கோவிலுக்கு நடந்து தான் சென்றனர் மகிழனும் , ப்ரகாவும். போகும் வழியெல்லாம் மரியாதை நிமித்தமாக யாராவது வணக்கம் வைத்து விட்டு செல்ல இவனும் கம்பீரத்துடன் பதில் வணக்கத்தை தெரிவிக்க கோழிக்குஞ்சு போல அவன் பின்னே சென்றாள் ப்ரகா.
சட்டென்று திரும்பியவன் ,அவள் கையைப் பிடித்து தன்னருகில் நிறுத்தி,” இதென்ன பழக்கம் பின்னால் வர்றது?. இனிமே எப்போதும் என்னோடு வரும் போது சேர்ந்து தான் வரணும் சரியா?!” என்று மெல்லிய குரலில் கூறி விட்டு கையை விலக்கி விட்டான்.
“இல்ல நீங்க வேக வேகமா நடக்கறீங்க எனக்கு சிரமமா இருக்கு. “என்றாள் தயக்கத்துடன்.
“மெதுவா போங்கனு சொல்லணும் ப்ருஹா. “என்றபடி அவளுக்கு ஈடு கொடுத்து நடக்க அவனை பார்த்தபடியே நடந்தாள் ப்ரகல்யா .
“ரோட்டைப் பார்த்து நடக்கலை விழுந்து வாரிடுவ “என்று மெல்லிய குரலில் சொல்ல
அவள் சட்டென பார்வையை மாற்றவும், வெளியே தெரியாத புன்னகை அவனிடத்தில்.
சிறிது தூர நடை பயணத்திலேயே கோவில் வந்து விட்டது.
“இது என் அப்பாவோட குலதெய்வ கோவில். கல்யாணம் முடிஞ்சு மறுநாள் இங்கே வரணும்னு என் அப்பத்தா சொல்லி இருந்தாங்க, அதனால தான் வந்தேன்” என்று அவளோடு உள்ளே நுழையும் போதே,” ஐயா, தேங்காபழம் வாங்கிட்டு போங்க” என அர்ச்சனை தட்டை ஒரு பெண்மணி நீட்டவும், சட்டென்று கை நீண்டு விட்டது ப்ரகல்யாவிற்கு. அதைப் பார்த்தவன்,’ வாங்கு ‘என்று ஜாடை காட்டினான்.
“இல்ல…” என்று தயங்கியவளை பார்த்து புன்னகைத்தவன் ,”வாங்கிக்க மா” என்றான் தன்மையாக.
“எப்போதும் ஒரு விஷயத்தை செய்றதுக்கு முன்னாடி யோசிக்கனும் ப்ருஹா. செய்ய ஆரம்பிச்சுட்டா தயங்கக் கூடாது புரியுதா?. கை நீட்டிட்ட அப்புறம் ஏன் தயக்கம் காட்டி நிற்கிற?” என்று கூறியபடியே நடந்தான். எங்கேயும் தயங்கி நிற்கவில்லை அவன்.
‘ஹப்பா எல்லாம் தெரியுது இவருக்கு’ என எண்ணியபடி சந்நிதானத்தில் இருவரும் தம்பதி சமேதராக நின்றனர் .
“மகிழவேல்ராஜா சிம்மராசி மக நட்சத்திரம்” என்ற ஐயர் அவன் முகம் பார்க்கவும்,” ப்ரகல்யவதனி மகர ராசி, உத்திராட நட்சத்திரம் “என்று அவன் கூறவும் விழி விரித்துப் பார்த்தாள் .
“சாமி எதிர்ல இருக்கார் ப்ருஹா .அங்கே பார்த்து கும்பிடு “என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
இருவரும் சாமி கும்பிட்டு வெளியே வந்ததும்,” என்னோட பேர் எனக்கு மறந்து ரொம்ப நாள் ஆகிடுச்சு” என்றாள் சத்தமில்லாமல்.
“இனி எல்லாத்தையும் நினைவு படுத்திடலாம். நினைவுகளை மறக்காம இருக்க கத்துக்கோ ப்ருஹா” என்றான் சாதாரணமாக. ஆனால் அதை அவளால் தான் இயல்பாக எடுத்துக் கொள்ள இயலவில்லை.
கோவிலை சுற்றி வரவும் மகேந்திரன் குடும்பத்தினர் அங்கே வரவும் சரியாக இருந்தது.
“தம்பி வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சா?” பதில் வராது என்று தெரிந்தும் கேட்டார் மகிழனின் அன்னை சுமித்ரா.
தருணி ப்ரகல்யாவை துளைக்கும் பார்வை பார்த்து நிற்க ,அவள் தயங்கியபடி பேச செல்லவும்,” நாங்க சாமி கும்பிட்டாச்சு” என்றான் மகிழன்.
“சரிப்பா நாங்க போயிட்டு வந்திடுறோம், நீங்க இருங்க “என்று மகேந்திரனின் தந்தை முந்திக் கொண்டு கூறியவர் ,தன் மகனையும், மருமகளையும் உள்ளே அனுப்பி வைத்து விட்டார்.
வீட்டில் அத்தனை முறை தருணியிடம் ப்ரகல்யாவிடம் அநாவசியமாக பேசக் கூடாது என்று எச்சரித்திருக்க அதையும் மீறி தருணி ப்ரகல்யாவை பார்த்தது அவருக்கு உவப்பாக இல்லை.
‘என்ன இந்தப் பொண்ணு நாம அத்தனை தூரம் சொல்லியும் இவ்வளவு கோபமா பார்க்குது. ‘என்ற அதிருப்தி அவரிடத்தில்.
அதற்குள் தருணியின் பெரியம்மா சும்மாயிராமல் ,”ஹே கிங்கரா தனியா …”எனும் போதே மகிழன் ஒரு பார்வை பார்த்தான்.
பின்னர் முகத்தை இயல்பாக்கிக் கொண்டு ,மனைவியோடு நடக்க
அவரோ,” நான் கூப்பிடுறேன் என்ன திமிரா போறா பாருங்க. புதுசா வந்த பவுசு கண்ண மறைக்குது. ஆனா சம்மந்தி எங்க தருணி எவ்வளவு நல்ல பொண்ணு தெரியுமா?, பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரிஞ்சவ” என்று சத்தமாக சொல்ல ,ப்ரகல்யா தயக்கமாக ,”ஏங்க பெரியம்மா கூப்பிட்டாங்க “என்றாள் உள்ளே போன குரலில்.
‘நாம இவங்களை ஏதாவது சொல்லலாம்னு பார்த்தா, இவங்க நம்ம கிட்டவே திரும்புறாங்க’ என்று எண்ணியபடி,” அது அது அவளோட செல்லப் பேரு “என்றார் தடுமாறி.
‘அப்படியா?’ நம்பாமல் பார்த்தார் சுமித்ரா.
“சின்னதுல இருந்து அப்படியே செல்லமா கூப்பிட்டே பழகிடுச்சு “என்று சொல்லி வைக்க
“செல்லமாவா…?!” மகிழனின் குரல் கேட்டதில் திடுக்கிட்டு திரும்ப அவன் இறுகிய முகத்துடன் நின்றிருந்தான்.
“அவளுடைய பேர் ப்ரகல்யா…” என அழுத்திக் கூறியவன் ,”இனிமேல் இந்த பெயரை சொல்லி கூப்பிட்டா போதும். இல்ல முடியாதுன்னா என் மனைவியை நீங்க கூப்பிட வேண்டிய அவசியமே இல்லை “என்றான்.
“நா… நான் சொல்லி புரிய வைக்கிறேன் தம்பி , நீ நீங்க போங்க” சுமித்ரா தடதடக்கும் நெஞ்சை கட்டுப்படுத்தியபடி பேசினார்.
“சொல்லி வைங்க “என்றவன் ப்ரகல்யாவின் பெரியம்மாவை எரிக்கும் பார்வை பார்த்து சென்றான்.
அந்த அழுத்தமான பார்வை எல்லாம் அங்கு மட்டும் தான். ப்ரகல்யாவைக் கண்டதுமே முகம் கனிந்து விட்டது அவனுக்கு .
“என்ன உங்கண்ணா பெரிய விஐபியா?, நம்ம கூட இருந்து எல்லாம் சாமி கும்பிட மாட்டாரா…?”தருணி வாய்த் துடுக்காக கேட்டு வைக்க
மகேந்திரன் அதட்டலாக ,”அவரைப் பற்றி அநாவசியமாக பேசக் கூடாது தருணி, அம்மா அப்பாவுக்குப் பிடிக்காது இதுவே கடைசியாக இருக்கட்டும்” என்றான்.
“ரொம்ப ஓவரா தான் பில்டப் கொடுக்குறாங்க. ஹப்பா!!” என முனகியபடி அவனோடு செல்ல அவளது பெற்றோரும் அங்கே வந்து விட்டனர்.
அவர்களை வரவேற்று உபசரிக்க குடும்பமாக தரிசனம் முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பினர்.
அனைவரும் மகேந்திரன் வீட்டில் குழுமி இருக்க , தருணியின் தந்தை சிவபாலன் தான் பேச்சைத் துவங்கினார்.
“ப்ரகா எங்க வீட்டுல இருந்த பொண்ணு. அவசரமா கல்யாணம் முடிஞ்சாலும் அவளுக்கும் விருந்து தர்றது தான் முறை. அந்த தம்பி வருவார் தானே நாங்க அழைக்கவா?” என கேட்க
“மகிழன் அடுத்தவங்க வீட்டுக்கு இதுவரை போனதில்லை. நாளைக்கு பெரிய வீட்டு விருந்து இருக்கு , அங்கே வச்சு நாங்க பேசிட்டு உங்களுக்கு முடிவை சொல்றோம், தம்பி மறுத்துட்டா கட்டாயப்படுத்தாதீங்க “என்று கூறி விட்டார் சுமித்ரா.
“என்னவோ உங்க வீட்டுல எல்லாரும் அவருக்கு ஓவர் பில்டப் தான் தர்றீங்க?” என்று அலுத்துக் கொண்டாள் தருணி.
“தருணி ப்ளீஸ்!, இது போல பேசாத எங்கம்மாக்குப் பிடிக்காது” அழுத்தமாக மகேந்திரன் கூறியதில் மனம் சுணங்கிப் போனாள் தருணி.
தொட்டதெற்கெல்லாம் ப்ரகாவை அழைத்து வேலை சொல்லி நிர்வகித்து பழகியவர்களுக்கு,’ இப்போது அவளிடம் பேச வேண்டும் என்றாலே மகிழனின் அனுமதி வாங்க வேண்டும்’ என்ற விதிமுறை எரிச்சலை உண்டு செய்தது.
ப்ரகாவை மற்றவர்கள் போல வேலை ஏவாமல் தருணி இருந்தாலும் , அவளுள் ஓர் எண்ணம் அவள் தனக்குக் கீழே தான் என்று இருந்து கொண்டிருந்தது. இப்போது அவள் சேவகி என்ற பிம்பம் உடைந்து ஊரே மதிக்கும் ஒருவனின் மனைவி என்பதை அவள் மனம் ஏற்க மறுத்தது.
‘என்ன பெரிய மகாராணியா இல்லை ,அவன் தான் பேரரசனா இத்தனை பயம் கொள்ளுகிறார்கள் என கடுப்பாய் வந்தது அவளுக்கு. தன் வீட்டில் ஒரு வேளை உணவிற்காக சேவகம் செய்தவளுக்கு இவ்வளவு பெரிய மதிப்பு மரியாதையா ?’எனத் தோன்றியது.
************
இங்கே ப்ரகாவிற்கு எண்ணமெல்லாம் வேறாக இருந்தது.
‘தன்னை அழைத்தும் நிற்காமல் வந்ததற்கு ஏதேனும் பேசுவார்களோ… தலைக்கணம் திமிர் என்றெல்லாம் அல்லவா ஏசுவார்கள். இவர் ஏன் இப்படி செஞ்சாரு?’ என எண்ணாமல் இருக்க முடியவில்லை. ஏற்கனவே சும்மா இருக்கும் போதே ஏதாவது சொல்லி திட்ட தான் செய்வார்கள். இப்போது இன்னும் அதிகமாகுமே எனத் தோன்றியதே தவிர தன்னைக் காத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பதேத் தோன்றவில்லை அவளுக்கு.
“மிசர்ஸ் மகிழன்! நீங்க யோசிச்சு முடிச்சுட்டா நான் கொஞ்சம் பேசலாமா?” என்ற குரலில் சுயம் வந்தவள் எதிரே அமர்ந்திருந்த மகிழனைக் கண்டு திருதிருவென்று விழித்தாள்.
“ஹேய் என்ன இப்படி பேந்த பேந்த முழிக்குற…? ,ஸ்கூல் கோயிங் கேர்ள் “என இன்னும் அதிகமாக சிரிக்க
“இல்ல பெரியம்மா கூப்பிட்டதுக்கு பதில் சொல்லாம வந்துட்டேன் அவங்க எனக்கு திமிர்னு திட்டுவாங்களே?” என்று வெள்ளந்தியாக பதில் அளிக்க மகிழனின் முகம் இறுகிப் போனது.
“ஸோ என்ன சொல்ல வர்ற…?உன்னை எப்படி கூப்பிட்டாலும் நான் கேட்க கூடாது’னு சொல்ல வர்றியா?” அழுத்தமாக வந்து விழுந்த வார்த்தைகளில் திணறிப் போனாள்.
“அப்படி சொல்லலைங்க அது வந்து…” என்ன சொல்லி சமாளிப்பது என்றே அவளுக்கு புலப்படவில்லை..
“ஊஃப்…!!” என காற்றை ஊதி தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன்,” ப்ருஹா லிஸன் டு மீ “என்றான்.
“அவங்க உன் பெரியம்மா, அம்மா, அப்பா யாரா வேணும்னாலும் இருக்கலாம். அதுக்காக உன்னை அவமானப்படுத்துற மாதிரி ஒரு பேரை வச்சு கூப்பிடுறதை நான் எப்படி ஏற்க முடியும்…? நீயும் தான் எப்படி ஏத்துக்கிற ?”சலிப்பாய் கேட்க.
“உங்களை கூட தான் எனக்கு நேத்து இன்னிக்கும் தான் தெரியும். என்னை ஸ்கூல் கோயிங் கேர்ள் னு சொல்றீங்க ,அதாவது நான் சின்ன பொண்ணா இருக்கேன்னு கிண்டல் பண்ற மாதிரி சொல்லுறீங்க, நான் அதையும் கேட்டுக்கிட்டேனே .எதுவும் பேசலையே?” என்றாள் பதிலுக்கு.
“அவங்க சொல்றது உண்மை தானே…? நான் பிறந்து கொஞ்ச வருஷத்திலேயே என் அப்பா அம்மா இறந்து போயிட்டாங்க அப்போ நான் அதானே…!” என்று அவள் கேட்கவும் மகிழன் அதிர்ந்து நின்றான்.