“சீக்கிரம் வாங்கடி, அங்க அந்த தொரை வேற வெயிட் பண்ணிட்டு இருப்பார், பேசாம நான் தனியா வந்து இருக்கலாம் போல” என தோழிகளை அதட்டியவாறே வேகமாக நடந்தாள் தமயா.
“ஹேய் இருடி! டாக்டர் நீ கேட்டதும் உடனே பர்மிசன் கொடுத்துட்டாங்க, எங்களை நோண்டி நொங்கெடுத்து தானே விட்டாங்க, வந்துட்டு இருக்கோம்” என பின்னாலே ஓடி வந்தனர் நதியா, தங்கம்.
“அதான் நம்மளும் போயிட்டே இருக்கோமேடி, இன்னும் ஒரு முனை வளைஞ்சா கடை”
சிறிது தூரம் சென்றதும்,
நதியா”தமயா! கடை தான் பக்கமா வந்துட்டே, நீ போய் நகை பாத்துட்டு இரு, நாங்க இந்த ஃபேன்சி கடைக்குப் போயிட்டு வந்துடுறோம்”என்றாள்.
“ம்ம்ம்! சரி சீக்கிரம் வாங்க, நான் அங்கயே வெயிட் பண்றேன்”என தமயா நடந்தாள்.
நகை கடையை நெருங்கியதும், நளன் வாசலிலே நின்றான்.
“சாரி! லேட் ஆச்சா..?”
“இல்ல! வா”என உள்ளே சென்றான்.
இருவரும் செயின் இருக்கும் பக்கம் நடந்தனர்.
தமயாவின் செயின் ஒன்றும் கிடைக்க பெறாத மாடல் இல்லை, அவள் வாங்கிய நேரத்தில் இருந்த நான்கு மாடல்களில் ஒன்றை வாங்கியிருந்தாள், பொதுவாக நம்ம கையில் எடுத்துப் பார்க்கும் போது புடிக்காத நகை, புடவை அடுத்தவர் போடும் போது பொறாமையில் பொங்க பொங்க பிடிக்கும்.
அப்பிடி தான் கனிகாவுக்கு தமயாவின் செயின் பிடித்தது.
நளனுக்கு தமயா செயின் மாடல் நினைவில் இல்லை, அதனால தான் அவளை வர சொன்னான்.
கடைக்காரர் எடுத்து வைத்த கூடுதலான இரு மாடல்களோடு மொத்தம் ஆறு மாடல்கள் காட்சியளித்தது. அதில் அவள் அணிந்திருந்த செயின் மாடலை தனியாக எடுத்தாள்.
அதன் கிராம் ஆராய்ந்தவள், “இந்த செயின் தான், ஆறு கிராம் இருக்கு, ஓகே வா, இல்ல அதிகமாக பாக்கனுமா…?”என கேட்டாள்.
கனிகா பழைய செயின் ஒரு பவுன் இருந்தது.
“இங்கரே! கனிகா பழைய செயின் ஒரு பவுன், அதுக்கு கொறச்சு எடுத்தா அக்கா ஏதாச்சு சொல்லும், ஒரு கிராம் கூட இருந்தாலும் பராவாயில்ல, ஒரு பவுனுக்கு மேல பாரு”
“ம்ம்ம்!”என அதே டிசைனில் கிராம் கூடுதலாக உள்ளதை தேடினாள்.
பத்து கிராமில் இருந்தது அதே டிசைனில்.
“இதோ இருக்கு, பத்து கிராம் போட்டு இருக்கு”என்றாள் அவனிடம் நீட்டிக் கொண்டே.
அதை வாங்கி பார்த்தவன், “ம்ம்ம்! இது ஓகே தான்”என கடைக்காரரிடம் கொடுத்து செய்கூலி, சேதாரம் பார்த்து போடுமாறு சொல்லிவிட்டு, பழைய நகையை எடை வைத்து எவ்வளோ போகுமென்று பார்க்க சொன்னான்.
தமயா அமைதியாக அமர்ந்திருந்தாள் அங்கு கண்ணாடியில் இருக்கும் தோடு, வளையல்களைப் பார்த்தவாறு.
நளனுக்கு மனதில் அவளுக்கும் ஒரு செயின் வாங்கி கொடுக்கலாம.? என்ற எண்ணம் வந்தது.
ஆனால் அவளிடம் நகை வாங்கி தருகிறேன் என்று சொன்னால் தவறாக நினைப்பாளோனு அவனுக்கு சங்கடம் வந்தது.
‘அவளே என்னைய பிடிக்கவில்லைனு சொல்லிட்டா அவளுக்கு நகை வாங்கி கொடுக்க கேட்டால், நான் ஏதோ அவளை நெருங்கி புருசனாக நினைக்குறேன் என்று நினைத்தால் அது எனக்கு அசிங்கம்’என்ற எண்ணம் தலைத் தூக்க அமைதியானான்.
ஆனால் கேட்கலாம..? வேண்டாம..? என்ற போராட்டம் தொடர்ந்தது, ஒரு முடிவாக
“இங்கரே!”என அழைத்தான்.
“ம்ம்ம்!”என திரும்பினாள்.
“நீ வேணா ஒரு செயின் எடுத்துக்கோ, அதே டிசைனில் தான் இருக்கே” என்றான் மெல்ல.
“இல்ல! வேணாம்”என்றாள் அழுத்தமான வார்த்தைகளாக.
நளன் அப்பிடியே அமைதியாகிட்டான், அதற்கு மேல் கேட்டால் கட்டாயப்படுத்துவது போல் இருக்கும் என நினைத்து, கடைக்காரர் வர பில் போடும் இடத்திற்கு சென்றான்.
நடந்து செல்லும் அவனையே தமயா பார்த்தப்படி நின்றாள்.
அவன் செயின் வாங்க சொல்லி கேட்டதும், வேண்டாமென்று சொன்னாலும், மனதில்’மறுபடியும் வாங்க சொல்லி கேட்டுடாதீங்க தொரை’என வேண்டினாள்.
ஆனால் அவளின் தொரை ஒரு தடவையில் நகர, அவளுக்கு மகிழ்ச்சியானது, அவளின் மனதை எப்பிடி படிக்கின்றானு தெரியலையே என நடந்து செல்லும் அவனையே பார்த்தப்படி நின்றாள்.
பில் போட்டு முடிந்ததும், இவளை பார்த்து தலை அசைக்க நடந்தாள் வெளியில்.
“சரி! நீ கிளம்பு”என்றான்.
“என் கூட ப்ரண்ட்ஸ் ரெண்டுப் பேரு வந்தாளுங்க, சாமான் வாங்கப் போய் இருக்காங்க, அவங்கள இங்க தான் வர சொன்னேன், நான் வெயிட் பண்றேன் நீங்க கிளம்புங்க.”
“ஓ! நான் வேணா வர வரைக்கும் நிக்கவா..?”
“இல்லல்ல! இங்க என்ன பயம், அவங்க வந்துடுவாங்க, ஒன் ஹவர் தான் பர்மிசன் போட்டு வந்தோம்”
“ம்ம்ம்! சரி”என அவனின் புல்லட் நோக்கி சென்றான், பக்கத்தில் தான் நிறுத்தி இருந்தான்.
தமயாக்கு மனதில் ஏதோ உறுத்தியது, ‘அவர் கேட்டு, நம்ம வேணானு சொல்லிட்டோம், தப்பா நினைச்சு இருப்பாரோ..?’
‘எனக்கு என்னவா..? நான் இப்பிடி தான் யோசிப்பேனு முழுசா என் மேல நம்பிக்கை கொண்டவர், அவரோட மனசு நான் சொன்னதில் கஷ்டப்படுதுனு யோசிக்க மாட்டேனா..?’என்றாள் அதனிடம்.
‘அப்ப அந்த செயினை வாங்கிக்க வேண்டியது தானே?’
‘அது முடியாது!’
‘என்னமோ பண்ணி தொல, ஆள விடு’ என மனம் அமைதியானது.
நளன் புல்லட்டில் ஏறி அமர்ந்து, அதை ஸ்டார்ட் செய்யப் போகவும் ஒரு ஃபோன் வந்தது, அதை எடுத்துப் பேசி முடித்தான்.
மறுபடியும் புல்லட்டை உதைக்க சென்றவன் காதில்”ஒரு நிமிஷம்!”என அவன் பக்கவாட்டில் வேகமாக வந்து நின்றாள் தமயா.
“என்ன..? உன் ப்ரண்ட்ஸ் இன்னும் வரலையா..?”என கேட்டான், புருவத்தை சுளித்து.
“இல்ல! உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்”
சுற்றிலும் ஆட்கள் அவரவர் வேலையை நடந்தும், பைக்கில், காரில், பஸ்ஸில் பறந்தும் காட்சியளித்தனர்.
புல்லட்டில் இருந்து இறங்கியவன், அதை ஸ்டான்ட் போட்டுவிட்டு பைக்கின் அந்த பக்கம் நின்று”சொல்லு!”என்றான்.
“வேணுமானு கேக்க தோணுச்சு கேட்டேன், உனக்கு வேணானு தோணுச்சு சொல்லிட்ட, இதுல நான் தப்பா நினைக்க என்ன இருக்கு..?”
“உங்களால எப்பிடி எதையும் நேர்மறையா யோசிக்க முடியுது, உண்மையை சொல்லுங்க எனக்கு நீங்க வாங்கி தரது புடிக்காம தானே நான் வேணானு சொல்றேனு நீங்க நினைக்கல..?”
“புடிக்காம சொன்னீயானு உனக்கு தான் தெரியும், உண்மைய சொல்லனுமுனா எனக்கு நான் கேட்டதால ஏதோ நான் புருசன் உரிமை எடுத்துக்க கேக்குறேனு நீ நினைச்சுடக் கூடாதுனு எண்ணம் அதனால தான் ஒரு தடவை கேட்டுட்டு நிறுத்திட்டேன். மத்தப்படி உனக்கு தான் என்னையே புடிக்காதுனு தெரியுமே இதுல செயின் வாங்கி தரதுக்கு தனியா எல்லாம் நான் யோசிக்கல, நீ எதுவும் குழப்பிக்காம போ”என்றான்.
தமயாக்கு தன் மேல் ஏதோ சிறிது வெறுப்பு வந்தது, தான் ரொம்ப வீம்பு பண்ற மாதிரி தோன்றியது, அது மனதை உறுத்த,
“நான் செயின் வேணானு சொன்னதுக்கு காரணம், அம்மா கிட்ட கொடுத்த செயின் நானா சம்பாரிச்சு வாங்கினதுக்கு அடையாளம், அத அம்மா மாத்தி தானே தரப் போது, எப்பிடியும் எனக்கு தானே வரப்போகுது, ஆனா இப்ப நீங்க செயின் வாங்கி கொடுத்தா அது எனக்கு கடைசிவரை அம்மா வாங்கிட்டுப் போனதுக்கு பதில் நஷ்டத்துக்கு ஈடு கட்டின மாதிரி உறுத்திட்டே இருக்கும், அதான் வேணானு சொன்னேன். எனக்கும் உங்கள மாதிரி யோசிக்க கொஞ்சம் வரும், எப்பிடியும் நீங்க செயின் வாங்க சொல்லி கேப்பீங்கனு நெனச்சேன், ஏனா இந்த கொஞ்ச நாளில் உங்கள பத்தி லேசா புரிஞ்சதால”என்றாள் அவன் முகத்தை நேராக பார்த்து.
நளனுக்கு அவள் பேசியது கொஞ்சம் ஆச்சிரியமாக இருந்தது, “ஓ!”என மட்டுமே கூறினான்.
“தமயா!”என அழைப்புக் குரல் கேட்க, இருவரும் திரும்பினர்.
நதியா, தங்கம் இருவரும் அவர்களை நோக்கி வந்தனர்.
அருகில் வந்த தோழிகளிடம் தமயா”ஏய்! இப்பிடி சத்தமா ரோட்டுல பேரு சொல்லி கூப்புடாதீங்கனு எத்தன தடவ சொல்லி இருக்கேன், அறிவிருக்கா உங்களுக்கு” என திட்டினாள்.
நளனுக்கு மனதில் சிரிப்பு வந்தது, ஆக மொத்தம் உன் பேரு சொல்ல பலப்பேருக்கு தடை தான் போல என எண்ணி.
“தெரியாம கூப்புட்டோம் சாரிடி”என அதுவரை அவளையே பார்த்தவர்கள், நளனை பார்த்தனர்.
“சார் தான் எங்களுக்கு கிட்ட தட்ட கடவுள் மாதிரினு சொல்வேன். வெளிநாட்டில் வேலைக்கு போய் திடீருனு செத்துப் போன என் அப்பா முகத்தை கடைசியா பாக்க முடியுமானு என் குடும்பமே தவிச்சப்ப இவர் தான் எல்லா உதவியும் பண்ணி அனுப்பி வைத்தார் இறந்த என் அப்பா உடலை, அந்த நன்றி காலத்துக்கும் மறக்காதுடி”என கண் கலங்கினாள் நதியா.
தமயா, தங்கம் இருவரும் அவளுக்கு ஆறுதலாக கைகளை பற்றினர்.
“கவலப்படாதம்மா! அவரோட ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் எப்போதும், உங்க வீட்டுக்காரர் என்ன செய்றார்..?”என கேட்டான் நளன்.
“லவ் மேரெஜ், படிக்கும் போதே விரும்பினது சார் மேடம், எப்பிடியோ கல்யாணம் முடிஞ்சுட்டு”என்றாள் தங்கம்.
நதியா வெட்கப்பட்டாள்..
“உங்க ஹஸ்பேண்ட் என்ன பண்றாங்க..?”
“என் ஹஸ்பேண்ட் பேங்க்ல வேலை, பிரைவேட் பேங்க் தான் சார்”என்றாள் தங்கம்.
நதியா”ஒரு நாள் வீட்டுக்கு வாங்க நீங்களும் தமயாவும் சார், எல்லாருமே சந்தோஷப்படுவாங்க, எனக்கு ஒரு பொண்ணு இருக்கா, தமயாவை ரொம்ப புடிக்கும்”என சிரித்தாள்.
“ம்ம்ம்!”என்றான்.
“ஆமாங்க சார்! தமயா எங்களை விட எங்க பிள்ளைங்களை தான் மயக்கி வச்சு இருக்கா, என் பெரிய பையனுக்கு தமயா தான் ரோல் மாடல், இவளும் நானும் ஸ்கூல் ப்ரண்ட்ஸ், நல்லா படிப்பா டாக்டர் ஆகனும் ஆசை….”என தங்கம் ஆரம்பிக்க…
தமயா”போதும்! இப்பிடியே பேசிட்டே போனா ஒரு மணி நேரம் முடிஞ்சு டாக்டர் கட்டுப்பாகிடுவாங்க, வாங்க போகலாம்” என்றாள் முறைத்தவாறு.
நளன் லேசாக சிரித்து”சரி நானும் கிளம்புறேன்”என தலை அசைத்தான்.
“நாங்க வரோம் சார்!”என அவர்கள் நகர,
தமயா அவர்கள் பின்னால் நடந்தவள் ஏதோ தோன்ற, அவன் பக்கம் வந்து”நீங்க என்னைய தப்பா நினைக்கலல..?” என கேட்டாள்.
“எதுக்கு..?”
“நான் செயின் வாங்கி தரது புடிக்காம தான் வேணானு சொன்னேனு..”
“அதான் நல்ல விளக்கமா சொல்லிட்டீயே, அப்புறம் ஏன் தப்பா நினைக்கப் போறேன், போ!”என்றான் மெல்ல பற்கள் தெரியாமல் சிரித்துக் கொண்டே.
அவனை சற்று ஆச்சிரியம் கலந்த அதிசயமாக, பார்த்தாள் முதன் முதலாக அந்த சிரிப்பை ரசித்தவாறு.
“தேங்க்ஸ்!”என்றாள் மெல்ல..
“இது எதுக்கு…?”
“இல்ல! என் விளக்கத்தை ஏத்துக்கிட்டதுக்கு தான், நான் கிளம்புறேன்”என திரும்பி பார்க்காமல் நடந்தாள்.
புல்லட்டின் கண்ணாடி வழியே செல்லும் அவளை பார்த்தான்.
எவ்வளவு வாங்கி கொடுத்தாலும் போதவில்லை என்று சொல்லும் குடும்பத்தின் மத்தியில், வாங்கிக்கொள் என கூறியும் காலம் பூராவும் மனசு உறுத்தும், அதனால் வேண்டாமென்ற அவன் இங்கரே வை மனதில் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ஆனால் அவனுக்கு அதை நினைக்கும் போது கூடவே அவளின் தோழிகளின் வாழ்க்கை வேண்டாத விருந்தாளியாக வந்தது மனதிற்கு.
இருவரும் அவரவருக்கு ஏத்த வயதில், கணவன், பிள்ளைகளோடு செட்டில் ஆகிவிட்டனர். ஆனால் தமயா..? அவனின் வயசு அவனுக்கு இப்போது பூதகரமாக தெரிந்தது.
தமயாவின் வெறுப்பு, தவிப்பு, இயலாமை, முதல் இரவில் அவள் நடந்துக் கொண்ட விதம் என அனைத்தும் அவனுக்கு நன்றாக விளங்கியது.
புல்லட்டை எடுத்தவன் மனதில் ‘தான் அவளுக்கு ஏத்தவன் இல்லை, பாவம் அநியாயமாக அவளோட வாழ்க்கையை கெடுத்துட்டோம், இதுக்கு மாற்று வழி இருக்கா..?’என யோசிக்க ஆரம்பித்தான்.
தமயா தோழிகளோடு நடந்தாலும் ஏனோ மனம் பின்னாலே சென்றது, அதாவது தொரையின் பின்னாலே போனது.