வீட்டினுள் கண்ணீருடன் சோபியாவிற்கு என்னவானதோ, எங்கே இருக்கிறாளோ என நிகிதாவும், சுபஷ்வினியும் தவித்துக்கொண்டிருந்தனர்.
மனுரஞ்சனை அழைத்துக்கொண்டு கிளம்பிய நெடுஞ்செழியன் யாரை பார்க்க செல்கிறான் என்று தெரியவில்லை.
காஞ்சனாவிற்கு ரத்தகொதிப்பு அதிகமாக சாலாட்சி அவரின் அருகிலேயே இருந்தார். அவருடன் நிகிதாவின் கேர்டேக்கர்.
“சோபியாக்கா ஹாஸ்பிட்டல் போறாங்கன்னு எப்படி தனா மாமாவுக்கு தெரிஞ்சது? அவங்க எப்படி அங்க தயாரா இருந்தாங்க?…” என நிகிதா கேட்க சுபஷ்வினிக்கும் அதே கேள்வி தான்.
“எனக்கு பயமா இருக்கு சுபாக்கா…” என்று நிகிதா நடுக்கத்துடன் அவளின் பிடித்துக்கொள்ள,
“ப்ச், நிகி அழாத. இது அழக்கூடிய நேரமில்லை. முதல்ல கண்ணை துடை…” என்று தன்னுடைய கண்ணீரையும் துடைத்தவள்,
“இப்ப வரேன், நீ இங்கயே இரு…” என சொல்லிவிட்டு பக்கத்து அறையிலிருந்த மாமியாரை பார்க்க சென்றாள்.
காஞ்சனா உறக்கத்தில் இருக்க சாலாட்சி அவரின் அருகிலேயே தான் அமர்ந்திருந்தார்.
அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்தின் விளைவாக அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
“அத்தை இப்ப எப்படி இருக்காங்க த்தை? பிபி கன்ட்ரோலுக்கு வந்திருச்சா?…” என சாலாட்சியிடம் சுபஷ்வினி கேட்க,
“கொஞ்சம் பரவாயில்லை சுபா. ரொம்ப டென்ஷனாகிட்டாங்க. இன்னும் அமைதியாகனும். இல்லைன்னா ரொம்ப கஷ்டம்…” என்றார் அவர் காஞ்சனாவை பார்த்தபடி.
“எங்க அந்த அக்கா?…” என கேர்டேக்கரை கேட்க,
“இப்ப தான் எனக்கு குடிக்க காபி கொண்டுவரேன்னு போனாங்க. நீயும் குடி. நிகிக்கும் எதாச்சும் குடு…” என்றவர்,
“சோபியாவை பத்தி எதாச்சும் தெரிஞ்சதா? உன் வீட்டுக்காரர் என்ன சொன்னார்? எங்க போயிருக்காங்க?…” என கேட்க,
“தெரியலை த்தை. எனக்கும் என்ன செய்யறதுன்னும் தெரியலை…” என்றவளுக்கு தலையை சுற்றியது.
“மனசே ஆறலை சுபா. பச்சைமண்ணை போய் எப்படி அடிச்சிருக்கானுங்க கட்டையில போவ. இந்தநேரத்துக்கு நூறுதடவை என் காலுக்குள்ளவே சுத்திட்டு வருவா. பசி தாங்கமாட்டாளே. எனக்கு நெஞ்செல்லாம் அடைக்குது…” என சாலாட்சி ஆற்றமாட்டாமல் சொல்ல சுபஷ்வினிக்கும் விம்மியது.
“சோபி போட்டோவை பார்த்ததுல இருந்து காஞ்சனாம்மவுக்கு உயிரே இல்லை. ரொம்ப துடிச்சு போய்ட்டாங்க அவங்க. சின்ன வலி கூட பொறுக்கமாட்டாளேன்னு சொல்லி சொல்லி அழுகை…” என்றார் சாலாட்சி.
“பார்த்துக்கோங்க த்தை. இப்ப வரேன்…” என சொல்லிய சுபஷ்வினி அடுக்களைக்குள் சென்றாள்.
கண்ணில் வடிந்த கண்ணீரை துடைத்தபடி பொங்கி வந்த பாலை இறக்கியவர் காபி கலக்க கப்பை எடுத்தார்.
“அக்கா…” என்ற சுபஷ்வினியின் அழைப்பில் திரும்பியவர்,
“என்ன பாப்பா, சோபி பாப்பாவை இப்படி பண்ணிட்டாங்களே? சூதுவாது தெரியாத புள்ளை…” என்று அரற்றியவரில் பொய்யில்லை.
முகமெல்லாம் வேதனையை சுமந்திருக்க இன்னும் அழுகை நின்றபாடில்லை அவருக்கு.
“அழாதீங்கக்கா, கண்டு பிடிச்சிடலாம்…” என்றவள் மனது சமன்படவே இல்லை.
நிச்சயம் மருத்துவமனைக்கு தனாவை சேர்ந்தோர் முன்பே வந்திருக்க வேண்டும். இல்லை என்றால் கண்ணிமைக்கும் நேரத்தில் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக நம்பினாள் சுபஷ்வினி.
“ஏன்க்கா சங்கீதாக்கா போன் எதுவும் பண்ணினாங்களா?…” என அவரிடமிருந்து விஷயம் கிடைக்குமா என கேட்டு பார்க்க,
“இல்லையே, கீதாம்மா போன் எதுவும் பண்ணலையே. அவங்களுக்கும் மேலுக்கு முடியலைன்னு நேத்தைக்கு அங்க வேலை செய்யறவட்ட பேசறப்போ தெரிஞ்சது. இங்க விட்டுட்டு அங்க பார்க்க போனா கீதாம்மா கோச்சுப்பாங்கன்னு இங்கவே இருந்தேன்…” என்றார் கண்ணீரை துடைத்தபடி பாலை கப்பில் ஊற்றி.
“ஹ்ம்ம்…” என்றவள் அங்கிருந்து நகர போக,
“காலையில தனாய்யா கூட கேட்டாரு கீதாம்மா இங்க வந்திருக்காங்களான்னு…” என்று பேசிக்கொண்டே அவர் சொல்ல,
“என்ன?…” என நின்றுவிட்டாள் சுபஷ்வினி.
“ஆமா பாப்பா, கீதாம்மாக்கு போன் போகலையாம். அதான் இங்க வந்திருக்காங்களான்னு கேட்டார். ஐயா வெளில எங்கையோ இருக்கார் போல?…” என்று சொல்லியவர்,
“அக்கா நீங்க என்ன சொன்னீங்க உங்க அய்யாட்ட?…” என சுபஷ்வினி நடுக்கத்துடன் கேட்க,
“நான் என்னத்த பாப்பா சொல்லுவேன். கீதாம்மா வரலைன்னேன்….” என்று மூக்கை உறிஞ்ச,
“வேற எதுவும் கேட்கலையா?…” என சுபஷ்வினி படபடத்தாள்.
“கேட்டாரு பாப்பா, எல்லாரும் என்ன செய்யறீங்க? நிகி பாப்பா இப்ப எப்படி இருக்கு, சாப்பிட்டாளான்னு கேட்டாரு. அம்மாவை எல்லாரையுமே கேட்டாரு. எல்லாரும் நல்லா இருக்காங்க, அம்மா ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டிருக்காங்கன்னு சொன்னேன்…” என்று சொல்ல அதை கேட்ட நொடியில் சுபஷ்வினி,
“ஏன் க்கா சொன்னீங்க?…” என கோபத்தில் கத்திவிட மிரண்டு பார்த்தார் அவளை.
“இப்ப எதுவும் சொல்லக்கூடிய சூழ்நிலை இல்லை க்கா. இதை நீங்க யார்க்கிட்டயும் சொல்லவேண்டாம். காபியை கொண்டுபோய் குடுங்க…” என்று சொல்ல,
“இல்ல கண்ணு, என்னமோ மனசுக்கு தொயரமா படுத்து. எம்போன எங்க?…” என தேடியவர் அதனை எடுத்து சுபஷ்வினி கையில் கொடுத்தார்.
“மனசுக்கு சரியா படல தாயி. யார நம்பறதுன்னே தெரியல. ஆனா இது நெசமா மட்டும் இருக்க கூடாது ஆத்தா…” என வேண்டுதலுடன் அவர் அங்கிருந்து செல்ல கையில் இருந்த அந்த குட்டி போனை வெறித்து பார்த்தாள் சுபஷ்வினி.
தனா அழைத்ததாக சொல்லிய அந்த நேரத்தில் அவள் அழைப்பை பார்க்க அந்த எண் புதிதாய் இருந்தது.
‘அதுதானே? அவன் எப்படி இதில் அவனுடைய போனிலிருந்து அழைப்பான்?’ என கசப்பாய் எண்ணியவள் நிகிதாவிடம் வர,
“நீங்களாம் மனுஷனே இல்ல தனா மாமா. கீதாக்கா பாவம்…” என்று விக்கி அழுதுகொண்டே அவளின் போனை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நிகிதா பேசறதுக்கு நேரமில்லை. எனக்கு என் பாஸ்போர்ட் வேணும். இல்லை…” என்று பல்லை கடித்து உறுமியவனின் முகத்தை போனில் பார்த்த சுபஷ்வினி,
“டேய் பொறுக்கி…” என்று கத்த,
“அடடே போலீஸ்காரன் பொண்டாட்டியா? வாங்க மேடம். உங்களை தான் எதிர்பார்த்தேன்….” என்றான் நக்கல் சிரிப்பில்.
அவனின் பின்னால் வாகனத்தின் முன்னிருக்கையில் மயக்க நிலையில் சாய்ந்திருந்தாள் கர்ப்பிணியான சங்கீதா. மின்சாரம் தாக்கியதை போல அதிர்ந்து பார்த்தாள் சுபஷ்வினி.
“சுபாக்கா நான் அங்க போகலைன்னா சங்கீதாக்காவை எதாச்சும் பண்ணிடுவாங்க…” என்று நிகிதா அவளை கட்டிக்கொண்டு கண்ணீர் விட,
“நீயெல்லாம் என்ன மனுஷன்? சங்கீதா உன்னோட பொண்டாட்டி. கொஞ்சமாவது மனசாட்சி இருந்தா இப்படி பண்ணுவியா நீ?…” என்றாள் சுபஷ்வினி.
“நான் மனுஷனா இல்லையான்றது எல்லாம் செகென்ட்ரி. இப்ப இந்த நிமிஷம் நான் வாழனும். நானே வாழ முடியாதுன்னா யார் எப்படி போனா எனக்கு என்ன? நான் உயிரோட இருந்தா தானே, அதுவும் வசதியா இருந்தா தானே குடும்பம் குழந்தைன்னு வாழ முடியும். அதுக்கு தான் விடமாட்டிக்கறீங்களேடி…” என்றான் அலட்சியமாக.
“எனக்கு என்னை தவிர வேற யாரும் முக்கியமில்லை. நான் மட்டும் தான் எனக்கு…” என சுயநல பிண்டமாய் அவன் சொல்ல வெறுமையாய் பார்த்தனர் நிகிதாவும், சுபஷ்வினியும்.
“இங்க பார், நேரம் போய்ட்டே இருக்கு. உன் புருஷனை நம்பி பிரயோஜனமில்லை. அவன் எங்களை தேடுவான்னு பார்த்தா வேற என்னமோ பன்றான். சரியில்லை. உங்களுக்கு நான் குடுக்கற டைமும் முடிஞ்சு போச்சுன்னா உங்க சோபியா சின்னாபின்னமாகிருவா பார்த்துக்கோ…” என மிரட்டினான்.
சுபஷ்வினிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தன் குடும்பத்தினரையும் சோபியாவையும் கண்முன் கொண்டுவந்தவள்,
“என்ன பண்ணனும்? எங்க வரனும்?…” என உணர்வுகள் துடைத்த முகத்துடன் கேட்டாள் அவனிடம்.
“சுபாக்கா?…” என நிகிதா பதறி கேட்க,
“இரு நிகி, நமக்கு இப்ப சோபியா, சங்கீதா முக்கியம்…” என்றவள் விழிகளால் அவளுக்கு தைரியமூட்ட நிகிதாவிற்கும் தங்களின் சூழ்நிலை புரிந்தது.
“குட், இப்ப தான் சரியான முடிவுக்கு வந்திருக்க. நீ என்ன பன்ற நிகிதாவை கூட்டிட்டு, என் பாஸ்போர்ட் எடுத்துட்டு உன்னோட போன் எதுவும் எடுக்காம அப்படியே கிளம்பி உங்க தெருமுனைக்கு வர….” என்றான் தனா.
“வரேன்…” என்று சொல்லியவள் அழைப்பை துண்டிக்க போக,
“ம்ஹூம், உன்னை நம்ப முடியாது. உன் மொபைல் எங்க?…” என கேட்க ஆவேசத்துடன் சுபஷ்வினி எடுத்து காண்பித்தாள்.
“உன் போன் தான்றதுக்கு என்ன ஆதாரம்?…” என்றவனை முடிந்தமட்டும் எரிக்கும் பார்வை பார்க்க,
“நீ என்னை ஏமாத்த நினைச்ச, ஒருத்தரும் தப்பிக்க மாட்டீங்க. பார்த்துக்கோ. இப்ப எந்த போனை தூக்கி போட்டு உடை…” என்றான்.
அவன் மேலிருந்த கொலைவெறியில் சுபஷ்வினி தன்னுடைய கைபேசியை சுவற்றில் அடிக்க சுக்குநூறாய் உடைந்தது.
“சரி போனை கட் பண்ணாம நிகிதாக்கிட்ட குடுத்துட்டு நீ போய் எடுத்துட்டு வா. நிகிதா அந்த ரூம் வாசல்ல நிக்கட்டும். யார்ட்டையாச்சும் எதாச்சும் சொன்ன பார்த்துக்கோ? உன் வீட்டு லேண்ட்லைன் எதுவும் வேலை செய்யாது. அதுக்கும் முயற்சி பண்ணி ஏமாந்து போகாத….” என அவன் எச்சரிக்க,
“இதுக்கெல்லாம் நீ அனுபவிப்படா…” என்று சொல்லிய சுபஷ்வினி வேகமாய் மாடிக்கு சென்றாள்.
மாடியில் இருந்து கீழே காவலுக்கு நிற்பவர்களையும் அழைக்க முடியவில்லை. யார் எங்கிருந்து தங்கள் வீட்டை கண்காணிக்கின்றனரோ என பால்கனியை திறந்து பார்த்தவள் அருகிருந்த வீடுகளில் எல்லாம் ஆட்கள் நிற்பதை கண்டு செய்வதறியாமல் மீண்டும் உள்ளே வந்துவிட்டாள்.