கண்ணம்மா! உன் முத்தமெல்லாம் காமத்துப்பாலில் வருவதில்லை,
நீ உன் பாரதியின் மேல் கொண்ட காதலின்பால் வருவது.
அறைக்குள் வந்தவள் தன் மடிக்கணிணி முன் அமர்ந்தாலும் பார்வை அவ்வப்போது சுசீந்திரனைத் தொட்டுத் தொட்டு மீண்டது. அவளுக்கு அவனிடம் சொல்ல வேண்டும் தன்னால் இந்தியா வர முடியாதென்று. ஆனால் சுசி அதற்கும் சண்டை இடுவானோ என்று ஒரு மனம் நினைத்த போதும் அவளது காதல் மனம் அதை மறுத்தது. ‘உன்னை அறியாதவனா அவன்?’ என அவளிடமே கேள்வி கேட்டது.
மொத்தத்தில் கண்கள் இரண்டும் கணிணியின் திரையில் இருக்க எண்ணங்களில் என்றும் போல அவளவனின் ஆட்சியே. இன்னமும் அவன் பேசியதில் கோபம் இருக்கிறதா என்றால் மூளை இல்லை என்றுதான் சொல்லியது.
கன்னத்தில் அன்று அவன் அறைந்ததில் உண்டான வலி அப்போதே மறைந்துவிட்டது, தன் பேச்சும் அன்று அதிகம் என மஹிமா உணர அவன் அறைந்தது இன்று மறந்தும் விட்டது. ஆனால் அவன் என்றோ தான் பேசியதாக சொன்ன வார்த்தைகள் மட்டும் இன்னும் மறக்க முடியாமல் வதைத்தது.
மீண்டும் அவனைப் பார்க்க அவன் சாய்விருக்கையில் சாய்ந்து படுத்திருந்தான். வந்தவன் உடை கூட மாற்றாமல் படுத்திருக்க மஹிக்கு ஏன், என்ன ஆயிற்று இவனுக்கு என்ற யோசனை வந்த போதும் எழுந்து சென்று கேட்க மனம் வரவில்லை. ஒரு மணி நேரம் கடந்தும் அவன் அசைவில்லாமல் இருக்க என்ன ஆயிற்று இவனுக்கு என எழுந்து அவனருகில் சென்றாள்.
அருகில் செல்லவும் தெரிந்தது அவன் முகமே சரியில்லை என்று. இன்னும் நெருங்கி சென்று பார்க்க உடலின் அசதி முகத்திலும் தெரிய என்னவாம் உடம்பில் இவனுக்கு எனும் சந்தேகம் தோன்ற நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். வைத்ததுமே அவள் கை உணர்ந்த சூடு சொல்லியது அவன் உறக்கத்தின் காரணத்தை. அத்தனை காய்ச்சலில் வந்து படுத்திருந்தான்.
அவள் அவனை நெற்றியிலும் கழுத்திலும் தொட்டுப் பார்த்தது கூட அவனுக்கு உணர்வு இல்லை. நல்ல உறக்கத்தில் இருந்தான். எதுவும் உணவு உண்டானா தெரியாது. மாத்திரை மருந்து என எதுவும் எடுத்தது போலும் தெரியவில்லை. மனம் மற்றவை எல்லாம் மறந்து அவனின் உடல் நிலை மட்டும் நினைக்கத் தொடங்கியது.
காலுறையை கழட்டியவள் கனமான கம்பளி போர்வை கொண்டு மூடி விட்டு மீண்டும் அவளறைக்கு வந்தாள். அறைக்குள் வந்தவளுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. உணவு கொடு என்று மூளை சொல்லிய போதும் மனம் மறுகியது.
‘அவன் உன்னை மற்றவரிடம் இழிவாக பேசியவன்’ என தன் இடத்திலேயே நின்று அவளின் காயம் பட்ட மனம் வாதாடினாலும், அவன் மீதான அன்பு அவளை அமைதியாக அமரவிடவில்லை.
மெல்ல எழுந்தவள் மீண்டும் அவனருகில் சென்று பார்க்க இன்னும் நல்ல நித்திரையில் இருந்தான். குற்றம், கோபம், வலி, வாக்குவாதம் என அனைத்தையும் ஓரம் காட்டியவள் ஒரு மனிதன் சக மனிதனுக்கு செய்யும் உதவி இது எனும் எண்ணத்தை மனதில் நிறுத்தி அவனுக்காக சீரகம் வறுத்து அரிசியுடன் சேர்த்து ஒன்றிரண்டாக உடைத்து உப்பு சிறிது சேர்த்து அதை கஞ்சியாக காய்ச்சினாள். காய்ச்சிய கஞ்சியை நன்கு இளஞ்சூடு வரும் வரை ஆற விட்டு ஒரு கிண்ணத்தில் தேக்கரண்டியுடன் எடுத்துக் கொண்டு மீண்டும் அவனருகில் சென்றாள்.
கிண்ணத்தை சாய்விருக்கையின் எதிரிலிருந்த நீண்ட காபி மேசையின் மேல் வைத்தவள் மெல்ல “சுசி” என அழைக்க அவனிடம் எந்த பதிலும் இல்லை. மீண்டும் அழைக்க அது அவன் செவியை சென்றடைந்தது போலவே இல்லை.
அவன் மேல் அவள் போர்த்தி விட்ட கம்பளியை மெல்ல விலக்கியவள் அவன் தோள் தொட்டு மெல்ல தட்டியபடி “சுசீ” என அழைக்க “ஹ்ம்ம்” எனும் மெல்லிய முனகல் சத்தம் மட்டுமே அவனிடமிருந்து வந்தது.
மீண்டும் அவனை அழைக்க மெல்ல கண் விழித்தான். விழித்தவன் கண்கள் இரண்டும் சிவந்து இருக்க முகம் சோர்ந்து தெரிய அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
‘இன்னும் குழந்தை மாதிரி இந்த சுசீ, சின்ன காய்ச்சல் தலை வலி வந்தாலும் தாங்கவே மாட்டான். அவனுக்கு உடம்பு நல்லா ஆகுறதுக்குள்ள நம்மள படுத்தி எடுத்து நமக்கும் உடம்பு பாதி கெட்டுடும். இந்த பாடு படுத்துறான். இவனையெல்லாம் எவ கட்டி கஷ்டப் படப் போறாளோ?’ என பல ஆண்டுகளுக்கு முன்பு ஜெயாத்தை புலம்பிய புலம்பல் இன்று அவள் காதுகளில் மீண்டும் ஒலித்தது.
‘கஷ்டப் படப் போறது நானேதான்னு தெரியாம போச்சே. தெரிஞ்சிருந்தா அன்னைக்கே சாமிகிட்ட ஒரு பெரிய வேண்டுதலை போட்டிருக்கலாம். இப்பவும் ஒண்ணுமில்ல பேசாம இவனுக்கு எந்தக் கோவில்லயாவது மொட்டை அடிக்கிறேன்னு வேண்டுதலை போட்டிருவோம்’ என நினைத்தவளை அவள் மனசாட்சி காரித் துப்ப ‘ச்ச, சும்மாவே இவனை பார்க்க முடியாது இதுல மொட்டை வேற போட்டா இவன் முகத்தை பார்க்குற நம்ம எல்லாம் ரொம்ப பாவம். ‘ என அவளுக்கு அவளே கௌன்ட்டர் கொடுத்துக் கொண்டாலும் விழிகள் இரண்டும் அவன் முகத்திலேயே நிலைத்திருந்தது.
மெல்ல கண் விழித்தவன் அருகில் நின்றிருந்த மஹியை பார்க்கவும் கேள்வியாய் விழித்தவன் “என்ன மஹி?” என்றான்.
“சுசி காய்ச்சல் அடிக்குது. கொஞ்சமா இந்த கஞ்சியை குடி. மாத்திரை போடணும்.” என்றாள் அவன் முகம் பார்த்து.
ஒரு வாரத்திற்கு பிறகு இருவருக்குமான நீண்ட உரையாடல். அவனுக்கு அதற்கும் கோபம் வந்தது. ‘எப்ப நான் முடியாம போவேன் என் கூட பேசலாம்ன்னு இருந்தாளா? ஒருவேளை இன்னைக்கு காய்ச்சல் வராம இருந்திருந்தா? வழக்கம் போல என்ன ஒரு மண்ணு கல்லு மாதிரி கூட மதிச்சுருக்க மாட்டா. இப்ப மட்டும் என்னவாம், போடி.’ மனம் முழுவதும் கோபம் நிறைந்திருக்க திட்டிக் கொண்டிருந்தாலும் அவன் கண் முன் நிற்பவள் அவனின் கண்ணம்மா ஆயிற்றே.
மனதிற்குள் ஏதேதோ பேசிய அவனது வாய் சத்தமாக சொல்லியதென்னவோ “ஹ்ம்ம், பசிக்குது. ரொம்ப தலை வலிக்குது.” என்பது தான்.
“மாத்திரை முன்னமே போட்டிங்களா? போட்டிங்கன்னா லாஸ்ட் எப்ப போட்டீங்க?” என்றவள் என்ன நினைத்தாளோ எதிர் இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி கஞ்சியை தேக்கரண்டியில் சிறிது எடுத்து அவனின் உதட்டருகே கொண்டு செல்ல அவளின் விழிகளை ஒருமுறை சந்தித்தவன் “இனிமே தான் போடணும்” என்றபடி அவள் கொடுத்த உணவை வாங்கி கொண்டான்.
சிறிதளவே உண்டவன் காய்ச்சல் மாத்திரையை உண்டுவிட்டு அப்படியே சுருண்டு படுத்துவிட்டான். அவனது ஆறேகால் அடி நீள உடலுக்கு அந்த சாய்விருக்கையின் நீளம் போதவில்லை என்பதே நாட்கள் பல கடந்து அவளுக்கு இன்று தான் உரைத்தது.
‘நானா அவனை இங்கு வர சொன்னேன். அவனை அங்கையே இருக்க சொல்லிட்டு தானே வந்தேன். இவனை யாரு இந்த வீட்டுக்கு வர சொன்னது. இப்ப இன்னும் பிரச்சனை கூடத்தான் செய்யிது. இவனால..’ என மனதிற்குள் இப்பொழுதும் அவனை திட்டியவளுக்கு, இதே வீட்டை அவன் கை கோர்த்து பார்க்க வந்ததும் அதன் பின்னான நேரமும் நினைவில் வர அவளது முகம் முழுவதிலும் விரிந்த புன்னகையே.
அன்று அவர்களின் வாசம் லிவர்பூலில். அவனது அலுவலும் அங்குதான். அவளுக்காக மட்டுமே மான்செஸ்டருக்கு குடி புகும் எண்ணம். அவள் கல்லூரி இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்க இருக்க, அவளுக்காக வீட்டை இங்கு மாற்ற எண்ணினான். அவனுக்கு ஒரு மணி நேர பயணம் அலுப்பை கொடுக்காது என அரசியல் வாதியாய் மாறி அவன் வாக்குறுதி கொடுத்தே அழைத்து வந்திருந்தான்.
இங்கிருந்து பல்கலைக் கழகம் நடக்கும் தூரம் மட்டுமே. ஒற்றை படுக்கை அறை தான் என்றாலும் இருவருக்குமான அந்த இடம் அழகிய சித்திரமாய் தோன்றியது.
பார்த்த அன்றே சொல்லிவிட்டான் நீண்டு இருந்த பிரெஞ்சு சாளரத்தின் அருகில் அவன் மனம் கவர்ந்த ஜாதி மல்லி செடி வேண்டும் என்று. இங்கு அரிதாய் கிடைக்கும் வாசனை மலர்களில் அதுவும் ஒன்று. அவனுக்கு அதன் மேல் ஏனோ ஒரு பித்து. பூக்களும் தோட்டமும் என்றும் அவன் விருப்பம் தானே.
“சுசி, அப்போ எனக்கு பிடிச்சதும் செஞ்சு தருவியா?” என்று அவன் முகம் பார்க்க, அவனோ
“கண்டிப்பா இந்த சுவர்ல சூரியன் போல டிசைன் பண்ணி நம்ம போட்டோ எல்லாம் ஒட்டித் தரேன். போதுமா? ஆனா வீட்டை காலி பண்ணும் போது பெயின்டிங் செலவை நீ தான் குடுக்கணும்.” என்று சிரித்தவனிடம் அன்று முழுவதும் அவன் தனக்காக செய்ய வேண்டுமென்று வம்பு செய்தாள்.
வீடு பார்த்து பிடித்திருக்கிறது என சொல்லி விட்டு வந்த பின்னும் இருவருக்கும் ஏனோ பல கற்பனைகள். திருமணமாகி கணவன் மனைவியாய் இருவரும் குடிபுகும் முதல் வீடு. அதை சுற்றிய பேச்சுக்கள். காதலும் கற்பனைகளும் கணக்கில்லாமல் கலந்திருக்க காட்சிகளும் விரிந்தது.
“அதெல்லாம் சரி இந்த பெட் ரூமுக்கு எதுவும் டிசைன் சொல்லேன். பார்த்ததும் பத்திக்கணும் போல இருக்கணும்.” என்றான் சரசமாய்.
“என் லேப்ல இருந்து பாஸ்பரஸ் கொண்டு வந்து வைக்கிறேன். நீ பார்த்ததும் என்ன திறந்து வச்சதுமே பத்திக்கும். என்ன வைக்கவா?” வாகாய் அவன் கையில் சாய்ந்தபடி கேட்டவளை “ஹ்ம்ம் அன்னைக்கு லண்டன் பிரிட்ஜ்ல நீ பத்திக்கிட்டது போலவா?” என்று அவன் சொல்லும் நேரம் அங்கு சிவந்தது அந்தி வான மேகம் மட்டுமல்ல அவளது முகமும் தான்.
இப்படி எல்லாம் கற்பனையோடு காத்திருக்க, நடந்ததென்னவோ வேறாகிப் போனது. அவன் சதீஷின் காதல் பார்வைகளிலிருந்து அவன் மஹிமாவை காக்க பேசியவை எல்லாம் சொல்லி அவளின் மனதை உடைத்திருக்க, தனிமை வேண்டும் தன் காயங்கள் ஆற என்று அவனோடு சண்டையிட்டு, பேசவும் பார்க்கவும் கூட மறுத்து இதே வீட்டினில் தனியாக குடியேற இன்றுவரை அவளின் காயமும் ஆறவில்லை மனதும் சமன்படவில்லை.
சமன்படாத மனதை சரியாக்க என நினைத்து அவள் செய்தவைகள் எல்லாம் அவனை இன்னுமின்னும் காயப்படவே செய்தது. அதுவும் அவளுக்கு வலிக்கத்தான் செய்தது. ஆனால் கேட்டால் நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டாள்.
நடந்தவைகளை எல்லாம் நினைக்க நினைக்க அவன் பேசியது தவறென்றால் அதற்கான தண்டனை என்ன? தான் செய்தவைகள் எல்லாம் அவனுக்கான தண்டனையா? இல்லை காயம் பட்டுப் போன அவளின் மனதை ஆற்ற அவள் அப்படி மாறிப் போனாளா? அவளே அறிந்திருக்கவில்லை. ‘நீ என்னை பெண் இல்லை என்று சொன்னாய் நான் செய்து காட்டிவிட்டேன்’ என்பது பல அவள் செய்ததெல்லாம் ஒரு சில நேரம் தவறாகத் தோன்றியது.
அவன் என்னை கொலைகாரி என்றிருந்தால் கொலை செய்திருப்பேனா? இல்லையே. பெண் இல்லை என்றதற்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்வினை தன்னிடம்? இதற்கான பதில் தான் அவள் மனம் அறிய நினைப்பது.
யார் யாரோ எப்போதோ பேசியதெல்லாம் நினைவுகளில் நிறைந்து மனதில் எங்கோ அழுத்திக் கொண்டிருக்க, காதல் கணவன் எறிந்த கல் சரியாக அதை தாக்கி வெடிக்க செய்து விட்டது. இதை எல்லாம் சரி செய்வதெப்படி? வெடித்து சிதறிய வான வேடிக்கையாய் அவள் நினைவுகள் இருக்க அவை சிறிதும் இன்பம் தரவில்லையே? ஏன்?