“அப்புறம் என்ன ஆச்சு அங்கிள்?” மிகுந்த ஆர்வமாகக் கேட்டாள் கல்கி வரப்பிரசாத்.
“என்னாச்சா, கும்பகோணத்துல தமிழ்ல வாங்குன திட்ட குண்டூரில் தெலுங்குல வாங்கி இருப்பான். அதானேடா சூர்யா?” ஸ்டாலின் கேட்கவும் சூர்யாவிடம் சின்ன புன்னகை.
“ஏண்டா இத்தனை வருஷம் ஆனது அப்புறமா என்னை கிண்டல் பண்றது நீ நிறுத்த மாட்டியா?” என்று சூர்யா ஸ்டாலினை கேட்க
“அவன் கேட்டதுக்கு பதில் சொல்லுடா” என்றார் ராமச்சந்திரன்.
“ஏண்டி யமுனா இத்தனை வருஷமா உன் மருமக கிட்ட உங்க காதல் காவியத்தை சொல்லாம இருக்க?”
“அதெல்லாம் இவ்வளவு டீடெய்லா எங்க கோகி ஆன்டி சொன்னாங்க?” என்று யமுனாவைக் கிண்டலாகப் பார்த்தாள் கல்கி, யமுனாவின் அண்ணன் மகள் சின்னவள். சிரஞ்சீவி வரப்ரசாத்தின் மனைவி.
முப்பது வருடங்கள் கழித்து யமுனாவின் அப்பா சற்குணப்பாண்டியன் உடல் நலமில்லாதபோது அவரைப் பார்க்கச் சென்றனர் சூர்யாவின் குடும்பத்தினர். அப்படியே உறவு மீண்டும் இணைய, யமுனாவின் அண்ணன் உதயமூர்த்தியின் மகள் கல்கி சென்னைக்கு அத்தை வீட்டில் தங்கி படிக்க வர சிரஞ்சீவிக்கும் அவளுக்கும் காதல் மலர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிந்து இதோ வருடங்கள் ஓடிவிட்டன.
இப்போது தொற்று நோய் அபாயத்தால் லாக் டவுன் போடப்பட்டிருக்க, ஸ்டாலின், ராமச்சந்திரன், சூர்யா மூவரும் குடும்பமாக உட்கார்ந்து வீடியோ காலில் இரண்டு மணி நேரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நண்பர்கள் அவர்களுக்குள் அடிக்கடி செல்பேசியில் பேசிக் கொண்டாலும் இப்படி பொறுமையாக குடும்பத்துடன் வேலை எதுவுமின்றி கதைத்து வருடங்கள் ஆகிவிட்டது.
ஸ்டாலினும் கோகிலாவும் சென்னையில் மகனுடன் வசிக்கின்றனர். ராமச்சந்திரன் மனைவி அரசியுடன் சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு ஒரே மகன். சிங்கப்பூரில் மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இருக்கிறான்.
பொதுவான பேச்சுகள் ஓடியிருக்க, நண்பர்கள் எல்லாரும் அந்த நாள் ஞாபகங்களை ஆசையுடன் அசைப்போட்டு ஒவ்வொருவராய்க் கிண்டல் கேலி செய்ய, இளைய தலைமுறையில் கல்கி மட்டும் அப்போது வேலை எதுவும் இல்லாமல் இருக்க, அத்தை மாமாவின் காதல் கதையைக் கேட்டாள்.
“மேலாப்ல தெரிஞ்சதுக்கே இவ என்னை முறைச்சிட்டு இருப்பா டி கோகி” என்று யமுனா மருமகளைத் தோழியிடம் சொல்ல
“நீ ஒழுங்கா சொல்லியிருந்தா ஏன் கல்கி முறைக்கப்போறா?” என்று கோகிலா கல்கிக்காகப் பேசினார். கல்கியின் பத்திரிக்கை எல்லாம் படித்து அவளை கோகிலாவுக்குப் பிடிக்கும்.
“ஆனாலும் இந்த அத்தை எப்படி இப்படி லவ் பண்ணினாங்கன்னு எனக்கு இன்னும் புரியல ஆன்டி” என்று கல்கி சொல்ல
“நீ வேற, உங்கத்த மாமா வந்து காலேஜ் வாசல்ல நிக்கிறார் சொன்னா போதும், ரேஸ் ஓடுறது மாதிரி ஓடிப்போய் மூச்சு வாங்க சூர்யான்னு நிப்பா, உங்க மாமா உடனே பிரியத்தம்மான்னு உருக, மெட்ராஸ் வெயில்ல இவங்க அடிச்ச லூட்டி இருக்கே” என்று கோகிலா எல்லாம் சொன்னாள்.
“இந்த வாட்ஸப் மட்டும் அப்போ இருந்திருந்தா, இந்த சூர்யா பிரியத்தமான்னு பாட்டு போட்டு ஸ்டேட்டஸ்ல வச்சு எங்க டேட்டாவைக் காலி பண்ணியிருப்பான்மா” என்று ஸ்டாலினும் நண்பனைப் போட்டுக்கொடுக்க
“அது இல்லாமயே இவன் டேப் ரெகார்டர்ல பாட்டு போட்டு… நீ என்பதே நான் அல்லவோனு நைட் நம்மளைத் தூங்க விடாம டார்ச்சர் செய்வானே? அதை சொல்லுடா ஸ்டாலின்” என்று இடை புகுந்தார் ராமு.
“மாமா?!” என்று கேள்வியாக சூர்யாவைப் பார்த்த கல்கி வாய் விட்டு சிரித்தபடி
“இப்பவும் மாமா ரிங்க்டோன் ஹெலோடோன் எல்லாம் பிரியத்தம்மாதான் ராம் அங்கிள். தெரியுமா?” என்று கல்கி மாமனாரை மாட்டிவிட
“வாலு பிள்ள ரா நீ” என்று சூர்யா மருமகளை சொல்ல
“இவனே இப்படின்னா சிரஞ்சீவி என்னம்மா செய்றான், குண்டூர் காதல் வெள்ளத்தை தாங்குதா?” என்று ஸ்டாலின் கல்கியிடம் கேட்டார்.
“அட போங்க அங்கிள், அவர் இந்தளவு எல்லாம் ஒன்னும் கிடையாது. மாமா அத்தைக்கு எல்லாம் நாங்க கம்பாரிஸனே இல்ல” என்றாள் கல்கி.
“அப்படி எல்லாம் இல்லைண்ணா, ப்ரசாத் அம்மடூனு இவ பின்னாடி சுத்துறது எல்லாம் சொல்லமாட்டா இவ, சும்மா நம்ம முன்னாடி சீன் போடுறா” என்று யமுனா மருமகளைக் கிண்டல் செய்தார்.
ஸ்டாலின் யமுனாவிடம் “ஏம்மா யமுனா உன் ஹீரோ கொடுத்த ஹீரோ பென் இன்னும் வைச்சிருக்கியா?” என்றதும்
“ஹீரோ பென்னா?” என்று கல்கி கேட்க
“அட ஆமாம்மா, உங்கத்த பர்த்டேனு தெரிஞ்சு ப்ரண்ட்ஸா இருந்தப்பவே இவன் எனக்குக் கூட சொல்லாம ஹீரோ பென் வாங்கி கொடுத்தான், ஏண்டா ரத்னா கஃபே தானே போனோம் அன்னிக்கு?” ஸ்டாலின் கேட்டார்.
“அவுனு ரா ஸ்டாலின். ரத்னா கஃபே எல்லாம் இப்போ இருக்கா? நாங்க மெட்ராஸ் வந்தே இயர்ஸ் ஆயிப்போயிந்தி, ஏன்ட்டிம்மா… இருக்கும் தானே?” மனைவியிடம் சூர்யா சந்தேகமாகக் கேட்டார்.
“நீ இன்னும் முழுசா தமிழ் பேசலையாடா மகனே?” ராமு கேட்க
“எல்லாம் இருக்கு, சொல்ல மறந்துட்டேனே டா ரெண்டு மாசம் முன்னாடி ராணி அக்காவை பார்த்தேன். நம்ம எல்லாரையும் கேட்டாங்க அவங்களுக்கும் பேரப் பசங்க எல்லாம் இருக்காங்கடா” ஸ்டாலின் சொல்லவும்
“டேய் ஸ்டாலின் நீ அப்போ வடகம் திருடினத நினைச்சா எனக்கு இப்போ சிரிப்பு வருதுடா” என்றார் ராமச்சந்திரன்.
“இப்போ என்ன டேமேஜ் பண்ற தான் உனக்கு ரொம்ப முக்கியமா டா? நீங்கதான் மெட்ராஸ் பக்கம் வர மாட்டேங்கிறீங்க, சூர்யா உன் பையன் கல்யாணத்துக்குப் பார்த்ததோட சரி, அப்புறம் குண்டூர்லயே செட்டில் ஆகியாச்சு, டேய் ராமு நீ எப்போட இந்தியா வரப்போற?” என்று ஸ்டாலின் நண்பர்களைக் கேட்க
“எங்கடா? ஒன்னும் அமையமாட்டேங்குது. உன் பெயர் வச்சிட்டேன், உன்னை மாதிரியே லேட்டா கல்யாணம் பண்ணுவான் போல இருக்கு” என்று ஸ்டாலின் புலம்ப
“அதானே ஸ்டாலின்” என்று சிரித்தார் சூர்யா.
ராமுவோ எட்டிப் பார்த்தவன் “அடேய்! அரசி பக்கத்து வீட்டுக்குப் போயிருக்காடா, அவ இருக்கும்போது இப்படி உளறாதடா. ஏன்டா இந்த வயசுல என் வாழ்க்கையில விளையாடப் பார்க்குறீங்க? இரண்டு பேரும் நல்லா லவ் பண்ணி சந்தோஷமாதானே இருக்கீங்க?” என்று ராமு வாசலைப் பார்த்தபடி கேட்க, இங்கே அவரவர் இல்லத்தில் அதனை வீடியோ காலில் பார்த்தவர்களுக்கு சிரிப்புத் தாங்கவில்லை.
சிரித்தவர்களை முறைத்த ராம் ,”டேய் நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு என்ன லேட் சொல்றீங்களாடா, அவன் படிச்சு முடிச்ச உடனே 22 வயசுல கல்யாணம் பண்ணான். நீ 25 ல பண்ணின… பேசாம உங்கள மாதிரியே அவனை லவ் பண்ண சொல்ல வேண்டியது தானடா? அதை விட்டு என்னை பேசுறான்” என்றார் ராம்.
“அதான்டா சொல்றேன் உன் பேரை வச்சு, அதனால அவனுக்கு லவ் செட் ஆகலையே.. என் பொண்ணு தான் அந்த ஹிந்தி காரன் கல்யாணம் பண்ணிக்கிட்டா…” சொல்லும்போதே ஸ்டாலின் பேச்சில் கடுப்பு தெரிந்தது.
“ஏண்டா ஹிந்தி கார மாப்பிள்ளையை அப்படி இஞ்சி தின்ன மாதிரியே சொல்ற?” என்று நக்கலாக சிரித்தார் ராமு.
“அடபோடா! உங்களுக்குப் பொண்ணு இல்ல, என் கஷ்டம் புரியாது. அவனும் தமிழ்ப்பையன்தான் நம்ம சிரஞ்சீவி மாதிரி அப்பா ஹிந்தி, அம்மா தமிழ்.. ஆர்மி ஃபேமிலில அவங்களும் லவ் மேரேஜ். அப்பனை மாதிரி எங்க மாப்பிள்ளையும், டேய் நீயும் உன் மகனும் கூட அப்படித்தானே? எங்க ஊரு பொண்ணுங்களை எல்லாம் நீங்க கல்யாணம் பண்ணி எங்க ஊரு பசங்க பாவம்டா” என்றார் ஸ்டாலின் கடுப்பாக.
“ஹரே ஸ்டாலின்! எல்லாம் தேவுடு ஆசிர்வாதம்ரா. நாங்க என்ன செஞ்சோம்?” என்று சூர்யா கேட்க கோகிலா
“இவருக்குப் பொண்ணு மேல ரொம்ப பாசம்ல சூர்யா, அதான் அவளை அடிக்கடி பார்க்க முடியலன்னு வருத்தம். மத்தபடி மாப்ள நல்லா பார்த்துப்பார்”
“ம்ம், பார்த்துப்பான் பார்த்துப்பான். எப்படிதான் பாஷை தெரியாம லவ் பண்றானுங்களோ” என்று ஸ்டாலின் புலம்ப
“இவருக்கு இந்தி கொஞ்சம்தானே வரும், அதான் மாப்பிள்ளையைப் பிடிக்கறதில்ல. இதுல பேரனுங்களும் அப்படியே அப்பா மாதிரி இருப்பானுங்க. அதான் நம்ம ஸ்டாலினுக்குக் கடுப்பு” என்று கோகி கிண்டல் செய்ய கல்கி எல்லாவற்றையும் ரசித்துப் பார்த்திருந்தாள்.
“ப்ரேமக்கி பாஷ லேதுரா” என்ற சூர்யா
“நம்ம எப்படி நடக்குறோமோ பசங்க அப்படித்தானே இருப்பாங்க. நம்ம எல்லாம் லவ் மேரேஜ் பண்ணிட்டு அவங்களை எப்படி வேண்டாம் சொல்றது?” என்று கேட்டார்.
“மாமூல் அப்பா மாதிரி பேசுறான் பாரு” என்று திட்டினார் ராமு. அரசியும் வந்தவள் இவர்களிடம் நன்றாகவே பேசினாள்.
“உன் பொண்ணு கோகி மாதிரி போல்ட்’டா, அதான் ஆர்மி மேனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிடுச்சு” என்றார் சூர்யா.
அப்போது சிரஞ்சீவி வரப்ரசாத்தும் வந்துவிட, எல்லாரும் ஹாலில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவன் லேப்டாப்பை எட்டிப் பார்க்க
“என்னடா சிரு அடையாளம் தெரியுதா எங்களை ?” என்று காக்கி உடையில் இருந்தவனை கேட்டார் ஸ்டாலின்.
“என்ன மாமா கலாய்க்கிறீங்களா? எப்படி இருக்கீங்க? அத்தை ஹவ் ஆர் யூ? ஸ்ரீராம் எப்படி இருக்கான்?” என்று விசாரித்தான். சூர்யாவுடன் ஸ்டாலினும் சில வருடங்கள் ஒன்றாய் வேலை செய்திருக்க, அவர்கள் பிள்ளைகளுக்குள் நல்ல பழக்கம்.
“எல்லாரும் நல்லா இருக்கோம்டா, எங்க நீ கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளோட செட்டில் ஆகிட்ட, இன்னும் ராம்க்கு கல்யாணம் ஆகல..” என்று ஸ்டாலின் சோக கீதம் வாசிக்க
“இவரோட” என்று கோகிலா பல்லைக் கடித்தாள்.
“மாமா அவன் என்னை விட சின்னப்பையன். நீங்க ஏன் இப்பவே இவ்வளவு ஃபீல் ஆகுறீங்க ?” என்று வரப்ரசாத் கேட்க
“வாவ்! ராம் மாமா! நீங்களும் இருக்கீங்களா? அரசி அத்த எப்படி இருக்கீங்க?” என்று அவர்களையும் விசாரிக்க
“நல்லாயிருக்கோம்பா, இந்த ஸ்டாலின் பேசினா எங்க நம்மை பேச விடுவான்?” என்று ராமு நண்பனைத் திட்ட
“யார் யாருக்குன்னு முடிச்சிப்போட்டிருக்கோ அங்கதான் அமையும். நீங்க கவலைப்படாதீங்க ஸ்டாலிண்ணா, கண்டிப்பா பையனுக்கு நல்ல வரனா அமையும்” என்றார் ராமுவின் மனைவி அரசி.
“பார்த்தியா டி கோகி? ராம்னு பையன் பெயரைக் கூட அரசி சொல்லமாட்டேங்குது”
ஸ்டாலின் ஒரு வேகத்தில் சொல்லிவிட
“இன்னும் நான் உங்க பெயரை சொல்றேன் சொல்றீங்களா சார் நீங்க?” என்று கொந்தளித்தாள் கோகிலா.
“ஹாஹா!”என்று எல்லாரும் அவர்கள் சண்டையைப் பார்த்து சிரிக்க
“அரசி சொல்றது சரிதான். அப்ப என்ன நினைச்சு நம்ம கல்யாணம் பண்ணினோமோ தெரியல, இந்த அறுபது வயசுல காணாம போன கண்ணாடியைத் தேடி தர அளவு நல்ல வாழ்க்கைத்துணைக் கிடைச்சிட்டா அதுவே போதும்” என்றார் அரசியைப் பார்த்து புன்னகையுடன். அந்த புன்னகையில் வழிந்த வாஞ்சை அவர்களின் அன்பான வாழ்க்கையை சொன்னது.
“நான் தான் கண்ணாடியே போடலையே” என்று ஸ்டாலின் அப்போதும் கிண்டல் பேசினார்.
“ஏன்ட்ரா ஸ்டாலின்? ராமு சொல்றது ரைட்தானே? இப்படி வயசான காலத்துல நம்ம கூட வர நல்ல பார்ட்னர்ஸ் கிடைச்சிட்டா வாழ்க்கையில வேறென்ன இருக்கு? நம்ம பசங்க பொண்னுங்க எல்லாருக்கும் அப்படி அமைஞ்சிடுச்சு, ராமுக்கும் அப்படி நல்லவிதமாவே அமையும் ரா” என்றார் சூர்யா.
“உங்களைத்தான் அங்கிள் என் அப்பத்தாவும் தாத்தாவும் திட்டிட்டே இருந்தாங்க” என்று சொல்லி சிரித்தாள் கல்கி.
“இது வேறயா?” என்று ஸ்டாலின் பார்க்க அவர் பார்வையில் எல்லாருக்கும் சிரிப்பு.
ராமு நண்பர்களைப் பார்த்து
“அப்பவே இப்படி சோசியல் மீடியாவெல்லாம் இருந்திருந்தா, இவனுங்க இரண்டு பேரையும் கையில பிடிச்சிருக்க முடியாது” என்று சிரிக்க
கோகிலாவோ “அப்பவே ப்ளாக் பண்ணிட்டு போயிருப்பேன் உங்க ப்ரண்டோட பேச்சுக்கு” என்று கணவனை கிண்டல் செய்தார்.
“ஏன் ஆன்டி அப்படி சொல்றீங்க? நினைச்சப்ப பார்த்திருக்கலாம், பேசியிருக்கலாமில்லையா?” என்று கல்கி கேட்க
“அப்படி இல்லை கல்கி, நினைச்சாலும் அப்ப உடனே பார்க்க முடியாது, பேசமுடியாது. இப்ப இருக்க பாதி பசங்க எல்லா எமோஷனையும் உடனே வாட்ஸப் ஸ்டேட்டஸ்ல காட்டிடுறாங்க. பெர்சனல் எல்லாம் ஷேர் பண்றாங்க. எனக்கு ஸ்டாலின் கூட சண்டைனாலும் நான் நெக்ஸ்ட் டைம் பார்க்குறதுக்குள்ள என்ன சண்டைன்னே மறந்திடும். எந்த எமோஷனும் காதல், கோவம்னு எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா அனுபவிச்சோம்”
“ஒரு நிதானம் இருந்தது, எங்களுக்குக் காத்திருக்கிறது தெரியும். ஒரு பஸ் ஏறனும்னா கூட வெயிட் பண்ணினோம், நினைச்ச நேரம் கேப் புக் பண்ற வசதி எல்லாம் அப்போ இல்லை. அப்படி காத்திருந்து கிடைச்சதால அந்த விஷயத்தோட அருமை நிறையவே தெரியும். ம்ம், இப்ப உள்ள வசதி இல்லைனாலும் நாங்களும் அப்போ செமையாதான் எஞ்சாய் பண்ணினோம். ஃப்ரண்ட்ஸோட நிறைய பேசினோம், இப்போ எல்லாமே சேட்டீங்க்தானே? புக்ஸ் படிச்சோம், எதுனாலும் தேடினோம், கூகுள் எல்லாம் இப்போதானே? அதனால நிறைய விஷயம் தெரிஞ்சிக்கிட்டோம்”
“ரொம்ப சின்சியரா இருந்தோம் படிப்போ, லவ்வோ இல்லை வேலையோ எதுவான்னாலும். இப்ப மாதிரி சீக்கிரம் டாப் பொஷிஷன் போகனும், அடுத்தவங்க ஸ்டோரி பார்க்கிறது ஸ்டேட்டஸ் பார்க்கிறதுன்னு ஒரு டென்ஷன் இல்லை. ப்ள்ஸ் டூல தோத்து நாலு அட்டெம்ப்ட்ல பாஸ் ஆனவங்க எல்லாம் இருக்காங்க, இப்ப உள்ள பசங்க எல்லாம் ரொம்ப சென்சிடிவ் தோல்வியை ஏத்துக்க பழகுறது இல்லை. வசதி நிறைய இருக்கிறதால ஈசியா வழி மாறி போயிடுறாங்க. அவங்க திருப்தி சந்தோஷம்னு வாழாம லைக்ஸ் ஷேர்னு வாழ்றாங்க. சோசியல் மிடியாவுல மில்லியன் ப்ரண்ட்ஸ் வைச்சு என்ன புண்ணியம்? அடியேனு சொல்லி அரவணைக்க ஒருத்தி இருந்தா போதும்”
“சும்மா மெசெஜ் போடுறது, உடனே ரிப்ளை வரலன்னா சண்டைப்போடுறது… அப்படின்னு எல்லாம் கிடையாது. நான் மெஜாரிட்டி சொல்றேன். எல்லாரையும் சொல்லல! லவ் பண்ணினா கமிட்டட் போடுறாங்க, அப்புறம் ப்ரேக் அப் ஆச்சுனா டிபி வைக்கிறதில்லை, என்னவோ போ, என்ன இருந்தாலும் இப்ப இருக்க பசங்க எல்லாத்திலேயும் வேகம்தான். அப்போ எல்லாம் நீயுஸ் படிச்சு எங்களுக்குன்னு ஒரு ஒபினியன் உண்டு. இப்போ ட்ரோல் விடியோஸ்ல யாரோ ஒருத்தங்க ஒபினியன்ஸ்தான் நீயுஸாவா பார்க்கிறாங்க…” என்று கோகிலா பேச
“ஹேய் கோகி! நீ இன்னும் மாறவே இல்லடி” என்றார் யமுனா.
“அதான்மா என் பிரச்சனையே” என்று புலம்பினான் ஸ்டாலின்.
“போங்க அங்கிள், ஆன்டி சொல்றது எல்லாம் சரிதான். நானே பார்க்கிறேன் ஹஸ்பண்டை பிடிக்கும்னா அதை அவர்ட்ட சொல்லனும், ஐ லவ் யூனு ஏன் வாட்ஸப்ல ஸ்டேட்டஸ் வைக்கிறாங்க அது ஏன்னு தெரியல. பெர்சனல்னு ஒன்னு இல்லாம போச்சு. நீங்க பேசுறது உங்க லைஃப் கேட்கிறப்ப எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு” என்று கல்கி சொல்லவும்
“அப்படி எல்லாம் இல்லை கல்கி! நாங்க நிதானமா பொறுமைசாலியா இருக்கலாம். ஆனா அவங்க அவங்க வாழ்ற காலம் அவங்களுக்கு அழகானதுதான். அந்த காலத்துல திறமையானவங்க முன்னேறி வர ரொம்ப கஷ்டம்., இப்போ அப்படி இல்லையில்லை” என்று கோகிலா சொல்ல அரசியோ
“நீங்க வேற கோகிக்கா, எவ்வளவு சீக்கிரம் ஏத்துறாங்களோ அவ்வளவு சீக்கிரம் இறக்கியும் விடுறாங்க. இந்த பசங்களை புரிஞ்சிக்கவே முடியல.” என்று புலம்பினார்.
“தாத்தா” என்று சிரஞ்சீவியின் மகன் மூன்று வயது உதய்கிரண் தூக்கம் கலைந்து எழுந்து வர,
“இக்கடா ரா” என்று சொல்லி பேரனை தூக்கி மடியில் வைத்து
“ஹாய் தாத்தாஸ், ஹாய் பாட்டீஸ்” என்றாள் உற்சாகமாக. சில முறை அவர்களைப் போட்டோவில் பார்த்திருக்க பத்து வயது சின்மயி அம்மாவைப் போல் சுட்டி.
“ஹாய் பாப்பா! எப்படி இருக்கீங்க?” என்று ராமு கேட்க
“நான் நல்லாயிருக்கேன், நீங்களாம் எப்படி இருக்கீங்க” என்று அழகாய்த் தமிழில் பேசினாள்.
“ஏண்டா சிரு நீ சாக்லெட் கொடுத்தா கூட தமிழ்ல பேசமாட்டியே டா, உங்கப்பனை மாதிரி ஒட்ட வைச்ச தமிழ்ல பேசுவ? உன் பொண்ணு இவ்வளவு அழகா பேசுறாளே டா?” என்று ஆச்சர்யமாகக் கேட்டார் ஸ்டாலின். கல்கி கணவனை முறைக்க
“ஸ்டாலின், சின்னுவும் கிரணும் தமிழ் பேசினா தமிழ்ல பேசுவாங்க, தெலுங்குல பேசினா தெலுங்குல ரெஸ்பாண்ட் பண்ணுவாங்க., சின்னுக்கு ஹிந்தி கூட தெரியும்” என்று சூர்யா பெருமையாகச் சொல்ல
“எனக்கும் பாப்பாவைப் பார்க்க பேத்தி இல்லையேன்னு ஆசையா இருக்குடா, எனக்கு அந்த இரண்டு வாலுப்பசங்கதான் இருக்கானுங்க” என்று பேரன்களைத் திட்டினார் ஸ்டாலின்.
“ஹாஹா! அவனுங்க நல்லா தமிழ் பேசுவாங்க ஆனாலும் இவரை வெறுப்பேத்த ஹிந்தி பேசுவாங்க” என்றார் கோகிலா.
“டேய் இந்த குட்டீஸை எல்லாம் பார்த்து எனக்கும் பேரப்பசங்க வேணும் ஆசைப்பட வைக்கிறீங்க” என்று ராமு சொல்ல
“அப்போ நீயும் சீக்கிரம் பொண்ணு தேடுடா, இவனுங்க எல்லாம் தமிழ்பொண்ணுங்களை வேற லவ் பண்ணிடுறானுங்க” என்றார் ஸ்டாலின் கிண்டலாக. அப்படியே கிண்டலும் கேலியுமாக பேசியவர்கள்
“டேய் சீக்கிரம் பையன் கல்யாணத்துக்குக் கூப்பிடுறோம், மரியாதையா இரண்டு பேரும் வந்து சேருங்கடா, அரசி தங்கச்சி இவன் டிக்கெட் கிடைக்கலன்னு சொல்லுவான், மெட்ராஸ் வரப்ப கண்டிப்பா வரனும் நீங்க” என்று பேசி வைத்தார் ஸ்டாலின்.
சூர்யாவின் குடும்பத்தினர் எல்லாரும் இரவு அவர்கள் வீட்டு திண்ணையில் உணவு முடிந்து உட்கார்ந்து இருந்தனர். சூர்யாவும் யமுனாவும் பேரப்பிள்ளைகளை வைத்திருந்தனர். உள்ளே அறையில் சிரஞ்சீவியும் கல்கியும் இருந்தனர்.
“ப்ரசாத்!” என்று கணவனின் தோள் சாய்ந்திருந்த கல்கி
“அத்தையும் மாமாவும் ரொம்ப லவ் பண்ணியிருக்காங்க இல்ல..” என்றாள். அவளைக் கிண்டலாகப் பார்த்தவன்
“இப்பவும் லவ் பண்றாங்கதானே கல்கி? நமக்கே மேரேஜ் ஆகி எலெவன் இயர்ஸ் ஆகிடுச்சு நீ இன்னும் இதைப் பேசுற..” என்று நெற்றியில் முட்டினான்.
“ப்ச், அதில்ல. இன்னிக்கு கோகி ஆண்டி, ஸ்டாலின் அங்கிள் எல்லாம் ஒவ்வொரு சீனா அத்தை மாமா லவ் ஸ்டோரி சொல்லும்போது கேட்கவே அவ்வளவு நல்லா இருந்தது தெரியுமா? சரி நமக்கும் அப்படி இருக்கான்னு யோசிச்சா ஒன்னுமே இல்ல ப்ரசாத்” என்றாள் கல்கி.
“அச்சோ அம்மடூ! ஏமிரா இதி? அவங்க ரொம்ப லவ் பண்ணினாங்க, ரொம்ப கஷ்டப்பட்டாங்க. நம்ம லக்கி, சீக்கிரமே லவ் பண்ணி சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டோம்” என்றான் வரப்ரசாத்.
“அய்யே என்னை ஏமாத்தாதீங்க மிஸ்டர் சிங்காரம், மாமா அத்தைக்கு ஹீரோ பென் எல்லாம் கிஃப்டா கொடுத்திருக்கார் தெரியுமா? அவங்க அவ்வளவு சுத்தி இருக்காங்க” என்று கல்கி பேச
“ஏன்ட்ரா கல்கி? நம்ம இரண்டு பேரும் ஒருத்தரை சுத்திட்டே இருந்திட்டோம், அதான் வெளியே சுத்தல” என்றவனின் கரம் மனைவியை சுற்றியது.
அவனின் கையை எடுத்து விட்டு,”சிங்காரம்.. போதும். வாங்க எல்லாம் வெளியே இருக்காங்க” என்று கல்கி சிரித்தபடி கணவனை இழுத்துக்கொண்டு போனாள்.
வெளியே வானத்தில் நிலா காய, சூர்யாவும் யமுனாவும் நண்பர்களிடம் பேசியதால் நல்ல மனநிலையில் இருந்தனர். வயது குறைந்து மனம் நிறைந்த உணர்வு!
“இந்த ஸ்டாலின் இன்னும் நம்ம சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டோம்ன்றதை விடமாட்டேங்கிறான் பாரேன் யமுனா” என்று சூர்யா சொல்ல யமுனா சிரித்தார்.
“தாத்தா நீங்களும் பாட்டியும் ஒரே காலேஜா? ஸ்டாலின் தாத்தா எல்லாம் எப்படி ப்ரண்ட்ஸ்?” என்று சின்மயி வரப்ரசாத் கேட்க
“இல்லை குட்டிம்மா. வேற காலேஜ்தான். நானும் ஸ்டாலின் தாத்தாவும் ப்ரண்ட்ஸ், கோகிலா பாட்டியும் யமுனாவும் ப்ரண்ட்ஸ்” என்று சூர்யா சொல்ல
“அப்போ எப்படி ஃப்ரண்டாகி மேரேஜ் பண்ணினீங்க?” சின்மயி கதை கேட்க
“சிரூ பாபு? உனக்கு இன்னும் மறக்கலையா?” சூர்யா மகனிடம் ஆச்சர்யமாகக் கேட்க
“எப்படி மறப்பேன் நானா? நான் கல்கிட்ட சொல்றதுதான், நீங்க அம்மாவைப் பார்க்கிறதுல பாதியாவது நான் கல்கியைப் பார்க்கனும்” என்றான் உணர்ந்து. நம் வீட்டில் உறவுகளை எப்படி நடத்துகிறோமோ அதுதானே பிள்ளைகள் மனதில் பதியும். அது போலவே சூர்யாவைப் போல் இருக்க வேண்டும் என்று சிரஞ்சீவிக்கு யாரும் சொல்லவில்லை, அப்பா ஒழுக்கமாய் நேர்மையாய் காதலாய் அம்மாவை மதித்து நடக்க, அவனுக்கும் அப்படி நடக்கத்தான் தோன்றியது. அப்படித்தான் நடந்தான்!!
“நோ கம்பாரிஸன்! அவங்க அவங்களுக்குள்ள கம்பாட்டபிலிட்டி இருந்தா போதும், அண்ட் நீ லக்கி சிரூ கல்கி மாதிரி வைஃப் கிடைக்க” என்ற அப்பாவின் பேச்சை சிரஞ்சீவி தலையசைத்து ஆமோதித்தான். அப்பாவின் பார்வை அம்மாவைத் தொட
“என் அம்மா” என்று உதய்கிரண் அப்பாவிடம் சொன்னவன் தாத்தாவிடமிருந்து அம்மாவிடம் தாவினான்.
“பார்த்தியா? கிரண் எப்படி அம்மாகிட்ட ஒட்டுறான். இவன் என்னை கண்டுக்கவே மாட்டான் கல்கிமா” என்று யமுனா மகனை பேச
“உங்களை கண்டுக்கல? உங்களை பார்த்தாலே என்னை முறைச்சிருக்கார் இவர் ஒருகாலத்துல… சும்மா பேசாதீங்க அத்த” என்றதும்
“இவனுக்கு அம்மான்னாதான் ரொம்ப இஷ்டம்” என்று சூர்யாவும் சொல்ல
“பாருங்க இவங்க எல்லாருக்கும் தெரியுது” என்று அம்மாவை முறைத்தான் ப்ரசாத்.
“சும்மா சொன்னேன் டா, தாத்தா மாதிரி கோவத்தைப் பாரு” என்று மகனை கொஞ்சினார் யமுனா.
உதய்கிரண் அம்மாவின் மடியில் இருந்தவன் உறங்கிவிட சின்மயி கூட தூக்கத்தில் இருக்க
“பனியா இருக்கு, உள்ள போகலாம்” என்று யமுனா சொல்ல, பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு கல்கியும் சிரஞ்சீவியும் சென்றுவிட்டனர்.
யமுனாவிற்குக் கால் மரத்திருக்க, அவர் கணவனைப் பார்க்க சூர்யாவோ மனைவியின் கையைப் பிடித்துத் தோளில் தாங்கிக்கோண்டார். அவர் எழாமல் இருக்கவுமே அவரும் நின்றுவிட்டார். மனைவியைப் பிடித்து தன்னோடு தாங்கி நிற்க வைத்தார்.
அவர்கள் பிரியங்களுக்குப் பாஷை இல்லை, பிரியமே அங்கே பாஷை!
“தேங்க்ஸ் சூர்யா” யமுனா தூக்கிவிட்டதற்குச் சொல்ல
எல்லாவற்றிற்கும் அவர் தந்த எல்லையில்லா காதலுக்கும் சேர்த்து “என் பிரியத்தம்மா இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொலுவாளா?” என்றபடி மனைவியின் நெற்றியில் முட்ட, அப்பா அம்மாவை பார்க்க வந்த வரப்ர்சாத்தின் கண்ணில் இது பட
“ஆஹான்ன்ன், நடத்துங்க நானா” என்று சிரிக்க, கல்கியும் கணவன் குரலில் எட்டி பார்த்தாள்.
“அச்சோ சூர்யா” என்று யமுனா கணவன் நெஞ்சில் இருந்து கையை எடுக்க,
“ஏன்ட்ரா பாபு?” என்று சூர்யா மகனை கேட்க
“குட் நைட் நானா! சும்மா” என்று கண்ணடித்தான்.
“இவன் இருக்கானே, எப்பவும் வந்துடுவான்” என்று யமுனா முணுமுணுக்க, சூர்யா சிரித்தார். அந்த சிரிப்பு யமுனா பதின்பருவத்தில் கண்ட அதே புன்னகை! அன்றை விட கூடியிருக்கும் பிரியம்.
இவனுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று யமுனாவிற்கு அதே உணர்வு. இறுக்கமாக கணவனின் கையைப் பற்றிக்கொண்டார். சூர்யாவின் கரங்களும் பிரியமாக மனைவியை அணைத்துக்கொண்டன.
பருவத்திற்கேற்றவண்ணம் பரிமாணம் மாறினாலும் பாசம் என்றும் மாறாது!!இன்னும் இன்னும் அவர்களின் அனுராகம் அனுதினமும் தொடரும்! தீரா காதல் மயக்கங்கள் !! பிரியங்கள் பேசிக்கொண்டே இருக்கும்!!