உன் சுவாசம் என் மூச்சில் ……2 .2
பின் மாப்பிள்ளைகள் வந்தவுடன் மதிய விருந்து முடிந்து அனைவரும் கோவிலுக்கு சென்றுவிட்டு வாணியும் ஜெயாவும் தங்கள் குடும்பத்துடன் ஊருக்கு கிளம்ப அனைவரிடமும் விடைபெற்று வாசலுக்கு வர, மாப்பிள்ளைகள் இருவரும் கதிரிடம் மாட்டிக்கொள்ள நன்றாக வாங்கி கட்டிக்கொண்டனர்.
வாணியின் கணவன் நாதனுக்கு கதிரின் கம்பீரத்தில் தைரியத்தில் ஓர் ஈர்ப்பு. எனவே கதிரின் வசவுகளை சிரிப்புடன் கேட்க ஜெயாவின் கணவன் வேலனுக்கோ பார்க்க ஒல்லியான தேகத்துடன் நெடுநெடுவென உயரத்தில் சிரிக்க மறுக்க இதழ்களும் அனைவரும் எட்டி நிறுத்தும் பார்வையும் கடுகடுவென இருக்கும் முகமும் என கதிரின் தோற்றம் ஒரு வித தயக்கத்தை குடுக்க இன்று கதிரின் பேச்சு கோவத்தைக் குடுத்தது வேலனுக்கு.
அதில் ஜெயாவை முறைத்துக்கொண்டிருந்தான். அதனை கண்ட ஜெயா,
“ ஹம்ம்ஹும்…… அவன் திட்டுனா அவன்கிட்ட சண்டை போடாம எனக்கிட்ட முறைப்பு. இதை பார்த்துட்டு என் முன்னாடியே என் அக்காவை முறைக்குறிங்களான்னு அடுத்த பஞ்சாயத்தை கூட்டுவான் இவன்” என புலம்ப அதேநேரம் நாதனும் வேலனும் இனி தனியாக குடும்பத்தை அனுப்ப மாட்டோம் என்று கூறி தங்களின் குடும்பத்தோடு ஊருக்கு சென்றனர்.
அனைவரும் சென்றவுடன் வீட்டிற்குள் வந்த கதிர்,
“ அம்மா” என கத்த அம்மா அப்பா அண்ணன் தம்பி என அனைவரும் நடு கூடத்திற்கு வந்தனர்.
“ என்னடா??…. ஏன் கத்துற??….” என கேட்ட தெய்வானையிடம் ஒன்றும் கூறாது அமைதியாக காலில் விழுந்து வணங்கி எழுந்து
“ அம்மா நான் போலீஸ் எக்ஸாம்ல பாஸ் ஆகிட்டேன் ஓட்டப்பந்தயம் கயிறு ஏறுதல்ன்னு போட்டி இருக்கு நாளைக்கு அதுல பாஸ் ஆகிட்டா போலீஸ் ஆகிடுவேன்” என கூறிவிட்டு ஸ்வாமிநாதனிடமும் விழுந்து வணங்கிவிட்டு அறைக்கு சென்றுவிட விஜயனோ கணேஷிடம்,
“ வேலை கிடைச்சுடுச்சுன்னு பொதுவா சொல்லிட்டு அம்மா அப்பாகிட்ட ஆசிர்வாதமும் வாங்கிட்டு போய்ட்டாரு. நம்மகிட்ட சொல்லவே இல்ல. ஒருவேளை நம்மள பார்களையோ” என கேட்க
“ அவன் பார்த்திருபான்டா அம்மான்னு கத்துனதே எல்லாரையும் கூப்புடதான். பொதுவா சொல்லிட்டு போறான்”
“ இருந்தாலும் நம்மக்கிட்டயும் சொல்லிருக்கலாம்” என மீண்டும் விஜயன் புலம்ப
“ அவன் என் கிட்டயே சொல்லாம அம்மாகிட்டமட்டும் சொல்லிட்டு போனாபோதுன்னு காலுல விழுந்துட்டு போறான் இவன் வேற” என ஸ்வாமிநாதன் கடுப்புடன் சின்னமகனிடம் புலம்பிவிட்டு செல்ல
“ இவரை புரிஞ்சுக்கவே முடியல அண்ணா. ஒரு நேரம் ரெண்டு அக்கா கிட்டயும் ஏன் தனியா வந்திங்கன்னு கத்துறாரு ஆனா பாஸ் ஆனதை யாருகிட்டயும் சொல்லல” என விஜயன் புலம்ப
“ டேய் அவன் அப்படித்தான் தேவை இல்லாம எல்லாம் நின்னு பேசிகிட்டு இருக்க மாட்டான். நமக்கு பதில் சொல்லிக்கிட்டும் இருக்க மாட்டான். நானே அவன் வேலைக்கு சேரனும் சேர்ந்த பின்னாடி இவன் கோவத்துனால எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கனும்ன்னு நினைக்குறேன்” என கணேஷ் கூற
“ அண்ணா அது எல்லாம் கதிர் அண்ணா நாளைக்கு பாஸ் ஆகிடுவாரு. அவருக்குத்தான் சிலம்பம் கராத்தேன்னு எல்லாம் தெரியுமே. அதோடு அவரு வேகத்து ஓட்டப்பந்தயம் கயிறு ஏறுறது எல்லாம் சும்மா தூசு மாதிரி”
“ ஹ்ம்ம் அதுவும் சரிதான். வா தூங்கலாம் நேரம் ஆச்சு” என கூறி உறங்க சென்றனர்.
இரண்டு மாதம் கடந்த நிலையில்,
“ கதிரு சீக்கிரம் கிளம்பு இன்னைக்கு ட்ரைனிங்க்ல” என கேட்ட அண்ணன் கணேஷிடம்
“ ஹ்ம்ம் ஆமா அண்ணே இதோ கிளம்பிட்டேன்” என கூறிக்கொண்டிருந்த கதிரவனை கண்டு
“ ஹம்ம்ஹும் என்னமோ கலெக்டர் உத்தியோகம் மாதிரித்தான்” என கணேஷின் மனைவி சாரதா நொடிக்க
“ ஏண்டி எங்க கிராமத்துலையே போலீஸ் உத்தியோகத்துக்கு போற முதல் ஆளு என் தம்பிடி. இந்த கான்ஸ்டபிள் உத்தியோகம் இப்போ கிடைக்குறதே எவ்வளவு கஷ்டம் தெரியுமா வந்துட்டா பெருசா பேச” என கணேஷ் சிடுசிடுத்தார்.
“ இந்த மனுஷன் திருவிழாக்கு வரலன்னு கோவமா இருந்தாருன்னு நானும் ஊருக்கு போகாம ரெண்டு மாசமா இங்க இருக்கேன். ஆனா இவருக்கு அது எல்லாம் பெருசு இல்ல போல. ஊரு உலகத்துல எல்லாம் என்னமோ இவரு தம்பி மட்டும்தான் வேலைக்கு போறாப்புல ரொம்ப தான் ஆடுறாரு” என மீண்டும் முணுமுணுக்க
“ இங்க பாருடி நீ உன் அப்பா வீட்டுக்கு போ இல்ல போகாம இரு ஆனா என் பிள்ளையை அனுப்ப மாட்டேன் சொல்லிட்டேன். என்னமோ ரெண்டு மாசம் இங்க இருந்தா நாங்க உங்கள தாங்கணுமோ???…..” என கணேசனும் பதிலுக்கு எகுற
“ சண்டைய அங்குட்டு போய் வச்சுக்குறிங்களா??…. நான் கிளம்பனும்” என கதிர் கத்த அதில் சாரதா கணேஷை முறைத்துவிட்டு சென்றுவிட,
“ உன் வாழ்க்கையை பார்த்தா எனக்கு கல்யாணம் பண்ணுற ஆசையே போயிடும் போல அண்ணே” என கதிர் கூற
“ டேய்!!….. நீ வேற ஏன்டா??” என கணேஷ் சலிக்க
“ பின்ன என்ன குடும்பமா நடத்துறீங்க??… வீட்டுல ஆம்பள நம்ம சொன்னா அதை கேட்டு நடக்கணும் சும்மா சும்மா எதுக்கெடுத்தாலும் தைய தக்க தைய தக்கன்னு வீட்டு பொம்பள குத்திச்சா விளங்குமா” என சலிப்புடன் கூறிவிட்டு கதிர் சென்றுவிட
“ ஹ்ம்ம் இவனுக்கு எப்பிடின்னு நாமளும் பாப்போம்” என நினைத்துக்கொண்டு கணேஷும் தனது வேலையை பார்க்க சென்றுவிட்டார்
காலம் வேகமா செல்ல இரண்டு வருடம் கடந்த நிலையில்,
“ லட்சுமி அக்கா லட்சுமி அக்கா ”
“ என்ன பொன்னு வா வா” என தன் தங்கை பொன்னுத்தாயியை அழைத்த அன்னலட்சுமி,
“ எழிலு…. எழிலு…. இங்குன கொஞ்சம் டீ கொண்டுவாத்தா உன் சின்னம்மா வந்துருக்கா” என கூறிவிட்டு பொன்னுத்தாயிடம்
“ என்ன பொன்னு காலையில வந்துருக்க???… எதுவும் முக்கியமான விஷயமா??….” என கேட்க
“ அக்கா நம்ம எழிலுக்கு ஒரு வரன் கொண்டு வந்துருக்கேன்கா”
“ அப்படியா!!….. பையன் என்ன பண்ணுறாப்புல????…. ஜாதகம் கொண்டுவந்துருக்கியா???….”
“ ஹ்ம்ம் இந்தா ஜாதகம். பையன் நம்ம பிள்ளையார்கோவில் தெருவில தையல் கடை வச்சுருக்காரு” என பையன் பத்தி கூற
“ எது!!!…. அவனா!!!!…. அவன் வயசென்ன என் மக வயசென்ன???…. உன் மகளுக்கு இப்படி மாப்பிளை பார்ப்பியாடி” என கோவமாக கேட்ட லட்சுமிடம்
“ ஹ்ம்ம் என் மகளுக்கு என்ன தலையெழுத்தா இப்படி மாப்பிளை பார்க்க. அவ காலேஜ் போய் படிக்குறா. அவளுக்கு ஒரு நல்ல அரசாங்க மாப்பிளைத்தான் பாப்போம்” என பொன்னு நீட்டி முழக்க
“ எதே காலேஜா??… நல்ல படிச்ச பிள்ளையை உன் மக பேச்சை கேட்டு அனுப்பலைல நான். அதுக்கு இது தேவைதான். நீ உன் மகளுக்கு ஒரு வாத்தியாரே இல்ல ஒரு இன்ஸ்பெக்டரோ பார்த்தா நான் என் மகளுக்கு ஒரு கான்ஸ்டபிலாவது பார்க்க மாட்டேன்” என கோவமாக கூறினார் அன்னலட்சுமி.
“ என்னக்கா அரசாங்கத்து மாப்பிளை என்ன அம்முபுட்டு சுலபமாக்கும். ஒன்னு நகைநட்டுன்னு நிறைய போடணும் இல்ல கொஞ்சமாது படிச்சுருக்கணும் அதுவும் இல்ல. சும்மா ரொம்ப ஆசைப்பட்டு பிள்ளையை கல்யாணம் பண்ணி வைக்காம இருந்துடாத சொல்லிட்டேன்.
நீயும் உன் மகளுக்கு ரெண்டு வருசமா மாப்பிளை பார்க்குறேன் மாப்பிள்ளை பார்க்குறேன்னு வரிசையா எல்லாத்தையும் குறை சொல்லி குறை சொல்லி தட்டிக்கழிக்குற” என பொன்னு கூற
“ அதுக்குன்னு என் மகளை என்ன அவசரத்துக்குன்னு எதாவது இடத்துல தள்ளிவிட சொல்லுறியாக்கும். போவியா….. நீ ஒன்னும் என் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கவேணாம் நானே பார்த்துக்கறேன்” என கடுப்புடன் அன்னலட்சுமி கூற பொன்னுத்தாயும் முறைப்புடன் சென்றுவிட டீயுடன் வெளியே வந்த எழில்விழி,
“ அம்மா இந்தாங்க டீ. எங்க அம்மா சின்னமாவ காணோம்???” என எழில்விழி கேட்க
“ அவளை பத்தி பேசாத வந்துட்டா மாப்பிளை பார்க்குறேன்னு. வயசானவங்களையும் தண்ணியடிக்குறவனையும் ஊதாரியா சுத்துறவனையும் மாப்பிள்ளைன்னு சொல்லிக்கிட்டு. இங்க பாரு எழிலு நீ ஒன்னும் விசன படாத ஆத்தா உன்னைய படிக்க வைக்கல. ஆனா உன்னைய நல்ல இடத்துல கட்டிக்குடுத்துடுவேன் சரியா???” என அன்னலட்சுமி கூற அதில் தாயின் பரிதவிப்பு தெரிய
“ அம்மா பார்த்துக்கலாம் விடுமா” என கூறிய எழில்விழியிடம்
“ உனக்கு ஒன்னும் தெரியாது சும்மா இரு. என் மகளுக்கு மாப்பிள்ளை ராஜா மாதிரி நான் பார்ப்பேன்” தன் போக்கில் கூறிக்கொண்டு எழுந்து சென்றுவிட,
பேச்சுவாக்கில் தாய் கூறிய ‘ உனக்கு ஒன்னும் தெரியாது’ என கூறியது இன்று தாய் கூறியது எதார்த்தமானதானாலும் ஏனோ என்றும் போல் இன்றும் மனதில் சுருக்கென ஒரு வலியை கொடுக்க அமைதியாக தனது வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.
வீட்டில் கடைசியாக பிறந்ததால் வீட்டில் எதையாவது சொல்ல போக ‘ உனக்கு ஒன்னும் தெரியாது அமைதியா இரு’, ‘ சின்ன பிள்ளை இதை எல்லாம் கண்டுக்காம பேசாம இரு’ என கூற அதில் எழில்விழி அனைவரிடமும் பேச தயக்கமும் பயமும் ஏற்பட ஆரம்பிக்க தேவை இல்லாது பேசாது அமைதியாக அவள் தனது கூட்டுக்குள் ஒடுங்கிக்கொண்டாள்.