமான அந்த பார்வை மெல்லிய வெளிச்சத்தில் அவளிடம் வர்ணங்களை இறைக்க விழி மலர்த்தி அவனின் கையை பற்றிக்கொண்டவள் மௌனமாய் அவனை அணைத்து தன்னை அவன் வசம் ஒப்படைத்தாள்.
அது போதும் என தன்னை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டவனை தன்னுள் ஏற்க ஆரம்பித்து லேசாய் விலக முற்றிலும் விலகமுடியா நிலையில் ஷேஷா.
ஷக்தியை முத்தமிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் அவளை தன் வசப்படுத்தி அமைதியூட்டியவன் ஆலிங்கனத்தில் கண்மூடினாள் ஷக்தி.
அத்துமீறல் இத்தனை அழகானது என அவளுக்கு உணர்த்தி ஷேஷாவின் பேராண்மை ஷக்தியினுள் மாயம் செய்தது.
தேஞ்சுவையின் தித்திப்பிற்கு நிகராய் ஒரு கூடல். கொஞ்சமும் வெறுக்காத விதமான அவனின் அணுகுமுறை. நிறைவுடன் ஷக்தி உறங்கிவிட ஷேஷா விழித்திருந்தான்.
பவனின் அழைப்பிற்காய் நடு இரவு வரை உறங்காமல் விழித்திருக்க அவன் எதிர்பார்த்த செய்தியும் வந்து சேர்ந்தது.