கல்யாண மாப்பிள்ளையின் நண்பனுள் ஒருவன் “டேய்… நிறுத்து நிறுத்து… அழகழகா நம்ம கட்டுப்பட்டி குமரிகள் இருக்கும்போது நமக்கெதுக்குடா குஜராத் குமரிகள்?
போடு… கட்டுப்பட்டி குமரிகள் ஆட…
காதலன் காதலியைத் தேட…
அவள் தென்படுவாளோ…”
இன்னொருவன், “அட நிறுத்துங்கடா… இங்க கல்யாணமே ஆகிடுச்சு, இப்போதான் தென்படுவாளோனு காதலியைத் தேடிட்டிருக்கானுங்க, இன்னும் கொஞ்சம் மேல வாங்கடா…” என சிரிக்க,
“வசந்தம் காணுமம்மா… ஹோ…
வாடும் வாலிபமே…” என ஒருவன் மனமகனைப் பார்த்து சிரிக்க,
“டேய்… வசந்தம் கண்டதம்மா… ன்னு ஒரிஜினலையே பாடு, கல்யாணம் முடிவாகி மூனு மாசம் ஆகிடுச்சு, எல்லாம் முடிஞ்சாலும் முடிஞ்சிருக்கும்.” என ஒருவன் சொல்ல,
“ஹா…ஹா… அப்படி போடு மச்சி.” என அனைவரும் சிரிக்க, சற்று தூரத்திலிருந்து சிவப்ரியாவை கோபமாய் நோட்டமிட்டிருந்த பார்த்திபனிற்கு தங்கை அவ்விடம் விட்டு நகரவும் பெருமை வந்தமர்ந்தது.
“சிவாம்மா” என தன் கையை மேலுயர்த்தி தன் இருப்பை உணர்த்தினான் பார்த்திபன்.
சிவப்ரியாவின் நெருங்கிய தோழியான ஜீவிதாவின் திருமணம். மாப்பிள்ளையின் ஊர் கட்டுப்பட்டி என்றதும் பக்கென்றது அருணாச்சலத்திற்கு.
ஆனால் மகளோடு ஆறாம் வகுப்பு முதல் கல்லூரிவரை ஒன்றாய் படித்துக்கொண்டிருக்கும் தோழி என்பதோடு, சிவப்ரியாவின் அழைப்பை போலவே ஜீவிதாவும் அம்மா அப்பா என்றுதான் அழைப்பாள்.
நலங்கு வச்சிட்டாங்கனா வெளில விடமாட்டாங்கப்பா, சிவா மட்டுமில்ல, எல்லாரும் வரனும் என பத்து நாள் முன்பு மனப்பெண்ணே வீட்டிற்கு வந்து அழைப்பு விடுத்தபின்னே எப்படி திருமணத்திற்கு அனுப்பாமல் இருப்பது என்று, தன் அண்ணன் மகன் பார்த்திபனோடு அனுப்பி வைத்தார் அருணாச்சலம்.
அருணாச்சலம் பதட்டத்திற்கு காரணம் கட்டுப்பட்டி என்ற ஊர் மட்டுமல்ல, ஜீவிதா தன் இனத்தை சேர்ந்தவள் என்பதால், நிச்சயம் தன் அக்காள் குடும்பத்தோடு திருமணத்திற்கு வருவார், பார்த்திபன் அத்தையை நோட்டமிடுவான், தனலஷ்மி பார்த்திபனை தவிர்பார்.
தனலஷ்மி தவிர்ப்பதை தாங்கிக்கொள்ளலாம், ஆனால் அக்காள் கணவன் சங்கர் அத்தனை கூட்டத்திற்கு முன் தங்கையை ஏதேனும் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற பதட்டம் இருக்க, “அத்தையை பார்த்தாலும் பார்க்காதமாதிரி இருந்துடு பார்த்திபா, மாமா எதாவது சொன்னா எனக்காக சகிச்சிட்டு வந்துடு, அவங்க என்ன சொன்னாலும் சரிவாட்டுக்கு வாயாடிடாத” என்று அருணாச்சலமும், அண்ணாமலையும் கெஞ்சியே அனுப்பி வைத்தனர்.
பார்த்திபனிற்கு தன் அத்தையோடான மோதல்களை தந்தையும் சித்தப்பாவும் சொல்லி நிறைய கேள்விபட்டிருக்கிறான், ஆனால் நேரில் வார்த்தையாடலைப் பார்த்ததில்லை.
மாறாக மூன்று வருடத்திற்கு முன் தனது அக்கா திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க சென்றபோது அத்தை ஆர்பாட்டமில்லாமல் கேட்ட கேள்வியில் தன் தந்தை வாயடைத்து போனதிலும் அவரின் விரக்தியான புன்னகையின் பின்னிருந்த வலியும் தெரிந்தது.
பிறந்த வீட்டோடான அனைத்து மனஸ்த்தாபங்களும் தனலஷ்மியின் திருமணத்தின் போதே நடந்தேறிவிட்டது. அந்த நேரம் இருபத்தி மூன்று வயதுதான் என்றாலும், திருமணம் முடித்து ஒரு வருடம் முடிந்திருந்த நிலையில் தாய் தந்தையின் செயல் தவறென புரிந்திருந்த போதும், தங்கைக்காக உடன் நிற்காத நிலையை எண்ணி அண்ணாமலை இன்றுவரை வருந்தாத நாளில்லை, ஆனால் வெறும் வருத்தம் பாதிக்கப்பட்டவரின் துயரை துடைத்திடுமா?
அப்பாம்மா செய்தது தவறுதான், தாத்தா பேச்சு கேட்டு முட்டாள்தனமா யோசிச்சிட்டாங்க, மன்னிச்சுடு தனம் என பலமுறை மன்றாடியிருக்கின்றனர் அண்ணாமலையும் அருணாச்சலமும்.
பரவால்ல விடுங்க, இப்போ நான் நல்லா இருக்கேன், உங்க வாழ்க்கையை பாருங்க, என்னை தொல்லை பண்ணாதிங்க” என்று முடித்துக்கொள்ளும் தனலஷ்மியை எவ்விதத்திலும் சரிசெய்ய முடியாமல் போனது அண்ணாமலை மற்றும் அருணாச்சலத்தின் துரதிஷ்டம்.
பார்த்திபனுக்கு தன் அத்தைக்கும் அப்பாம்மாவிற்கும் உள்ள அனைத்து கோப தாபங்களும் தெரியும். சிவப்ரியாவிற்கும் தெரியும்தான், ஆனால் மனஸ்த்தாபத்தின் முழு விபரமும் தெரியாது. அவ்வப்போது தன் வீட்டில் மாட்டியிருக்கும் அத்தையின் திருமண புகைப்படத்தை பார்த்துக்கொள்வாள்.
அத்தைக்கு ஒரு மகள், மற்றும் மகன் இருக்கிறான் எனத் தெரியும். சிறு வயதில் சொந்தங்களின் நல்லது கெட்டதுகளில் அத்தை குடும்பத்தை சிவப்ரியா பார்த்திருக்கிறாள்தான். ஆனால் தனது ஒன்பதாம் வகுப்பிற்கு பிறகு இருவரையும் நேரில் பார்த்ததில்லை.
சிவப்ரியா பெரிய பெண்ணானதும் குடும்ப விஷேசங்கள் தவிர்த்து வேறெங்கும் அழைத்துச் செல்லமாட்டார் அருணாச்சலம். அது இன்றும் கிராமங்களில் நடக்கும் வழக்கமும் கூட என்பதால், இதெல்லாம் பெரியவங்க கலந்துக்கவேண்டிய விஷேசம். படிப்பை பார் என சிவப்ரியா அறியாமலே தன் அக்கா குடும்பத்திலிருந்து மகளை தள்ளி நிறுத்தினார்.
நீண்ட வருடங்களுக்குப் பின்னே இன்று அக்காள் குடும்பத்தை சிவப்ரியா சந்திக்க நேரிடுமோ? தன்னை உரித்துப் பிறந்திருக்கும் அருட்செல்வனும் வருவானா? என தவித்திருந்த அருணாச்சலம் பார்த்திபனுக்கு அழைத்தார்.
“என்ன சித்தப்பா?”
“அத்தை குடும்பம் வந்துட்டாங்களா? யாரெல்லாம் வந்துருக்காங்க?”
“அத்தை மாமா, மாமாவோட தம்பி ஃபேமிலி எல்லாரும் வந்துருக்காங்கப்பா, ஆனா அருள் வரல.” என கிசுகிசுத்து, “சிவா பக்கத்துலதான் இருக்கு, நான் அப்புறம் பேசுறேன்.” என இணைப்பை துண்டித்தான் பார்த்திபன்.
அருட்செல்வன் வரவில்லை என்ற நிம்மதியோடு பெருமூச்சிட, “பார்த்திண்ணா அங்க வரது நம்ம அத்தை மாமாதானே? அவங்க பின்னாடி வரதுதான் பார்வதி அக்காவா? சின்ன வயசுல பார்த்தது, அப்போல்லாம் இவ்வளோ உடம்பு இருக்காது, கொஞ்சம் குண்டாகிட்டாங்க இல்லண்ணா?
ஆனா இப்போத்தான் அழகா இருக்காங்க. அப்போ ரொம்ப ஒல்லியா இருப்பாங்க, குண்டாகவும் நம்ம அத்தை மாதிரியே இருக்காங்க இல்லைண்ணா?” என சிவப்ரியா சந்தோசத்தோடு கிசுகிசுக்க, “ஹம்… நீ போய் உன் ஃப்ரண்ட்ஸோட சாப்பிடு.” என்றான்.
அத்தை குடும்பத்தோடு பேசக்கூடாதென தந்தையும் சொல்லியனுப்பியிருக்க, “பேசத்தான் கூடாது, பார்க்கக்கூடவா செய்யக்கூடாது?” என முணுமுணுத்து தன் தோழிகளோடு இணைந்துகொண்டாள் சிவப்ரியா.
பெற்றோர் வீட்டிற்கு வந்த பின்னேதான் பார்வதியின் கணவனை மொபைலில் பார்த்த சிவப்ரியா… இன்று தோழியின் திருமணத்தில் அடையாளம் காணவேண்டி பார்வதியின் கணவன் புகைப்படத்தை தந்தை மொபைலில் மீண்டும் ஒருமுறை பார்த்து வந்தாள்.
பார்வத்திக்கா மட்டும் வந்துருக்காங்க? ஏன் அண்ணா வரல என யோசித்தாலும், இரண்டு குழந்தைங்க இருக்குனு சொன்னாங்களே? இரண்டு பேரையுமா விட்டுட்டு வந்திருப்பாங்க? ஒருவேளை அண்ணா குழந்தைகளுக்கு வெளில விளையாட்டு காட்டிட்டு இருப்பாங்களோ? என்ற ஆராய்ச்சியோடு பார்வதி கணவனின் முகத்தை நினைவில் கொண்டுவந்து கூட்டத்தில் குணாளனை தேட ஆரம்பித்தாள் சிவப்ரியா.
“அதென்னடா தலைல அடிச்சமாதிரி அருள்னு சொல்ற? அவன் உன்னைவிட அஞ்சு வயசு மூத்தவன்” என அதட்டி, “தனலஷ்மி பார்த்துச்சா?” என்றார் ஏக்கமாக.
“ம்… பார்த்தாங்க பார்த்தாங்க, இங்க என்னை எதிர்பார்க்கல போல, அதிர்ச்சியா ஒரு நிமிஷம் பார்த்தாங்க, அப்புறம் யாரோ போல அவங்க பொண்ணோட பேசுறமாதிரி பாவனை காட்டிட்டு போய்ட்டாங்க.”
“சங்கர் மாமா உன்னை பார்க்கல?”
“பார்த்தார் சித்தப்பா, ஆனா உறவுக்காரன் மாதிரி இல்லாம எவனோ ஒருத்தன்ற மாதிரிதான் பார்த்தாரு, அவங்க ஊர்க்காரங்களோட ஐக்கியமாகிட்டார். மருமகன் எடுத்த பின்ன திருந்திட்டாரோ என்னவோ?” என்றான் இயல்பாக.
“ம்… அப்படியும் இருக்கலாம்” என ஆசுவாசத்தோடு சொல்லி, “சரி பார்த்தி, பார்த்து பத்திரமா வாங்க.” என இணைப்பை துண்டித்தார் அருணாச்சலம்.
பார்வதி கணவனை தேடிக்கொண்டிருந்தவள் பதறி… “அச்சோ அண்ணா, நாங்க பேசிட்டுதான் இருக்கோம், இன்னும் சாப்பிடவே ஆரம்பிக்கல, ஒரு அரைமணி நேரம் எக்ஸ்ட்ரா டைம் கொடுங்க.” என்றாள் சலுகையாக.
“சரி… சரி. சீக்கிரம்.” என இணைப்பை துண்டித்தவன் தன் அத்தையைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
தான் மட்டும் வந்திருக்கேனா? இல்லை கூட யாரேனும் வந்திருக்காங்களா என்ற தேடல் கூட இல்லையே, தாத்தா செய்த தவறிற்கு அப்பாம்மா என்ன செய்வாங்க? எப்படி ஒட்டு மொத்தமாய் உறவை முறித்து இருக்க முடிகிறது? என யோசித்தவன் கண்கள் சங்கரை பார்த்தது.
பார்வதியின் நான்கு வயது மகனிடம் உரையாடிக்கொண்டிருந்தார் சிறுவனின் பாவனையோடு. உன் பொண்ணை கட்டிக்கொடுத்திருக்கதானே? பிறந்த வீட்டு உறவை மொத்தமாய் தலைமுழுகு என உன் மகளிடம் மருமகன் சொன்னால் தாங்கிக்கொள்வாயா? என நினைத்திருந்தான் ஆற்றாமையோடு.
ஆனாலும் பார்வதி சூழலும் தன் அத்தையின் சூழலும் ஒன்றல்ல எனப்புரிந்த போதும், இத்தனை வருடங்களுக்குப் பிறகாவது சற்று தணியலாமே என வேதனையோடு ஏங்கித் தவித்தது பார்த்திபனின் மனம்.
“உன் புருசன் வரலையா பார்வதி?” என ஒருவர் கேட்க, “பாப்பா அழறானு வெளில வேடிக்கை காட்டிட்டு இருக்காங்கக்கா.” என்றாள்.
“அப்புறம் தனம்? உன் மகனுக்கு எப்போ கல்யாணம் முடிக்கப்போற? என் பையன் செட்டுதான் உன்மகனும், என் பையன் அப்பனாகி ஒரு வருசம் ஆகுது.” என்றார் பெருமையாக.
“உன் அண்ணன் மகன் வந்துருக்கான், பார்த்தியா?” என கிசுகிசுக்க, “சாப்பிட்டிங்களா? பேரப்பிள்ளைகளையுமா கூட்டிட்டு வந்துருக்கிங்க? எங்க காணோம்.” என பேச்சை மாற்ற, “ஹ்ம்.. இனி ஒரு ஜென்மமா சேர்ந்து பிறக்கப்போறிங்க?” என உண்மையான வருத்தத்தோடே நகர்ந்தார் அப்பெண்.
“பார்வதிம்மா, மருமகனை கூப்பிடு, சாப்பிட்டு வந்திடலாம்.” என சங்கர் சொல்ல, பார்த்திபன் இருப்பதால்தான் தந்தை சொல்கிறார் என கணவனையும் தம்பியையும் அழைக்க வெளியேறினாள் பார்வதி.
தன் தாத்தா அன்று எடுத்த முட்டாள்தனமான முடிவால் இன்று பிறந்த வீட்டின் உறவை தொலைத்து நிற்கும் அத்தையை பார்க்க பார்க்க வேதனை ஆட்கொள்ள மேலே உணவுண்ணச்சென்றான் பார்த்திபன்.