“நீங்க பன்றது எவ்வளோ பெரிய பவம் தெரியுமா? கொஞ்சமாவது மனுஷ தன்மையோட நடந்துக்கோங்க. இதுவரைக்கும் செஞ்சதை விட்டுங்க. இல்லைன்னா இதுக்கெல்லாம் சேர்த்து அனுபவிப்பீங்க…” என்று ஆவேசத்துடன் மீரா சொல்ல,
“தெரியாம செஞ்சா அதுக்கு பேர் பாவம். நாங்க செய்யறது யாகம்…” என்ற காஞ்சனா,
“அது யார் தெரியுமா?…” என்று ஓரிடத்தில் காண்பிக்க அங்கே மனித தோல், எலும்புகளால் ஆன இருக்கையில் இளைஞன் ஒருவன் படுக்க வைக்கப்பட்டிருந்தான்.
“என் மகன். ஆனா பிறந்ததுல இருந்தே இதே நிலை தான். எத்தனையோ வைத்தியம் பார்த்தாச்சு. எல்லா மருத்துவமும் கை விரிச்சிட்டாங்க. கை நீட்டி அழைச்ச ஒரே நம்பிக்கை இதுதான்…” என்றார் அவளிடம்.
அங்கே நம்பூதிரி பூஜைக்கு தயார்ப்படுத்த ராகவியின் மேல் எதையோ தெளித்துக்கொண்டிருந்தார்.
மெல்ல அவளின் மயக்க நிலை விலகுவதை போலிருந்தது. இமைகள் சுருங்கி விரிய கண்களை திறக்க முயன்றாள் ராகவி.
“இதெல்லாம் ஒரு நம்பிக்கையா? இத்தனை உயிர்களை எடுத்து இது மூலமா உங்க மகன் சரியாவான்றது ஏத்துக்கற மாதிரியா இருக்கு? இதே மாதிரி தான மத்த பெத்தவங்களும் அவங்க பிள்ளையை இழந்து தவிப்பாங்க…” என்று மீரா கேட்க,
“எனக்கு என் மகன் முக்கியம். அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். அதுக்காக தான் இல்லாதவங்களுக்கு, கஷ்டப்படறவங்களுக்கு நிறைய உதவிகள் செய்யறேன். பாவத்துக்கு புண்ணியம் சரியா போயிரும்…” என்ற காஞ்சனா,
“இந்த பூஜை என் பிள்ளைக்காக மட்டும்ன்னா நினைச்ச? சாக போறியே. தெரிஞ்சுக்கோ. இந்த பூஜை இந்த இறைசக்திக்கு நிகரான சக்தியை நாங்க பெறுவதற்காக. அந்த சக்தியால என் பிள்ளையை குணப்படுத்த முடியும். எங்களால எதையும் வளைக்கவும், எதையும் நடத்தவும், உருவாக்கவும் முடியும்…” என அகபாவத்துடன் பேசினார்.
“எப்பவுமே இறைவனோட சக்திக்கு தீயசக்தி நிகராகவே முடியாது. கடைசிவரை அது உனக்கு கனவு தான். நடக்க போறதில்லை…” என்றாள் மீரா தன் கை கட்டை அவிழ்க்க முயன்று.
“மனித சக்திக்கு மீறி அப்பாற்பட்ட ஒரு சக்தியை நீங்களா உருவகிச்சு அதை எடுத்துக்க நினைச்சா அதுவே உங்களுக்கான இறுதி காலம்…” என்றாள் நீர்வற்றும் குரலை செருமியபடி.
அவளின் பேச்சுக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழப்பதை போலிருந்தது.
உடலின் சக்திகள் வடிவதை போலிருக்க ஒவ்வொரு நொடியும் அவளின் கையில் கட்டப்பட்டிருந்த ரக்சையின் இறுக்கம் இன்னும் கூடியது.
அதன் வலி அவளின் ரத்தவோட்டத்தை பாதிக்க முயல, தன்னால் இதனை தடுக்க முடியாதா என மனபலத்தை திரட்டினாள்.
கொட்டவிருந்த கண்ணீரை இழுத்து உதட்டை கடித்தவளுக்கு எழுந்து அமர கூட முடியவில்லை.
உடல் தளர்ந்து நிலத்தில் விழ தயாராய் இருந்தது. அதுவும் அந்த இடத்தில் நெருடிய அந்த குருதி வாடையும், எரிதழலின் புகையும், பூஜைக்கு சேர்த்திருந்த பொருட்களும் என என்னவோ செய்து வயிற்றை பிரட்டியது.
அவளின் அசௌகரியங்களை பார்த்தபடி நின்ற காஞ்சனா முகத்தில் அத்தனை எள்ளல்.
“நீ சொல்றது எல்லாம் ராகவி எங்க கண்ணுல படும் வரைக்கும். அவ காது மடல்ல அந்த சக்தி முத்திரையை நாங்க பார்க்கறவரைக்கும் கூட எங்களுக்கு பூஜை எப்படி முழுமையடையுமோன்னு அச்சமா தான் இருந்தது. ஆனா தானவே அந்த பொண்ணு எங்களை தேடி வந்தா…”
“அது உங்களுக்கான அழிவு காலம். அதான் உங்களை தேடி வந்திருக்கா…” என்ற மீராவின் பார்வை அங்கே எரிந்துகொண்டிருந்த விளக்கின் வேகத்திலும் அதன் சதிராட்டத்திலும் அதிக கவனம் பெற்றது.
“அந்த விளக்கு தான் உன்னை காப்பாத்த நினைச்ச மகாவோட ஆன்மா. கடைசியா எங்ககிட்ட வந்து சேர்ந்த ஆன்மா…” என்று காஞ்சனா ஆர்ப்பாட்டமாய் சிரிக்க மீராவின் கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்தது.
இன்னும் அந்த உயிர் கடைசி நம்பிக்கையுடன் அந்த கட்டிலிருந்து வெளிவர போராடிக்கொண்டிருந்தது.
“மத்த ஆன்மாக்கள் மாதிரி அவளால இருக்க முடியலை. அவ ஆன்ம சக்தியில் உங்க இறை யோக சக்தியும் கலந்திருக்கு. எல்லாம் கொஞ்ச நேரம் தான். இந்த உலகையே ஆட்டி வைக்க போற சக்தி இன்னும் சில நொடிகள்ல எங்களுக்கு கிடைக்க போகுது…” என்றவர்,
“இனி மரணமும் நாங்க நினைச்சா தான். ஜனனமும் நாங்க நினைச்சா தான். எதையும் உருவாக்கவும், அழிக்கவும் எங்களுக்கு சக்தி கிடைக்க போகுது…” என்று கெக்கலித்து சிரிக்க அவரை வெறிக்க பார்த்தாள் மீரா.
சில நிமிடங்கள் கூட பார்க்க முடியாமல் மீராவின் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.
மூச்சை இழுத்து பிடித்தாள். மனதில் அந்த தாய் சக்தியை வேண்டியபடி மயங்கவிருக்கும் கண்களை விரித்து பார்த்தாள்.
அமானுஷ்யம். அங்கே நம்பூதிரியும், கிருஷ்ணனும் கை நீட்ட, நீட்ட ஒவ்வொரு பொருட்களும் அவர்களின் கைக்கு தானாகவே சென்று சேர்ந்தது.
யாரின் உதவியின்றி ஒவ்வொன்றும் எழுந்து பறந்து செல்ல எதோ மாயாஜாலம் பார்ப்பதை போல முதுகுதண்டு ஜில்லிட்டது மீராவுக்கு.
தொண்டைக்குள் இருந்து வார்த்தைகள் வெளிவர முடியாமல் சிக்கிக்கொள்ள உள்மனது என்னவோ என்று கூச்சலிட நால்வரும் எழுந்து ராகவியை நெருங்கும் முன்,
“வேண்டாம்…” என்று அந்த இடமே அதிரும்படி அலறினாள் மீரா.
அங்கே நடந்தவற்றில் அடுத்து நடக்கவிருப்பதை மீராவால் அனுமானிக்க முடிந்தது.
அங்கே குருதியின் மேல் மலர்ந்திருந்த பூக்களில் எரிந்துகொண்டிருந்த நூத்தி எட்டு விளக்குகளையும் தங்க பஸ்பத்தில் போட்டுவிட்டு அந்த குருதியை கொண்டு ராகவியை அபிஷேகம் செய்து அவளை அந்த கொதிக்கும் பஸ்பத்தில் இறக்குவது தான் இந்த பூஜை.
இதுவரை பலி கொண்ட உயிர்களின் ஆன்ம பலன் மொத்தமும் ராகவியின் உடலில் சேர, அது சேர்ந்ததும் அடுத்த லக்கனத்தில் கடக்க ஆரம்பிக்கும் நாழிகை முடியும் முன் ராகவி முழுதாய் தங்க பஸ்பத்தில் உயிரோடு கரைய வேண்டும்.
அதற்காகவே அவளின் மயக்கத்தை தெளிய வைத்திருக்க இன்னும் முழுதாய் விழிக்கவில்லை ராகவி.
மொத்த நரம்பும் பயத்தில் வெடித்துவிட காத்திருக்க மூளைக்குள் ரத்தவோட்டம் தாறுமாறாக ஓட அவர்களின் கவனத்தை தன்புறம் திருப்பினாள் மீரா.
“வேண்டாம், ராகவியை விட்டுடுங்க. இந்த பாவத்தை பண்ணாதீங்க. நீங்களாம் மனுஷ பிறவிங்களா?…” என்றவளின் கூச்சலில் காஞ்சனாவின் கவனம் மீராவிடம் செல்ல,
“காஞ்சனா பூஜையை விட்டு அவளை பார்க்காதே…” கிருஷ்ணனின் உத்தரவு குரல்.
அச்சுத்கன் நம்பூதிரி முதல் விளக்கை உருளியோடு கையில் எடுக்கவும் கிருஷ்ணன், அவனின் தம்பி, இருவரும் மனதை ஒருநிலைப்படுத்த காஞ்சனா மீண்டும் மீராவை பார்த்தார் அவளின் சத்தத்தில்.
“இறுதி நாழிகைக்கு நேரம் கனிந்துவிட்டது…” என அச்சுத்கன் நம்பூதிரி சொல்ல அனைவருமே மந்திரங்களை உச்சாடனம் செய்ய மீராவின் உடலில் பரபரப்பு.
மொத்த உடலையும் முறுக்கிக்கொண்டு அவள் எழுந்துகொள்ள முயல அந்த நொடி ஷக்தியின் திருவிளையாடல்.
இறைசக்திக்கு நிகர் அவள் ஒருவளே என்பதற்கு சான்றாய் பெண் சக்தியை வீறுகொண்டு எழ செய்ய,
“ஏய்…” என்று காஞ்சனாவின் கடை காவலாளி மீராவை அமர வைக்க முயல அவள் திமிறலில் கீழே விழுந்தவன் பூஜை தடைபடுமே என்ற வேகத்தில் மீராவை ஓங்கி அறைய அறைந்த வேகத்தில் அவள் இதழ்கள் கிழிந்தது.
“உன்னை…” என்றவன் மீண்டும் கட்டையால் தலையில் தாக்க, பார்த்தவர்கள் பதறி தடுக்கும் முன் நொடியில் நிகழ்ந்துவிட்டது.
“அவ உயிர் இப்போ போக கூடாதுடா…” என்று கத்தி தடுக்கும் முன் மீராவின் துளி குருதி எரிந்து கொண்டிருந்த விளக்கில் பட்டு அவளும் சேர்ந்து கீழே விழ,
“அபசகுனம்…” என்ற நம்பூதிரியின் விழிகள் அச்சத்தில் விரிய அவரின் குரலில் அப்பட்டமான அலறல்.
ஆம், இறுதி பலி. பலிபீடத்தில் உயிருள்ள ஒருவரின், அதுவும் ஷக்தியின் அம்சம் பெற்றவளின் குருதி சிந்த கூடாதென்பது ஐதீகம்.
அதற்காகவே ராகவியின் உடலில் சிறு கீறலும் இன்றி அவளை கடத்தி வந்திருந்தனர்.
மீராவினால் இவை நடந்துவிட கூடாதென்பதனால் தான் அவளையும் அவர்கள் கட்டுக்குள் வைக்க கண்கட்டி வித்தை அவர்களுக்கு மட்டுமா வெளிச்சம்?
அத்தனைபேரின் கண்களையும் கட்டிய இறைசக்தியின் முன் இம்மானிடப்பிறவிகள் நிகரா?
இறுதி நாழிகை. அந்த நாழிகையின் ஆரம்பம் ராகவிக்கு அபிஷேகம். ஆனால் நிகழ்ந்ததுவோ அதுவல்ல.
கட்டில் நின்ற அத்தனை உயிர்களும் கட்டு விடுவிக்கப்பட வேண்டி ஆர்ப்பரித்து மொத்த நூத்திஎட்டு விளக்குகளும் சுழல ஆரம்பித்தது.
அந்த ஒற்றை துளிக்கு காத்திருந்த மகாவின் ஆன்மா சீறிக்கொண்டு பாய்ச்சலுடன் மீராவின் உடலில் சங்கமிக்க காளியின் அவதாரமானாள் மீரா.
அத்தனை ஆக்ரோஷத்துடன் நிமிர்ந்து நின்றவள் ஆவேச பெருமூச்சில் புயல் வீச அதன் ஆர்ப்பாட்டம் கொஞ்சமும் அடங்காமல் அங்கிருந்த விளக்குகளை மீரா விசிறியடிக்க அந்த இடமெல்லாம் செங்குளமானது.
கையில் மாட்டியிருந்த ரக்சையின் வீரியம் எதுவென இப்போது புரிந்தது அவளுக்கு.
அவளின் சக்தி மனிதனுக்கு அப்பாற்பட்டிருக்க எரிந்துகொண்டிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டு அதன் ஜோதி எல்லாம் சேர்ந்து ஒன்றாய் உருவெடுத்து காஞ்சனா, அவரின் மகன், நம்பூதிரி, கிருஷ்ணன், அவனின் தம்பி என ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.
அவ்விடத்தை பொசுக்கும் வேகத்துடன் அனைத்தையும் சாய்த்தவள் மகாஜோதியோடு ஜோதியாய் மீராவிலிருந்து விலகி ஐக்கியமாகிவிட்டாள்.
“அம்மே…” என்ற அலறலுடன் ஜோதியில் ஜோதியாய் கலக்க அவர்களின் உடல்கள் சாம்பலாய் நிலத்தில் படர்ந்தது.
மந்திர கட்டிலிருந்து விடுதலையான உயிர்கள் அதற்கு காரணமானவர்களை பலி கொண்டுவிட்டிருக்க அந்த இடமே பற்றி எரிந்துகொண்டிருந்தது.
பூச்சியப்பனும், தரணிதரனும் உள்ளே நுழையவும் மீராவின் உடல் நிலத்தில் சரியவும் சரியாய் இருந்தது.
கண்ணுக்கும் முன் நிகந்த அந்த அதிசயத்தில், அபூர்வத்தில் அத்தனைபேரும் ஸ்தம்பித்து பார்க்க,
“மீரா…” என்ற அலறலுடன் தரணிதரன் அவளை தாங்க, உடல் முழுவதும் குருதி படிந்திருந்தது.
தரணிதரனை கண்டவள் கண்ணில் தேங்கிய இறுதி நிமிட பார்வை. விழியோரம் நிறைந்துவிட்ட நீரோடு மீராவின் அந்த புன்னகை அப்படியே உறைந்து போனது.
தீயசக்தியின் அழிவில் அங்கே ஒரு உயிர் பிரிந்து ஷக்தியின் ஸ்வரூபமான உலகையாளும் மகா காளியின் காலில் சங்கமித்திருக்க, அதனுடன் உக்கிரம் தணிந்து நூற்றி எட்டு ஆன்மாக்களும் சாந்தியடைந்தது.