“மஹி, டீ இன்னும் ரெண்டு நிமிஷத்துல ரெடி ஆகிடும். உட்காரு எடுத்துட்டு வர்றேன். ஸ்னாக் எதுவும் இருக்கா? எனக்கு ரொம்பப் பசிக்குதுடா.”, இனி அவளைத் தனித்து விடுவதில்லை என முடிவெடுத்தவன் மெல்ல இரவு உணவுக்கு அடி போடத் தொடங்கினான்.
“ஹ்ம்ம் ஸ்னாக் எதுவும் இல்ல, சாப்பாடு செஞ்சு தரவா?” மனஸ்தாபங்கள் கொட்டிக் கிடந்தாலும் அவன் பசி பொறுக்காதவன் என்பது எண்ணத்தில் வர உடனே கேட்டும் விட்டாள்.
“பரவாயில்ல, மஹி நீ கஷ்டப் பட வேண்டாம். காலைல இருந்து சாப்பிடாம இருந்தது கொஞ்சம் பசி. தல வலி வேற. அதான் கேட்டேன்.” தகவல் போல் அவளிடம் சொன்னவன் மனதில் இப்போது வேறு ஒரு யோசனையும், வரத் தொடங்கியது.
“இல்லை பரவாயில்லை. நான் செய்யிறேன். டிபன் பண்ண மாவு எல்லாம் இல்ல. சாதம் ஓகே வா. இன்னும் ஒரு, ஒரு மணி நேரத்துல செஞ்சுடுறேன்.” பசி என்னும் சொல் கேட்டதும் அதைப் போக்கும் எண்ணம் மட்டுமே மனதில் வர, என்ன சமைக்கலாம் என்ன காய் கறிகள் இருக்கிறது என யோசிக்கத் தொடங்கினாள்.
“ஹ்ம்ம் சரி மஹி. நீ என்ன செஞ்சு கொடுத்தாலும் ஓகே தான். செம பசில இருக்கேன். நீ கொஞ்சம் கிட்ட வந்தா, உன்னைக் கூட கடிச்சு சாப்பிட்டிடுவேன். அவ்ளோ பசி.” என்றவன் அவளை ஆழ்ந்து நோக்க,
“டீயைக் குடிச்சுட்டு வெயிட் பண்ணுங்க. சாப்பாடு செஞ்சுட்டு கூப்பிடுறேன்.” என முறைப்புடன் பதிலளித்தவள் தனக்கான தேநீர்க் கோப்பையுடன் சமையல் செய்யத் தொடங்கினாள்.
“உனக்குக் காய் வெட்டிக் கொடுக்கவா மஹி? இல்ல வேற எதுவும் உதவி வேணுமா?” பேசியபடியே அவனும் சமையலறை மேடையில் ஏறி அமர்ந்து கொண்டான்.
“இல்ல இல்ல, நீங்க அங்க ஹால்ல இருங்க. நான் சமைச்சுட்டு கூப்பிடுறேன். நீங்க இங்க இருந்தா என்னால சமையலை ஒழுங்கா செய்ய முடியாது.” அவன் அருகாமையின் தடுமாற்றத்தில் உளறத் தொடங்கினாள் மஹி.
“உன்னை நான் ஒன்னும் பண்ணல. நீ சமையல் பண்ணு. நான் சும்மா வேடிக்கை மட்டும் பார்க்கிறேன். எப்பவும் தனியா தானே இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ். உன் கூட பேசவாவது செய்றேன்.”
அவன் சொல்லிய குரலில் அவளுக்கும் அவனின் தனிமை நிலை புரிந்தாலும், அவளின் காயங்களும் அவை தந்த வடுக்களும் அந்த வடுக்களின் வடிவமாய் அவள் இன்று அவன் முன் நிற்கும் கோலமும் மட்டுமே அவள் கருத்தில் இருந்தது.
“ஹ்ம்ம் சரி” என்றவள் அவனுக்கு முதுகு காட்டி நின்று காய்கறிகளைக் கழுவி எடுக்க அவன் அவளை பின்னிலிருந்து நோக்கினான்.
நீளம் மிகக் குறைவான வெட்ஜ் வகையில் முடியை வெட்டி, ஒரு போலோ ஷர்ட்டும் பேண்டும் அணிந்திருந்தாள். மொத்தத்தில் பின்னாலிருந்து பார்க்க அவள் பெண் எனும் எந்த அடையாளங்களும் இல்லை.
அவள் வேலையின் நளினமும் அவள் குரலும் மட்டுமே அவளைப் பெண்ணாகக் காட்டியது.
அவளை இப்படிக் காணும் போதெல்லாம் அவனுக்கும் மனம் ரணமாக வலித்தது. அன்றைய நாட்களில் மழை மேகமென அவன் முகத்தில் விழுந்து உறவாடிய அவளின் கரு நிறக் கூந்தல் இன்றும் நினைவில் வந்தது.
‘உன்னோட இந்த கூந்தலைப் பராமரிக்கவே என் சொத்து அழிஞ்சிடும் மஹிம்மா.’ முகத்தை மூடிய முடியின் வாசத்தில் மயங்கி மோகத்தில் பிதற்றிய நினைவுகள் வர அவளிடம் கேட்டே விட்டான்.
“மஹி, முடி நீ எப்ப வெட்டின? … அது … ஹ்ம்ம்… ” இன்னும் அவளிடம் எப்படிக் கேட்க எனத் தயக்கம் வரப் பேச்சை நிறுத்தி அவளின் பதிலுக்குக் காத்திருந்தான்.
“ஏன் உன்கிட்ட சொல்லிட்டு தான் வெட்டணுமா. எனக்கு பிடிக்கல வெட்டிட்டேன்.” கோபமாகவே பதிலளித்தாள்.
“இல்ல இல்ல, சும்மா கேட்டேன். “
“என் லேப்டாப் அங்க டேபிள் மேல இருக்கு வேணும்ன்னா ஆன் பண்ணிக்கோங்க.” அவனின் தேவை அற்ற கேள்விகளைத் தவிர்க்க நினைத்தவள் அவனைத் தன் அருகிலிருந்து துரத்த எத்தனித்தாள்.
அவளின் நிலை அவனுக்கும் புரிய மீண்டும் கூடத்தில் அவளின் ஜாதி மல்லியின் வாசத்துடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கண்மூடிக் கொண்டான்.
சற்று நேரத்தில் சமையலை முடித்து அனைத்தையும் சாப்பாட்டு மேசையில் எடுத்து வைத்தவள் அவனை அழைக்க வர, அவனின் சீரான மூச்சுக் காற்று அவன் உறக்கத்தைச் சொல்லியது.
அவன் அருகே சென்றவள் மெல்ல அவன் கைகளைத் தொட, அவள் அவனை அழைக்கும் முன்பே அவளின் ஸ்பரிசத்தில் விழித்துக் கொண்டான்.
“சாப்பாடு எல்லாம் ரெடி, வாங்க சாப்பிடலாம்.”
“ஹ்ம்ம் இதோ..” என்றவன் கண்கள் ஏதோ தேட, அவனின் தேவை அவளுக்கும் புரிய “உள்ள ரூம்ல டாய்லெட் இருக்கு. போ.” என்று சொல்லி அறையின் விளக்குகளை ஒளிர விட்டு வந்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் அவன் வர, அவனுக்குப் பிடித்தார் போல தூய வெள்ளை நிற பீங்கான் தட்டில் சாதம், மோர்க்குழம்பும் விட்டு வெண்டைக்காய் பொரியலுடன் அவள் பரிமாற, அவனின் இதயம் ஒரு நிமிடம் நின்று தான் துடித்தது.
இத்தனைக்குப் பிறகும் தன் விருப்பங்களைத் துல்லியமாகக் கண்டு கொண்டு செய்பவளைக் காண தன் உணர்வுகள் உறையும் நிலையை அடைந்தான் மஹிமாவின் இந்திரன்.
“ஏன் மஹி, இந்த வெள்ளை தட்டு எனக்காக வாங்கினியா?” இல்ல உன்னோடதுல மட்டும் டிசைன் போட்டிருக்கு. அதான் கேட்டேன்.”
சட்டென அவன் கேட்டுவிட, அவனுக்காக அவள் வாங்கியது எனச் சொல்ல ஏனோ தயக்கம். அவனே தேவை இல்லை எனச் சொல்லிய பிறகும் அவனின் அத்தனை விருப்பங்களையும் பார்த்துப் பார்த்து வாங்கியதை எவ்வாறு ஒத்துக் கொள்வது? நம் மனம் என்றும் நம் மூளைக்கு விளங்காத ஒரு வஸ்து தானே?
“இல்ல இல்ல, இது ஹவுஸ் ஓனர் குடுத்த டின்னர் செட்ல இருந்தது. எனக்கு மட்டும் நான் வாங்கின பிளேட்.”
“எனக்கு பிடிச்ச மாதிரி வெள்ளை தட்டு குடுத்த வீட்டு ஓனர், உனக்குச் சமையலுக்கு மெனுவும் கொடுத்தாரா என்ன? மோர்க் குழம்பும் வெண்டைக்காய் பொரியலும் செஞ்சிருக்க?” நக்கலாகக் கேட்டான் அவன்.
“அதெல்லாம் ஒ.. ஒன்னும் இல்ல. சீக்கிரமா செய்யணும்ன்னா இது தான் செய்ய முடியும். நீ பேசாம சாப்பிடு.” சொல்லியவள் தட்டுக்குள் தலையை விட்டுக் கொண்டாள்.
சாப்பிடும் போது தான் அவனுக்கு வேறு ஒன்றும் நினைவில் வந்தது.
அவன் வந்ததிலிருந்து இன்னும் அவள் அவனை பாரதி என பெயரைச் சொல்லி அழைக்கவே இல்லை.
ஒருமையிலும் பன்மையிலும் மாறி மாறி அவள் பேசிய போதும், அவளின் உரிமையான அழைப்பு இன்னும் வராததால் அவனின் மனம் சற்றே சுணங்கியது.
இருவரும் உண்டு முடித்து சமையலறையை சுத்தம் செய்து மீண்டும் கூடத்திற்கு வந்து அமர்ந்திருக்க அங்கே பல நிமிடங்களுக்கு அமைதி மட்டுமே.
அவளுக்கோ அவனைப் புறப்படு என சொல்லத் தயக்கம், அவனுக்கோ இங்கே தங்கி விடும் எண்ணம் மட்டுமே. வீணே ஏதேனும் பேசி அவளின் கோபத்தில் மீண்டும் இனி அவளைத் தனியே விட்டுச் செல்ல அவனுக்கும் விருப்பமில்லை.
ஆனாலும் அவளின் அமைதி தந்த சிறு எரிச்சல் அவனைக் கலைக்க,
“ஏன் மஹி அமைதியா இருக்க? எதுவும் பேச மாட்டியா?”
“என்ன பேச, புதுசா எதுவும் இல்ல.”
“ஏன் இல்ல, மூணு மாசமா உன்னோட படிப்பு, இந்த தனி வீடு, புது ப்ரண்ட்ஸ் இதெல்லாம் எனக்கும் சொல்லு மஹி” என அவளின் அமைதி தந்த கடுகடுப்பில் கேட்க,
“சொல்லிக்கிற அளவுக்கு பெரிய விஷயம் எதுவும் இல்ல. இப்போதைக்கு ரிசெர்ச் வேலை போகுது. அப்புறம் லிம் மட்டும் தான் இங்க ஒரே ப்ரண்ட்.”என்று பேச்சை முடித்துக் கொண்டாள்.
கோபத்தில் இவனுடன் சண்டை இடவில்லை என்றாலும் பெரிதாகப் பேசவும் இல்லை என அவனுக்கும் புரிந்தது.
“ஹ்ம்ம்.” எனச் சொல்லியவன் மீண்டும் அமைதியாக, கடிகாரத்தின் சத்தம் மட்டுமே அங்கு சில மணித்துளிகளுக்கு.
மஹிக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. அவனைச் செல் எனச் சொல்லவும் முடியாமல், அவன் அங்கு இருப்பதிலும் விருப்பம் இல்லாமல் இருக்க மனம் பெரும் போராட்ட நிலையில் இருந்தது.
நேரம் மட்டுமே கடந்து கொண்டிருக்க மஹிமா பொறுமை இழந்து கேட்டே விட்டாள் “நேரம் ஆகுது. நீ வீட்டுக்குப் போகலையா?”
“ஏன் இதுவும் வீடு தானே? நான் இங்க தங்கக் கூடாதா?” அவனும் பதிலுக்குத் திமிர,
“அதெல்லாம் வேண்டாம் நீங்க கிளம்புங்க.”
“முடியாது.” என அழுத்தமாக முடித்துவிட்டான்.
“தேவை இல்லாம பிரச்சனை பண்ணாத. என்னைத் தனியா விடு. எனக்கு நாளைக்கு கிளாஸ் இருக்கு. நான் அதுக்கு ப்ரிபேர் பண்ணனும்.” அதிகாரமாகச் சொல்ல நினைத்தாலும் அவளது குரல் கெஞ்சலாகத்தான் ஒலித்தது.
“மஹி, இப்படி நீ தனியா இருந்து என்ன சாதிக்கப் போற? என் தப்ப திருத்த எனக்கு ஒரு வாய்ப்புக் குடேன். (sociobits.org) ஊரு உலகத்துல எவனும் தப்பே பண்ணுறதில்லையா? என்னவோ கொலை செஞ்சிட்டு வந்தவன் மாதிரி என்னை நடத்துற.” குறைந்த கோபம் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியது.
“ஆமா, நீ கொலை தானே பண்ண. உன் மேல எனக்கு இருந்த நம்பிக்கையை நீ கொன்னுட்ட.
எவளோ கேவலமா எனக்குத் தெரியாம என்னைப் பத்தி அசிங்கமா பேசி இருக்க.
உன் இஷ்டம் போல என் வாழ்க்கையை நீயே முடிவு பண்ணீருக்க. இதுக்கு மேல நீ செய்ய என்ன இருக்கு?
என் கண்ணு முன்னாடி நிக்காம கிளம்பு.” சொன்ன வேகத்தில் மஹி மறுபடியும் உடைந்து பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள்.
மஹிமாவைச் சரி செய்ய வேண்டிய கட்டாயம் உணர்ந்து, அவளிடம் விளக்கம் எதுவும் கொடுக்காமல் தன் உணர்வுகளை அடக்கி அவனும் அமைதியாக அமர்ந்திருந்தான்.
முப்பது நிமிடங்களைக் கடந்து அழுகை விசும்பலாக மாற, மூவர் அமரக் கூடிய சாய்விருக்கையில் கால்களைக் குறுக்கிப் படுத்திருந்தவளின் மெல்லிய குரல் அவனை எட்டியது.
“சுசீ, ப்ளீஸ் கிளம்பு.” முனகலாக வந்தது அவளது குரல். ‘சுசீ’ என ஆயிரம் பேர் அவன் பேரைச் சொல்லி அழைத்தாலும் அவளின் அழைப்பில் அவன் அன்றும் இன்றும் என்றும் காதலை மட்டுமே உணர்கிறான்.
அவன் அவனின் எண்ணத்தில் திளைத்திருக்க, “கிளம்பு சுசி ப்ளீஸ்.. எனக்குத் தூக்கம் வருது” என மீண்டும் அவனை கிளப்பிவிட உந்தினாள் மஹி.
நீண்ட இடைவெளிக்குப் பின் அவளுக்காக பாடிய அவனின் குரலில் இருவரின் நினைவுகளும் பின்னே சென்றாலும் அவனது இனிய குரல் அந்த அறையையும் அவர்களின் மனதையும் நிறைக்கத் தொடங்கியது.
மேனி கொதிக்கு தடி! – தலை சுற்றியே வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் – இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்!
மோனத் திருக்குதடீ! இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே,