“அது.. சம்ருக்கு தான்.. விஷயம் முன்னாடியே தெரியுமே!” என்று அவர் திணறியபடி சமாளிக்கப் பார்க்க,
அவரை முறைத்தவன் பின் சற்றே நிதான குரலில், “அம்மா கல்யாணம்ங்கிறது ரெண்டு பேரோட முடியிறது இல்லையே! ரெண்டு குடும்பமும் இணையுறது.. ஒரு உறவோட ஆரம்பமே பொய்யில் ஆரம்பிச்சா, அந்த உறவு எப்படி நிலைக்கும்?” என்றான்.
சத்யதேவை மனதினுள் நன்றாக திட்டிய மீனாட்சி, “ஆயிரம் பொய்களை சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம்னு சொல்லுவாங்க..” என்றார்.
அவன் மீண்டும் முறைப்புடன், “எவன் இதை சொன்னானோ! அவனவன் அவன் வசதிக்கு இதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கிறான்.. இப்போ நீங்களும்!” என்றான்.
அவர் மெல்லிய குரலில், “நாம பொய் சொல்லலை.. உண்மையை கொஞ்ச நேரம் மறைக்கப் போறோம்” என்றார்.
“புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்போ!” என்று கோபம் கலந்த நக்கலுடன் கூறியவன் பின், “கல்யாணம் முடிஞ்சிட்டா மட்டும் எல்லாம் சரியாகிடுமா? முதல்ல அவங்க கிட்ட உண்மையை சொல்லுங்க.. இதில் அவங்களுக்கு சம்மதம்னா கல்யாணத்தை நடத்தலாம்” என்றான்.
“அப்போ அவங்க சரி சொல்ல மாட்டாங்கனு தான் நீ சரி சொன்னியா?”
“உங்களை மாதிரி மாத்தி பேசுற ஆள் நான் இல்லை.. நான் உங்களுக்காகவும், அந்த கிறுக்கன் அப்பா மேல் வைத்த சத்தியத்துக்காகவும் தான் சரி சொன்னேன்”
“நான் என்ன மாத்தி பேசுனேன்?”
“முழு புசணிக்காயை சோத்தில் மறைக்கிற மாதிரி இருக்குது நீங்க மாத்தி பேசலைனு சொல்றது.. சத்யதேவ்னு சொல்லி கல்யாணத்தை நடத்தி முடிச்சிட்டு ஜெயதேவ்னு சொல்றதுக்கு பேர் என்ன?”
“அதை அப்போ பார்த்துக்கலாம்.. இப்போ நீ கிளம்பு ப்பா ப்ளீஸ்..” என்று இறைஞ்சும் குரலில் கெஞ்சினார்.
அன்னையை இப்படி கெஞ்ச விட்டதில் இன்னமும் சத்யதேவ் மீது கோபம் வர, “அவன் மட்டும் என் கையில் சிக்கட்டும்!” என்றான்.
“ப்ளீஸ்டா.. நீயாவது நான் சொல்றதை செய்யேன்..” என்றபோது மீனாட்சியின் குரல் கரகரத்து கண்களும் கலங்கிவிட,
அவரது தோளை அரவணைப்புடன் பற்றியபடி கண்களை துடைத்தவன், “சரி.. நான் போய் கிளம்புறேன்” என்றுவிட்டு சென்றான்.
சொன்னது போல் கிளம்பி வந்தவன் சத்யதேவாக மணமகனிற்குறிய சடங்குகளையும் செய்ய தயாராக, வேலவன் மற்றும் விசாலாட்சி அவனுக்கு பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து சடங்குகளை செய்தனர். பெரியப்பா, சித்தப்பா முறையில் இருக்கும் சொந்தங்களை ஒதுக்கி, இவர்கள் தான் பெற்றோர் ஸ்தானத்தில் இருக்க வேண்டும் என்றது ஜெயதேவ் தான்.
சடங்குகள் செய்தபடியே விசாலாட்சி மீனாட்சியிடம், “ஜெயா எங்க?” என்று கேட்க, சட்டென்று பொய் கூற முடியாமல் மீனாட்சி திணற,
ஜெயதேவ் தான் மெல்லிய குரலில், “வீட்டுக்கு போய் இருக்கான்.. வந்திருவான்” என்றான்.
சடங்குகள் முடிந்ததும் விசாலாட்சி மெல்லிய குரலில், “இப்போ எதுக்கு வீட்டுக்கு போய் இருக்கான்? எதையும் எடுத்துட்டு வர மறந்துட்டியா?” என்று வினவ,
சட்டென்று தலையை ஆட்டியபடி, “ஆமா.. பரிச நகையை எடுக்க போய் இருக்கான்” என்று மீனாட்சி சமாளித்தார்.
அவரை முறைத்த விசாலாட்சி, “உன்னையும் சத்யாவையும் ஜெயா திட்டுறதில் தப்பே இல்லை” என்று கூற, மீனாட்சி சிரித்து சமாளித்தார்.
அதற்குள் அன்னையை காப்பாற்ற ஜெயதேவ் மணமகன் அறையில் இருந்தபடி, “அம்மா” என்று அழைத்து இருந்தான்.
“சரி.. சரி.. நீ போய் என்னனு பாரு.. நான் பொண்ணு வீட்டு சைடு போயிட்டு வரேன்” என்று கூறி விசாலாட்சி சென்றார்.
அடுத்து மணப்பெண்ணிற்குறிய சடங்குகள் முடிந்து, மணமகனை அழைக்கவும் ஜெயதேவ் அறையை விட்டு வந்தான்.
என்ன தான் தடுக்க முயன்றும் அவனையும் மீறி அவனது மனக்கண்ணில் விழிகளில் குறும்பை தேக்கியபடி ராங்கி பட்டாசு தோன்ற, தலையை உலுக்கியபடி அதை புறம் தள்ளி கோபத்துடன் தம்பியை அதிகமாகவும் அன்னையை கொஞ்சமாகவும் மனதினுள் திட்டியபடி மணமேடையில் அமர்ந்தான்.
அவன் அமர்ந்த சில நிமிடத்தில் மணப்பெண் அவன் அருகே அமர்வதை உணர்ந்தவனின் முகம் அந்நொடி இறுகியது. திருமணத்திற்கு சம்மதித்த தனது செயலை எண்ணி தன் மீது கூட கோபம் வந்தது. ‘ராங்கி பட்டாசை’ தேட விளைந்த கண்களுக்கு கடிவாளமிட்டு அடக்கினான். உண்மை தெரியும் போது அவள் எப்படி அதை தாங்கி கொள்வாள் என்ற வலி நெஞ்சில் உதிக்க அவனது முகமும் உடலும் மேலும் இறுகியது. அந்நொடி சத்யதேவ் மீது அவ்வளவு ஆத்திரம் வந்தது.
தனக்குள்ளேயே உழன்று கொண்டு இருந்தவன், அய்யரின், “திருமாங்கலியத்தை வாங்கிக்கோங்கோ” என்ற குரலில் சுற்றம் உணர்ந்து மஞ்சள் கயிற்றுடன் கோர்க்கப்பட்ட பொன் தாலியை வாங்கிக் கொண்டு மணப்பெண் பக்கம் திரும்பியவன் அதிர்ந்தான்.
ஆம்! அங்கே அமர்ந்து இருந்தது அவனது ராங்கி பட்டாசே தான். அதிர்ச்சி, ஆசுவாசம், நிம்மதி என்று நொடிக்கு நொடி மாறிய அவனது முகம் இறுதியாக கோபத்துடன் இறுகித் தான் போனது.
சில மணி நேரங்களுக்கு முன்………..
சத்யதேவ் கிளம்பி சென்ற பத்து நிமிடத்தில் சம்ருதிகா பயமும் பதற்றமுமாக ஒருவனுடன் மகிழுந்தில் கிளம்பிச் சென்றாள்.
அவள் சென்ற அரை மணி நேரத்தில் அவளை எழுப்ப வந்த சித்ரா குளியல் அறை கதவு திறந்து இருக்கவும் உறங்கிக் கொண்டிருந்த ஆத்மிகாவை எழுப்பினார்.
அரை தூக்கத்துடன் கண் விழித்த ஆத்மிகா, “அதுக்குள்ளே டைம் ஆகிடுச்சா?” என்றபடி எழுந்து அமர்ந்தாள்.
நெஞ்சில் கை வைத்தபடி, “அந்த குடுமபத்துக்குன்னு ஏன் தான் இப்படிலாம் நடக்குதோ! மீனா எப்படி இதை தாங்குவா! எனக்கே நெஞ்சு திக்குன்னு இருக்குதே!” பேசிக் கொண்டிருந்த விசாலாட்சியின் கண்கள் ஆத்மிகாவை கண்டதும் ஒளிர்ந்தது.
பூமணியின் கையை பற்றியவர், “எனக்கு ஒரே ஒரு உதவி செய்டா.. நம்ம ஆத்மிய சத்யாக்கு கட்டிக் கொடு” என்றார்.
‘சமி எங்க போய் இருப்பா? ஏன் போனை எடுக்கலை?’ என்று யோசித்துக் கொண்டிருந்த ஆத்மிகா தலையில் இடி விழுந்தது போல் அதிர்வுடன் திரும்பினாள்.
விசாலாட்சியின் கூற்றில் சித்ராவின் அழுகை சற்றே மட்டுப்பட, விசாலாட்சி கூறியது சரியோ என்று யோசிக்க ஆரம்பித்தார்.
பூமணியோ தமக்கையின் பிடியில் இருந்து தனது கையை மெல்ல உருவினார். அந்த செயலே அவரது மறுப்பைக் கூற,
விசாலாட்சி, “மீனா ஏற்கனவே பெரியவன் கல்யாணம் இப்போதைக்கு வேணாம்னு இழுத்தடிச்சிட்டு இருக்கிறதில் கவலையில் இருக்கிறா.. இப்போ இதை அவளால் தாங்கவே முடியாதுடா.. நானா தான் நம்ம சம்ருவ பேசினேன்.. இப்போ நம்மால் ஒரு தலை குனிவு! என்னால் தாங்கிக்கவே முடியாதுடா.. அந்த குடும்பத்தை நிலைபடுத்தி உயர்த்த பெரியவன் எவ்ளோ போராடினான் தெரியுமா! தன்னோட இளமை காலத்தை பலி கொடுத்து தான் அதை சாதிச்சான்.. இப்போ தான் அந்த குடும்பம் நிமிர்ந்து இருக்குது.. அதை திரும்பவும் தலை குனிய வச்சிடாத.. நான் உன்னை கெஞ்சி கேட்கிறேன் மணி” என்றபடி கை கூப்பி கெஞ்ச,
சட்டென்று அவரது கையை இறக்கிய பூமணி, “பெரிய வார்த்தை எல்லாம் பேசாதக்கா” என்றார்.
“என்னால் ஏற்பட்ட இன்னலை நான் தானே சரி செய்யணும்! வேணும்னா நான் உன் காலில் விழ..” என்றவரின் பேச்சை தடை செய்வது போல் பூமணி குரலை உயர்த்தி, “அக்கா!” என்றிருந்தார்.
கூடவே, “பெரியவ விஷயத்தில் வேணா என் வளர்ப்பு தப்பாகி இருக்கலாம்.. ஆனா சின்னவ அப்படி இல்லை.. என்ன தான் குறும்புத்தனமும் சேட்டையும் செய்தாலும் எனக்கு எப்போதும் துணை நிற்பா” என்று முடித்தபோது அவரது பார்வை ஆத்மிகாவை தழுவ, அவளோ கண்ணீர் நிறைந்த விழிகளுடன் அவரை நோக்கினாள்.