அன்று தான் அந்த வருடத்திற்கான இறுதி தேர்வை முடித்தாள்.
தேர்வு அறையை விட்டு வெளியில் வந்தவள், சேலம் பேருந்து நிலையம் வரை ஹேமாவுடன் வண்டியில் வந்துவிட்டாள்.
“உன் மாமாகிட்ட சொல்லியிருந்தால் அவரே வந்து கூட்டிபோயிருப்பார். இப்போ எதுக்கு நீ பஸ்ஸில் தனியா கிளம்புற?”
“அவர்கிட்ட நார்மலா பேசியே ரொம்ப நாளாகுது ஹேமா. அதுவுமில்லாமல் ஏற்கனவே மாமா இந்த விழாவால் ரொம்ப அலையுறார். தூங்கவே நேரமில்லாம ஓடுறான்னு ரெண்டு நாளுக்கு முன் பாட்டி சொன்னாங்க. இப்பவும் அவருக்கு அங்கு வேலை அதிகம். அதான் நானும் ஏன் அவருக்கு அலைச்சலைக் கூட்டணும்” என்றவள் பேருந்தில் ஏறினாள்.
“மறக்காமல் வந்திடு ஹேமா. எதிர்பார்த்திட்டு இருப்பேன்” என்று ஏற்கனவே ஹேமாவிற்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தபோதும் மீண்டும் வலியுறுத்தினாள்.
“வந்துடுறேன். நீ பார்த்து போடி. போயிட்டு கால் பண்ணு. பஸ் ஸ்டாப்பிலிருந்து எப்படி எஸ்டேட் வரை இந்த வெயிலில் நடந்து போவ?”
பேருந்து சன்னல் வழியே உரையாடினர்.
“அதை நான் பார்த்துப்பேன். மலை மேல் அவ்வளவா வெயில் தெரியாது. நீ கிளம்பு” என்று வெண்ணிலா சொல்ல பேருந்தும் நகர ஆரம்பித்தது. ஹேமாவும் விடைபெற்றாள்.
நேற்று இரவு எட்டு மணிக்கு மேல், வெண்ணிலா கூடத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க…
இந்நேரத்தில் கதவினை தட்டியோ, அழைப்பு மணியை அழுத்தியோ தனியாக இருப்பவளை திகிலடையச் செய்ய வேண்டாமென கதவை திறக்கும்படி தகவல் அனுப்பினான் குமரன். எப்படியும் தான் கால் செய்தால் எடுக்கமாட்டாளென்று நினைத்து.
வெண்ணிலா படிப்பதில் முனைப்பாக இருந்ததால் அலைப்பேசியில் தகவல் வந்ததற்கான சத்தம் கேட்டும் என்னவென்று பார்க்கவில்லை.
பத்து நிமிடங்கள் காத்திருந்தவன், வீட்டின் பின்பக்கமாக மாடியேறி பார்வையிட, வெண்ணிலாவின் அறைக்கு முன்னிருக்கும் மாடி கதவு திறந்திருந்தது. படியின் கதவு தாழிடப்படாது இருக்க… அதனை சாற்றி உட்பக்கம் தாழிட்டு வீட்டிற்குள்ளே கீழ் தளம் சென்றான்.
கூடத்தின் நடுவில் தரையில் அமர்ந்து புத்தகத்திற்குள் தலையை புதைந்திருந்தாள்.
“இதுதான் நீ தனியா இருக்கும் லட்சணமா?” அத்தனை கோபமாக குமரனின் குரல் அருகில் ஒலிக்க உடல் தூக்கிப்போட தலையை உயர்த்தி அவனை பார்த்தாள்.
“டோர் லாக் பண்ணியிருக்கே, நீங்க எப்படி?” என்றவள் முன் கதவை திரும்பி உள்பக்கம் பூட்டியிருப்பதை உறுதி செய்தாள்.
“மாடி கதவு திறந்திருக்கு. கவனமா இருக்க வேண்டாமா? இப்படித்தான் அலட்சியமா இருப்பாங்களா?” என்று சிடுசிடுத்தான். அது அவளின் பாதுகாப்பை எண்ணி வந்த கோபம்.
“மறந்துட்டேன் போல” என்று அசைட்டையாக பதில் வழங்கியவள் புத்தகத்தில் பார்வையை பதித்தாள்.
“இப்போ நான் வந்த மாதிரி வேற யாராவது வந்திருந்தால்?” கூர்மையாக வினவினான்.
“அதான் நீங்க வந்துட்டிங்களே?”
அவளிடம் வாதாட முடியாதென நினைத்தவன் இருக்கையில் சென்று அமர்ந்துவிட்டான்.
வெண்ணிலாவிற்கு அவன் வருவானென்று தெரியும். அவளை தனித்திருக்க அவன் விடமாட்டான். நிச்சயம் தன்னை வந்து அழைத்து செல்வான் இல்லையென்றால் உடன் தங்குவான் என்று தான் இரவில் தனித்திருக்கும் பயமின்றி இருந்தாள்.
குமரன் வந்ததும் மனதில் தன் நம்பிக்கை பொய்க்கவில்லையென உவகை கொண்டாலும், வெளியில் அவன் மீது கோபம் இருப்பது போலவே காட்டிக்கொண்டாள்.
சில நிமிடங்கள் அங்கு பேரமைதி. மின்விசிறி காற்றில் புத்தகத்தின் காகிதங்கள் சலசலக்கும் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.
“சாப்பிட்டியா?”
அவனை நிமிர்ந்து பார்த்து இல்லையென தலையை ஆட்டினாள்.
“வாய் திறந்து பேச மாட்டிங்களோ?” என்றவன் கையோடு வாங்கிவந்திருந்த உணவு பையை அவள் முன் நீட்டினான்.
காந்தள் மூலம் வெண்ணிலா இன்று வரவில்லை என்பதை தெரிந்து கொண்டவன், “காப்பி கொட்டை ஆலையில் இரவு வேறு மாநிலத்துக்கு சரக்கு ஏற்றும் வேலையிருக்கு. இரவு வர முடியாமல் போனால் அத்தை வீட்டுக்கு போய்க்கொள்கிறேன். வெண்ணிலா தனியாத்தானே இருக்காள்” என்று மாலைபோல் கிளம்பி வந்திருந்தவன், அங்கு சரக்குகள் ஓரளவு ஏற்றப்பட்டதும் வெண்ணிலா தனியாக இருப்பாளென்று வீட்டிற்கு வந்திருந்தான். எப்படியும் சமைத்திருக்க மாட்டாளென்று ஹோட்டலில் அவன் உண்டு அவளுக்கும் வாங்கி வந்திருந்தான்.
“ஏன் சமைக்கல?”
“நீங்க வருவீங்கன்னு தெரியும்” என்றவள் சாப்பிட்டுவிட்டு படிக்க அமர்ந்துவிட்டாள்.
“நீங்க ரூமில் படுங்க. நான் படுக்க டைம் ஆகும்” என்றாள்.
“ஹோ…” என்றவன் அடுக்களைக்குள் சென்று காப்பி தயாரித்து வந்து அவள் முன்னே வைத்தான். அடுத்து அறைக்குள் சென்று போர்வை மற்றும் தலையணையோடு வந்தவன், கூடத்திலே அவளுக்கு சற்று தள்ளி போர்வையை விரித்து படுத்துவிட்டான்.
“சுவீட் மாமா.” அவளுக்காக அவன் செய்யும் சிறு செயலிலும் அவனது காதலை உணர்ந்தவள் சொல்லிக்கொண்டாள். அவளின் முணு முணுப்பு அவனுக்கும் கேட்டிட, அக மகிழ்வோடு கண்களை மூடிக்கொண்டாள்.
‘இப்படியெல்லாம் நீங்க பண்றதுக்கு பேர் தான் காதலுன்னு சொன்னால், இல்லைன்னு வாதாடுவார்.’ சலிப்பாக நினைத்தவள் படிப்பதில் கவனமானாள்.
படித்து முடித்து அவள் சோம்பல் முறித்தபோது நேரம் இரண்டை கடந்து ஓடிக்கொண்டிருந்தது.
“இவ்வளவு நேரமாகிருச்சா?” என்றவள், புத்தகங்களை எடுத்து வைத்துவிட்டு, போர்வையை மட்டும் எடுத்து வந்து போர்த்திக்கொண்டு நீள்விருக்கையில் படுத்த நொடி…
“எழுந்திரு அத்தை ரூமில் போய் படு” என்றபடி எழுந்தவன் மற்றொரு அறைக்குள் சென்று மறைந்தான்.
“தூங்காமலா படுத்திருந்தாங்க?” என்றவள் உறங்கி எழுந்த போது குமரன் தயாராகியிருந்தான்.
“நாளை விழா. எனக்கு வேலை நிறைய இருக்கு. மலையில் தான் இருப்பேன். ஒழுங்கா எக்ஸாம் முடிச்சிட்டு கால் பண்ணு. பிக்கப் பண்ணிக்கிறேன். இல்லை குணாவை அனுப்புறேன்” என்றவன், “இட்லி, சட்னி செய்திருக்கேன். சாப்பிட்டு கிளம்பு” என்று சென்றுவிட்டான்.
குமரன் மலையில் இருப்பேனென்று காலையிலேயே சொல்லியதால், தனக்காக அவன் இங்கு வரவேண்டும். அவன் வந்து தன்னை அழைத்துச் செல்வதற்கு, தானே போய்விடலாமென கிளம்பிவிட்டவளுக்கு… இரவின் இதம் மிச்சமாய் இப்போதும் நெஞ்சோடு கலந்திருந்தது.
இதே வெண்ணிலா இடத்தில் மதியிருந்திருந்தால் நிச்சயம் குமரன் வந்திருக்கமாட்டான். இரவு உடன் தங்கியிருக்கமாட்டான்.
‘தன்மீதான அக்கறை அன்பு எல்லாம் அவனிடத்தில் எப்போதும் தனிதான்’ என நினைத்தவள் தானிறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கி இரண்டடி வைத்திருப்பாள், எதிரே குணா இருசக்கர வாகனத்தில் சாய்ந்து நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன பாஸ் சைட் அடிக்க வந்தியா?”
அருகில் வந்து அவ்வாறு கேட்ட வெண்ணிலாவை முடிந்த மட்டும் முறைத்துப் பார்த்தான்.
மதி என்ற பெயரை கேட்டதும் குணாவின் இதழில் தானாக புன்னகை குடிகொண்டது. அவனின் திடீர் புன்னகையை நோட்டமிட்ட வெண்ணிலா “இதுதான் காதல் போலும்” எனக்கூறி அவனை கிண்டல் செய்தாள்.
அவளது கிண்டலெல்லாம் அவனின் கருத்தில் பதியவில்லை. அவனது மனம் எப்போதோ மதியிடம் சென்றுவிட்டது.
“இப்படி கனவு கண்டுகிட்டு இருக்கிறதை விட பழனி பெரியப்பாவிடம் பேசினால், ரெண்டு பேரும் சேர்ந்து டூயட் ஆடலாமில்ல” என்றாள்.
“மாமா சொல்லி, என்னை கூட்டிட்டு போகத்தேன் பஸ் ஸ்டாப் வந்தியா?”
அப்போதுதான் குணா எப்படி சரியாக தன்னை அழைக்க வந்தானென்றே யோசித்தாள்.
“ஆமாம், அதென்ன குமரனை மட்டும் மரியாதையா மாமா சொல்ற… என்னை பெயர் சொல்லி கூப்பிடுற?”
‘நான் இந்நேரம் வரேன்னு யாருக்கிட்டயும் சொல்லலையே அப்புறம் எப்பிடி மாமா நான் இந்த பஸ்லே தான் வரேன்னு குணாவை அனுப்பி வச்சிருக்காங்க” மனதோடு கேட்டுக்கொண்டவளாக
“அதெல்லாம் மரியாதை தானா வரணும், இப்போ நீ சீக்கிரம் வீட்டுக்கு போ… ரெண்டு கிலோமீட்டர் தூரத்தை இன்னும் போயிட்டு இருக்க” என்று குணாவை விரட்டினாள்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் குணா தங்களது வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தினான்.
வண்டியிலிருந்து இறங்கிய வெண்ணிலா,
“வாவ்… செமடா!” என்று சிலாகித்தாள்.
மலர்களால் நிரம்பியிருந்த தோட்டம் வீட்டை அழகாகக் காட்டிட, அழகிய வீடு மேலும் அழகுறும் விதமாக வண்ண பூக்களாலும், தோரணங்களாலும் மின்மினி விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு… உறவினர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
“நாளைக்கு விழா. அப்போ இன்றாவது போட வேண்டாமா?” என்ற குணா “நைட் பாரு எப்படி ஜொலிக்குதுன்னு” என்றபடி அவளுடன் உள்ளே சென்றான்.
எங்கும் கலகலப்பான பேச்சுக்குரல்கள் வீட்டின் சுவற்றில் பட்டு எதிரொலித்தது.
விடிந்தால் குடும்பத்தின் மூத்த தம்பதியராகிய வீரபாண்டியன், கமலம் சதாபிஷேகம்.
வண்டியிலிருந்து இறங்கியதுமே மதி ஓடிவந்து வெண்ணிலாவை கட்டியணைக்க அதனை ஏக்கத்துடன் பார்த்துச் சென்றான் குணா. மதியைத் தொடர்ந்து தீக்ஷா, வருண், யாழினி அவளை வரவேற்று அணைத்து விடுவித்தனர்.
“என்ன வெண்ணிலாக்கா ரெண்டு நாளைக்கு முன்னவே வருவேன்னு பார்த்தா, இப்போ வர?” கேட்ட வருணிற்கு கல்லூரியில் தேர்வு இருந்ததாக பதில் கூறினாள் வெண்ணிலா.
“எங்களுக்கும் தான் எக்ஸாம் நடக்குது.”
“எனக்கு இன்றும் இருந்துச்சுடா.”
இரண்டு நாட்களுக்கு முன்பே வீட்டின் மொத்த வாரிசுகளும் ஒன்று கூடியிருக்க வெண்ணிலா இல்லாத குறை தீர்ந்ததால் அனைவரும் கத்தி ரகளை செய்தனர்.
“நாளைக்கு விழா முடிந்ததும் கிளம்பனும் நிலாக்கா. நாளை மறுநாள் எனக்கு எக்ஸாம். உனக்கு முடிஞ்சிடுச்சுல?” உடன் இருக்க முடியாத வருத்தம் வருணிடம்.
“விடுடா லீவுக்கு வந்துடுவோம்.” மதி சொல்ல மண்டயை உருட்டினான்.
“உன் அப்பா வந்துட்டாரா தீக்ஷி?”
வெண்ணிலா எவ்வளவு மெல்ல கேட்டிட முடியுமோ அவ்வளவு மெதுவாகக் கேட்டிருந்தாள்.
“ம்ம்” என்று தீக்ஷி சொல்ல,
“காலையில் தான் வந்தார். வந்ததிலிருந்து சிரிச்சாலே முறைச்சிட்டு போறார்” என்று யாழினி சுருங்கிய முகத்தோடு கூறினாள்.
செல்வி, சுலோ, குணவதி, காந்தளுடன் சேர்ந்து பலகாரம் செய்வதில் பொழுதை கழிக்க… மதியும், தீக்ஷியும் தங்களுக்கும் தங்களின் அன்னைகளுக்கும் ஆடை மற்றும் நகைகளை தேர்வு செய்வதற்காக வெண்ணிலாவை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.
வீட்டின் ஆண் பேர வாரிசுகளான குமரன், குணா, வருண் உறவினர்களை அழைப்பது, வருவோருக்கான விருந்து மற்றும் சதாபிஷேகத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதில் மும்மரமாக இருந்தனர். இதில் குமரன் மட்டும் அதீத பொறுப்பில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தான்.
பெரிய ஆண்கள் அனைவரும் ஏதேனும் ஒரு வேலை செய்தபடி இருக்க, ராஜேந்திரன் மட்டும் இருக்கையில் தோரணையாக அமர்ந்துகொண்டு நடப்பதை முறைத்தபடி பார்த்திருந்தார்.
ஒருவழியாக அனைத்தும் தெரிவு செய்த பின்னரே வெண்ணிலா தனது பியூட்டியை(பாட்டியை) காண்பதற்கு சென்றாள். ஆனால், அவரோ வெண்ணிலாவை கண்டதும் கோபமாக இருப்பதைப்போல் தன்னைக் காட்டிக்கொண்டார். அவரின் பொய் கோபத்தைக் கண்டுகொண்ட வீரபாண்டி வாய்க்குள் சிரித்துக்கொண்டார். தாத்தாவை அணைத்து அவரின் கன்னத்தில் வெண்ணிலா முத்தம் பதிக்க,
“நாம் செய்தால் என்ன? அவன் செய்தால் என்ன மச்சான்? வீட்டுக்கு மூத்த வாரிசு, அவன் செய்யமால் யார் செய்றது?”
கேட்ட பழனியை ஆச்சரியமாக ஏறிட்டார் ராஜேந்திரன்.
“எப்போல இருந்து அவன் மேல இவ்வளவு பாசம்?” நக்கலாகத்தான் கேட்டார்.
“நல்லதெல்லாம் தாமதமாகத்தானே கண்ணுக்கு தெரியுது.” பட்ட வேதனையின் சாயல் பழனியின் முகத்தில்.
பழனி நடந்ததை எல்லாம் ராஜேந்திரனிடம் கூறிட, குமரனை உயர்வாக மனதில் நினைத்தபோதும் அதனை ராஜேந்திரன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
“எப்படியோ உங்க எல்லாருக்கும் அவன் தான் ரொம்ப பிடிச்சவன்னு தெரியுது” என்றவர் வேறொரு உறவினரிடம் பேசுவதைப்போல் நகர்ந்து விட்டார்.
ஹேமா வெண்ணிலாவிற்கு அழைத்து நாளை வரமுடியாது என்று சொல்ல… காரணம் ஏற்கும்படியாக இருந்ததால் வெண்ணிலா எதுவும் சொல்லவில்லை. அப்போதுதான் மதியம் தனக்கு அழைத்து வெண்ணிலாவின் வருகையைப்பற்றி குமரன் தெரிந்து கொண்டதை ஹேமா சொல்லிட, சரியான நேரத்திற்கு பேருந்து நிறுத்துமிடம் குணா எப்படி வந்தானென்று இப்போது தெரிந்தது.
‘எப்பவும் என்னை வாட்ச் பண்ணிட்டே இருப்பாரு போல.’
வெண்ணிலா வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் பார்வையால் அலசிக் கொண்டிருந்தாள்.
அவளின் பின்னால் வந்த குணா, தலையில் கொட்டியபடி… “யாரை தேடுற?” என்று வினவினான்.
“கதிர் மாமா எங்கடா? நான் வந்ததிலிருந்து பார்க்கவே இல்லையே” என்றாள்.
“உங்களுக்குள்ளிருந்த சண்டை சரியாகிடுச்சா?” மாடியேறும் படியில் அமர்ந்தவனாக வினவினான்.
“நாங்க எப்போடா சண்டைன்னு உன்கிட்ட சொன்னோம்?”
“சொல்லித்தான் தெரியணுமா என்ன?” என்றவன், “நீ வரும்போது இங்க தான் இருந்தான். நீதான் அவனை கவனிக்கல. இப்போ தான் பத்து நிமிடத்திற்கு முன் எதோ கால் வந்துச்சுன்னு மலைக்கு கீழ போயிருக்கான்” என்று அவளுக்கு வேண்டிய தகவலைக் கூறினான்.
“இந்நேரத்தில் எதுக்குடா?”
குணா தோள்களைக் குலுக்கினான்.
குமரனைத் தவிர்த்து சிறியவர்களின் அரட்டை கச்சேரி ஆரம்பமானது.
தீக்ஷி தான் நிறைய பேசினாள். அவள் போன முறை வராததால் அவளுக்கு பகிர்ந்துகொள்ள அதிகம் இருந்தது.
யாழினி பள்ளி இறுதி வருடத் தேர்வுகள் முடித்திருந்தால், அதைப்பற்றி கூறிட… மதியும், வருணும் தங்களுக்கு இன்னும் தேர்வுகள் இருப்பதாக, அப்படியே அவரவர் படிப்பை பற்றி பேச்சுக்கள் நகர்ந்து சினிமா, அரசியல், விளையாட்டு என்று எல்லாவற்றையும் தொட்டு நீண்டது.
“அரட்டை அடித்தது போதும். எல்லாரும் சாப்பிட்டு போய் படுங்க பசங்களா. நாளைக்கு விடியலில் தயாராகி இருக்கணும். முழுக்க உட்கார நேரமிருக்காது” என்றார் சுலோ.
அன்னைமார்கள் உணவு பரிமாற பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் உணவு கூடத்தில் தரையில் ஒன்றாக அமர்ந்தனர்.
“குமரன் எங்க போயிட்டான்? அவன் இருந்திருந்தால் குடும்பம் முழுமையடைஞ்சிருக்கும்.” வீரபாண்டி.
“அருளை விட்டுட்டீங்களே! ஒரு தரம் வந்து முகத்தை காட்டிட்டு போயிட்டான்னாகூட தேவலாம்” என்று புலம்பினார் கமலம்.
“காட்டிடலாம்” என்ற குரலில் அனைவரது கண்ணும் ஒலித்த திசையில் நிலைக்க, குமரன் தனக்கு பின்னாலிருந்த அஜய்’யை இழுத்து இணையாக நிறுத்தினான்.
“அருளு…” காந்தள் சிறு பிள்ளையென மகனின் அருகில் ஓடி கன்னம் வழித்தார்.
“அம்மா…” கரகரப்பாய் அவனது குரல்.
எல்லோரும் அவனை சூழ்ந்து கொண்டனர்.
“இப்போதான் உனக்கு வர தோணுச்சா?” கமலம் பனித்த கண்களை சேலை தலைப்பில் ஒற்றினார்.
“ரொம்ப சந்தோஷம் கண்ணா” என்று வீரபாண்டி அஜய்யின் தலை வருட அவரின் காலில் விழுந்து வணங்கினான் அஜய்.
காந்தளுக்கு அவனின் அச்செயல் திருப்தியாக இருந்தது. எங்கு தனிமையில் தடம் மாறியிருப்பானோ என்ற பயத்தினை தன்னையறியாமல் போக்கியிருந்தான்.
ஆளாளுக்கு அஜய்யிடம் நான் நீயென்று போட்டிபோட்டு பேசி அவனை அன்பில் திக்குமுக்காட வைத்தனர்.
‘இத்தனை நாள் இந்த சந்தோஷத்தையெல்லாம் தொலைத்துவிட்டோமே!’ என்று நினைத்தவன் அதனை ஈடுகட்டும் விதமாக தன்னுடைய கூட்டிலிருந்து வெளிவந்து அவர்களுக்கு இணையாக தானும் கலகலத்து உரையாடினான்.
குணாவும், வெண்ணிலாவும் சற்று தள்ளி நின்றபடி அனைத்தையும் பார்த்திருந்தனர்.
“நீ பேசல?”
“எங்க பேசுறது. இந்த படைகள் நகர்ந்தால் தான் அவனை முழுசா பாக்கவே முடியும் போல” என்ற குணாவின் முகம் யோசனையில் இருந்தது.
“என்ன யோசிக்கிற?”
“இவனுங்க ரெண்டு பேரும் எப்போ ஒண்ணு சேர்ந்தானுங்க? ஆச்சரியமா இருக்கு.” அஜய், குமரன் இருவரின் இணைவு பற்றி கேட்டான்.
“அதைவிட பெரிய சர்ப்ரைஸ் எல்லாருக்கும் நான் கொடுக்கிறேன்” என்றவளை என்ன என்பதைப்போல் பார்த்தான் குணா.
“அப்புறம் பேசலாம்… எல்லாரும் உட்காருங்க சாப்பிடலாம்.” செல்வி அனைவரையும் அழைக்க அஜய்யை சுற்றியிருந்த கூட்டம் விலகியது.
அஜய் வந்தது முதல் அவனின் பார்வை அடிக்கடி தன் தங்கையைத்தான் தொட்டு தொட்டு மீண்டது.
இப்போது அஜய் ஒரு எதிர்பார்ப்போடு வெண்ணிலாவை நன்றாக பார்க்க… அத்தனை நேரம் ஒதுங்கியிருந்தவள் வேகமாக அவனருகில் செல்ல தங்கையை தோளோடு சேர்த்து அணைத்திருந்தான் அஜய்.
“இதெப்போடா நடந்தது?” வருண் வாய்விட்டு கேட்டிட, குமரன் இதழ் விரித்தான்.
“எப்போ நடந்தால் என்ன? நல்லது தானே நடந்திருக்கு” என்று குமரன் சொல்ல ஆமோதிப்பாக அனைவரும் அமர்ந்தனர்.
“சாரிடா…”
நேரில் மன்னிப்பு கேட்ட அஜய்’யின் இடையில் கை முட்டியால் இடித்தவள், “அதெல்லாம் வேண்டாம்” என்றாள்.
குமரன் இதனை பார்க்கத்தானே ஆசைப்பட்டான். மனம் நெகிழ்ந்து நின்றான்.
வீரபாண்டி தாத்தாவின் ஆசையை இன்றைய நாளில் குமரன் நிறைவேற்றியிருந்தான். அவரது வாரிசுகளை ஒன்றாக இணைத்து ஒரே வீட்டில் இருக்க வைத்துவிட்டான். அனைவரின் கண்களில் ஒரே அளவிலான மகிழ்ச்சியை வரவழைத்துவிட்டான். இதைவிட வேறென்ன வேண்டுமாம்?
பார்க்காதவர்கள், பேசாதவர்கள், விலகி இருந்தவர்கள், தன்னிலைவிட்டு இறங்கி வராதவர்கள் என வெவ்வேறு படிநிலைகளில் இருந்த அனைவரும் இன்று ஒன்றாக ஒரே கூட்டிற்குள்.