அத்தியாயம் – 1
இளஞ்சிவப்பு நிறத்திலான ஃபார்மல் முழுக்கை சட்டை, கருப்பு பேண்ட், கழுத்தை ஒட்டிய மெல்லிய தங்க சங்கிலி, இடது கையில் எப்போதும் அவன் அணியும் கைக்கடிகாரம், வலது கையில் கட்டியிருந்த கருப்பு கயிரோடு மின்னிய பேர்ஸ்லெட் என இதழ்களில் தேங்கி நின்ற முழு சிரிப்போடு நெற்றியில் சிறுகீற்றான குங்குமத்துடன் படிகளிலிருந்து தன் வழக்கமான நடையோடு வேகமாக கீழிறங்கி வந்தான் ப்ரித்விராஜ்.
நேர்த்தியான, களையான முகம். அதில் வில்லென வளைந்து நிற்கும் புருவங்களுக்கு மத்தியில் சுருங்கி விரியும் சிறுகோடான அழகிய மடிப்புகள், கூர்மையான கருவிழிகள், எடுப்பான நாசி அதன் கீழே வெகு கம்பீரமாக வீற்றிருக்கும் மீசையை எடுத்துக்காட்டும் செழிப்பான வளைந்த உதடுகள், முகத்தில் அரும்பியிருந்த இரண்டு நாள் தாடி என அனைத்தும் முப்பத்தைந்து வயது நிரம்பியவனின் அகவையை குறைத்து இருபதுகளின் பின் பாதியை காட்டிக் கொண்டிருந்தது.
“ராஜா! வாப்பா! வந்து சாப்ட்டிட்டு கிளம்புயா… அங்க எல்லாரும் ரெடி ஆகிட்டாங்களாம்…” என கூறியவாறே உணவு மேஜையில் அவனுக்கான உணவுகளை அடுக்கி கொண்டிருந்தார் சுகந்தி.
“அண்ணா திரும்பி சென்னை வர முப்பது நாள் ஆகும். அதுக்குள்ள நம்ப புது பிராஞ்ச் கன்ஸ்டிரக்ஷன் வொர்க் முடிச்சுடுவாங்களா?” என தன்னுடைய அலைபேசி அழைப்பில் யாருடனோ பேசிக் கொண்டே ப்ரித்வி அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் வந்து அமர்ந்தான் ஆனந்த் ராஜ், ப்ரித்வி ராஜின் தம்பி.
அவன் வந்தமர்ந்தவுடன் வேகமாக சமையலறையில் இருந்து வெளியே வந்த ஆனந்த்தின் மனைவி ப்ரியா ஆனந்த்திற்கு தேவையானதை பரிமாற, அவன் அலைபேசியில் பேசிக்கொண்டே தன் உணவினை உண்டுக் கொண்டிருந்தான். அருகே அமைதியாக அமர்ந்திருந்த ப்ரித்விற்கும் பரிமாற முயன்ற ப்ரியாவை தன் கைகளை நீட்டி தடுத்தவன் தன் அன்னையான சுகந்தியை நிமிர்ந்து பார்த்தான்.
“என்ன ம்மா? என்ன யோசனை? டிஃபன் வைங்க!” என்ற மூத்த மகனை நினைத்து தவித்து போனது அந்த தாயின் உள்ளம். மனதில் இருப்பதை வெளியே காட்டிக் கொல்லாமல் அவனுக்கு இட்லி, கேசரி, வடை, பொங்கல் என அனைத்தையும் சுகந்தி பரிமாற, கேசரியை அப்படியே வைத்து விட்டு மற்றதை வேகமாக சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டான் ப்ரித்வி ராஜ்.
உணவினை நிதானமாக ரசித்து உண்ணும் பழக்கம் ஆறு மாதத்திற்கு முன்பே அவனிடமிருந்து விடைபெற்று சென்றிருந்தது. எப்போதுமே அவனுடைய மனைவி பரிமாற உண்ணுபவன் இப்போது ஏனோ அவளில்லாமல் சரியாக உண்டான இல்லையா என்பது கூட யாருக்கும் தெரியவில்லை. பசி தீர்ந்திருக்கும் ஆனால் முன்பை போல அவன் எதையும் கவனித்து உண்ணுவதில்லை அவனுடைய உணவின் அளவும் கூட குறைந்து போய்விட்டது என்பது அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு புரிந்தது தான். சற்று வருத்தமாய் கூட இருக்கும் ஆனால் அவன் எப்போதுமே அப்படி தான். வாய் திறந்து தனக்கு இது வேண்டுமென அவன் கேட்பது தன் மனைவியுடமும் அன்னையிடமும் மட்டுமே. இப்போது அவளில்லாமல் அதுவும் கூட அவனிடம் வெகுவாக குறைந்து போயிருந்தது.
“ஆனந்த்! சாப்ட்டு ஃபோன் பேசு!” என அழுத்தமாக ஒலித்த தன் அண்ணனின் குரலில் வேகமாக அலைபேசியை அணைத்து போட்டவன் உணவில் கவனம் பதிக்க, அவனுடைய எட்டு மாத பெண் குழந்தை கவிவர்ணா உள்ளறையிலிருந்து தன் அன்னையை அழைத்து அழுதது.
“அழாதிங்க கவிப்பாப்பா இதோ அம்மா வந்துட்டேன்!” என ப்ரியா இங்கிருந்தபடியே குரல் கொடுக்க ப்ரியாவின் அன்னையான கோகிலா சென்று கவியை தூக்கிக் கொண்டு வரவேற்பறைக்கு வந்திருந்தார். ப்ரித்விக்கு ஆனந்திடம் பேச வேண்டி இருந்தது. அவன் இங்கில்லாத ஒரு மாத காலமும் ஆனந்த் தங்களின் தொழிலை கவனித்துக் கொள்வதை பற்றி பேச வேண்டி இருந்தது. அவன் உணவுண்ணுவதை கவனித்து அங்கே வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து விட்டான் ப்ரித்வி ராஜ்.
சென்னையில் வெகு பிரபலமான ‘ராஜ் டெக்ஸ்டைல்ஸ்’ ஜவுளி கடை குழுமத்தின் முதலாளி ப்ரித்வி ராஜ். சென்னையில் மட்டுமே பதினைந்து கிளைகள் என விரிந்திருகிறது அவனுடைய சாம்ராஜ்ஜியம். தன் தந்தை ‘ரகுராஜ்’ துவங்கிய ஜவுளி தொழில் தான் என்னினும் அவரின் மறைவுக்கு பிறகான இருபது ஆண்டுகளில் அவரை விடவும் பன்மடங்கு அதிகமாய் உழைத்தது ப்ரித்வி ராஜ் தான். அவர் துவங்கிய ஒரே ஒரு கிளையை தன் இருபது வருட உழைப்பில் பதினைந்து கிளைகளாக மாற்றி இருக்கிறான்.
பதினைந்து வயதேயான ப்ரித்வி சுமந்த சுமையின் வளர்ச்சியும் அவன் அடைந்த பெயரும் புகழும் மட்டற்றது. சென்னையில் பீச் ஹவுஸ் உள்பட மூன்று பெரிய மாளிகைகள், பணம், பெயர், புகழ், வசதி வாய்ப்புகள் என அனைத்தும் இருக்கிறது அவனிடம். தன் கடமைகளிலிருந்து தவறாத நல்ல குடும்ப தலைவன். தாயின் மரியாதையும் மதிப்பும் பெற்ற மூத்த மகன், தம்பியின் முதல் வழிகாட்டி, காதலும் கனிவும் நிறைந்த காதல் கணவன், தன் செல்வங்களின் சிறந்த தந்தை என அனைத்து செல்வங்களும் நிரம்பபெற்றவனின் முகத்தில் மற்றவர்கள் கண்களுக்கு புலப்படாத வலிகளால் நிறைந்த சோகமும் இறுக்கமும் மனசோர்வும் சூழ்ந்திருந்தது என்னவோ உண்மை.
ஆனந்த் உண்டு முடித்துவிட்டு அவன் அருகில் வந்தமர்ந்த நேரம் சுகந்தியின் அலைபேசி அழைக்கவும் அதை உயிர்ப்பித்தவர், “சொல்லுமா! பெரியவன் இதோ கிளம்பி தான் இருக்கான்மா. ஒரு அஞ்சு நிமிஷத்துல கிளம்ப சொல்றேன்மா. ராஜாவும் ஆனந்த்தும் ஏதோ பேசிட்டு இருக்காங்க. சொல்றேன்மா!” என கூறிவிட்டு அந்த அழைப்பை துண்டிக்கவும் அவரை நிமிர்ந்து பார்த்தான் ப்ரித்வி. “மருமக தான். அவங்க அங்க கிளம்பிட்டாங்களாம். உனக்கு ஃபோன் பண்ணா நீ எடுக்கலையாம்…” என்று கூறியவர் சற்று தயங்கி நிற்க, “சைலெண்ட்ல போட்டு இருந்தேன்மா… அதை எடுக்க மறந்துட்டேன். நான் பேசிக்கறேன்.” என்று கூறிவிட்டு அவர் தயங்கி நிற்பதை பார்த்து, “என்ன மா? எதாவது சொல்லனுமா?” என்று வினவினான் கேள்வியாக.
“அது..அது உன்னோட பைய எல்லாம் செக் பண்ணனுமாம் பா…” என கூறுகையில் அவன் முகம் மாறுவதை பார்த்து விட்டு, “நான் இல்ல ப்பா! மருமக தான் நீ எல்லாத்தையும் சரியா எடுத்து வச்சிருக்கியானு செக் பண்ணனும்னு சொல்லுச்சு…” என்று கூறி முடிக்கவும் அங்கிருந்த அனைவரின் முகங்களிலும் இயல்பான புன்னகை விரிந்தது. ப்ரித்வி கூட தன் இதழ்களை பிரிக்காமல் லேசாக புன்னகைத்தான்.
“நான் பார்த்துக்கறேன். நீங்க விடுங்க மா!” என்று கூறிவிட்டு ஆனந்த்துடன் பேச துவங்கிய பின்னரும் கூட அவர் அப்படியே நின்றிருக்க, “ம்மா! இன்னும் என்னமா?” என சிரிப்புடனே கேட்டான் ப்ரித்வி. “இல்ல ப்பா! மருமக பொண்ணு உன்னை உடனே பேச சொல்லுச்சு. அது வரைக்கும் என்னை இந்த இடத்தை விட்டும் நகர கூடாதுனு சொல்லி இருக்கா ப்பா…” என சிறுகுழந்தை போல செய்வது அறியாது அவர் தவிக்கவும்,
“ம்ம்! அண்ணினா சும்மாவா? அந்த பயம் இருக்கணும்மா!” என ஆனந்த் அவரை கலாய்த்து சிரிக்க, “டேய்! சும்மா இருடா…” என்று அவனை அதட்டிய ப்ரித்வி அங்கிருந்து எழுந்து கொள்ள முயலவும் அவனை கைப்பிடித்து மீண்டும் அமர்த்திய ஆனந்த், “ப்ரோ! எங்க நீங்களும் தான் பேசாம இருந்து பாருங்களேன். அப்பறம் தெரியும் எங்க அண்ணி யார்னு…” என குறும்பாக அவன் காதுகளில் மெல்லிய குரலில் முணுமுணுக்க, “டேய்! அதெல்லாம் ஆகாது! உங்க அண்ணிய எப்படி சமாளிக்கணும்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்…” என தன் கண்களை அழகாக சிமிட்டியவன் அங்கிருந்து சிட்டாக பறந்துவிட்டான்.
தன்னுடைய அறைக்கு சென்றவன் அங்கு சுவற்றில் மாட்டியிருந்த அவளின் புகைப்படத்தை பார்த்து முறைத்துக் கொண்டிருக்க அவனுடைய அலைபேசி அலறி அதன் இருப்பை கூறியது. வேகமாக சென்று அதை எடுத்தவன் அவள் அழைப்பதை பார்த்துவிட்டு அந்த அழைப்பை வேண்டுமென்றே துண்டித்தான். கிட்டத்தட்ட இருபது முறைகள் அவளின் அழைப்பை துண்டித்தாலும் அவள் மீண்டும் மீண்டும் அழைக்க இம்முறை அதை ஏற்று, “என்ன டி? அதான் கட் பண்றேன்னு தெரியுதுல. எதுக்கு மறுபடியும் மறுபடியும் கூப்பிடற…” என தன் குரலில் வரவழைத்து கொண்ட கடுமையுடன் உறுமினான்.
“அதான் ஏன் கட் பண்றீங்கனு கேட்க தான் ஃபோன் பண்ணேன்!” என அசால்ட்டாக அவன் போட்ட பந்தை சிக்சர் அடித்தாள் அவன் மனைவி.
“பச்! இப்ப எதுக்கு ஃபோன் பண்ண?”
“அதான் சொல்லிட்டேனே…”
“என்ன சொன்ன?”
“நீங்க பேக் பண்ணி வச்சிருக்க பேக்ல திங்ஸ் எல்லாம் கரெக்ட்டா இருக்கானு செக் பண்ணனும்னு அத்தை கிட்ட சொன்னேன்ல… அவங்க சொல்லலையா…”
“ஹே! என்ன டி செக் பண்ணனும் நீ? நான் எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டேன் மறுபடியும் எல்லாம் என்னால எடுக்க முடியாது….”
“அதில்ல! உங்களுக்கு ஜெர்கின், மஃப்ளர், ஸ்வெட்டர், ஸ்கார்ஃப், மெடிசின் எல்லாம் ரெண்டு செட் எடுத்து வச்சிட்டிங்களானு…” என தன் வார்த்தைகளை பாதியிலேயே அவள் நிறுத்த, எப்போதும் போல அவள் அக்கறையில் மனம் குளிர்ந்து போனது அவன் காதல் உள்ளம்.
‘அக்கறை எல்லாம் கிலோ கணக்குல காட்டுவா ஆனா என் கூட வந்து இருக்க மாட்டா…’ என மனதிற்குள் முணுமுணுத்து புன்னகைத்தான்.
“அதெல்லாம் எனக்கு தெரியும். கூட இருந்து எடுத்து வைக்க முடியல ஆனா பேச்ச பாரு…” என உள்ளுக்குள் வடிந்த ஏக்கத்துடன் அவன் சட்டென்று அவளுக்கும் கேட்குமாறு சொல்லி விடவும் அந்த பக்கத்தில் ஆழ்ந்த அமைதி நிலவியது.
சிறிது நேரத்தில் அமைதியாக இருந்த தன் மனைவியை நினைத்து பதறி போனவன் தன் கோபத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்ட தவிப்பான குரலில், “போஜோ…” என எப்போதும் அவளை அழைக்கும் வழக்கத்தில் ஆழ்ந்து அவளை அழைத்து, “ஐ’ம் மிஸ்ஸிங் யூ டெரிப்லி… தெரியுமா?” என வந்தது அவனுடைய குரல். இத்தனை நேர கோப முகமூடிகள் இந்த தவிப்பை மறைக்க தான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அவனுடைய கோபத்தை தாங்க முடிந்தவளால் அவனுடைய தவிப்புகளை தான் தாங்கி கடந்து வர முடியவில்லை.
அவள் அமைதியாக இருக்கவும் அவளிடமிருந்து எந்த பதிலும் வராது என்பதை உணர்ந்து மீண்டும் அவனே தொடர்ந்து, “நீ என்னை கொஞ்சம் கூட மிஸ் பண்ணவே இல்லையா டி. நான் உன்னை ரொம்ப ரொம்பவே மிஸ் பண்றேன்… என்னால முடியல போஜோ! என் மேல என்ன கோபமா இருந்தாலும் இங்க நம்ப வீட்ல வந்து காட்டேன்… நான் தாங்கிப்பேன். பட், என்னை விட்டு தள்ளி இருந்து என்னை கஷ்டப்படுத்தா டி ப்ளீஸ்!” என்று முடித்த வார்த்தைகளை தாங்க முடியாமல் அந்த அழைப்பை துண்டித்து இருந்தாள் அவள்.
தெரியும் அவனுக்கு அவளால் அவன் மீதான கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருக்க முடியாது என்பது நன்றாகவே தெரியும். ஏழு வருட திருமண வாழ்க்கையில் அவர்களின் எந்தவொரு சண்டையும் அவர்களின் அறையை தாண்டி வெளியே சென்றதே கிடையாது. இப்போது எந்த சண்டையும் போடவே இல்லை இருவரும். ஆனால் பிரிந்து இருக்கிறார்கள். அதன் காரணம் இன்று வரையில் புரியவே இல்லை அவனுக்கு. ஆறு மாதத்திற்கு முன்னால் குழந்தைகளுடன் தன் தாயின் வீட்டிற்கு சென்றவள் தான் இன்று வரையில் இங்கு திரும்பியும் வரவில்லை அவனை அங்கு வரவும் விடவில்லை. பிள்ளைகளை கூட தினமும் பார்க்க முடியாமல் சோர்ந்து போனது அவன் உள்ளம். எந்த விஷயத்தில் எங்கு தவறினான் என்பதும் புரியவில்லை அவனுக்கு.
இங்கு வந்தால் அவளால் என்னிடம் பேசாமல் எல்லாம் இருக்க முடியாது. என் முகத்தை பார்த்து விட்டு சிரிக்காமல் இருக்க முடியாது. அதனால் தானோ என்னவோ இங்கு வரவே மறுக்கிறாள். இதோ அவர்கள் செல்லவிருக்கும் கொடைக்கானல் பயணம் தான் அவர்களை சேர்க்கும் பாலமாய் இருக்கும் என்ற அதீத நம்பிக்கையில் மகிழ்ந்திருக்கிறான் ப்ரித்வி. இந்த பயணமே நிறைய சோதனைகளை அவர்களுக்கு பரிசளிக்க போகிறது என்பது தெரியாமல். தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு தன்னுடைய அறையை விட்டு தன் லக்கேஜுடன் வெளியே வந்த ப்ரித்வியின் செவியில் விழுந்தது கோகிலாவின் அந்த அவதூறு வார்த்தைகள்.
“இதுக்கு தான் நம்ப ப்ரித்விக்கு அந்த நாட்டியகாரிய வேணாம்னு சொன்னேன். நீங்க யாராவது அப்பவே கேட்டிருந்தா இப்ப நமக்கு இந்த நிலமை வந்திருக்குமா…” என ப்ரியாவின் அன்னையான கோகிலா ஏகதிற்கும் வசனம் பாடுவதை கேட்டு கொதித்தெழுந்தது அவன் ரத்தம்.
மாடிப்படிகளில் நிதானமாய் இறங்கி வந்த ப்ரித்வியின் முகத்தை பார்த்து விட்டு பயந்தே போனார் கோகிலா, அவனுடைய தந்தை ரகுராஜின் உடன் பிறந்த தங்கை. ப்ரித்வியின் அத்தை. அத்தனை ரௌத்திரத்தை சுமந்திருந்தது அவனுடைய முகம்.
வெகு நிதானமாய் அவருக்கு அருகில் வந்து நின்றவன், “என்ன சொன்னீங்க?” என சிறுத்தையின் சீற்றத்துடன் உரும பயத்தில் ‘நா’ வறண்டு போனது அவருக்கு.
“என் பொண்டாட்டி அவ… இந்த வீட்டோட மகாராணி… அவளை என்ன வார்த்தை சொன்னீங்க?” என்று உச்சஸ்தாயில் கத்தினான்.
பின் நிறுத்தி நிதானமாக, “அத்தை! இங்க பாருங்க. வந்தோமா, சாப்ட்டோமா, உங்க பொண்ணை உங்க பேத்தியை பார்த்தோமானு இருங்க. அதை விட்டுட்டு என் பொண்டாட்டிய இன்னொரு தடவை எதாவது சொன்னிங்கனு எனக்கு தெரிய வந்தது…” என்று அங்கு வரவேற்பறையில் நின்றிருந்த மற்ற மூவரையும் ஒரு பார்வை பார்த்தவன், “பார்த்துக்கோங்க…” என சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே சென்று விட்டான்.
அவன் சென்று விட்டதை உணர்ந்து ப்ரியா அவரை கடிந்துக் கொள்ள தன் அண்ணனை போலவே அவரை முறைத்து பார்த்துக் கொண்டிருந்த ஆனந்த், “எங்க அண்ணி சொல்லி தான் உங்க பொண்ணு இந்த வீட்டுக்கு மருமக… அதையெல்லாம் ஞாபகம் வச்சு பேசுங்க. சும்மா வாய் இருக்குதுன்னு எதையும் பேசக் கூடாது…” என்று சீறிவிட்டு அவனும் வெளியே சென்று விட்டான்.
வெளியே ப்ரித்வியின் முகத்தை பார்த்துவிட்டு அவனுடைய கோபத்தை தரை இறக்கும் முயற்சியில் அவனின் அன்னையும் தம்பியும் இறங்கி இருக்க குழந்தையுடன் அங்கு வந்த ப்ரியா, “ஸாரி! அத்தான்! இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கறேன்.” என மெல்லிய குரலில் மன்னிப்பை யாசித்தாள். அவள் கைகளில் இருந்த குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு அவளை மேலே தூக்கி போட்டு பிடித்தவன், “பெரியப்பா ஊருக்கு போறேன். என்னோட கவிக்குட்டிக்கு என்ன வேணுமாம்? உனக்கு என்ன வாங்கிட்டு வரணும்டா குட்டி பொண்ணு…” என குழந்தையோடு கொஞ்சி விளையாடி சிரித்ததை பார்த்ததும் தான் மற்றவரின் முகங்களில் புன்னகையே வந்தது.
ப்ரித்வி ஊருக்கு செல்வதால் அனைவரும் வெளியில் நின்றிருக்க தயங்கி தயங்கி அவன் முன்னால் வந்து நின்ற கோகிலாவை பார்த்தவன் அமைதியான முகபாவனையில் மற்றவரிடம் விடைபெற்று தன் காரை கிளப்பினான். எப்போதும் தன் குடும்பத்துடன் வெளியே செல்லும் போது வேறு யாரும் தங்களுடன் வருவதை ப்ரித்வி விரும்ப மாட்டான். அதனால் அவனே காரை எடுத்து வந்து வண்டியை திருப்பி ரிவர்ஸ் கியர் எடுக்கவும் வேகமாக பின்னால் வந்தவன் அங்கு நின்றிருந்த கோகிலாவிற்கு வெகு அருகில் கொண்டு வந்து தான் தன் காரை நிறுத்தினான் வேண்டுமென்றே.
அவன் செய்கையில் மற்றவர்கள் சட்டென்று வாய் பொத்தி சிரிக்க கோகிலாவிற்கு ஒரு நிமிடம் உயிரே போய்விட்டது. ‘அடேய்! கொலகார பாவி. பொண்டாட்டிய திட்டினா கொலை கூட பண்ணுவான் போல இவன். இனிமே இவன் சங்கார்த்தம் நமக்கு எதுக்கு? இந்நேரம் என்னை ஹாஸ்பிட்டல்ல கொண்டு படுக்க வச்சுருப்பான்…’ என பயத்தில் அவர் தனக்குள்ளாக பேசியவாறு ப்ரியாவின் அருகில் சென்று நின்றுக் கொண்டு கவிவர்ணாவை ப்ரியாவிடமிருந்து வாங்கிக் கொள்ள, “என்னமா எங்க வீட்டு வாரிச கையில வச்சிருந்தா தான் உயிர் தப்பும்னு இப்படி பண்றியா?” என ப்ரியாவும் தன் பங்கிற்கு அவரை வாரிவிட்டு அடக்கமாட்டாமல் சிரிக்க,
தன் காரின் முன்பக்க கண்ணாடியை இறக்கிய ப்ரித்வி, “அத்தை! பாத்து அத்தை! இந்நேரம் என்னை இல்ல நீங்க ஜெயிலுக்கு அனுப்பி இருப்பிங்க? ரிவர்ஸ்ல வரேன்னு தெரியுதுல கொஞ்சம் தள்ளி நிற்க மாட்டீங்களா?” என தன் அத்தையின் முகத்தை ரியர் வீயூ கண்ணாடியில் பார்த்துக்கொண்டு வேண்டுமென்றே வினவியவன், “ம்மா! அத்தைய பத்திரமா பார்த்துக்கோங்க ம்மா!” என்று கத்திவிட்டு புன்னகையுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.
மனம் முழுவதும் தன்னவளை வெகு நாட்களுக்கு பிறகு பார்க்க போகும் உற்சாகத்தில் எகிறி குதிக்க புன்னகையுடன் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனின் மனம் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் அவளை முதல் முறையாக அவன் சந்தித்த நிகழ்விற்கு சென்று நின்றது.