“சாமி கும்பிட போனேன். அப்போ வந்திருக்கீங்க. நான் கவனிக்கலை…” அவன் கேட்டதற்கு தான் பதில்.
ஆனால் முகத்தில் அதே புன்னகை. அந்த புன்னகையில் என்னவோ குறைவதை போலவே ஒரு பிம்பம் குருஆர்யன் மனதில்.
முதல்நாள் தன் பேச்சில் அவள் காயப்பட்டிருப்பது புரிந்தது. ஆனால் அவனால் வேறு எப்படியும் இருக்கமுடியவில்லை.
அவள் முகம் பார்க்க, சாலையை பார்க்க என்றுதான் காரை செலுத்தினான் குருஆர்யன்.
“ரோட்டை பார்த்து காரை ஓட்டுங்க. என் முகத்துல என்ன இருக்கு?…” என்று கிண்டலாகவே நனியிதழ் கேட்க,
“ப்ச், என்னவோ இருக்கு. அதான்…” என்றவன்,
“நான் பத்துநாள்ல நார்த்க்கு கிளம்பனும் இதழ்…” என்றான் ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன்.
“ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சா?…”
“ம்ஹூம். அங்க லொக்கேஷன் பார்த்துட்டாங்க. நான் போய் பைனல் பண்ணனும். சில இடங்களுக்கு பர்மிஷன் தேவையிருக்கும். அதையும் கவனிக்கனும்…”
“ஓஹ்…” என்றவள் மௌனமானாள்.
“இதெல்லாம் அசோஷியேட்ஸ் பார்த்துப்பாங்க தான். ஆனா என்னோட மூவிக்கு நான் தான் பார்க்கனும். என்னோட திருப்திக்கு…” என்றான்.
அவனிடம் வேலை செய்வது எத்தனை கடினம் என்று பெருமிதமாய் நேர்காணலில் எத்தனைபேர் சொல்லியிருக்கிறார்கள் என்று அவளுமே அதனை எல்லாம் பார்த்திருந்தாள்.
“ஓகே, போய்ட்டு வாங்க. பெஸ்ட் ஆஃப் லக்…” என்று புன்னகையுடன் வாழ்த்த,
“நான் இப்ப உனக்கு தேங்க்ஸ் சொல்லனுமா?…” என்று முறைக்க,
“விஷ் பண்ணினாலும் கோபமா? எதெதுக்கெல்லாம் கோபம் வரும்ன்னு ஒரு லிஸ்ட் போடுங்க. கவனமா இருந்துக்கறேன்…” அதையும் கேலியாய் சொல்ல அவள் பேசியதை கேட்டாலும் அவனின் பார்வை எதிரே சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் தான்.
“என்ன ஸ்லோவாகிட்டீங்க?…” என்றாள் நனியிதழ் அவன் கைகளில் வேகம் குறைந்ததை கண்டு.
“இதே ஸ்கூட்டி தானே நீ யூஸ் பண்ணினதும்?…” என்றான் அவளிடம் திடீரென்று.
இதை நனியிதழ் எதிர்பார்க்கவில்லை. தலையை மட்டும் அசைத்தவள் அவனிதழ்களில் நெளிந்த புன்னகை கண்டு,
“ஞாபகம் இருக்கா?…” என்றாள் அவனிடம்.
“மறக்கலை…” என்றவன் முகத்தில் இப்போதும் அந்த குறுநகை.
“மாந்தளிர் பச்சைல குர்தி போட்ருந்த. ரைட்? அப்போ நீ இவ்வளோ பேசுவன்னு எனக்கு தெரியாது…” என்று வேறு சொல்ல,
“என்ன கேட்கறீங்க அண்ணி நீங்க? இதுவரைக்கும் மேடம் வீட்டுல இருந்தாங்க. ரெஸ்ட் எடுக்க டைம் இருந்துச்சு. கல்யாணம் முடிஞ்சு இன்னைக்கு தான பர்ஸ்ட் டைம் ஹாஸ்பிட்டல் வராங்க. அதான் டயர்ட்…” என்றாள் கீதா கிண்டலுடன்.
“அடி வாங்குவீங்க கீதாக்கா…” என்று அவளின் கையில் ஒரு போடு போட்டவள்,
“வேற வேலை இல்லையா உங்களுக்கு?…” என்றாள் இருவரையும் பார்த்து.
“அப்படியே ஆரி பாஷை ஒட்டிருச்சு. அவன் கேட்கிற மாதிரியே…” என்று மதுவும் கேலி பேச,
“ஸோ வாட்?…” என்றாள் நனியிதழ் அவர்களிடம்.
“பார்ரா பாப்பாவுக்கு கோவத்தை?…” என தங்கையின் கன்னம் கிள்ளி கொஞ்சிய கீதா,
“வாங்க போகலாம். சித்தப்பாவும் வந்திருவாங்க…” என்று மதுவை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.
இரவு வேலை முடித்துக்கொண்டு நனியிதழ் கிளம்ப கீதா காத்திருந்தாள் அவளுக்காக.
காலை தன்னை விட்டுவிட்டு கிளம்பி சென்றவனிடமிருந்து எவ்வித அழைப்பும் இல்லை.
எதிர்பார்ப்பை துடைத்துவிட்டு அவனுக்கு கிளம்பிவிட்டதாய் செய்தி மட்டும் அனுப்பிவிட்டு கீதாவுடன் வீடு வந்துவிட்டாள்.
நள்ளிரவு போல வீடு வந்தவனின் அணைப்பில் கண் விழித்தவள் அவன் கைகளில் மெல்ல நெகிழ,
“இன்னைக்கு டே எப்படி போச்சு இதழ்?…” என குருஆர்யன்.
“நாளைக்கு சொல்லவா? தூங்கறேன்…” என்றாள் அவன் புறம் திரும்பி.
சுத்தமாய் முதல்நாளும் உறக்கமில்லை. அத்தனை நாட்கள் மருத்துவமனையில் இல்லாததால் அவளிடம் சிகிச்சை பெறுவோர் என்று ஒவ்வொன்றாய் பார்த்து, மருத்துவமனையிலும் ஓய்வில்லை.
கண்கள் உறக்கத்திற்கு கெஞ்ச அவனின் கழுத்தில் கைகொடுத்து முகம் புதைத்துக்கொண்டவளின் கெஞ்சல் குரலில் உடல் குலுங்க புன்னகைத்தவன்,
“ஓகே, குட்நைட்….” என்றான் சிரிப்புடன்.
“என்ன?…” என்றவள் அதிர்வில்,
“அநியாயத்துக்கு அழகா பார்க்காதடி நீ…” என்று சொல்லியவன் இதழ்கள் அவளின் கன்னத்தில் அழுத்தம் கூட்டி விலகி அமைதியாக, வாகாய் அவனின் கைகளுக்குள் உறங்கினாள் நனியிதழ்.
மறுநாளே ஏழரை குருமூர்த்தி இல்லம் புகுந்தது. அவனின் வரவை நனியிதழ் எதிர்பார்க்கவே இல்லை.
அன்று மாலையே வீடு வந்து சேர்ந்திருந்தாள் கீதாவுடன். வீட்டில் அனுஷா, தமயந்தி மட்டுமிருக்க, தணிகாச்சலம் நிதீஷுடன் வந்திருந்தார்.
“வாம்மா நதி…” என்று அழைத்த தமயந்தி கீதாவிடம் கண்ணை காண்பித்து உள்ளே செல்லுமாறு கூற நிதீஷ் தாமதிக்கவே இல்லை.
“என்னை ஞாபகமிருக்கா?…” என்று நனியிதழ் முன் வந்து நின்று கேட்டவனின் குரல் கொண்டு தான் அவனை அடையாளம் தெரிந்தது.
அதுவரை தணிகாச்சலத்துடன் வேறு யாரோ வந்திருப்பதாக சாதாரணமாய் நின்றவளுக்கு அவனின் வரவு அதிர்ச்சி தான்.
அதனை அடக்கியவள் இங்கே வரை இவனுக்கு என்ன வேலை என்று எரிச்சலாக அவனின் பேச்சுக்களும், செய்கைகளும் ஞாபகம் வந்து முகம் சுளித்து போனது.
“ஞாபகமில்லை. யார் நீங்க?…” என்றாள் வெடுக்கென்று.
“நதி இவன் என் தங்கச்சி பையன், நிதீஷ். யுஎஸ்ல இருந்து இன்னைக்கு தான் வந்திருக்கான். வந்ததும் உங்க கல்யாணத்துக்கு நான் வராம போய்ட்டேனேன்னு பார்க்க கிளம்பினா இவனும் வரேன்னான். அதான்…” என்றார்.