கல்யாண வேலைகள் ஒரு புறம் வேக வேகமாக நடந்து கொண்டிருக்க, திருமணம் பொள்ளாச்சியில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
அதுவும் மணிகண்டனின் இல்லத்தில் அனைத்து திருமணங்களும் அவர்களின் தோப்பின் அருகே இருக்கும் மண்டபத்தில் தான் நடைபெற்றது. கீர்த்தன்யாவிற்கும் அதே மண்டபத்தில் தான் திருமண வைபவத்தை வைக்க முடிவு செய்தார் மணிகண்டன். அதை கேட்டு நீலகண்டன் சற்றே யோசித்தார்.
“மாப்பிள்ளை வீடு பெரிய இடம்டா. ஊருக்குள்ள பெரிய மண்டபம் பிடிக்கலாமே” என்று சொல்ல, மணிகண்டனுக்கு ஏனோ மனம் ஒப்பவில்லை.
“வேண்டாமே அண்ணே! நாலு பொண்ணுங்களுக்கும் நம்ம தோப்பு பக்க மண்டபத்தில தான் கல்யாணம் பண்ணோம். அது தான் நமக்கு ராசி. அதை மாத்த வேணாமே. நம்ம வீட்ல இதான் நிறைஞ்ச கல்யாணம் வேற” என்று தயங்க,
“அதுக்கில்லடா.. அவுங்க பக்கம் கொஞ்சம் ஆள் கூட குறைச்சு வந்தா.. மண்டபம் பத்தாதோன்னு யோசனையா இருக்கு” என்றார் நீலகண்டனும்.
சற்று யோசித்த மணிகண்டன், “சரிண்ணே எப்படியும் எத்தன ஆளுங்க வருவாங்கன்னு தோராயமா விசாரிக்க தான செய்வோம். சம்மந்தி கிட்ட கூப்பிட்டு கேக்குறேன்” என்றவர் வடிவேலனுக்கு அழைத்தார்.
“சொல்லுங்க சம்மந்தி.. நல்லா இருக்கீங்களா?” என்று வடிவேலன் எடுத்ததும் நலன் விசாரிக்க, ஆரம்ப பேச்சுக்கள் முடிந்ததும்,
“என்ன விஷயம் சம்மந்தி?” என்றார் வடிவேலன்.
“எங்க எல்லா பொண்ணுங்க கல்யாணமும் தோப்பு பக்க மண்டபத்தில தான் சம்மந்தி பண்ணோம். கீர்த்தன்யாவுக்கும் அங்கேயே பண்ணலாம்னு ஒரு எண்ணம். ஆனா, உங்க பக்கம் கொஞ்சம் ஆளுங்க ஜாஸ்தியா இருந்தா பொள்ளாச்சி டவுனுக்குள்ள பெரிய மண்டபம் பிடிக்கலாம்னு அண்ணன் சொன்னாப்ல. அதான் கலந்து பேசிடலாம்னு கூப்பிட்டேன்” என்றார் மணிகண்டன்.
“எங்க பக்கம் சொந்த பந்தங்க மட்டும் தான் சம்மந்தி கல்யாணத்துக்கு வருவாங்க. மத்தபடி தொழில் ரீதியான ஆட்கள் எல்லாம் ரிசப்ஷனுக்கு ஏற்பாடு பண்ணி வர சொல்ற மாதிரி தான் இருக்கோம். நீங்க அதே மண்டபமே பிடிங்க. பாத்துக்கலாம்” என்று விட்டார் வடிவேலன்.
ரிசப்ஷனா என்று மணிகண்டன் சற்றே அதிர்ந்தாலும் அவரிடம் அதைக் வெளிக் காட்டாமல் “ரிசப்ஷன் ஏற்பாடு எப்பங்க சம்மந்தி?” என்று கேட்க,
“அது கல்யாணம் முடிஞ்ச பின்ன பாக்கணும் சம்மந்தி. சர்வாக்கிட்டையும் அவனுக்கு ஸ்கெடியூல் எப்படின்னு பாத்து தான் முடிவு பண்ணனும்” என்றவர், அவர் குரலில் உள்ள தயக்கத்தை உணர்ந்து,
“ஏன் சம்மந்தி?” என்று கேட்க, “அதொண்ணுமில்ல சம்மந்தி.. ரிசப்ஷன் ஏற்பாடுக்கு எவ்ளோ செலவாகும்னு தான் யோசிக்கிறேன்” என்று மறைக்காமல் மணிகண்டன் சொல்லி விட,
அதைக் கேட்டு சிரித்த வடிவேலன் “சம்மந்தி… அதெல்லாம் வேண்டாம். ரிசப்ஷன் எப்படியும் கோயம்பத்தூர்ல நம்ம ஹோட்டல்லையே ஏற்பாடு பண்ணிக்கலாம். முக்கியமா தொழில் வட்ட ஆட்களுக்கு தான் ரிசப்ஷன் வைக்க பிளான் பண்ணதே. அதனால நீங்க செலவு பத்தி எல்லாம் யோசிக்காதீங்க” என்று தெளிவாகவே சொல்லி விட்டார் வடிவேலன்.
“சரிங்க சம்மந்தி. எங்க மத்த பொண்ணுங்களுக்கு ரிசப்ஷன் ரெண்டு பக்கமும் ஏற்பாடு பண்ணல. அதான் தெரியாததுனால கேட்டேன். நாங்க எதுவும் பண்ணனுமான்னும் சொல்லிடுங்க. நிச்சயம் பண்ணிடுவோம்” என்றார் எங்கே தான் பணத்திற்காக யோசித்து கேட்டு விட்டேன் என்று எண்ணிக் கொள்வாரோ என.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க கல்யாண வேலைகளை மட்டும் பாருங்க. ரிசப்ஷன் பின்னாடி பாத்துக்கலாம். அது முழுக்க முழுக்க எங்க பொறுப்பு” என்று விட்டார் வடிவேலன்.
“சரிங்க சம்மந்தி.. அப்புறம் இந்த கல்யாண பட்டெடுக்க போகனும்” என்று மணிகண்டன் அடுத்த விஷயத்தைப் பற்றி கேட்க, “எங்க வீட்லயும் சொன்னாங்க சம்மந்தி..” என்ற வடிவேலன், “என்னைக்கு போகலாம்? நல்ல நாள் பாத்துட்டீங்களா முகூர்த்த பட்டெடுக்க?” என்று கேட்டார்.
“ஹ்ம்ம்… இந்த வாரம் போக அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை போகலாம்னு என் சம்சாரம் சொன்னாங்க. உங்களுக்கு அந்த நாள் தோது படுமா?” என்று கேட்க, “வீட்ல பேசிட்டு சொல்றேன் சம்மந்தி” என்றதும் “சரிங்க சம்மந்தி கேட்டு சொல்லுங்க” என்றவர் அழைப்பை துண்டித்தார்.
அவர் சொன்னதை அண்ணனிடம் பகிர்ந்து கொள்ள, “நல்ல தரமான மனுஷ மக்க தான்” என்று பாராட்டிக் கொண்டார் நீலகண்டன்.
வடிவேலன் இன்பவள்ளியிடம் அழைத்து முகூர்த்த பட்டெடுக்கும் விஷயத்தை பற்றி சொல்ல, “அவுங்க சொன்ன தேதியே ஓகே தான். நம்ம சர்வாக்கு தோதான தேதியா?” என்று கேட்க,
“அவன் கிட்ட தான் கேக்கணும்” என்று வடிவேலன் கைகளை விரிக்க, “கேட்டு சொல்லுங்க” என்று வைத்து விட்டார் இன்பவள்ளி.
வடிவேலன் மகனிடம் கேட்க சற்று யோசித்தவன், “அன்னைக்கு சென்னை ஹோட்டல்ல ஒரு ஃபன்ஷன் ப்பா. என்னால வர முடியாது. நீங்களே போய்ட்டு வந்துடுங்க” என்று சொல்லி விட்டான்.
இன்பவள்ளியிடம் இதனைச் சொல்ல, “க்கும்… இவனுக்குத் தான் கல்யாணம்ன்ற நினைப்பு இவனுக்கு கொஞ்சமாச்சும் இருக்கா?” என்று அவர் பொறும,
“சான்ஸ் இருந்தா வரேன்னு தான் சொல்லி இருப்பான் வள்ளி” என்று மகனுக்காக பேசிய கணவரிடம் “ஆமாமா.. அப்படியே சான்ஸ் கிடைச்சா அதை கப்புன்னு பயன்படுத்துற ஆளு தான் உங்க மகன்” என்று கடுப்புடன் சொல்லியவர்,
“அந்த தேதிலையே போகலாம். ஆனா, மருமக பொண்ணும் வரணும்” என்று விட்டார் முடிவாக.
“அதெப்படி? அவுங்க ஒத்துக்கணுமே?” என்று வடிவேலன் யோசனையுடன் சொல்ல, “அதெப்படி ஒத்துக்காம போவாங்கன்னு நானும் பாக்குறேன். எந்த காலத்துல இருக்காங்க. பாவம் கீர்த்தி மருமக. ரொம்ப கட்டுக்கோப்பா வளத்து வச்சிருக்காங்க” என்று வருங்கால மருமகளுக்காக பரிதாபப் பட்டவர்,
“நீங்க கீர்த்தி அப்பா கிட்ட பேசி, சம்மந்தி அம்மா நம்பர் வாங்கி கொடுங்க. நான் பேசுறேன்” என்று சொல்லி விட, வடிவேலனும் மனைவியின் முடிவிற்கே விட்டு விட்டார்.
தெய்வானையுடன் அன்று மாலையே பேசிய இன்பவள்ளி “பட்டெடுக்க கீர்த்தியையும் கூட்டிட்டு வாங்க சம்மந்தி. அவளுக்கு பிடிச்ச மாதிரியே எடுத்துடலாம்” என்று அவர் மறுக்க முடியாதபடி சொல்லி விட, அவரிடம் எப்படி மறுக்க முடியும் என்று தெய்வானையும் சற்று தயங்கி,
“அவுங்க அப்பா, பெரியப்பா கிட்ட கலந்து பேசிட்டு சொல்றேன் சம்மந்தி” என்று தெய்வானை சொல்ல, ‘சம்மந்தி அம்மாவும் பாவம் தான்’ என்று எண்ணிய இன்பவள்ளி,
“அதெல்லாம் சரின்னு தான் சொல்லுவாங்க. பட்டெடுக்க தானே” என்க , “சரிங்க சம்மந்தி” என்ற தெய்வானை கணவரிடம் இதைச் சொன்ன போது, மணிகண்டன் வெகுவாக தயங்கினார்.
ஆனால், நீலகண்டன் தயங்கவில்லை.. “சம்மந்தி அம்மாவே சொல்லிட்ட போது எப்படி மறுக்க? எதுவும் தப்பா கிப்பா எடுத்துக்க போறாங்க! ஒரு நாள் தானே கூட்டிட்டு போய்ட்டு வந்திடலாம்” என்று விட்டார்.
கீர்த்தன்யா இதனைக் கேட்டு மயங்கி விழாத குறை தான்! அக்காக்கள் யாரும் இப்படி எல்லாம் சென்றதாக அவளுக்கு நினைவில்லை! ஆனால், அவளுக்கு இந்த வாய்ப்பு அவளின் மாமியார் மூலம் கிடைத்திருக்க அதற்கு அவளின் கண்டன் நம்பர் ஒன் ஒப்புக் கொண்டது தான் மிகப் பெரிய ஆச்சர்யத்திற்குறிய விஷயமாகிப் போனது.
கூடவே, மெல்லிய படபடப்பும்! ‘அவனும் வருவானோ?’ என்னும் கேள்வி எழ, ‘வந்தால்…..’ என்று சிந்தித்தவளுக்கு முகம் இப்போதே சிவந்து விட்டது!
“எனக்கு என்னமோ அவுங்க வர மாட்டாங்கன்னு தான் தோணுது நிகி” என்றவளை, “போச்சு.. வாய வைக்காத! உன் மாமியார் உன்னையும் கூப்பிடுறாங்கன்னா அவரு வராமையா?” என்றவள், “நான் வேணும்னா சக்ரவர்ஷினி அக்கா கிட்ட கேட்கவா” என்று கேட்க,
“அதெல்லாம் வேணாம். விடு பாத்துக்கலாம். எனக்கு என்னமோ வர வாய்ப்பில்லன்னு தான் தோணுது” என்றவள் ஜவுளி எடுக்கும் தினத்தன்று அவனின் வருகையை எதிர்பார்க்கவில்லை!
யாரும் எதிர் பாராத விதமாக பட்டெடுக்கும் தினம் அன்று கடையில் வந்து நின்றான் சர்வேஷ்வரன்.
மகனைக் கண்டு இன்பவள்ளிக்கே அதிர்ச்சி தான். “வா வான்னு கூப்பிட்டப்ப எல்லாம் எனக்கு அன்னைக்கு வேலைமா வல்ல.. நொல்லன்னு… சாக்கு சொன்னான் உன் அண்ணங்காரன். இப்ப திடுதிப்புன்னு வந்து நிக்குறான்” என்று மகளிடம் ஆச்சர்யமாக சொல்ல,
அவன் வந்ததும் மணிகண்டன் நீலகண்டன் என அனைவரும் பரபரப்பாக அவனை வரவேற்க அவர்களை எல்லாம் கடந்து கீர்த்தன்யாவிடம் பாயத் துடித்த பார்வையை முயன்று அடக்கினான்.
அவனுக்கும் வர வேண்டும் என்கிற எண்ணம் எல்லாம் இல்லை! ஆனால், நேற்று மாலை தான் தந்தை கீர்த்தன்யாவும் வரும் விஷயத்தை சொல்லி இருந்தார்.
அதைக் கேட்டவனுக்கு ஆச்சர்யம் தான். அவள் வர மாட்டாள் என்று யூகித்து தான் தானும் வரவில்லை என்று சொல்லி இருந்தான் அன்று! ஆனால், இன்று அவள் வருகிறாள் என்று அறிந்ததும் சற்றே யோசித்தான்.
“உங்க அம்மா தான். மருமக பொண்ணும் வரணும்னு சொல்லிட்டா. அதான் கூட்டிட்டு வராங்க” என்று வடிவேலன் சொல்ல, “அம்மா என்கிட்ட சொல்லவே இல்ல” என்று கேட்டவனுக்கு தாயின் செயலை எண்ணி புன்னகை தான்!
“அவ நீ வரலேன்னு சொன்ன கடுப்பல சொல்லல சர்வா. என்னையும் சொல்ல விடல! ஆனா, நான் தான் என் பையன் பாவம்னு மனசு கேக்காம சொல்லிட்டேன்” என்று கிண்டல் குரலில் வடிவேலன் சொல்ல,
“தட்ஸ் ஓகே ப்பா!” என்று சொல்லியவன் அழைப்பை துண்டித்து விட்டான். இந்த நொடி வரை தானும் வரேன் என்று ஒரு வார்த்தை கூட யாரிடமும் சொல்லி இருக்கவில்லை.
சொல்லாமல் வந்து நின்றவனை கண்டு அனைவருக்கும் சற்று அதிர்ச்சி தான் என்றாலும் என்ன சொல்லி விட முடியும் என்று அமைதியாக இருந்தனர்.
அதுவும் கீர்த்தன்யா… அவன் வந்து நின்றதும் கண்களை அகல விரித்து அவனை பார்த்த விதத்தில், “நைஸ் ரியாக்ஷன்” என்று குறும்பாய் எண்ணிக் கொண்டான் சர்வேஷ்வரன்.
அன்னையின் அருகே அமர்ந்திருக்கும் அவளிடம் மெல்லிய தலை அசைப்பை மட்டும் சிந்த, அப்போது தான் அவன் மீதிருந்த பார்வையை அகற்றினாள்.
“ட்ரெஸ் செலக்ட் பண்ணியாச்சா?” என்று அவன் லகுவாக அன்னையிடம் கேட்டபடி அவளருகில் இருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
“ஹ்ம்ம்.. வரதுக்கு வழி தெரிஞ்சுடுச்சா” என்று இன்பவள்ளி மூக்கை சுருக்க, “வேலை முடிஞ்சது. அதனால வரவும் முடிஞ்சது” என்று முடித்துக் கொண்டவன் அவர் முறைப்பதை கண்டு,
“நீங்க மட்டும் சொன்னீங்களா என்கிட்ட?” என்று கீர்த்தன்யாவிடம் பார்வையை ஒரு நொடி பதித்து கேட்க, அதில் திருதிருவென முழித்தார் இன்பவள்ளி.
அவர்களின் பேச்சை கவனித்த கீர்த்தன்யாவிற்கு ஒரு புறம் சிரிப்பும் மற்றொரு புறம் தன் மாமியாரை வாயடைக்க வைக்கும் தன் வருங்கால கணவனின் பேச்சும் சுவாரஸ்யத்தை கொடுக்க, புன்னகையுடன் பார்த்திருந்தாள்.
கீர்த்தன்யா வீட்டில் பெரியோர்கள் அனைவரும் இருப்பதனால், அவளிடம் நேரடியாக பேசிக் கொள்ளவில்லை சர்வேஷ்வரன்.
ஆனால், முகூர்த்த பட்டினை எடுக்கும் போது நீலகண்டன், மணிகண்டன் இருவரும் புடவையையும் புடவையின் விலையையும் மற்ற பெண்களுக்கு எடுத்த நிறத்தையும் ஒப்பிட்டு பேசி பார்த்துக் கொண்டிருக்க,
“உனக்கு எது பிடிக்குதோ அதையே எடு கீர்த்தன்யா” என்று அனைவரின் முன்புமே சொல்லி விட்டவன், “அவுங்களுக்கு பிடிச்ச மாதிரி சொல்லுவாங்க. அந்த மாதிரி டிசைன்ஸ் காட்டுங்க” என்று பணிப் பெண்ணிடமும் சொல்லி விட, கண்டன்கள் எல்லாம் அமைதிகண்டன்கள் ஆகிப் போனார்கள்!
கீர்த்தன்யாவிற்கு அவன் தந்தை மற்றும், பெரியப்பா முன்னிலையிலேயே இதைச் சொன்னது திகைப்பாய் இருந்தாலும் தன் விருப்பத்திற்கு முதல் முறை ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி கண்கள் கலங்கும் போல் இருந்தது அவளுக்கு.
சுற்றி இருந்தவர்களை எண்ணி கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள், அருகே அமர்ந்திருப்பவனிடம் “தேங்க்ஸ்” என்றாள் மெல்லிய குரலில்.
அதில் அவளின் புறம் பார்வையை திருப்பியவன், “பின்னாடி மொத்தமா உன் தேங்க்ஸ்ஸை வாங்கிக்குறேன். இப்ப சேரி சூஸ் பண்ணு” என்றான் கனிவாக.
அவளின் கண்ணீர் அவன் கண்களில் இருந்து தப்பவில்லை. ஒரு ஆடை தேர்ந்தெடுப்பதில் கூடவா இவர்களின் ஆதிக்கம் இருக்க வேண்டும்? என்று எரிச்சலாக இருந்தது அவனுக்கு.
அதனால் தான் அவர்களின் முன்பே சொல்லி விட்டான். அதைக் கேட்டு அவர்களும் அமைதியாகி விட, கீர்த்தன்யாவின் பார்வை முதல் முதலாக சுதந்திரமாக சுற்றி வந்தது அங்கே அடுக்கி வைத்திருந்த பட்டின் மேல்!
அதைக் கண்ட இன்பவள்ளிக்கே மனம் கனத்து போனது. மெல்ல மகனிடம் திரும்பி, “நல்ல வேள நீ வந்த சர்வா. இந்நேரம் வரைக்கும் அவுங்க அப்பாவும்,பெரியப்பாவும் தான் எல்லாம் பாத்து பாத்து எடுத்தாங்க. மருமகளும் அவுங்க அம்மாவும் பொம்மை மாதிரி உக்காந்து இருந்தாங்க” என்றார் கனத்த மனதுடன்.
சர்வேஷ் அமைதியாக தலையை மட்டும் அசைக்க, இன்பவள்ளியோ “முகூர்த்த புடவை அவுங்க ரெண்டு பேர் இஷ்டப் படி எடுக்கட்டும் சம்மந்தி. நான் சக்ரவர்ஷினிக்கு லெஹங்கா எடுக்க மூணாவது மாடிக்கு போறேன்” என்று மகளுடன் எழுந்து கொண்டவர்,
“நீங்களும் வாங்களேன் சம்மந்தி அம்மா. உங்க பேத்தி நிகிதாக்கும் லெஹங்கா எடுக்கணும்னு சொல்லிட்டு இருந்தீங்க” என்று அவரையும் உடன் அழைத்துச் செல்ல ஆவன செய்தவர்,
“சர்வா நீயும் கீர்த்தியும் பொறுமையா செலக்ட் பண்ணிட்டு சொல்லுங்க. நாங்க வரோம்” என்று நகர்ந்து விட்டார் தெய்வானை மற்றும் மகளுடன்.
இங்கே கண்டன் சகோதரர்கள் மட்டும் இருந்து என்ன செய்ய? அதுவும் மகளும் மாப்பிள்ளைக்கும் நடுவில் நந்தி மாதிரியாக சென்று நிற்க முடியுமா என்று யோசித்தவர்கள்,
“நாங்களும் வேஷ்டி சட்டை எடுத்துட்டு வந்திடுறோம் மாப்பிள்ளை. நீங்க பாருங்க” என்று வேறு வழியே இல்லாமல் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தனர் இருவரும்.
அவர்கள் நகர்ந்தது கீர்த்தன்யாவின் உடல்மொழியில் இருந்த இறுக்கம் தளர்வதை நன்றாக உணர முடிந்தது அவனால்!
“ப்ரீத் அவுட் கீர்த்துமா” என்றவன் குரல் இதமாய் அவளை வருட, மெல்ல பனித்த விழிகளுடன் அவனை திரும்பி பார்த்தவளுக்கு அவனின் ‘கீர்த்துமா’ எனும் விளிப்பு மனதை அப்படியே அள்ளிக் கொண்டது.
பெருமூச்சை விட்டுக் கொண்டவள், “நீங்க வருவீங்கன்னு எதிர் பார்க்கல” என்று மெல்லிய குரலில் சொல்ல, “கண்ண விரிச்சு என்னை பாத்தப்பவே புரிஞ்சுது” என்றான் இளநகை இதழ்களில் வளைய.
“ம்ம்… அப்பா பெரியப்பா முன்னாடி இப்படி சொல்லுவீங்கன்னும் எதிர் பார்க்கல” என்றவள், “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் குரல் கரகரக்க.
சட்டென்று அவள் மடிமேல் இருந்த கரத்தினை அழுந்த பற்றியவனின் தொடுகையில் அத்தனை ஆறுதலாய் உணர்ந்தாள் கீர்த்தன்யா. கூடவே, அவன் உள்ளங்கையின் வெம்மை அவள் கைவழி உடல் முழுவதும் பரவி சிலிர்ப்படைய வைக்க,
“ரிலாக்ஸ் கீர்த்து” என்றவன், “உனக்கு பிடிச்ச மாதிரி எப்படியும் உங்க அப்பாவும் பெரியப்பாவும் எடுக்கப் போறது இல்ல. அவுங்க எடுத்த போது உன் ஃபேஸ் காட்டுன ரியாக்ஷன்லயே தெரிஞ்சது. அதான் சொல்லிட்டேன்” என்றவன்,
“இப்ப உனக்கு பிடிச்ச மாதிரி எடுக்கலாம். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நான் இருக்கேன்ல கீர்த்துமா!” என்றவனின் சொற்களில் அளவில்லா நேசத்தை உணர்ந்தவளுக்கு உள்ளமெங்கும் தேனின் தித்திப்பு!
“நான் இருக்கேன்ல கீர்த்துமா” என்ற போது அவள் மனம் உணர்ந்த உவகைக்கு அளவே இல்லை!
“ஹ்ம்ம்..” என்றவள் அவன் பிடித்திருந்த தன் கரத்தின் மேல் பார்வையை பதிக்க, அவனோ அதனை விடாமல் “என்னைக்கும் விடுற எண்ணம் இல்ல” என்றான் புன்னகை முகமாய்.
அவன் வார்த்தைகள் யாவும் மயிலிறகாய் மனதை வருட, அவன் மேல் நேசம் கரை புரண்டோடியது கீர்த்தன்யாவிற்கு!