“மாமானு ஒரு வார்த்தை கூப்பிட்டா குறைஞ்சு போய்டுவியா நீ?” காரில் ஏறியதும் சண்டைக்கு தான் நின்றாள் அஞ்சலி.
“ஏன் உன் அப்பாகிட்ட சொல்ல வேண்டியது தானே? வா சூர்யானு அவர் மட்டும் சிவப்பு கம்பளம் விரிச்சாரா?” என்று பதிலுக்கு மடக்க, அஞ்சலி வாயில் சிப்.
“ஆமா உன்கிட்ட கூட சரியா பேசின மாதிரி இல்ல.. என்னவாம் மிஸ்டர் குணசீலனுக்கு?” சூர்யா கேட்க, கேட்ட கேள்வி அவளையும் அரித்துக் கொண்டிருந்த கேள்வி.
“தேங்க்ஸ்!” சம்மந்தம் இல்லாமல் பதில் அவள் கூற,
“எதுக்கு? உன்னை கல்யாணம் பண்ணினதுக்கா?” என்ற சூர்யாவின் நக்கலில்,
“ப்ச்! நீயெல்லாம் திருந்தவே மாட்ட!” என்று அவள் சலிக்க,
“சேம் டு யூ!” என்ற பதிலில் இன்னும் கடுப்பாகி போனாள்.
“என்ன ஆனாலும் எனக்கு மாமனார் மாமியார் அவங்க தானே? முறைப்படி சொல்றது தானே சரி? நாளைக்கு வேற யார் மூலமாச்சும் அண்ணனுக்கு மேரேஜ்ன்னு தெரிய வந்துச்சுன்னா சூர்யாவோட மதிப்பு என்ன ஆகுறது? என் பேமிலியை தானே பேசுவாங்க.. சோ ஒன்லி!” என்றான் அவள் காரணம் கூறாமலே.
“இதுவும் உன் பேருக்காக தான் இல்ல?” அதிலும் அவள் குறையே கண்டாள். மனதில் ஒரு சிறு புரிதல் தான்.. ஆனால் காட்டிக் கொள்ள முடியவில்லை. காட்டிக் கொண்டாள் அது அஞ்சலி இல்லை.
“ஆமான்னு சொல்ல தான் செய்வேன்.. உன்னை மாதிரி யார் என்ன நினச்சா எனக்கென்னனு இருக்க என்னால முடியாது” என்று அவன் முடித்துக் கொள்ள, அஞ்சலி பதில் கூறவில்லை.
*************
ஜெய் அனைவரின் முன்பும் நாள் குறிக்க சொல்லி இருக்க, அதையும் சூர்யா தான் சென்று பால நாதனிடம் கூறினான்.
எதுவுமே பதில் கூறவில்லை அவர். தன்னை மதிக்கவில்லை என்ற எண்ணத்தில் அவர் இருக்க, அவரை சமாதானம் செய்யும் வழியும் தெரியவில்லை சூர்யாவிற்கு.
“கிளம்பி தானே இருக்கீங்க? கீழே வர வேண்டியது தானே? கூப்பிட வேற நான் வரணுமா? லேட் ஆகிட்டு நல்ல நேரத்துல போய் நிக்க வேண்டாமா பொண்ணு வீட்டுல?” என்று மல்லிகா பால நாதனிடம் கேட்க,
“இப்பல்லாம் நீ ரொம்ப பேசுற.. ஏன் நான் ஏன் இப்படி இருக்கேன்னு உனக்கு தெரியாதா? என்கிட்ட நீங்க யாராவது சொன்னிங்களா? நீங்களே பொண்ணு பார்த்தாச்சு.. நீங்களே நாள் குறிக்க முடிவு பண்ணியாச்சு.. இப்போ மட்டும் எதுக்கு என்னை எதிர்பார்க்குறீங்க? நீங்களே பேசிட வேண்டியது தானே?” என்று பால நாதன் கோபமாய் கேட்க,
“பையன் கல்யாணத்துக்கு அப்பாவுக்கு வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா? என்ன பேச்சு பேசுறீங்க.. நானும் பார்த்துட்டு தான் இருக்கேன்.. ஒரு மாசம் ஆக போகுது.. நீங்க பாதி நாள் வீட்ல தான் இருக்கீங்க.. என்ன நடக்குதுன்னு தெரிஞ்சும் அமைதியா தான் இருக்கேன்.. என்னை பேச வைக்காதிங்க” என்று மல்லிகா கூற, எதிர்த்து பேசியதிலேயே விக்கித்து போயிருந்தவர் மல்லிகாவின் இறுதி வார்த்தைகளில் கொஞ்சம் ஸ்தம்பித்தும் போனார்.
‘என்ன தெரியும் இவளுக்கு?’ என்ற கேள்வி மூளைக்குள் வண்டாய் அரிக்க உடனே பதில் கூற முடியவில்லை அவரால்.
“ஜெய்க்கு அப்பாவா எல்லா இடத்துலயும் நீங்க தான் நிக்கணும்.. ஒவ்வொண்ணுக்கும் இனிமே சொல்லிட்டு இருக்க முடியாது.. நான் பேசுற மாதிரி ஜெய் பேச, கேட்கனு ரொம்ப நாள் ஆகாது.. அந்த நாள் வர கூடாதுன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கோங்க” என்று மல்லிகா விடாமல் பேச, அப்படியே நின்றுவிட்டார் பால நாதன்.
இவ்வளவு தொடர்ந்து பேசுபவரே இல்லை மல்லிகா என்ற எண்ணமே அவரை கூர்ந்து பார்க்க வைக்க,
“எல்லாரும் ரெடியா இருக்காங்க.. வாங்க!” என்று சொல்லி சென்றுவிட,
பால நாதனுக்கு வேறு வழியில்லாமல் உடன் சென்றார்.
வீட்டிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று வீட்டின் வரவேற்பரையில் மீனாட்சி அமர வைத்திருக்க, பிரியாவின் கணவன் கதிரவன் தான் அங்கே மகனாய் அனைத்தையும் செய்து கொண்டிருந்தான்.
“சும்மா! போய் அண்ணியைப் பார்த்துட்டு வர்றேன்” என்றவள் மகியுடன் எழுந்து கொள்ள, மல்லிகா திரும்பி மகளை என்னவென பார்க்கும் முன் ஜனனி அறைக்குள் ஓடிவிட்டனர் இருவரும்.
“இவளுக்கு எவ்வளவு சொன்னாலும் தெரிய மாட்டுது.. இன்னும் சின்ன பிள்ளையாவே நினச்சுட்dடு இருக்கா” என்று மல்லிகா கூற,
“நீங்க வேற! ஜனனியைகிட்ட ரெண்டு நாள் இருந்திங்கன்னா உங்க பொண்ணு பரவால்லன்னு தோணிடும்..” என்று மீனாட்சி கூற,
“அவ்வளவு அராத்தா எங்க மருமக?” என்று பிரேமா புன்னகைத்து கேட்க, உள்ளே நிவியுடன் நண்பர்களாகி இருந்தாள் ஜனனி.
அஞ்சலி சூர்யா அருகே அமர்ந்திருந்தாலும் யாருடனும் பட்டுக் கொள்ளாமல் இருக்க,
“நீயும் உள்ள போக வேண்டியது தானே?” என்று கேட்ட சூர்யா,
“வேணாம்! நீ இங்கே இருக்குறது தான் எல்லாருக்கும் சேஃப்!” என்றும் அவனே கூறிவிட,
“என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு.. சும்மா எதாவது சொல்லிகிட்டே இருக்க.. நீ சொன்னா நான் கேட்கணுமா? நானும் போவேன்” என்றவள் கோபமாய் வீராப்பாய் சொல்லிவிட்டு எழுந்து நிவி சென்ற அறைக்குள் சென்றுவிட, சூர்யா தோள்களை குலுக்கிக் கொண்டான்.
வேகமாய் வந்துவிட்ட அஞ்சலி உள்ளே நிவி, ஜனனி, பிரியா என மூவரும் சிரித்தபடி இருக்கவும் சட்டென நின்றுவிட்டாள்.
“வாங்க!” என்று பிரியா உள்ளே அழைக்க, அதன் பின் சென்ற அஞ்சலியை நிவியே ஆச்சர்யமாய் தான் பார்த்து வைத்தாள்.
கதிரவனும் சூர்யாவோடு பேசியபடி இருக்க, பெண்கள் கூட்டமும் நன்றாய் பேசி பழகியிருந்தனர் அந்த ஒரு மணி நேரத்தில்.
“ஜனனியை வர சொல்லுங்க க்கா!” என்று பிரேமா மெதுவாய் கூறியது மீனாட்சி காதுகளிலும் விழ,
“இதோ சொல்றேன்” என்று எழுந்து கொண்டார்.
“நான் போறேன்!” என்று கதிரவன் செல்ல,
நிவி, பிரியாவுடன் ஜனனி வர பின்னே அஞ்சலி வந்தாள்.
உள்ளேயும் மற்ற மூவரும் பேசி சலசலத்து இருக்க, அஞ்சலி மட்டும் தனித்து நின்றாள். பிரியா எவ்வளவோ அஞ்சலியையும் பேச்சில் இழுத்துப் பார்க்க அவள் சேர்ந்தாள் இல்லை. நிவி ஏற்கனவே தெரிந்தவள் என்பதால் அவள் கவனம் ஜனனியிடம் தான் இருந்தது.
தன் வீட்டில் தான் மட்டும் இருக்கும் பொழுது கூட தான் உணராத தனிமையை இந்த ஒரு நாளில் உணர்ந்திருந்தாள் அஞ்சலி.
வெளியே வந்ததும் மீண்டும் சூர்யா அருகில் சென்று இருந்து கொண்டாள். அது தான் பரவாயில்லை என்றும் தோன்றாமல் இல்லை.
“ம்மா! இவங்க தான் அண்ணி! நல்லாருக்காங்க இல்ல?” என்று நிவி சபையில் சத்தமாய் கூற,
“ஹே வாலு! உனக்கு தான் ஜனனியை இப்ப தெரியும்.. நாங்க எல்லாம் முன்னாடியே பார்த்து பேசி இருக்கோம்” என்றார் பிரேமா.
“ஆமால்ல!”
“நிவி! ஜனனி ஓகேவா? பாஸ் மார்க் போட்டுடலாமா?” சூர்யா கேட்க,
“இல்ல நீ ஃபெயில் மார்க் போட்டு தான் பாரேன்!” என்றது ஜனனி.
“ஜனனி!” என்று அதட்டிய மீனாட்சி,
“பார்த்திங்களா! நான் சொன்னேன் இல்ல?” என்று கூற,
“விடுங்க அண்ணி! இப்படி பொண்ணு தான் எங்களுக்கு தேவை.. பொம்பளை பசங்க வீட்டுல பேசி இருந்தா தான் வீடு நிறைஞ்ச மாதிரி இருக்கும்.. மல்லிகா அக்கா நிவியை எவ்வளவு பேசினாலும் அவ ஒரு நாள் உடம்பு சரி இல்லாம அவ பேச்சு வீட்டுல கேட்கலைனா தவிச்சு போய்டுவாங்க” என்றார் பிரேமா.
“நிவி அடிக்கடி சொல்லுவா எனக்கு அண்ணி பிரண்ட்டா இருக்குற மாதிரி தான் வேணும்னு.. அப்படி கிடைச்சதுல எங்களுக்கு ரொம்ப சந்தோசம்” என்றார் மல்லிகாவும்.
மாறி மாறி பேசியபடி இருக்க, ஜனனியும் அவர்களுக்கு தகுந்த விதமாய் பதில் கூறிக் கொண்டிருந்தாள்.
“புரியுதா நீ மிஸ் பண்ண வேண்டியது இதை தான்” அஞ்சலி அருகே அமர்ந்திருந்த சூர்யா நெற்றியின் ஓரம் நீவியபடி மெதுவாய் அஞ்சலியிடம் கூற,
“இங்கேயுமா?” என்றாள் அவள்..
“நீ லோன்லியா பீல் பண்ணலைன்னு மனசை தொட்டு சொல்லு” சூர்யா கேட்க,
“இல்ல!” என்றவள் மனதுக்குள் அத்தனை தடுமாற்றம்
அனைவரும் பேச பேச அஞ்சலி அங்கே சங்கோஜமாய் உணர ஆரம்பித்து இருந்ததை பார்த்துவிட்டு தான் சூர்யா கூறியதே!.
“நீயும் பேசி பழகலாம்.. தப்பில்ல.. நல்லதுன்னு உனக்கு தோணுறதை செஞ்சு பழகு.. அப்ப தான் சில விஷயங்கள் உனக்கும் புரியும்” என்றான்.
பால நாதனுக்கும் ஜனனியை பார்த்ததும் மனதுக்கு நிறைவாய் தான் இருந்தது.
“ஜோசியருக்கு போன் பண்ணி நாள் கேட்டுடலாமே!” கதிரவன் கேட்க,
“பெரியப்பா! நீங்க போன் பண்ணுங்க” என்றான் சூர்யா.
“கேளுங்க அண்ணே!..” என்று மீனாட்சியும் கூற, சரி என்றவர் மொபைலை எடுத்து அழைப்புக் கொடுத்தார்.
“ரெண்டாம் தேதி நாள் நல்லா இருக்காம்.. அன்னைக்கே பண்ணிட சொன்னார்” என்று பால நாதன் கூற,
“அப்போ இன்னும் நாற்பது நாள் இருக்கு..” என்றான் கதிரவன்.
“கல்யாணம் சிம்பிளா கோவில்ல வச்சுக்கலாம்.. என்ன சொல்றிங்க?” என பால நாதன் தானாகவே பேச,
“மாமாக்கு இப்ப தான் பேசவே தோணி இருக்கும் போல க்கா!” என கிண்டல் செய்தார் பிரேமா.
“நல்லதுங்க.. நீங்க எப்படி சொல்றிங்களோ.. அப்படியே செஞ்சிடலாம்..” என்றான் கதிரவன்.
“எங்க சைடுல நாங்க மட்டும் தான்.. இன்னும் ஒரு பத்து பேர் வேணா வருவாங்க.. இப்ப தான் எங்க பையன் சூர்யாக்கும் கல்யாணம் முடிஞ்சது.. அதனால எல்லாரையும் கூப்பிட சூழ்நிலை இல்ல” என்று பால நாதன் கூற,
“புரியுதுங்க அண்ணே.. கல்யாணத்தை சிம்பிளா வைக்குறதுனால கல்யாணம் முடிஞ்ச ஒரு ஒரு வாரத்துல ஒரு ரிசப்ஷன் மாதிரி வச்சுக்கலாமா? எங்க சைடுல சொந்தங்க கொஞ்சம் அதிகம்.. சொல்லாம செய்ய முடியாது.. கல்யாணத்துக்கு நீங்க அதிகமா கூப்பிடலைனா நாங்க கூப்பிட்டா நல்லா இருக்காது அதான்..” என்று மீனாட்சி கூற,
“இதுல என்ன இருக்கு.. நல்லாவே பண்ணிடலாம் அப்போ!” என்றுவிட்டார் பால நாதனும்.
“அண்ணனுக்கு போன் பண்ணவா அண்ணி?” என்று நிவி கேட்க,
“உன் அண்ணா பிஸி! நான் ஏற்கனவே பண்ணி பார்த்துட்டேன்!” என்று அவள் காதுக்குள் ஜனனி கூற,