“சிம்பிளா காது குத்தை வச்சும் எவ்வளோ திருஷ்டி பாரேன்…” என சொல்ல குருஆர்யன் மகளை சோபாவில் கிடத்தி அப்போது தான் காதை பார்த்தான்.
அன்றுதான் மகளுக்கு காதணி விழா செய்திருக்க மகள் அங்கே லேசாய் வலிக்கவும் கைகொண்டு தேய்த்ததில் வலி அதிகம் தந்திருக்கவேண்டும் என்று புரிந்துபோனது.
“ம்மா, எண்ணெய் எடுத்துட்டு வாங்க. காது தான் வலிக்குது போல. நான் கவனிக்கவே இல்லை…” என்று சொல்லியவன் எண்ணெய் போட்டுவிட்டு காதில் ஊதிவிட அழுகை குறைந்து சிரித்தாள் ஆர்யாவின் மகள்.
“பாரேன் இவ சிரிப்பை?…” என்று தமயந்தியும் அமர்ந்துகொண்டு,
“உன்னை மாதிரியே பன்றா ஆரி…” என்று சொல்ல பூரிப்பில் விகசித்தது அவனின் முகம்.
“இந்த காயம் எப்போ ஆறும்? ரொம்ப வலிக்கும்ல குழந்தைக்கு? லேட்டா குத்திருக்கனுமோம்மா?…” என்று பேச பேச தமயந்தி மகனுடன் பேச்சில் கலந்து போனார்.
இத்தனை பொறுமை மகனுக்கு தன் பேத்தியின் விஷயத்தில் மட்டும் தான் என்று மகிழ்ந்தார்.
அவனின் குழந்தை கால விளையாட்டுக்களை, விஷயங்களை அவர் சொல்ல சொல்ல இவனும் கேட்டு மகளுடன் ஒப்பிட்டு பார்த்து என்று பேச்சுக்களுடன் சோபாவில் சாய்ந்தவன் மகளின் இரு கைகளையும் பிடித்தபடி அப்படியே உறங்கி போனான்.
கவிதைகளின் பிறப்பிடம் போல் இருவரின் உறக்கமும் ஹைக்கூ கொண்டாட்டம்.
அதிகாலை எழுந்து வந்த குருமூர்த்தி மட்டுமல்லாது மொத்த குடும்பமும் அதனை தான் புன்னகையுடன் பார்த்தனர்.
குருஆர்யனின் கழுத்தின் இருபுறமும் குழந்தையின் இரு கைகளும் இருக்க, ஆர்யாவின் ஒரு கை மகளின் தலையையும், முதுகையும் பற்றி இருக்க பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.
“புயல் பூவானதுன்னு இதை தான் சொல்லுவாங்க போல?…” என்று பரத் சொல்ல,
“ஷ்ஷ் கேப்சர் பண்ணுங்க…” என்றாள் கீதா.
“இந்தநேரம் பார்த்து நம்ம சிம்மசொப்பனம் என்ட்ரி குடுக்கனுமே?…” என்று சொல்லி முடிக்கவில்லை நரசிம்மன் ப்ரவனுடன் வந்து சேர்ந்தார்.
மறுநாள் கீதாவின் வளைகாப்பு இருக்க அதுவிஷயமாக வெளியில் கிளம்பியவர்கள் குருமூர்த்தியையும் அழைத்து செல்ல வந்துவிட்டனர்.
“எல்லாரும் முழிச்சிட்டாங்க போல சித்தப்பா….” என்றபடி வந்தவன் கண்கள் அகன்றது அவன் கண்ட காட்சியில்.
எப்போதும் மகளை தூக்கிக்கொண்டு ஊர்கோலம் செல்பவன் தான். ஆனாலும் இந்த கோலம் அழகாய் காட்சி தந்தது.
“சித்தப்பாவை கூப்பிடவா?…” என்றாள் அவள் மிரட்டல் போல.
“ப்ச், இப்ப என்ன இங்க வேடிக்கை? போங்க போங்க. தூங்கறவங்களை போய் வச்ச கண்ணெடுக்காம பாத்துட்டு…” என்று சொல்லியவராலும் கண்களை பிரிக்க முடியவில்லை.
ரகசியம் போல அவர் கிசுகிசுக்க அனைவருக்குமே சிரிப்பு. இதில் குழந்தையின் உறக்கம் லேசாய் கலைவதை போலிருக்க,
“போங்க போங்க. மருமகன் முழிச்சாருன்னா வேற வேலை இல்லையான்னு கேப்பாரு…” என்று அனைவரையும் சத்தமின்றி விரட்டி குருமூர்த்தியை அழைத்துக்கொண்டு கிளம்பினார் நரசிம்மன் நிறைந்த மனதுடன்.
அன்று கீதாவின் வளைகாப்பு. அனைவரும் கிளம்பி கீழே தயாராக இருக்க இங்க குழந்தையை கிளப்புவதற்குள் இருவரும் ஓய்ந்து போனார்கள்.
ஒருவழியாய் கதை சொல்லி கிளப்பி கீழே நரசிம்மனிடம் தந்துவிட்டு வந்தவன் தானும் கிளம்ப நனியிதழ் புலம்பல்.
“என்னவாம் இதழ் ஒரே முணங்கல்?…” குருஆர்யன் கேட்க,
“சரியான பாம்பு காது…” என்று நனியிதழ் சலித்துக்கொண்டாள் சுகமாய்.
“நல்லா விவரம் தெரியவும் மக கேட்கிற கேள்விக்கு எப்படி பதில் சொல்றீங்கன்னு பார்க்கறேன்…” என கிண்டலாய் சொல்ல,
“போகலாம். ஆனா நீ சொன்ன மாதிரி குழந்தை பெத்துக்கலாம். இன்னும் மூணு வருஷத்துக்கு எந்த படமும் டைரெக்ட் பண்ண போறதில்லை. பக்கா கான்சப்ட் இருக்கு. ஆனா வெய்ட் பண்ணி இன்னும் கொஞ்சம் ஃப்ளேவர்ஸ் ஆட் பண்ணனும்….”
“அதனால…”
“அதனால அந்த பீரியட்ல பெத்துக்கலாம்…”
“அவ்வளோ பயம் பாவாக்கு…” என்று கேட்க மௌனமாய் ஒரு புன்னகை அவனிடம்.
“இன்னொருதடவை நீ நினைச்ச நேரம் உன் பக்கத்துல இருக்கமுடியாத அந்த நரகம் வேண்டவே வேண்டாம். அடுத்தடுத்த டெலிவரிக்கு உன் கூட நான் இருக்கனும்…”
“அடுத்தடுத்த. ஹ்ம்ம். ஆமா தூரத்துல இருந்தா நரகமா? பக்கத்துல இருந்தா மட்டும் சொர்க்கமா? என் வலியை வாங்கிப்பீங்களா?…” என்று நனியிதழ் விளையாட்டாய் கேட்க,
“அப்கோர்ஸ் இதழ். சொல்லுவாங்களே தெரியாத பேயை விட தெரிஞ்ச பிசாசே மேல்ன்னு. அந்த மீனிங்…” என்றவனை முதுகில் அவள் மொத்த,
“இதுக்கு தான் உண்மையை சொல்றதே இல்லை. உருட்டே பெட்டர்…” என்று இன்னும் வாங்கியவன் அவளை கையில் அள்ளிக்கொண்டான்.
“கொஞ்ச நேரம் கழிச்சு கீழ போவோமா? சும்மா குட்நைட் சொல்லலாமேன்னு…” என்று கண் சிமிட்ட,
“அதான் பிசாசுன்னு சொன்னீங்களே? தேவையே இல்லை. தனியா குட்நைட் சொல்லுங்க…”
“உண்மை கசக்கத்தான் செய்யும் இதழம்மா….” என்றவனை சமாளித்து கொடுத்து கழித்து களித்து கீழே வந்தாள் நனியிதழ் முகம் சிவக்க.
அவளை தொடர்ந்து குருஆர்யனும் முகம்கொள்ளா புன்னகையுடன் கிளம்பி கீழே வர நரசிம்மன் மடியில் அவனின் புதல்வி ஒய்யாரமாய் அமர்ந்திருந்தாள்.
தகப்பனை கண்டதும் வேகமாய் அவன் மேல் அவள் தாவ பாந்தமாய் மகளை அள்ளிக்கொண்டான் அவன்.