“எந்த எவிடென்ஸ்ஸும் இல்லாம நான் எந்த காரியத்திலயும் இருங்கமாட்டேன்…”
“ஷேஷா…”
“எஸ், எவிடென்ஸ்ன்னு நான் சொன்னது எல்லாம். அகத்தியனோட கான்டெக்ட், டீலிங் எல்லாமே…”
எது நடந்திருக்க கூடாது என நினைத்தாரோ அதுவே சத்தமின்றி நடந்திருக்கிறது என தெரிந்ததும் மூச்சில்லை முதலமைச்சரிடம்.
ஷேஷாவை சாய்த்துவிட்டு இதை ஒன்றுமில்லாமல் செய்வதென்பது இயலாத காரியம். தழைந்து தான் போகவேண்டிய நேரம் என புரிந்துகொண்டார் அவர்.
“லீவ் இட். எனக்கு அது தேவை இல்லாத விஷயம். ஆனா நீங்க இதையே திரும்ப பேசினா…”
“இல்லை, அப்படி எதுவும் செஞ்சிட வேண்டாம் ஷேஷா…” பதறினார்.
“இந்த இரட்டை குதிரை சவாரி என்கிட்டே வேண்டாம். அதே நேரம் என்னை கன்ட்ரோல் பண்ணலாம்ன்னு நினைக்காதீங்க. முடிவு உங்க இஷ்டம்…”
ஷேஷா சொல்லவும் முடிவெடுக்கும் இடத்தில் முதலமைச்சர். மீண்டும் அகத்தியனுக்கு பரிந்து பேசினால் நிச்சயம் தன்னையும் காப்பாற்றிக்கொள்ள முடியாது.
அகத்தியனை சமாளித்துக்கொள்ளலாம். அகத்தியனை போல எத்தனை பேரை பார்த்திருப்பார். ஆனால் ஷேஷாவை.
தான் இல்லை என்றால் இன்னொருவர் அவனுக்கு. ஷேஷாவின் தயவின்றி ஆட்சி அமைக்க, எலெக்ஷன் வேலைகளுக்கான பணம்?
முடிவெடுத்துவிட்டார் முதலமைச்சர். உடனடியாக கட்சியின் முக்கிய உறுப்பினர்களை ரகசியமாக கூட்டினார். அவசரகூட்டத்தில் அகத்தியனுக்கு அனுமதியில்லை.
உடனடி முடிவெடுத்து சந்தேகத்தின் பெயரில் மக்கள் நலனின் மேல் அக்கறை கொண்டு, நாட்டின் வளங்களை பாதுகாக்கும் பொருட்டு கூட்டணியை விட்டு விலகுவதாக பேசினார்.
அதனுடன் இந்த கேஸை உடனடியாக முடுக்கிவிட்டு இதற்கு காரணமானவர்களை துரிதமாய் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் முடிவெடுத்திருப்பதாக கூறினார்.
அதற்கு நான்குபேர் கொண்டு குழுவமைத்து மக்கள் மனதை அசைக்கும் வார்த்தைகளை சேர்த்து நீண்ட உரையை தயார் செய்ய உத்தரவிட்டார்.
அடுத்தது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு. எந்த நேரமும் அகத்தியன் கைது செய்யப்படலாம். தான் பேச தயாராக இருக்க வேண்டும்.
இதை எதையும் அறியாமல் அகத்தியன் எதிர்பார்ப்புடன் இருக்க முதலமைச்சர் அழைத்துவிட்டார் அலுவலகத்திற்கு வர சொல்லி.
‘இனி தனக்கு என்ன கவலை?’ என கிளம்பி சென்ற அகத்தியனிடம் தன்னால் எதுவும் செய்ய முடியாதென்றும், இனி அகத்தியன் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் சொல்ல அகத்தியனின் அகங்காரம் கொதித்தது.
“அதெல்லாம் உனக்கு தேவை இல்லாதது. ஆனா உன் கட்சி கூட்டணி இருந்தா கண்டிப்பா இந்த எலெக்ஷன்ல நாங்களே ஜெயிக்க முடியாது போல?…”
“தலைவரே இது நல்லா இல்லை. எல்லாத்துக்கும் கூட இருந்துட்டு இன்னைக்கு மாட்டுற மாதிரி வரவும் தள்ளி வைக்கிறது. என்னை பத்தி தெரியும் உங்களுக்கு…”
“உன்னையும் தெரியும், உன்னை சமாளிக்கவும் தெரியும். பேசாம கிளம்புறத பாரு. முடிஞ்சா அந்த ஷேஷாட்ட இருந்து தப்பிக்கவும் பாரு. கிளம்பு…” என தூக்கி எறிந்து பேச அகத்தியனுக்கு கோபமும், அடுத்து என்ன என்னும் மலைப்பும் தோன்றியது.
“என்னால முடிஞ்சது என் பவரை வச்சு உனக்கு முன்ஜாமீன் வாங்க முடிஞ்சது. அதை வச்சு என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ…” என பேசவும் அகத்தியன் கோபத்துடன் வெளியே வந்தான்.
கறிவேப்பிலையாக வீச எறிந்த பின்னர் கோபப்பட்டு இப்போதைக்கு புண்ணியமில்லை.
ஷேஷா இந்த பெயரே அகத்தியனை கோபத்துடன் எழும்பவும், மறுகணம் அப்படியே அடங்கவும் செய்தது.
மலைபோல நம்பி இருந்த அரசாங்க ஆதரவே இப்போது தனக்கில்லாது போக அடுத்து என்ன என்னும் கேள்வி தொக்கி நின்றது.
வெளியே வந்ததுமே அகத்தியனுடன் வந்திருந்த லாயர் அவனின் அதிர்ந்த முகத்தை கண்டு விஷயம் பெரிது என புரிந்துபோனது.
“வீட்டுக்கு போறேன்ய்யா…” அகத்தியன் தனது காரை நோக்கி விறுவிறுவென நடக்க லாயருக்கும் உடன் வர,
“நீ வேண்டாம்…” தான் மட்டுமே கிளம்பிவிட்டான்.
தன்னிடம் அடுத்து வேறு என்ன செய்ய வேண்டும் என கூட சொல்லாமல் அகத்தியன் கிளம்பியதும் இளவேந்தனுக்கு அழைத்து விஷயத்தை சொல்லவும் இளாவும் அகத்தியனுக்காக காத்திருந்தான்.
இதற்கிடையில் அகத்தியன் வரவிருக்கும் தகவலையும் ஷேஷாவிடம் பவன் மூலம் தெரிவித்துவிட்டான்.
——————————————-
பவன் இதை சொல்லும் வரை ஷேஷாவிடம் வாதம் செய்துகொண்டு இருந்தாள் ஷக்தி.
“நானும் அங்க போக முடியாது. நீங்களும் போக கூடாது ஷேஷா….” ஷக்தி அவனின் முடிவை கண்டித்தாள்.
“நான் டிஸைட் பண்ணிட்டேன் ஷக்தி…”
“என்னோட டிஷிஷனும் இது தான்…”
“இன்னைக்கு நாம போகனும். போறோம்…”
“நான் வரமாட்டேன். அதுவும் அந்த வீட்டுக்கு, அந்த மனுஷங்க முன்னாடி…” முகம் சுளித்து அவள் சொல்லியவிதத்தில் ஷேஷாவின் பார்வை மாறியது.
“மனுஷங்க? யூ மீன் ஹ்யூமன்ஸ்? அவங்களை அப்படின்னு இன்னுமா நினைச்சிட்டு இருக்க?…”
“நினைக்கலை. ஆனா அங்க வர முடியாது…”
அவளின் மறுப்புகளுக்கு அவன் தலையசைக்கவும் இல்லை. மனதில் வாங்கவும் இல்லை. அவன் அமர்ந்திருக்கும் விதமே ஷக்தியை கோபமூட்டியது.
“இதுதான் வேண்டாம்ன்னு சொல்றேன். இந்த லுக் லைக், எனக்கு சும்மா பார்த்தே புரிய வைக்க முயற்சி பன்றீங்க ஷேஷா. என்னை எப்படியும் அங்க கூட்டிட்டு போவீங்க இல்லையா?…”
“சூர்…”
“ஏன் இப்படி பிடிவாதம் பன்றீங்க ஷேஷா?…”
“நீ அங்க வந்து பேசனும் ஷக்தி. அங்க நடக்கறதை நீ பார்க்கனும்…”
“எனக்கு வேண்டாம். அங்க அவங்க வீட்டுக்கு போக பிடிக்கலை. இதுல பேசனுமா?…”
“அது உனக்கும் வீடு தான்…”
“நோ, நோ. அது என்னோட வீடா? நோ. அங்க யாருமே எனக்கு இல்லை…” ஷக்தியின் கோபம் இன்னும் அதிகமானது.
“நீ மறுத்தாலும் அது உனக்கும் வீடு தான். நான் வீட்டை சொன்னேன்…”
“வீடும் வேண்டாம்ன்னு சொல்றேன் நான்…” என்றவளுக்கு ஆவுடையப்பனின் முகம் கலங்கலாக தோன்றியது.
தனக்கு விவரம் தெரியும் முன்னே மறைந்திருந்தார் அவர். முதுமையின் தள்ளாட்டத்துடன் தன்னை பார்த்துவிட்டு சென்றது மட்டுமே ஞாபகத்தில் இருந்தது.
“நானும் உனக்கு தாத்தாடா. உங்கம்மாவும் எனக்கு பொண்ணு மாதிரி தான்…” ஒவ்வொருமுறை பார்க்கும் பொழுது அதனை உளமார்ந்தே கூறியிருந்தார்.
அந்த வீட்டில் தனக்கு தெரிந்த தன்னை அனுசரித்த ஒரே நபர் ஆவுடையப்பன். அவரும் இல்லாத அந்த வீட்டில் தனக்கு என்ன?
“ஷக்தி…” ஷேஷாவின் அழைப்பில் அவன் புறம் திரும்பினாள்.
“கிளம்பலாம்…” என எழுந்தான்.
“இல்லை, இப்போ எதுக்கு அங்க? அவங்களை பார்த்து பேசி எனக்கு எதுவும் இல்லை. போக வேண்டாம்…” என்றவள்,
“உங்ககிட்ட தான் எவிடென்ஸ் இருக்கே. அதை வச்சு மொத்தமா என்ன செய்யனுமோ செய்ங்க. நான் பார்த்து சந்தோஷப்பட போறதில்லை. எனக்கு அவங்க முடிவு எதுவுமே சந்தோஷம் தராது ஷேஷா…”
வார்த்தைகளின் வலியை அவனுக்கு கடத்த அதற்கெனவே அவனும் ஏற்று நின்றான்.
ஷேஷாவின் முடிவில் மாற்றமில்லை. அகத்தியன் மட்டுமல்ல அவர்களின் தோல் உரிக்கவேண்டிய தருணம் இது.
அகத்தியனை என்ன செய்ய வேண்டும் என எடுக்கப்பட்ட முடிவின் முன் செயல்படுத்தவேண்டிய கடமை.
கடமை என மட்டுமா நினைத்தான்? அவன் செய்ததன் வீரியத்தை குடும்பம் பார்க்க உணர்த்த வேண்டாமா? தன்னை பார்த்து நின்ற ஷக்தியை அவன் விழிகள் உள்வாங்கிக்கொண்டது.
“கமான் ஷக்தி…” என சொல்ல ஷக்தி அசையாமல் நின்றாள்.
“ஷக்தி என்னோட வா…” அவள் பக்கம் நீட்டிய கையை பற்றிக்கொண்டவள்,
“இதனால எதுவும் மாறாது ஷேஷா. அவங்க அவங்களாவே தான் இருப்பாங்க. அதுவும் வலி என்னோடதுன்னும் போது அவங்களுக்கு அது பொருட்டில்லை…”
உண்மை தானே, ஷக்தியின் வலியை மனிதாபிமானத்துடன் பார்த்திருந்தால் இன்று இந்தளவிற்கு அவள் அனுபவித்திருக்கமாட்டாளே?
“வலி உனக்கு மட்டுமே உரித்தானது இல்லை ஷக்தி. நீ என்கிட்ட கேட்டது மறந்து போச்சா?…”
“என்ன?…”
“மணிவாசகம் ஸார் டெத், ஜெகதாம்பாள் அம்மாவோட இழப்பு. இது எல்லாம் நீ ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாம்?…”
“ஷேஷா…”
“காரணம் அகத்தியன்ற வரை தெரியும். ஆனா எப்படின்னு உனக்கு மட்டுமில்லை. எல்லாருக்கும் தெரியனும் தானே?…”
“இப்ப சொல்லு, போலாமா?…” என கேட்டதும்,
“நிச்சயமா…” ஷேஷாவுடன் சேர்ந்து நடந்தாள்.
அறையை விட்டு வெளியே வரவும் இவர்களுக்காக காத்திருந்த பவன் ஷேஷாவின் அருகே உடன் வந்து நின்றான்.