அகத்தியனின் வழக்கு மிகவும் பரபரப்பாகி பேசப்பட அகத்தியனின் ஆதரவென ஒருவரும் வாய் திறக்கமுடியவில்லை.
நாட்டின் பொக்கிஷங்களை கடத்தி துரோகமிழைத்தற்காகவும், கோவில் நிலங்களை அபகரித்ததற்காகவும், மணிவாசகம் கொலைவழக்கு என மேலும் இன்னும் சில சட்டவிரோத செயல்களில் ஈடுப்பட்டதற்காக அகத்தியனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அவன் சார்பாக வாதாடவும் எவரும் முன்வரவில்லை. அகத்தியனுக்கு எதிராக களமிறங்கி இருந்ததோ தி கிரேட் லாயர் பாலமுரளிகிருஷ்ணா.
இளம் வயதிலேயே சிக்கலான வழக்குகளையும் அசாத்திய திறமை கொண்டு வெற்றி பெருபவன்.
அத்தனையும் நேர்மையாகவும், படித்த படிப்பிற்கு உண்மையாகவும் வேலை செய்பவன். அவனுக்கெதிரே வாதாட ஒருவருக்கும் துணிச்சல் இல்லை.
வழக்குகள் மேலும் மேலும் தோண்டப்பட்டது. தோண்ட தோண்ட பூதாகரம். இதற்கும் வஜ்ரவேலிடம் இருந்த ஆதாரங்கள் வேறு அவர்களின் வழக்கை சுலபமாக்கியது.
இனி ஜென்மத்தில் வெளிவரமுடியாதபடிக்கு வழக்கும், தீர்ப்பும் இருக்க எதுவும் அகத்தியனின் மனதில் பதியவில்லை.
தன்னை பார்த்ததும் பேத்தியின் மேல் தன் மகள் புடவைகொண்டு போர்த்தியதும், சிறு குழந்தையை என்னவும் செய்திருப்பேன் என அரற்றி துடித்த மருமகளின் கதறல்களும் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.
குடும்பம், உறவுகள் மீதான அன்பு தன்னிடம் இந்தளவில் ஊறி இருப்பது அகத்தியனுகே அன்றுதான் விளங்கியது.
அப்போதும் மற்ற தவறுகளை பற்றிய எண்ணம் பெரிதாய் எதுவும் இல்லை. குற்றவுணர்ச்சியும் இல்லை.
ஆனால் தன் வீட்டினரின் முன்னால் இப்படி ஆகிவிட்டோமே என தான் ஆற்றாற்று போனான்.
இனி இல்லை, தனக்கு குடும்பமும் இல்லை. உறவுகளும் இல்லை. இனி யாரின் முகத்திலும் விழிக்க முடியாதே? வேறு எந்த நினைப்பும் இல்லை.
ஆடிய ஆட்டங்கள் இந்த ஐந்து வருடத்தில் ஏராளம். இத்தனை வளர்ச்சியும் இப்படி முடியத்தானா என இருந்தது அகத்தியனுக்கு.
அகத்தியனின் சொத்துக்கள் எல்லாம் அரசாங்கத்தின் பார்வைக்கு வர பூர்வீக சொத்துக்களை தவிர்த்து அத்தனையும் எங்கே என தெரிந்து இளவேந்தனின் முழு ஒத்துழைப்புடன் அரசாங்கம் எடுத்துக்கொண்டது.
தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டது. அகத்தியனை சிறைசாலையில் அடைக்க அங்கே அவன் அனுபவித்த வாழ்க்கையோ முற்றிலும் புதிது.
‘உன்னை ஏன் உயிருடன் விட்டுவைத்திருக்கிறேன் என தெரியுமா?’ என்ற ஷேஷாவின் கேள்விக்கான பதில் அங்கே கிடைத்தது.
வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் நரகம். முன்னாள் அமைச்சர் என்ற எந்த சலுகைகளும் இன்றி சாதாரண கைதியாக அங்கே அகத்தியன் நடத்தப்பட்டான்.
அந்த வாழ்க்கையை வாழ முடியாமல் உயிர் போய்விட்டால் போதும் என்னும் அளவிற்கு நரகத்தை அனுபவித்துக்கொண்டு இருந்தான்.
விசாரணைகள் முடிவடைந்து எழிலின் மேல் எந்த தவறும் இல்லை என நிரூபிக்க எழில் விடுதலை ஆனான்.
அதற்குள் அவன் பட்ட துயரங்கள். ஷக்திக்கு தாங்கள் செய்த தண்டனைக்கான பலனாக இருக்குமோ என எண்ணாத நாள் இல்லை எழில்.
அகத்தியன் அவனிடம் பேச முயன்றும் கொஞ்சமும் மனம் இறங்கினான் இல்லை.
இத்தனை வருடங்கள் முட்டாளாக ஒருவன் இருக்க முடியுமா? தான் இருந்திருக்கிறோமே?
இப்படி தானே எதையும் பிரித்தறியமுடியாத ஜீவனாக இருக்கையில் தன் சந்ததிக்கு என்ன நல்லதை சொல்லிவிட போகிறோம் என எண்ணி வெட்கினான்.
குடும்பத்தை சந்திக்க கோர்ட்டிலிருந்து கிளம்பி சென்றவன் நேராக சென்றது மருத்துவமனைக்கு.
வானம் மருத்துவமனை. அங்கே தான் வடிவழகியை அனுமதித்திருந்தார்கள். அதிகபட்ச அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டிருக்க காப்பாற்றவே போராட வேண்டிய நிலைமை.
ஒருபக்கம் கால், கைகள் விழுந்த நிலையில் நிலைகுலைந்து போயிருந்தார் வடிவழகி.
தன்னுடைய அறியாமையும், மடமையும், தனது வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதை எண்ணி எண்ணி கலங்கிக்கொண்டு இருந்தார்.
தன்னிடம் தவறை வைத்துக்கொண்டு தன்னை வைத்து ஆட்டம் ஆடிய தன்னுடன் பிறந்தவனை நினைத்து ஆத்திரம் கொண்டது மனது.
ராஜி தான் அத்தனைபேரையும் தாங்கி நின்றாள். இளவேந்தனுக்கு மனைவியையும், மகள், மற்றும் அபிநயாவை பார்க்கவும், எழில் விஷயத்தை கவனிக்கவுமே சரியாய் இருந்தது.
அன்று மருத்துவமனை வந்தவன் தாயின் அருகே அமர்ந்தவன் எதுவும் பேசவில்லை.
பார்த்துக்கொண்டே மட்டுமே இருந்தான். மௌனம். எழிலின் மௌனம் பெரும் வலியை தந்தது அனைவருக்கும்.
“அப்பா…” தந்தை வரவும் அவனை ஆரதழுவிக்கொண்டவளை தலையில் கைவைத்து அழுத்திகொடுத்தவன் தள்ளி நிறுத்தி பார்த்தான்.
இத்தனை நாள் புரிந்தும் புரியாமல், வீட்டில் நடப்பதை தானாகவே ஓரளவு அனுமானித்திருந்தவள் எழிலை பார்த்ததும் பிரிவாற்றமையில் கண்ணீர் வடிய இருந்தாள்.
முகத்தில் மகிழ்ச்சி இன்றி, குடும்பத்தின் சந்தோஷம், நிம்மதி பறிபோனது மகளின் இந்த சுரத்தில்லா முகத்தில் தெரிந்தது.
இப்போது எழிலுக்கு அன்றைய நாள் இரவில் ஷக்தியை நடுவீதியில் நிறுத்தியபோது அவள் அழுத அழுகையும், தாயின் உயிருக்கே மன்றாடியதும் நினைவுக்கு வர உள்ளுக்குள் என்னவோ செய்தது.
நினைவில் ஷக்தியின் முகம் மறைந்து அங்கே அபிநயா அந்த தோற்றத்தில் நிற்பதை போல தோன்ற கண்ணை மூடித்திறந்து பதட்டாமாய் மகளை பிடித்து தன்னை நிதானம் செய்தான்.
ஒரு நொடி கூட முடியவில்லையே. என்னவெல்லாம் செய்துவிட்டேன்? தனக்கு இது பத்தாது என்றே தோன்றியது.
இத்தனையிலும் இளவேந்தனிடம் எழில் பேசவில்லை. அவன் பேச வந்தாலும் மறுத்து முகம் திரும்பினான்.
அதிலும் ஷக்தியை அவன் தான் காப்பாற்றி இருக்கிறான் என நினைக்கும் போது நிம்மதியாக இருந்தாலும் தன்னிடம் அன்றே சொல்லியிருக்காலாமே?
பாவத்தின் கணக்குகள் குறைந்திருக்கும். எப்பேர்ப்பட்ட பாவம்? தான் செய்தது மட்டும் என்ன அத்தனை இலகுவில் மன்னிக்க கூடியதா?
வடிவழகியின் மகனாய் யோசிக்காமல் அபிநயாவின் தகப்பனாய் ஒரு பெண்ணை பெற்றவனாய் யோசித்தான்.
இப்போது யோசித்து என்ன பயன்? எதுவும் இல்லை. எல்லாம் கைமீறி சென்று இப்போது குடும்பமே அவமானப்பட்டு நிற்கிறது.
வெளியே தலை காட்டமுடியவில்லை. என்னதான் சட்டத்திற்கு புறம்பாக தவறிழைக்காதவனாக இருந்தாலும் ஷக்திக்கு செய்தது பெரும் பாவம்.
அகத்தியன் ஷேஷாவை கொலை செய்ய முயற்சி செய்வது தெரிந்தும் தடுக்காமல் அந்த அறக்கட்டளையை கைப்பற்ற ஆர்வமாய் இருந்ததும் தான் தானே?
தன் தகப்பனிடம் உரிமை உள்ள ஷக்தியை துரத்தியடித்தவன் இன்று தனக்கு உரிமை இல்லாத ஒன்றிற்காக இப்படி அலைந்திருக்கிறோமே என அவமானத்தில் குன்றி போனான்.
வடிவழகி வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார். அவரின் நடமாட்டம் என்பது இனி அரிதாகிவிடும்.
இன்னொருவரின் உதவியின்றி அவரால் தானாகவே எதுவும் செய்ய இயலாத நிலை வேறு.
இனி தொழில் மட்டுமே போதும் என எழில் அதை சரிசெய்ய முயல அது அதலபாதளத்தில் சரிந்திருந்தது.
குடும்பத்தின் பெயரும் போய், இப்போது தொழிலும் சிக்கலில் இருக்க பைத்தியம் பிடிக்காத குறை தான் அவனுக்கு.
“எழில், காம் டவுன் மேன். எல்லாம் சரி பண்ணிடலாம். இனியாவது நாம சரியா இருப்போம்…” இளவேந்தன் அவனுக்கு தைரியமூட்டினான்.
“எப்படி இளா உன்னால இப்பவும் இப்படி பேச முடியுது? யார் முகத்திலையும் முழிக்க முடியலை. அசிங்கமா இருக்குடா…”
“என்ன பண்ண? நாம அப்படி இருந்துட்டோம். எனக்கு தெரிஞ்சும் அப்பாவை கண்டிக்க முடியாத நிலைமை. உன்கிட்ட உண்மையை சொல்லவும் முடியாம ரொம்ப கஷ்டப்பட்டேன்…”
“இன்னொருதடவை அந்தாளை அப்பான்னு சொன்ன?…” என்று இளவேந்தனின் சட்டையை பிடித்துவிட்டான் எழில்.
ஓரளவு நிதானத்திற்கு வந்து தன்னை அமைதிப்படுத்திகொண்டவன் மனதோ இனியும் இங்கேயே இருந்தால் தங்கள் பிள்ளைகளின் நிம்மதியின்றி போகுமோ என அஞ்சினான் எழில்.
எதுவும் வேண்டாம். பதவி, பெயர் என எதுவும் வேண்டாம். இளாவினது கை குழந்தை. ஆனால் தன்னுடைய பெண். இன்னும் இந்த நிகழ்வின் பின் பள்ளிக்கும் செல்லவில்லை அவள்.
ராஜி அனுப்பவில்லை. அனுப்பினால் அங்கே அவள் என்னவெல்லாம் எதிர்கொள்ள வருமோ என நினைத்து பயந்து அனுப்பவில்லை.
கொலை, கடத்தல், அபகரிப்பு, சட்டவிரோத செயல்கள் என்பது போதாது பெண்கள் விஷயத்தில் வேறு மிக மோசமாக அகத்தியன் சிக்கியிருக்க வயது வரும் பெண்ணை எப்படி வெளியே அனுப்புவது என பயந்துபோய் இருந்தாள்.
அதை எழில் வரவும் சொல்லியும் விட முகம் இறுகி போனான் அவன். தொழிலும் முடங்கிவிட இருப்பதை விற்றுவிட்டு வேறு எங்கும் செல்வதை தவிர வேறு எதுவும் அவனுக்கு தோன்றவில்லை.
ஆனால் இளவேந்தனுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. தகப்பன் தவறென்றால் தாங்கள் ஏன் ஓட வேண்டும் என நினைத்தான்.
“எழில் கொஞ்ச நாள் நீ ரிலாக்ஸ் பண்ணிக்கோ. நான் பார்த்துக்கறேன்…” என்று பொறுப்பை ஏற்றான் இளவேந்தன்.
சொல்லியது போலவே மொத்தமாய் அங்கேயே நிரந்தரமாக வந்துவிட்டான் மனைவி பிள்ளையுடன்.
குடும்பத்தில் இயல்புநிலை திரும்புவது என்பதே கடினமாக இருந்தது. பேச்சுக்கள் கூட குறைந்து போக சிரிப்பிற்கு பஞ்சம்.
குழந்தைகளை கொண்டு மனதை திசைதிருப்ப முயன்றனர். எத்தனை முயன்றும் வழக்குகள் அடுத்தடுத்து தொடர்ந்துகொண்டே இருக்க பத்திரிக்கைகளுக்கு பெரும் தீனியாகி போனான் அகத்தியனும், அவன் குடும்பமும்.
—————————————–
வனம் அறக்கட்டளை. ஷக்திக்கு தலைக்கு மேல் வேலைகள். ஷேஷா பொறுப்புகளை பழக்குகிறேன் என்று அவளின் மேல் அடுத்தடுத்த வேலைகளை ஏற்றிக்கொண்டே இருந்தான்.
“இதை எல்லாம் இப்பவே தெரிஞ்சு நான் என்ன செய்ய போறேன்? ஏன் இவ்வளவு பன்றீங்க?…” கோபத்துடன் கேட்டுக்கொண்டே அந்த பத்திரங்களை பார்த்துக்கொண்டு இருந்தாள் ஷக்தி.
அவளின் கோபம் அவனுக்கொன்றும் புதிதல்லவே? கண்டுகொள்ளவே இல்லை. செய் என்பதை போல அவன் வேலையில் இருந்தான்.
புதிதாய் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தினுடன் கைவினை பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் பற்றிய கோப்புகளை சரிபார்த்துக்கொண்டு இருந்தான்.
“நம்பிக்கையானவங்க இருந்தா போதும் ஷக்தி. எத்தனை தொழில் வேணும்னாலும் செய்யலாம். அதே நேரம் அவங்க பார்த்துப்பாங்கன்னும் நாம விட்டுட கூடாது. நம்ம கவனமும் இருக்கனும்…” என்றவன்,
“இங்க சம்பாதிக்கவேண்டியது பணம் மட்டுமில்லை ஷக்தி. அத்தையும் தாண்டி நம்பிக்கைக்குரிய மனிதர்களை. நமக்கு உண்மையா இருக்கிறவங்களை. அது இருந்தா போதும் சாதிக்கலாம்…” ஷேஷாவின் பேச்சில் தன்னுடைய அவசரத்தை நினைத்து லேசாய் தலையில் தட்டிக்கொண்டாள்.
“கரெக்ட். பட், நான் அதுக்கு சொல்லலை, இவ்வளவு ஏன் ஏத்திக்கனும்னு ஷேஷா?…”
“அதான் நீ இருக்கியே? பார்த்துக்க மாட்டியா?…” மெல்லிய புன்னகை அவனிதழ்களில்.
“அதான பார்த்தேன். என்னால முடியாது, என்ன விளையாடறீங்களா?…” என எழுந்துகொள்ள,
“ஓகே, விளையாடலை. இப்போ அந்த வொர்க் கம்ப்ளீட் பண்ணு. இல்லேன்னா நாளைக்கு வரைக்கும் வச்சிருப்ப…” என்றவன் பவனிடமிருந்து அழைப்பு வர எடுத்து பேச ஆரம்பித்தான்.
ஷேஷாவை திட்ட வாயெடுத்தவள் அவனின் முகத்தில் தெரிந்த தன்மையில் யாரிடம் பேசுகிறான் என பார்த்தாள்.
ஓரிரு வார்த்தை பதில்கள். அதுவும் காதில் விழவே இல்லை. மீசைக்கடியில் அவன் உதடு அசைகிறதா இல்லையா என்னும் சந்தேகத்துடன் தான் அவனை கவனிக்க வேண்டி இருந்தது.
என்ன பார்த்தும் கண்டுகொள்ள முடியாமல் அவள் இருக்க பேசி முடித்ததும் அவளிடம் திரும்பினான்.
“வாட்?…”
“நீங்க என்ன மேக்ன்னு யோசிச்சிட்டு இருந்தேன்…”
“ஓஹ், ஓகே. லீவ் இட். அந்த கான்வேர்ஷேஷன் ஈவ்னிங் பார்த்துக்கலாம். இந்த வொர்க் எல்லாம் முடிச்சுட்டு…” என்றதும் அவள் அவனை முறைக்க,
“எழில், இளவேந்தன் வராங்க…” என்றான்.
“டொனேஷன் ஆபீஸ் ரூம்ல குடுக்க சொல்லுங்க. இதை ஏன் என்கிட்டே சொல்றீங்க?…” என்றாள் உடனே.