திருமொழியின் பார்வை ஆராய்ச்சியோடு கனிவுடன் அவளை வருட டீயை குடித்து முடித்தாள்.
“ஓகே, நீ போய் ரெஸ்ட் எடு. இல்லைன்னா படி. நான் வெளில போறேன். லன்ச் டைம் வருவேன்…” என்று சொல்ல,
“கெஸ்ட் வரதா அத்தை சொன்னாங்களே?…”
“ஆமா, அதுக்குள்ள வந்திருவேன். நீ பார்த்துக்கோ…” என்றவன் அவளின் கன்னம் தட்டிவிட்டு,
“கொஞ்ச நேரம் தூங்கு. ஈவ்னிங் படி. ரிவைஸ் தானே? அப்ப பண்ணிக்கலாம்…” என சொல்லிவிட்டு கிளம்பி சென்றான் திருமொழி.
மீண்டும் இளங்கோவனுடன் திருமொழியும் வந்துவிட விருந்தினர்கள் வந்து சேர்ந்தனர்.
அவர்களுடன் கல்லூரிக்கும் கிளம்பிவிட்டான் திருமொழி. வேலை முடிந்து இரவு உணவு நேரம் வர நிதர்ஷனா புத்தகத்தை வைத்துக்கொண்டு அவர்களறையில் இருந்தாள்.
திருமொழி வரவும் எழுந்துகொள்ள பார்க்க கையமர்த்தி அவளை அமரும்படி சொல்லிவிட்டு உடைமாற்ற சென்றுவிட்டான்.
“சாப்பிட்டாச்சா தர்ஷி?…” என்றதும்,
“சாப்பாடு எடுத்து வைக்கவா? நான் சாப்பிட்டேன் அத்தையோட. ஸ்வாதி அண்ணியும் ஊருக்கு கிளம்பினாங்க. அதான் சேர்ந்து சாப்பிட்டோம்…”
“ஓகே, நீ இரு. நான் போய் சாப்பிட்டு வரேன்…” என சொல்லிவிட்டு மீண்டும் அவன் அறைக்கு வர நிதர்ஷனா கவனமெல்லாம் புத்தகத்தில் தான்.
அவளை தொந்தரவு செய்துவிடாமல் சிறிதுநேரம் இருந்தவன் நேரத்தை பார்க்க பத்தை தாண்ட ஆரம்பித்தது.
முந்தையநாளின் தாக்கம் மனைவியை நெருங்க சொல்ல தலையை குலுக்கிக்கொண்டு எழுந்துவிட்டான் திருமொழி.
“தர்ஷி, ஒரு கால்க்கு வெய்ட்டிங். பேசிட்டு வரேன். நீ படிச்சுட்டா தூங்கு. என்னை தேடவேண்டாம்….” என சொல்லிவிட்டு வேகமாய் வெளியேற தலையசைத்தவள் அவன் செல்வதையே பார்த்திருந்தாள்.
“என்னாச்சு? இப்படி போறாங்க?…” என சொல்லிக்கொண்டவள் மீண்டும் படிக்க ஆரம்பிக்க ம்ஹூம் சுத்தமாய் முடியவில்லை.
திருமொழி வரட்டும் என வெறுமனே பக்கங்களை புரட்டியபடி இருந்தவள் நேரம் பதினொன்றாக அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் அழைப்பு விடுத்தாள் கணவனுக்கு.
“இன்னும் தூங்கலையா நீ?…” என்றான் எடுத்ததுமே.
“ம்ஹூம், இல்லை. நீங்க இன்னும் வரலையே? எப்போ வருவீங்க?…” என கேட்டுவிட திருமொழி இதழ்கள் புன்னகையில் நெளிந்தது.
“மொட்டை மாடில இருக்கேன். நீ…” என்று முடிக்கும் முன் அழைப்பை துண்டித்திருந்தாள் நிதர்ஷனா.
அதற்குள் திருமொழி ஏற்கனவே தான் அழைப்பு விடுத்திருந்த நண்பன் ஐந்துநிமிடத்தில் அழைப்பதாக சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.
போனை கைப்பிடி சுவற்றில் வைத்துவிட்டு இங்குமங்குமாய் அவன் நடை பயில கொலுசின் சப்தம் இன்னிசையாய்.
“நிஜமா?…” என கேட்டுக்கொண்டிருக்க போனும் வந்துவிட்டது.
“ஜஸ்ட் டூ, த்ரீ மினிட்ஸ்…” என்று கண் சிமிட்டியவன் அழைப்பை ஏற்றதும் தலையசைப்புடன் அவ்விடத்தை சுற்றி பார்த்தாள் நிதர்ஷனா.
இரவில் அவள் வருவது இதுதான் முதல்முறை. பகலில் தினமும் வந்துவிடுபவள் இன்று திருமொழி இருக்க இரவில் வந்திருந்தாள்.
தன்னை பார்த்துக்கொண்டே பேசியவனின் ஆங்கில புலமையில் ஆவென நிதர்ஷனா பார்த்ததோடு ‘பாரினாம்’ என நினைத்து சிரித்துக்கொண்டாள்.
பேசியபடியே அவன் அருகில் வர இவள் விலகி நடக்க என இருவரும் அந்த விசாலமான மாடியை பாதங்களால் அளந்துகொண்டிருக்க முகமெல்லாம் வெட்க புன்னகை.
காத்திருப்பின் நேரங்கள் கனிந்து வந்து நின்றது கண் முன்னே. ‘இன்னும் ஒருநிமிஷம்’ என கெஞ்சலாய் முகபாவனையுடன் விரல் காண்பித்து அவன் சொல்ல ‘பார்ரா’ என்றது அவள் மனது.
லயம் மாறாத ஸ்வரங்களுக்கு நடுவே அபஸ்வரமாய் அவளின் உள்ளுணர்வு எதையோ உணர்த்த கணவனை மட்டுமே கண்டும் காணாமல் கவனித்திருந்தவள் பார்வை எதையோ துழாவியது.
எதையோ என்ன? மிருதுளாவின் அந்த வீட்டை தான் வெறித்தது. நிச்சயம் அங்கிருந்து அவள் கவனிக்கிறாள் என உணர்ந்த நிதர்ஷனாவின் முகம் இறுகியது.
ஆனால் அவ்வீட்டின் இருளில் எங்கே நிற்கிறாள் என நிச்சயம் தேடமுடியவில்லை. பார்வையின் தாக்கத்தை மட்டுமே உணர முடிந்தது.
திருமொழியை திரும்பி பார்க்கும் முன் அவன் நிதர்ஷனாவை பின்னிருந்து அணைத்திருந்தான்.
“ஹ்ம்ம் அப்பறம், படிச்சாச்சு. தூக்கம் வரலை. வேற?…” என மென்மையான அணைப்புடன் அவன் கேட்க,
“கீழ போவோமே…” என்றாள் நிதர்ஷனா.
“ஏன் என்னாச்சு? இங்க என்ன?…” என்றவன் தாங்கள் இருந்த இடத்தின் விளக்கை அமர்த்தினாலும் நிலா வெளிச்சம் அவர்கள் மேல் நன்றாகவே ஒளிர்ந்தது.
“காலையில என் பக்கத்துல உட்கார கூட அவ்வளோ தயக்கம்? ஹ்ம்ம்…” என்று அவளின் முகத்தை கையிலேந்த நிதர்ஷனாவிற்கு அவர்களை மிருதுளா கண்காணிப்பதே அவஸ்தையை கொடுத்தது.
“யாரோ பார்க்கிற மாதிரி இருக்கு…” என்றவள் பார்வை தன்னை போல மிருதுளா வீட்டை அடைய திருமொழியும் அதில் அதிர்ந்தான்.
“இருக்காது தர்ஷி. இருந்தாலும் இங்கிதம் தெரியாதவங்க பார்வைக்கு மதிப்பு குடுக்கக்கூடாது. இது நம்முடைய இடம். நமக்கான நேரம்…” என அழுத்தமாய் அவன் சொல்ல,
“இல்ல…” என்றவள் அவனின் கைகளை எடுத்து விலக திருமொழியும் தன் சில நொடிகளில் நிதானமானான்.
இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டவன் என்ன செய்வதென்றும் சடுதியில் திட்டமிட்டுவிட்டான்.
தான் விலகியதும் திருமொழியும் தள்ளி நிற்க கோபப்பட்டுவிட்டானோ என தயங்கி அவனை பார்த்தாள் நிதர்ஷனா.
“சரி நீ போ…” என்றான் திருமொழி மிக சாதாரணமாக.
“இல்ல நீங்க வரவும்…”
“ப்ச், புரிஞ்சுக்கோ நிதர்ஷனா. நான் வரேன். நீ போ…” என்று மீண்டும் சொல்ல,
“கோவமாகிட்டீங்க….” என்றாள் முகம் கசங்க.
“சத்தியமா இப்ப தான் கோவம் வந்துரும். போடி…” என்றவன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவர அசையாமல் நின்றாள் அவள்.
“இருந்தா ரொம்ப கஷ்டப்படுவ. நீ போய் தூங்கு. நாளைக்கு…”
“ஆமா, எக்ஸாம். எனக்கும் தெரியும். ஆனா விட்டுட்டு அதெல்லாம் போகமாட்டேன்…” என்று சொல்லியவள் மிருதுளாவின் வீட்டை திரும்பி பார்த்துவிட்டு வேகமாய் வந்து திருமொழியின் கையை பற்றியவள் அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“போகமாட்டேன்..” என சொல்லியவள் குரலில் எத்தனை பிடிவாதமும், உரிமையும்.
“நிஜமா?…” என்றவன் கூட உல்லாச மனநிலைக்கு திரும்பிவிட்டான்.
“நிஜமா…”
“ஓகே, லெஸ்ட் மூவ்…” என்றவன் மீண்டும் தன் கை வளைவிற்குள் அவளை கொண்டுவர முயல,
“அந்த நிஜம் இல்லை…” என விலகி பின்வாங்கினாள் நிதர்ஷனா.
“அது எதுன்னு தெரிஞ்சுக்கிட்டா போச்சு…” என்றவன் அவளை துரத்த,
“என்ன பன்றீங்க?…” என பின்னால் செல்ல,
“நிஜத்தை தெரிஞ்சுக்கனுமே?…” என முன்னால் வந்தான் திருமொழி.
அவள் விலகி ஓட, அவன் நெருங்கி வர என தொட்டு பிடிக்கும் விளையாட்டில் மனைவியை எட்டி பிடித்தவன் தன் கைகளில் பூவாய் அள்ளிக்கொண்டான்.
“என்னவாம்? ஷாக்காகிட்ட?…” என்று புன்னகை சிந்தியவன்,
“இப்ப நீயும் நானும். நம்மோட இந்த உறவு. என் மேல உன் உரிமை இது மட்டும் தான் நிஜம் தர்ஷி…” என்றவன் தன் கைகளில் இருந்தவளிடம் பேசியபடி அங்கிருந்த அறை நோக்கி சென்றான்.
“எந்த சூழ்நிலையிலும் உனக்கு நான். எனக்கு நீ மட்டுமே. எல்லாத்துக்கும் கலங்கி நிற்க கூடாது. உன்னோட புருஷனா உன் மொழி உன்னோட தான். தர்ஷி என்னை நம்பனும்…” என்று சொல்லி புன்னகைகத்தான்.