இரவு நெருங்கும் வரை ஷேஷாவையும், ஷக்தியையும் அலைபேசியில் பிடிக்கமுடியவில்லை.
இளவேந்தன் ட்ரஸ்ட்க்கு தேடி வந்துவிட்டான் ‘ஷக்தி இருக்கிறாளா?’ என பார்க்கவென்று.
ஷேஷாவே அனுமதித்தால் அன்றி அதற்கு வாய்ப்பில்லை என்பதை தெரிந்தும் மனதிற்குள் ஒரு அவா.
நேரில் பார்த்தேனும் பேச முடியுமா என கிளம்பி வர அங்கே கிருஷ் மட்டுமே இருந்தான்.
“ஷேஷாவை பார்க்கனும்…”
“பாஸ் வீட்டுக்கு போயாச்சு. இங்க இல்லை…”
“ஷக்தி…”
“மேம் கூட…” என சொல்லி கிருஷ் அவனை கிளம்புமாறு கை காண்பித்துவிட்டு தானும் நடந்துவிட்டான்.
இளவேந்தனுக்கு அவமானமாக இருந்தது கிருஷ் சொல்லிய பதிலில். ஓரிரு வார்த்தையில் தான் பதில். கிருஷ் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
ஆனால் இது இப்படி தேங்கி நிற்கும் நேரமல்லவே. நேரம் செல்ல செல்ல பதட்டம் சூழ்ந்தது.
வடிவழகி நினைப்பில் ஒரு அசமந்தம் தெரிந்தது. கமிஷனர் இந்த வழக்கின் நடவடிக்கைகளை தங்களுக்கென தள்ளி வைப்பார் என்று.
ஆனால் நடத்துபவனே ஷேஷாவாக இருக்கும் பொழுது அப்படியே இருக்குமா, இருக்க விடுவானா என்பதில் சந்தேகம் தான்.
அந்த குடும்பத்தில் மற்றவர்களை விட இளவேந்தான் ஷேஷாவை நன்றாகவே புரிந்து வைத்திருந்தான்.
அதனால் அடுத்து என்ன என்னும் பயத்தில் தனியாக தவித்துக்கொண்டு இருந்தான்.
குடும்பத்தில் யாரிடமேனும் சொன்னால் ஒன்று பயப்படுவார்கள், இல்லை கோபப்படுவார்கள்.
இரண்டுமே நிம்மதியை மட்டுமல்ல யோசிக்கும் மனநிலையையும் மாற்றும் என இளவேந்தன் காட்டிக்கொள்ளவில்லை.
அங்கேயே ஐந்து நிமிடம் இளவேந்தன் நின்றுவிட்டு கிளம்பினான். ஷேஷாவை தொடர்புகொள்ளாமல் ஷக்தியிடம் பேச முடியாது.
இந்த கைது நடவடிக்கையில் எழில் மட்டுமல்ல, நிச்சயம் அகத்தியனும் சிக்குவார் என்பதில் திண்ணம்.
அப்படி ஒருமுறை இதில் நுழைந்துவிட்டால் என்னவெல்லாம் நடக்குமோ? போதும் இத்துடன் ஷக்தியின் வழியில் இருந்து விலகிக்கொள்வதாக கேட்டு தள்ளி இருந்துகொள்வது தான் சரி.
இனி எந்த உறவும் வேண்டாம் பகையும் வேண்டாம். இப்போது இந்த சூழ்நிலையில் குடும்பத்தில் எழில், வடிவழகி அகத்தியனிடம் பேசினால் கேட்பார்கள் என்னும் நம்பிக்கை ஒன்று உருவாக மீண்டும் கிருஷை நோக்கி ஓடி வந்தான் இளவேந்தன்.
“கிருஷ், ப்ளீஸ் ஒன்ஸ் அகைன் நீங்க ஷேஷாவுக்கு கனெக்ட் பண்ணி குடுங்க. ப்ளீஸ்…” என கேட்டவனை பார்க்கவும் வருத்தமாக இருந்தது கிருஷிற்கு.
“ஓகே…” என பவனுக்கு அழைத்தான்.
“திஸ் இஸ் நாட் ஃபேர் கிருஷ்…” விஷயம் கேட்டதும் பவன் சொல்லியது இவைதாம்.
“ஹ்ம்ம், ஓகே…” என சொல்லி போனை துண்டித்த கிருஷ்,
“ஐ’ம் ஹெல்ப்லெஸ் இளவேந்தன்…”
கிளம்பிவிட்டவனின் கார் செல்வதை நின்று பார்த்துகொண்டிருந்த இளாவிற்கு மனது விண்டுபோனது.
இயலாமைகள் எல்லாம் சேர்ந்து அகத்தியனின் பக்கம் ஒட்டுமொத்த ஆத்திரமாய் திரும்பியது.
கோபத்துடன் கிளம்பி வீடு வந்து சேர்ந்தவனுக்கு பாதி போதையில் புலம்பிக்கொண்டிருந்த எழிலை பார்க்க வேதனை சுரந்தது.
“இளா என்ன ஆச்சு?…” வடிவழகி இளவேந்தனின் வரவை கண்டு கீழிறங்கி வந்தார்.
“நோ யூஸ்…” என சொல்லி எழிலின் அருகே சென்று அமர்ந்தான்.
“இளா, நான் ஒன்னுமே பண்ணலையே?…” என பேசியவனை பார்க்க துயரம் தான்.
“நீ எதுவும் செய்யலை எழில். எனக்கு தெரியும்டா…” என அவனை அணைத்துக்கொண்டான் இளா.
வயதில் மிகவும் மூத்தவனாக இருந்தாலும் சிறுவயதிலிருந்தே உற்ற தோழனாக பார்த்து வளர்ந்தவன். இருவருக்கிடையில் ஒரு அந்நியோன்யம், சகோதரத்துவமும் இருந்தது.
இரண்டிற்கும் பாலமாய் நடுவே கண்ணுக்குள் உறுத்தும் துரும்பாய் இருப்பது அகத்தியன் மட்டுமே.
இத்தனை சொத்துக்கள் இருந்தும் என்ன வேணுமாம் இந்த மனிதருக்கு என தகப்பனை நினைக்க வெறுப்பு எரிமலையாய் தூறியது.
“இளா…” வடிவழகி மகனை பார்த்து சுளித்த பார்வையுடன் அருகே வந்தார்.
“இவன் இன்னும் இங்க இருந்து போகலையா? ராஜி…” என அறை அதிர அவர் கத்த,
“அத்தை…” என்று ஓடி வந்தவளின் கவலை ததும்பிய முகத்தை பார்த்த தமையனுக்கு தாளவில்லை.
“முதல்ல உங்க தம்பி எங்கன்னு கேளுங்க. அந்த மனுஷனை வர சொல்லுங்க. யார் தப்பு செஞ்சாங்களோ அவங்களை விட்டுட்டு மத்தவங்களை தான் பேசுவீங்களோ?…”
வடிவழகியிடம் இத்தனை கோபத்துடன் இவ்வளவு சத்தத்துடன் இளவேந்தன் பேசியது இதுவே முதன்முறை.
தந்தை மீது கோபம், மாமியார் மீது கோபம், தன்னால் எதையும் செய்ய முடியாத கோபம்.
கண் முன்னே உடன்பிறந்தவளின் வாழ்க்கையும், உயிர் நண்பனின் எதிர்காலமும் சிதிலமடைய போவது தெரிந்தும் தன்னால் எதுவும் செய்துவிடமுடியாத கோபம்.
அத்தனைக்கும் காரணமான இந்த இருவரின் மீது இதுவரை அடக்கி வைத்திருந்தவை ஆக்ரோஷமாக வெடித்துவிட்டது.
“இளா, என்ன பன்றீங்க? எங்கம்மாவையே எதிர்த்து பேசறீங்க?…” என்ற சுடர்கொடி,
“என் அண்ணனுக்கு சாமர்த்தியம் இல்லை. சொத்து மட்டும் வேணும். ஆனா அங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க வேண்டாம். அவனோட கேர்லெஸ் தான் காரணம். அதுக்கு என்னோட அம்மாவை எதிர்த்து வாய்ஸ் அவுட் பண்ணுவீங்களா?…”
“அகத்தியன் வரவும் கால் மீ. நானே வரேன் ஷக்தியோட…” அழைப்பு தொடர்பு விட்டு போக தொய்வுடன் அமர்ந்தான் இளா.
“இளா என்ன நடக்குது? என்ன விஷயம்? நீ ஏன் இவ்வளவு பயப்படற?…” ராஜி தம்பியிடம் கேட்டாள்.
“இன்னும் கொஞ்சம் நேரத்துல தெரிஞ்சிரும் க்கா…” சுரத்தில்லாத குரலில் இளா.
“என்ன ஆச்சு? என்ன சொன்னான் அவன்?…” வடிவழகி அவசரப்பட,
“அப்பா வரனுமாம். அப்பாவை வச்சு தான் பேச முடியும்ன்னு சொல்லிட்டார்…”
“சரி வர சொல்லு. ஹ்ம்ம், சீக்கிரம்…” அவரின் வேகத்தில் இளவேந்தனுக்கு பயம் பிடித்தது.
“அத்தை…”
“இன்னும் என்ன அம்மா முகத்தை பார்த்திட்டே இருக்கீங்க? மாமாவுக்கு கூப்பிடுங்க…” சுடர்கொடி சத்தம் போட வேறு வழியும் இருக்கவில்லையே.
அகத்தியனுக்கு அழைக்க அவன் எடுப்பதாய் இல்லை. உடனே லாயருக்கு அழைத்து சொல்ல சிறிது நேரத்தில் அகத்தியனே பேசிவிட்டான் மகனிடம்.
“என்னை எதுக்காக வர சொல்றான்? இதுல என்னவோ சூது இருக்கே? ஏன் உங்களால பேச முடியாதா?…” என எரிச்சலில் பேச,
“அப்பா, இப்ப வேற வழி இல்லை. நீங்க வந்துதான் ஆகனும். கிளம்பி வாங்க. இல்லைன்னா…” என சொல்லி போனை வைத்ததும் அகத்தியனுக்கும் வேறு வழி இருப்பதாய் தெரியவில்லை.
“இளா எங்கக்கிட்ட இருந்து எதையோ மறைக்கிற நீ?…” எழில் அவனிடம் கேட்க,
“என்னை எதுவும் கேட்காத எழில். உனக்கே கொஞ்ச நேரத்துல எல்லாம் தெரியும்…”
“அக்கா, எல்லாருக்கும் ஏதாவது சாப்பிட குடு. ஷேஷா எப்போ வராருன்னு நான் பார்த்துட்டு சொல்றேன்…” என சொல்லி தளர்ந்த நடையுடன் வெளியே சென்றான் இளவேந்தன்.
சிலை கடத்தல், அதில் அகத்தியனின் பங்கு இருக்கிறது. ஆனால் ஷேஷாவிடம் வேறு என்ன ஆதாரங்கள் இருக்கும் என உதறல் எடுத்தது.
வேறு என்னவெல்லாம் செய்திருக்கிறார் அகத்தியன் என தெரியாமல் இருந்தான் இளவேந்தன்.
ஏற்கனவே இளவேந்தனுக்கு தனது மாமனாரின் மறைவில் தந்தையின் கை தடம் இருக்குமோ என சந்தேகம்.
அது உண்மையாக இருந்தால்? நினைக்கவே பதறியது. குற்ற உணர்வு சுமையாய் மாறி அவனை அழுத்திக்கொண்டு இருந்தது.
இனி தன் கையில் எதுவுமில்லை. முன்பும் அப்படியே. இப்போது அத்தனையும் ஷேஷாவின் முடிவில். நடப்பது நடக்கட்டும் என்னும் கடைசி விளிம்பு நிலைக்கு வந்துவிட்டான்.
அகத்தியன் தன் வீட்டிற்கு செல்வதற்கு முன் கடைசி முறையாக முதலமைச்சருக்கு அப்போதே தொடர்புகொண்டு விஷயத்தை சொல்ல,
“என்ன அகத்தியன் இது? உன் விஷயமா பேசினாலே அவன் பிடிகுடுக்க மாட்டேன்றான்ய்யா. அவன்கிட்ட சும்மாவும் பேசிட முடியாது. சரி இரு. பார்ப்போம்…” என சொல்லிய முதலமைச்சர் ஷேஷாவிற்கு அழைத்தார்.
இங்கே ஷேஷாவிற்கு அழைப்பு வரவும் அத்தனையையும் வேடிக்கை பார்த்தபடி இருந்த ஷக்திக்கு புரிந்தது இது அகத்தியனின் வேலை என.
இகழ்ச்சி புன்னகையில் வளைந்த இதழ்களுடன் வேடிக்கை மட்டுமே பார்த்தாள் ஷக்தி.
“சி.எம்…” ஷக்தியிடம் சொல்லி அழைப்பை எடுத்தான்.
“சொல்லுங்க ஸார்…” என்றவனின் பேச்சு ஒருநொடி அவரை தயங்க செய்தது.
“எனிதிங் இம்பார்ட்டன்ட்?…” ஷேஷா மீண்டும் கேட்க,
“எஸ் ஷேஷா, நியூஸ் பார்த்தேன்…”
“ஓஹ்…”
“எனக்கும் ஷாக்…”
“ஈஸ் இட்?…”
“கண்டிப்பா இதுக்கான காரணம் யாருன்னு நாம கண்டுபிடிச்சே ஆகனும் ஷேஷா…”
“எஸ், பட் நீங்க உங்க டிபார்ட்மென்ட்ல சொல்லி ஆக்ஷன் எடுக்க சொல்லலாமே? ஏன் எனக்கு கால் பன்றீங்க?…” என்றான்.
“ஷேஷா உடைச்சே பேசிடறேன்…”
“வாங்க…”
“விஷயம் ரொம்ப பெருசு தான். கண்டிப்பா ஆக்ஷன் எடுப்பேன். ஆனா ஷேஷா எனக்கு ஒரு ஃபேவர் பண்ணனுமே?…”
“வாட்?…”
“இந்த கேஸ் கொஞ்ச நாளைக்கு தள்ளி போடனும்…”
“நோ…”
“ஷேஷா, நான் இதுக்கு கண்டிப்பா ஒரு முடிவு கட்டுவேன். ஆனா இப்போ இது பெருசாச்சுனா எங்க ஆட்சியில நம்ம பொக்கிஷத்தை கூட பாதுகாக்க முடியாத அரசாங்கம்ன்னு மக்கள் மத்தியில சலசலப்பு உண்டாகும்…”
“அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. என்னோட வேலையை நான் செஞ்சிட்டேன்…”
“ஷேஷா சொல்றதை கொஞ்சம் கேளுங்க. இந்த எலெக்ஷன் முடியட்டும். எங்க கட்சி ஆட்சியமைக்கவும் கண்டிப்பா நான் என்னன்னு பார்க்கறேன்…”
“நீங்க ஏன் இத்தனை பேசறீங்கன்னு எனக்கு தெரியாம இருக்கும்ன்னு நினைச்சீங்களா?…” அவர் பேசி முடித்ததும் ஷேஷா கேட்க அவர் ஸ்தம்பித்து போனார்.