அதற்கு மறுக்கமுடியாமல் தலையசைத்தவள் விழிகள் கலங்க, ரிதுவும் ஆமோதித்தாள் அதனை.
“மூச், இனி அழக்கூடாது. என்ன செய்யலாம்ன்னு யோசிக்கலாம். நீ போய் ரெஸ்ட் எடு. நானும் பார்க்கறேன்…” என்று ஆத்மா ஷோரூம் கிளம்பிவிட்டான்.
அடுத்த பத்துநாட்களில் வித்யாவிற்கு ஷோரூம் அருகில் உள்ள காது கேட்காதோர், வாய் பேசாதோர் பள்ளியில் தற்காலிக பணியிடம் கிடைத்தது.
அது ஒரு தனியார் பள்ளி. அதை நிர்வகிப்பவர் ஆத்மாவிற்கு நன்றாக தெரிந்தவர் என்பதினாலும் வித்யா இப்போதிருக்கும் மனநிலைக்கு அவளிடம் முதலில் பழைய கலகலப்பை மீட்கவும் அந்த வேலையை தேர்ந்தெடுத்திருந்தான் ஆத்மா.
“இப்போதைக்கு இந்த ஜாப் போ. அடுத்து வேற பார்க்கலாம். உனக்கும் ரிலாக்ஸா இருக்கும்…” என்றான் அவளிடம்.
“சந்தோஷமாடா?…” என்று ரிதுவும் கேட்க அத்தனை சந்தோஷம் வித்யாவிற்கு.
இத்தனை நாளில் கோடிமுறை கேட்டுவிட்டாள் தான் பேசியதில் உனக்கு வருத்தமா என்று. ரிதுபர்ணாவிற்கு அதை சமாளிக்கவே பெரும்பாடாகி போனது.
அன்று காலை தான் முதல்நாள் வேலைக்கு சென்றிருந்தாள். ஊரில் இருந்து அத்தனைபேரும் அழைத்து வாழ்த்து சொல்லிவிட்டனர்.
“அங்க மருமகன்கிட்ட சொல்லி தான போன நீ? அவர் ஒன்னும் வருத்தப்படலையே? வேலைக்கு போகாதனா நின்னுடு கண்ணு. அவங்களை கஷ்டப்பட வைக்காத…” என்றிருந்தார் எடுத்ததுமே முருகேஸ்வரி.
ரிதுபர்ணா தான் அவரை சமாதானம் செய்தாள். தங்களின் ஆலோசனைப்படி தான் செல்கிறாள் என்று.
அண்ணாமலை, விசாலாட்சி, சபர்மதி, ஏழுமலை என்று மாற்றி மாற்றி அழைத்து வாழ்த்திவிட்டனர்.
இளவரசு பேச அழைத்தவர் அவர் வாழ்த்து சொல்லிவிட்டு செண்பகத்தின் கையில் தந்துவிட திரையில் அவர் முகம் கண்டு வித்யா அதிர்ந்துவிட்டாள்.
“என்னடி பேய கண்ட மாதிரி முழிக்கிற, பார்த்து போய்ட்டு வா…” அவ்வளவு தான்.
அவளிடம் அவனின் பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்று. பொய் சொல்ல தெரியாது.
இப்போதும் அவன் கேட்க ஆம் என்று சொல்ல இதைக்கொண்டு எல்லாம் அவள் விரும்ப துவங்கிவிட்டாள் என்று நினைத்தும் மகிழ்ந்துவிடவில்லை.
இப்போது தான் தன்னை நினைக்கவும், தன் வாழ்த்தை தேடவும் ஆரம்பித்திருக்கிறாள் என்று புரிந்தது.
ரிதுபர்ணாவிடம் வெடித்த அவளின் அன்றைய பேச்சுக்கள் ஒன்றை விடாமல் ஆத்மா முரளியிடம் தெரிவித்திருக்க,
“முதல்ல அவ விருப்பப்படி வேலைக்கு போகட்டும். யாரையும் சார்ந்து இல்லாம தன்னிச்சு சுயமா இருக்கோம்ன்ற நினைப்பே அவளுக்கு பெரிய பலத்தையும், தெளிவையும் தரும் ண்ணா. முதல்ல நம்ம நிழல்ல இருக்கோம்ன்ற பச்சாதாப எண்ணம் மாறனும். அதுக்கப்பறம் அவ என்னை யோசிக்கட்டும்…” என்றிருந்தவன்,
“இதுலயும் என்னோட சுயநலம் இருக்குன்னு வச்சுக்கலாம். போகட்டும். அவ விருப்பப்படி இருக்கட்டும். மனசுல நிம்மதி இருந்தா அமைதி வரும். அமைதி இருந்தா சுற்றிலும் என்ன இருக்குன்னு பார்க்க தோணும். கண்ணு ரசிக்கும். மனசு விரும்பும். என் காதலும் கவனம் பெரும்…” என எதிர்பார்ப்புடன் பகிர்ந்திருந்தான் முரளி.
இப்போது தன்னை பார்த்ததும் மலர்ந்து புன்னகைத்த அவளின் விழிகள் எப்போதும் அவனை பார்க்கும் அதே பாவனையை தான் வெளிப்படுத்தியது.
உறவென்னும் எண்ணத்தையும், தெரிந்தவன் என்னும் நம்பிக்கையை தாண்டி தன் மீதான ஒரு எதிர்பார்ப்பை அவளிடம் காணமுடியவில்லை.
ஆனால் தேடியிருக்கிறாள். ஒரு ஆதரவாளனாக, அக்கறை கொண்டவனாக இவ்வளவே தான் என்று நினைத்திருந்தான்.
முரளியின் முகத்திலும், விழிகளிலும் அசைவுகள் நின்று என்னவோ யோசனையில் இருக்க அவனை கையசைத்து அழைத்தாள் வித்யா.
“ஹ்ம்ம், எப்படி போச்சு இன்னைக்கு ஸ்கூல்?…” என தன்னை சுதாரித்துக்கொண்டு கேட்க, ‘நல்லாயிருந்தது’ என்ற பதில்.
“பார்த்தாலே தெரியுது. ஆமா என்னை விஷ் பண்ண தேடினேன்னு சொல்ற, ஏன் என் நம்பர் இருக்கே? நீ கால் பண்ண வேண்டியது தானே?…” என்றான் முரளி சிரிப்புடன்.
அதற்கு பதிலின்றி வித்யா யோசிக்க அவளின் பார்வையும், அதில் தெரிந்த தயக்கமும் முரளியின் முகத்தில் குறுஞ்சிரிப்பை படர செய்தது.
“ஓகே, லீவ் இட். நீ அடுத்து எப்போ இங்க வர்ற திவ்யா?…” என்றவன் கேள்வியில் வித்யாவின் முகமே கன்றிவிட்டது.
‘இல்லை’ என்று அவள் தலையசைத்து, ‘அம்மாவை வர சொல்லுவேன்’ என்றாள் அவனிடம்.
“ஏன் இங்க வரமாட்ட? உன் வீடு இங்க தானே இருக்கு?…” என்றான் கண்டிப்புடன்.
மௌனமாய் பதிலின்றி பார்த்தவள் விழிகள் உனக்கு தெரியாதா என்பதை போல் கேள்வி எழுப்பியது.
“உன் வீடு மட்டுமில்லை, உனக்கு உரிமையான நானும் இங்க தான் இருக்கேன். புரியுதா?…” என்று முரளி சொல்லவும் வித்யா தொண்டைக்குழி அசைவை வேகப்படுத்தியது.
“எதை, மிஸ்டர் வித்திவ்யாவையா?…” மீண்டும் சொல்லி கேட்க அவனை அப்பட்டமாய் முறைத்து, ‘ஆமாம்’ என்றாள்.
“ஓஹ், உனக்கு ஒரு ரகசியம் சொல்லவா?…” என கள்ளப்புன்னகையுடன் அவளிடம் கேட்டவன் அவள் பதிலை எதிர்பார்த்தான்.
முரளி கேட்டதுமே ‘சரி’ என்று அப்பாவியாய் தலையசைத்து என்ன சொல்ல போகிறானோ என்று வித்யா பார்க்க,
“உன்னையும் மிஸஸ்.முரளின்னு சொல்லனும்ன்னு இங்க வரைக்கும் வார்த்தை வருது…” என்று தன் நெஞ்சத்தையும், குரல்வளையையும் காண்பித்து நேசத்துடன் சொல்ல வித்யாவின் முகத்தில் பெரும் அதிர்வு அந்த வார்த்தையில்.
“ஆனா பாரேன், உன் பர்மிஷன் இல்லாம உன்னை மிஸஸ்.முரளிவினோகரன்னு சொல்ல முடியாம என்னை நானே கன்ட்ரோல் பண்ணிட்டிருக்கேன். பட் என்னை நான் சொல்லிக்க யார் பர்மிஷனும் தேவையில்லை…” என்றவன்,
“சொல்லு திவ்யா, ஓகே சொல்லுவியா?…” என்று முகம்கொள்ளா புன்னகையுடன் கேட்க, ‘உங்க கூட பேசவே மாட்டேன்.’ என்று சொல்லி அழைப்பை துண்டித்தவளுக்கு படபடவென்று வந்தது.
கைபேசியை கையில் வைத்திருக்க அதில் குறுஞ்செய்தி முரளியிடமிருந்து வந்திருக்க திறந்து பார்க்க நினைத்தவளுக்கு கைகள் ஒத்துழைக்கவில்லை.
மனம் நிலைகொள்ளாமல் தவிக்க அதற்குமேல் பொறுக்காமல் திறந்து பாராமல், கைப்பேசியின் திரையை மேலிலிருந்து கீழ் இழுத்துவிட அவன் அனுப்பியிருந்த செய்தி அவள் விழிகளில் சிறைபட்டது.
“காத்திருப்புகள் தித்திப்பாய் கனியட்டும். முரளி…” என்று அனுப்பியிருந்தான் அவளுக்கு.
“திருட்டுத்தனமா மெசேஜ் பார்த்தா சாமி கண்ணை குத்தும் திவ்யா…” என்று அடுத்த குறுஞ்செய்தி.
பிடிபட்டுவிட்ட பதட்டத்தில் அதனை கீழே போட்டுவிட்டவள் கால்களை மடித்து கூட்டி கட்டிக்கொண்டு முகத்தை அதில் புதைத்துக்கொண்டாள் வித்யா.