கண்களில் நீர் கோர்த்து உதடு துடிக்க…சடுதியில் மாறிவிட்ட வெண்ணிலாவின் முகம் குமரனை உறங்கவிடாது பாடாய் படுத்தியது.
விளையாட்டு பேச்சென்றாலும் வெண்ணிலாவால் அதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
காந்தளின் பேச்சு குமரனுக்கும் பிடிக்கவில்லை. மனம் முழுக்க ஒருத்தி வேரோடி போயிருக்க, வேறொரு பெண்ணை இணைத்து பேசிட எப்படி இருக்கிறதாம்?
காந்தளிற்காக வேண்டா வெறுப்பாக உணவை விழுங்கி வைத்தான். ஆனால் வெண்ணிலா, பார்வையாலேயே அவனை குத்தி கிழித்து உண்ணாமலே சென்றுவிட்டாள்.
கடந்த சில நாட்களாகவே வெண்ணிலா இப்படித்தான் இருக்கின்றாள். நினைத்தால் சாப்பிடுகிறாள். சொல்லி பார்த்து சலித்துப்போன காந்தள், தேர்வு பயமென நினைத்து அவள் போக்கில் கண்டுகொள்ளாமல் விட்டார்.
குமரன் உறங்கச் சென்று மெத்தையில் விழுந்தவன் தான்… பயண களைப்பால் கூட அவனுக்கு உறக்கம் வரவில்லை.
வெண்ணிலா அவனைச் சுற்றி வந்து வேதனையை கொடுத்தாள்.
‘அவளிடம் பேசினால் தான் உள்ளம் அமைதி கொள்ளும்’ என எண்ணியவன் மெல்ல எழுந்து வெளியில் வந்தான்.
அவனுக்கு பக்கத்து அறையில் தான் காந்தள் உறங்கிக்கொண்டிருக்க, பாதி திறந்திருந்த கதவின் வழியே அத்தையின் உறக்கத்தை உறுதி செய்துகொண்டவன், மேலேறிச் சென்றான்.
அறை திறந்திருந்த போதும் கும்மிருட்டாக இருந்தது.
‘தூங்கிட்டாளோ?’
உள்ளே போகலாமா? வேண்டாமா? சிந்தித்தவன் வாயிலில் நின்றபடியே மொட்டை மாடியை பார்வையால் அலச, செடிகளின் ஓரமிருந்த மேடையில் கால்களைக் கட்டிக்கொண்டு, அதில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள் வெண்ணிலா.
பார்த்ததும் அவளின் தோற்றம் அவனை வதைத்தது.
நிலவு ஒளியில் வெண்ணிலவு முகம். வஞ்சனையின்றி ரசித்தது அவனது அகவிழி.
சில்லென்று தாக்கிய குளிர்காற்று சூழலுக்கு இதம் பரப்பிட தன்னவளை மெல்ல நெருங்கினான்.
“அம்மாடி…”
மென்மையிலும் மென்மையாய் ஒலித்த அவனது குரலில், நிமிர்ந்து பார்க்காமலே அருகில் நின்றிருந்தவன் வயிற்றில் முகம் புதைத்து இடையோடு கட்டிக்கொண்டாள்.
காதல் முகிழ்த்த பின்னர் முதல் நெருக்கம். அவனுள் பல உணர்வு போராட்டம்.
போட்டிருந்த ஆடை சுட்ட ஈரம் உணர்ந்து பதறியவன்…
“டேய்… அம்மாடி!” என்று அவளின் முகம் பிரித்து உயர்த்தினான்.
கண்கள் இரண்டும் கண்ணீர் வழிந்து ரத்தம் பூசிய நிறத்தில் பார்க்கவே அதிர்ந்திட்டான்.
“எதுக்கு இந்த அழுகை?” நிலவின் முகத்தை கண்ணீர் கரை போக்க அழுந்த துடைத்து அவளின் அருகில் அமர்ந்தான்.
“தெரிஞ்சிகிட்டே கேட்டால் என்ன சொல்றது?” என்றவள், “யாசகமாக கேட்டிடக்கூடாதுன்னு அமைதியா இருக்கேன். என்னால முடியல. வீட்டிலிருக்கும் பெரியவங்க எதாவது முடிவெடுப்பதற்கு முன்பு நீங்க தெளிவாகிடுங்க” என்று கூறினாள்.
குமரனிடம் பேச்சில்லை. எதையோ யோசித்திடும் மௌனம்.
“இப்படி அமைதியா இருந்து கொல்ற. அவங்க பேசுறதெல்லாம் அவங்களுக்கோ உனக்கோ சாதரணமாகத் தெரியலாம். எனக்கு அப்படியில்லை. உயிரே வலிக்குது.”
“நீயும் என்னை விரும்புறேன்னு தெரியுது. ஆனாலும் அதை ஒப்புக்கொள்ள எதுக்கு இந்த தயக்கம். இன்னும் என்ன எதிர்பார்க்குற, உன்கிட்ட நான் கெஞ்சனுமா? வேண்டி நிக்கணுமா?”
எத்தனை உணர்ச்சிவசமாக பேசிய போதும் அவளிடமிருந்து மாமா என்கிற ஒற்றை அழைப்பை எதிர்பார்த்து ஏமாந்து தனக்குள் இறுகிப்போனான்.
மனதில் தன்மீது கொண்ட வெறுப்பே அவ்வார்த்தையின் தடையென்பது அவனுக்கு புரிந்தது.
“இதோ இப்போ நான் அழுதுட்டு இருப்பேன்னு தானே வந்தீங்க… நான் அழுதால் உங்களுக்கென்ன? தாங்கிக்க முடியலையா? இதுக்கு பேர் தான் காதலுன்னு உங்களுக்குத் தெரியலையா?” என்றவள், “இந்த மாதிரி ஒரு பேச்சில் தானே அன்னைக்கு நிறைய பேசுனீங்க” எனக்கூறி கன்னம் இறங்கிய நீரை புறங்கை கொண்டு துடைத்தவளாக, “இப்பவும் அந்த மாதிரி எதுவும் பேசிடாதீங்க. என்னால் தாங்கிக்க முடியாது” என்று எழுந்து அறை நோக்கி ஓடினாள்.
அஜய் என்று குமரன் சொல்லியதும் அது யாரென்று யோசித்தவளுக்கு, அடுத்து அவன் உன் அண்ணன் என்று சொல்லிய பின்னர் தான் அவளுக்கு அருள் தனது பெயரை மாற்றிக்கொண்டான் என்பதே நினைவுக்கு வந்தது. அந்தளவிற்குத்தான் அண்ணன் தங்கை உறவு இருக்கிறது.
வெண்ணிலா பேசியவை அனைத்தும் வலி கொடுத்த போதும்… காதலை சொல்லதுடித்த மனதை அடக்கி பொறுமையாக இருக்கின்றான்.
இப்போதுதான் அஜய் இறங்கி வருவதைப்போல் தெரிகிறது. இதனை அவன் எப்படி எடுத்துக்கொள்வானோ என்கிற எண்ணமே இக்கணம் அவனின் காதலை கூறிட தடையாய்.
“எனக்கு நீ மட்டும் போதும் சொல்றது உனக்கு விளங்கலையா?”
“காதலுக்கு நீ என்கிற உறவு போதுமானதாக இருக்கலாம். குடும்பத்துக்கு நாம் என்கிற உறவுகள் தான் நன்றாக இருக்கும்.”
வெண்ணிலாவிற்கு அவன் கொடுக்கும் வலியைத் தாண்டி அவனின் மண்டையை உடைத்துவிட்டால் என்னயென்று இருந்தது.
“உங்கக்கிட்ட திரும்ப கேட்கவேக்கூடாதுன்னு இருந்தேன் மாமா.” அப்படியே மடங்கி அமர்ந்தாள்.
தன்னைப்போல் அவள் உதிர்த்துவிட்ட மாமா என்ற விளிப்பில் அவனின் நெஞ்சில் சாரல்.
அவள் வேண்டுமென்றே சொல்லாது இருப்பது புரிந்தது.
“ஆனால்… உங்க பின்னாலே மாமா மாமான்னு நான் சுத்திக்கிட்டு இருந்தும்… உங்களுக்கு கல்யாணம் அப்படின்னதும் யார் கண்ணுக்கும் நான் உங்களுக்கு சரியாக இருப்பேன்னு தெரியவே இல்லை. என்னென்னவோ பேசுறாங்க. எனக்கு பயமா இருக்கு. அந்த பயத்தில் தான் நீங்க பேசுனைதையெல்லாம் மறந்துட்டு பேசிட்டேன்” என்றவள்,
“முன்பு குடும்பம், என் படிப்புன்னு காரணம் சொன்னீங்க. இப்போ அருளா?” அவளிடம் விரக்தி புன்னகை.
அவளறிந்த அருள் இதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டான் என்பது திண்ணம்.
“இதுக்கு மேல் என்னால் உங்கக்கிட்ட போராட முடியாது மாமா. நான் என்ன சொன்னாலும் உங்களுக்குன்னு ஒரு காரணம் முளைச்சிகிட்டே இருக்கு.
இனி நானா உங்களைத்தேடி என் காதலை ஏத்துக்கோங்கன்னு வரமாட்டேன். நீங்களா தான் வரணும். வருவீங்கன்னு காத்திருக்கேன் மாமா” என்று அழுத்தமாக உறுதியாகக் கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவினை சாற்றிக்கொண்டாள்.
மனதில் இருந்த தன்னுடைய காதல், எண்ணம் என அனைத்தையும் அவனிடம் கொட்டிவிட்டவளுக்கு, அறைக்குள் வந்து மூடிய கதவின் மேல் சாய்ந்து நின்று அப்படியொரு அழுகை. அவளின் கதறல் மெல்லிய ஒலியாக அவன் செவி தீண்டிட துடிதுடித்தான்.
தன்னையே அறைந்து கொண்டான்.
‘கொஞ்சம் பொறுமையா இரு நிலாம்மா.’ மூடிய கதவினை பார்த்து சொல்லிக்கொண்டவனுக்கு அவனின் காதலை சொல்லிட நெஞ்சை முட்டும் ஆசை எழுந்தது.
அஜய்யின் இன்றைய பேச்சும், மாற்றமும் அவனை ஒத்திவைக்கக் கூறியது.
மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டால் என்ன செய்வது என்கிற கவலை குமரனுக்கு.
இறங்கி வருபவனை மீண்டும் தானே ஏற்றிவிட்ட கதையாகிடக் கூடாதே என நினைத்தான்.
அதனாலேயே அவளின் பேச்சு உயிர் உருக்கிய போதும் தன்னைக் கட்டுப்படுத்தி பார்த்திருந்தான்.
காதல் இல்லாதவர்களை கூட திருமண பந்தத்தில் இணைத்து விடலாம். பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணங்களே அதற்கு சான்று. ஆனால், காதலிக்கும் இருவரை சேர்த்து வைப்பது அத்தனை கடினமானதாக இருக்கிறது. காதலிப்பவர்களே தடையாக இருந்தால் காதல் என்ன செய்யும்.
“கொஞ்சநாள் அம்மாடி.” மூடியிருந்த கதவை வெறித்தவனாக அம்மேடையிலேயே படுத்தவன் தன்னை அறியாது உறங்கிப்போனான்.
நள்ளிரவிற்கு மேல் சன்னலின் வழி அவனை கண்ட வெண்ணிலா போர்வை கொண்டு வந்து போர்த்துவிட்டுச் சென்றாள்.
விடியலில் கண் விழித்தவன் தன் உடலைச் சுற்றியிருக்கும் போர்வையை பார்த்து உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
“நீயே நினைத்தாலும் என்னை வெறுக்கவோ, விலகவோ உன்னால் முடியாது அம்மாடி.”
சொல்லிக்கொண்டவனின் இதயம் முழுக்க நிலவின் தடங்கள்.
*******
இரண்டு நாட்கள் கடந்திருந்தது.
குமரன் பேசிட முயற்சி செய்தாலும் வெண்ணிலா விலகிச் சென்றாள்.
“மனசு முழுக்க உங்க மீது காதலை வச்சிக்கிட்டு, நீங்க மறுத்த பின்னர், எதுவுமே இல்லாத, நடக்காத மாதிரி எனக்கு பேசவரல மாமா. ப்ளீஸ், உங்களை தள்ளி வைக்கிற வலியையும் எனக்கு கொடுக்காதீங்க.” வெண்ணிலா வெளிப்படையாக அவனிடம் சொல்லிட, குமரனும் பேச முயல்வதை நிறுத்திக்கொண்டான்.
கொள்ளை கொள்ளையாய் காதலை சுமந்துகொண்டு பிரிந்து நின்றனர்.
கதிரும் நிலவும் எதிரெதிர் நின்ற போதும் உள்ளத்து நினைப்பெல்லாம் தங்களது இணைப்பற்றியே!
வெண்ணிலாவிற்கு இரண்டு நாட்களாக ஒரு எண்ணம் மணடைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
குமரன் அஜய்’யை காரணம் காட்டியதால் அவனிடம் பேசிவிடுவதென்று.
ஆனால் எப்படியென்று தான் தெரியவில்லை.
கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாயிற்று. வெண்ணிலா அருளிடம் பேசி. ஏன் அவன் முகம் பார்த்து. படிக்கும் காலங்களில் அவன் வீட்டிற்கு வந்தால் கூட வெண்ணிலா தன்னுடைய அறைக்குள்ளேயே முடங்கிக்கொள்வாள். அவன் செய்த செயலினால் அவன்மீது உண்டான பயத்தின் விளைவு அது.
இதுவரை அண்ணன் என்கிற பாசத்தால் கூட அவனிடம் பேச வேண்டுமென்ற நினைப்பு அவளுக்கு வந்தது இல்லை.
அஜய் அவளிடம் பேச நினைத்திருக்கிறானா இல்லையா என்பதும் தெரியாது. அவனின் நினைப்பு தெரிவதற்கு அவன் முன்னாலாவது இவள் சென்றிருக்க வேண்டுமே.
அஜய்’யின் எண் கூட அவளிடம் இல்லை. அவனின் தற்போதைய முகமே அவளது மனதில் இல்லை என்ற நிலையில் தான் அவளிருக்கின்றாள்.
காந்தளுக்கோ, அவளின் மற்ற குடும்பத்தாருக்கோ… தான் குமரனை விரும்புவது தெரிந்தால் நிச்சயம் தடை விதிக்கமாட்டார்கள் என்று அத்தனை நம்பிக்கை அவளுக்கு. அவர்களின் எண்ணம் தெரியாது.
அவளுக்குமே இப்போது குமரன் சொல்லிய பிறகு, அஜய் தடையாக இருந்திடுவானோ என்ற பயம் மேலெழும்பியது.
அதற்காகவே அஜய்’யிடம் பேசிட முடிவெடுத்தாள்.
காந்தளுடைய அலைப்பேசியிலிருந்து அஜய் எண் எடுக்கலாமென இரண்டு மணி நேரமாக முயற்சித்து பார்த்துவிட்டாள். காந்தள், குணவதி, கமலம் மூவரும் கான்பிரன்ஸ் காலில் நடக்கவிருக்கும் விழாவைப்பற்றி பேசிக்கொண்டிருக்க, அவர்களின் பேச்சு முடிவுக்கு வருவதாக இல்லை.
“எனக்கு அருள் நெம்பர் வேணும்?” எனக் கேட்டிருந்தாள்.
“நிலா குட்டி!” அவனுள் அப்படியொரு அதிர்வு. அவனால் கேட்டது வெண்ணிலா தானா என்று நம்பவே முடியவில்லை.
“எனக்கு சரியாகத்தான் கேட்டதா?”
“இன்னொருமுறை கேட்க முடியாது.”
“நிலா… ஆர் யூ ஓகே?” குணா அப்படி கேட்கவும் காரணமிருக்கிறது.
இத்தனை வருடங்களில் அஜய் பெயரை கூட வெண்ணிலா கூறியதில்லை. அதற்கான காரணம் தெரியாத போதும், அண்ணன் தங்கை சண்டை சரியாகிவிடுமென நினைத்திருந்தார்களேத் தவிர அவர்களுக்குள் இத்தனை பெரிய இடைவெளி விழுந்துவிடுமென்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அஜய் பற்றிய விடயம் பேசினாலும், நீங்கள் பேசுவது எனக்கு கேட்கவில்லை என்கிற பாவனை தான் வெண்ணிலாவிடம். அப்படிப்பட்டவள் இன்று அவனின் எண்ணை கேட்டால் அவனுக்கு அதிர்வு இருக்கத்தானே செய்யும்.
“அண்ணா மேல என்ன திடீர் பாசம்?”
“உன்னால் கொடுக்க முடியுமா முடியாதா?”
“காரணம் சொல்லு கொடுக்கிறேன்.”
இத்தனை ஆண்டுகளாக தனக்கு ஒரு அண்ணன் இருக்கின்றான் என்கிற நினைப்பே இல்லாமல் இருந்தவள் திடீரென பேச நினைப்பதற்கான காரணம் அறிந்தே ஆகவேண்டுமென்ற ஆவல் அவனிடம்.
அதன் பின்னரும் தனக்குள்ளே போராடி சில மணி நேரங்கள் கடத்தியே அருளிற்கு அழைத்தாள்.
அப்போதுதான் வீட்டிற்கு வந்த அஜய் வேலை பளுவால் சற்று ஆசுவாசமாக அமர்ந்திருந்தான்.
‘இந்நேரத்தில் யாருடா அது?’ சலிப்பாக அலைப்பேசியை எடுத்து பார்த்தவன் தன் கண்ணையே நம்பாது வெறித்தான்.
‘நிலா… நிலா எனக்கு கால் பண்றாளா?’
அவனின் நினைவுகள் ஒன்பது வருடங்களுக்கு பின்னால் சுழன்றது.
குமரனும் அஜய்யும் சமவயது உடையவர்கள். சில மாத வேறுபாடு மட்டுமே. இருப்பினும் முதல் வாரிசு என்ற நிலையில் குமரனுக்கு கூடுதல் பாசம் சலுகைகள். அதனை ஏனோ அஜய்’யால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த வயதில் அதற்கான பக்குவம் அவனுக்கில்லை.
காந்தளும் குமரனிடம் அதீத பாசமாக இருந்திட அவனின் கோபம் குமரனின் மீது வெறுப்பாக மாறியது. குமரனிடம் சுத்தமாக பேசுவதை கைவிட்டு எதிரியாக எதிர்த்து நின்றான். குமரன் ஒன்று செய்தால் இவனும் போட்டியாக ஏதேனும் செய்திடுவான்.
அதில் இருவருக்கும் முட்டிக்கொள்ளும். குமரன் விட்டுக்கொடுத்தாலும், அஜய் வேண்டுமென்றே வம்பு செய்திடுவான்.
வளர்ந்தால் சரியாகிவிடும் என்று மற்றவர்கள் நினைத்து சிறியவர்கள் சண்டையில் உள்ளே நுழையவில்லை.
அப்போது இருவரும் பதினொன்றாம் வகுப்பு. வெண்ணிலா ஆறாவது.
இருவரும் வேறுவேறு பிரிவு.
பனிரெண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன், அஜய்யின் பிரிவு.
அவன், பதினொன்றாம் வகுப்பில் ஒரு பெண்ணின் பெயரைக்கூறி…
“அவள் உன் மாமா பையன் கிளாஸ் தானே. அவனிடம் கொடுத்து அவளிடம் கொடுக்க சொல்” என்று நான்காக மடிக்கப்பட்ட காகிதம் ஒன்றை கொடுத்தான்.
“உங்களுக்கு வேணுன்னா நீங்களே கொடுங்க.” அஜய் முடியாதென்று மறுக்க, அவன் மிரட்டி அனுப்பி வைத்தான்.
அஜய்க்கு அந்தப்பெண் யாரென்றேல்லாம் தெரியவில்லை. அதனால் குமரனிடம் கொடுத்து பெயர் மட்டும் சொல்லி “கொடுத்திடு” என்று வந்துவிட்டான்.
குமரனிடம் அஜய்க்கு பேசவே பிடிக்காது. அதனால் விவரம் ஏதும் முழுதாக சொல்லாது தவறு செய்துவிட்டான்.
அன்று அப்பெண் வராததால் அது என்னவென்று பிரித்துக்கூட பாராது தன்னுடைய பையில் வைத்துக்கொண்ட குமரன் நாளை கொடுத்துவிடலாமென நினைத்திருக்க வேறொன்று நடந்தது.
மறுநாளும் அப்பெண் பள்ளிக்கு வரவில்லை. அடுத்து வார இறுதி நாட்கள். காந்தள் பிள்ளைகளுடன் அன்னை வீட்டிற்கு வந்துவிட்டார்.
அன்று மதியம் போல் குமரன் பள்ளிப்பாடம் எழுதிக் கொண்டிருக்க, அவனது புத்தகத்திலிருந்து அந்த காகிதம் கீழே விழுந்தது.
அருகிலிருந்த கண்ணபிரான் எடுத்து பிரித்து பார்த்து அதிர்ந்து போனார்.
“குமரா இது யார் எழுதியது?” அதட்டலாகத்தான் அவர் குரல் ஒலித்தது.
என்றும் கடிந்து ஒரு பார்வை பார்த்திடாத தன்னுடைய தந்தை இன்று அதட்டுவது குமரனுக்கு அச்சத்தைக் கொடுக்க…
“இது அருள் தான் என் கிளாஸ் பொண்ணுகிட்ட கொடுக்க சொல்லிக் கொடுத்தான். அது என்னன்னு கூட எனக்குத் தெரியாது” என்று பயத்தோடு கூறினான்.
காந்தள் என்னவென்று கேட்க, கண்ணன் தன் அக்காவிடம் அதனை நீட்டினார்.
படித்து பார்த்தவர் அஜய்’யிடம் என்ன ஏதென்று விசாரிக்காது அடி வெளுத்துவிட்டார்.
பெரியவர்கள் தடுத்தும் அவரது ஆத்திரம் அடங்கிவில்லை.
“என்னடா வயசு உனக்கு? அப்பா இல்லாத பிள்ளையை அம்மா ரொம்ப நல்லா வளர்த்திருக்கான்னு நாலு பேர் என் முகத்திற்கு நேர் பேசுவதற்கு இடம் கொடுக்கப்போறியா? பிள்ளைங்க ஒழுக்கமா இருக்கணுன்னு ஊரிலிருக்கும் பிள்ளைகளுக்கெல்லாம் நான் பாடமெடுத்தால், நீ எனக்கே பாடம் கற்றுத்தருவ போலிருக்கே.” இன்னும் இன்னும் நிறைய பேசிவிட்டார்.
அவரின் அடியை ஒருகட்டத்தில் ஏற்று விறைத்து நின்றவன் சிறு சத்தம் கூட எழுப்பவில்லை.
இறுதியில் வீரபாண்டி தான் அவனைத் தன்பக்கம் இழுத்து காந்தளை தடுத்திருந்தார்.
“என்ன ராசா இது? இதெல்லாம் தப்புப்பா?” வீரபாண்டி சொல்லிட அஜய் உண்மையை விவரித்தான்.
குமரனுக்கே அப்போதுதான் தெரிய அஜியிடம் மன்னிப்பு கேட்க… அவன் பார்த்த பார்வை குமரனின் முதுகுத்தண்டை சில்லிட வைத்தது.
காந்தள் தன் தவறு உணர்ந்து அஜய்யிடம் பேச விழைய விரக்தியான இதழ் சுழிப்பில் அவரை கடந்துவிட்டான்.
அன்று மாலை தோட்டத்து கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்து நடந்ததை எண்ணிக்கொண்டு இருந்தான் அஜய்.
அவனின் கோபம் முழுக்க குமரனின் மீதுதான். தன்னிடம் என்னவென்று கேட்காமல் குமரன் பொய் சொல்லிவிட்டதாகவே நினைத்தான்.
‘குமரன் என்பதால் தான் அடிக்காமல் விசாரித்தனர், தானென்பதால் தான் அடித்த பின்னர் விசாரித்தனர்’ என்று உள்ளுக்குள் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வெண்ணிலாவும், குமரனும் ஓடி பிடித்து சிரித்து விளையடிக் கொண்டிருக்க… அவர்களின் சிரிப்பின் ஒலி அவனுக்கு மிளகாயின் எரிச்சலாகக் காந்தியது.
அதுவும் வெண்ணிலா… தன்னுடைய தங்கை தன்னுடன் இத்தனை ஒட்டுதலுடன் இல்லாமல் குமரனிடம் இருப்பது அத்தனை ஆத்திரமாக வந்தது. ஒருநாள் ஒருபொழுது தங்கையிடம் தான் அன்பாக பேசியதில்லை, விளையாட நினைத்ததில்லை என்பதெல்லாம் மறந்திருந்தான் போலும் அக்கணம்.
குமரனின் மீதான கோபமெல்லாம், அவனுக்கு அதிகம் பிடித்த வெண்ணிலாவின் மீது திரும்பியது.
அவனுடைய சந்தோஷம் எல்லாம் வெண்ணிலா தானென்று அறிந்திருந்தவனுக்கு, தங்கையென்றும் பாராது, அவளுக்கு ஒன்றென்றால் நிச்சயம் குமரன் துடிப்பான், கதறுவான் என்று அவனைப்பற்றி மட்டுமே எண்ணினான். அதில் அவள் தன் தங்கை என்பதையே மறந்தான்.
அஜய் கிணற்றின் மீது சோகமாக அமர்ந்திருப்பது என்னவோபோலிருக்க, குமரன் வெண்ணிலாவை அவனையும் விளையாட அழைத்து வருமாறு அவனிடம் அனுப்பி வைத்தான்.
“அண்ணா வா! மாமா விளையாட கூப்பிடுறாங்க!”
தன்னருகில் வந்து கை பிடித்து இழுக்கும் வெண்ணிலாவை முறைத்து பார்த்தான்.
“நீ இனி அவனுடன் பேசக்கூடாது.” குமரனை காட்டிக் கூறினான்.
சற்று தூரத்தில் நிற்கும் குமரனையும், தன்னுடைய அண்ணனையும் மாற்றி மாற்றி பார்த்த வெண்ணிலா…
“மாமா வேணும். நீ வேணாம் போ!” என்று சொல்லிட… அவ்வார்த்தையில் அஜய் மொத்தமாக தன் நிதானம் இழந்தான்.
‘இவளுக்குகூட நான் முக்கியமில்லையா? ஒரு ஆளாகத் தெரியவில்லையா?’ என்று எண்ணியவன், சிறிதும் யோசிக்காது இமைப்பொழுதில் வெண்ணிலாவை பிடித்து இழுத்து கிணற்றுக்குள் தள்ளியிருந்தான்.