“உங்களோட பயத்துக்காக வித்யாவோட எதிர்காலத்தை பணயம் வைக்க முடியாது. இதை சொல்ற உரிமை எனக்கு இருக்குன்னு நினைக்கறேன்…” என்று சொல்லிவிட்டு அவன் மாடிக்கு சென்றுவிட தொய்ந்து போய் அமர்ந்தார் முருகேஸ்வரி.
அவர் நினைத்து வந்ததென்ன? இங்கே நடந்ததென்ன? என்று ஜீரணிக்க முடியாது அமர்ந்திருந்தார்.
“நீயா என்னத்தையாச்சும் நினைச்சிட்டு இருக்காம கொஞ்சநாள் ஆறப்போடு…” என்ற விசாலாட்சிக்கு முரளியை நினைத்து அத்தனை வருத்தமாகி போனது.
“இங்க பாரு முருகேஸு, நான் சொன்னா என்ன நினைப்பியோ? ஆனா நீ இப்ப எடுத்த முடிவு சரியில்ல. இப்பவும் நீ வித்யாவை பத்தி யோசிக்கவே இல்லை. குடும்பம் உடைஞ்சிடுமோன்னு தான் யோசிக்கிற…” என்றார் ஆனந்தி.
ரிதுபர்ணா வியப்புடன் மாமியாரை பார்க்க ஆனந்தி அதை எல்லாம் கவனித்ததாய் தெரியவில்லை.
“ஒருவேளை வித்யாவுக்கு உன் முடிவுல சம்மதமில்லாம, உனக்காக சரின்னு சொன்னா நல்லாருக்காது. என் மனசுக்கு அதுதான் படுது. எத்தனைபேர் என்னதான் அக்கறையா ஆறுதல் சொன்னாலும் பெத்தவங்க நமக்கு தான் நம்ம புள்ளையை பத்தின நினைப்பு இருக்கனும். பட்டு தெரிஞ்சுக்கிட்டேன் நான். புரிஞ்சுக்கோ…” என்றுவிட்டு சென்றுவிட்டார் ஆனந்தி.
“ம்க்கும், இங்க கிழக்க உதிக்கிற சூரியன் கூட மேற்க உதிக்க ஆரம்பிச்சிருச்சு. ஆனா நீ இப்படியே இரு…” என்று விசாலாட்சியும் அதட்டிவிட்டு செல்ல,
“ரிது கண்ணு…” என்றார் முருகேஸ்வரி பாவமாய்.
“கொஞ்சநாள் கல்யாணத்தை பத்தி பேசவேண்டாம் சித்தி. வேற என்ன சொல்றதுன்னு எனக்கும் தெரியலை. என்கிட்ட கூட நீங்க சொல்லலைல?…” என்றவள்,
“நான் தான் உங்களையும், வித்யாவையும் புரிஞ்சுக்கலை. எதையுமே புரிஞ்சுக்கலை. நீங்களும் அதே தப்பை பண்ணாதீங்க சித்தி…” என்று வருத்தமாய் சொல்ல,
“அட என்ன கண்ணு நீ? மாசமாருக்கற புள்ள கண்ண கசக்கலாமா?…” என்று அவளின் கண்ணீரை துடைத்தார் முருகேஸ்வரி.
அந்த திருமணம் பற்றிய பேச்சுக்கள் அப்படியே அடங்கிவிட்டது. இரண்டு நாட்களில் முருகேஸ்வரி, விசாலாட்சி கிளம்பிவிட ஆனந்தி ஏக்கத்துடன் பார்த்தார்.
“ம்ஹூம்…” என்று அவள் தலையசைத்து புன்னகைத்து, ‘எப்படி இருக்கீங்க?’ என்றாள் கையசைத்து.
“இதுவரைக்கும் பெட்டர் தான். இனிமேலும் நல்லா இருக்கறது உன் கைல தான் இருக்கு…” என்றான் அவளிடம்.
சட்டென்று முகம் கூம்பிவிட அவன் மறைமுகமாக எதை உணர்த்துகிறான் என்று மௌனமாய் ஏறிட்டாள்.
“சத்தியமா டபுள் மீனிங் எல்லாம் இல்லைம்மா. சிங்கிள் மீனிங்ல தான் சொல்றேன். சரியான பசி. உன்னை பார்க்க வர்ற அவசரத்துல கையில ஒரு பைசா எடுத்துட்டு வரலை. எனக்கு எதாச்சும் டிபன் வாங்கி தா. அப்பறம் தெளிவா பேசலாம்…” என்றான் நீண்ட விளக்கம் போல.
தலைசாய்த்து அவனை பார்த்தவள் காருக்குள் குனிந்து பார்க்க ஓட்டுனர் இல்லை அங்கே.
“உன்னை நான் பிக்கப் பண்ணிக்கறேன்னு ட்ரைவரை வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்…” என்று அதற்கும் முரளி பதில் சொல்ல, திகைப்புடன் பார்த்தாள்.
“ஓகே, உட்கார். போற வழில பேசலாம்…” என்று சொல்லி காரில் ஏறிக்கொள்ள அவளால் மறுக்க முடியவில்லை.
வேறு வழியின்றி தானும் உள்ளே அமர்ந்துகொள்ள சீட் பெல்ட்டை போட்டுக்கொண்டே வித்யாவின் மீது பார்வையை செலுத்தியவன் முகத்தில் கள்ளப்புன்னகை.
“ஓகே, எங்க போகலாம்?…” என்றான் அவளிடம்.
‘வேற எங்க? வீட்டுக்கு’ என்று கையை குவித்து காண்பித்தவள் அவனை கேள்வியாய் வேறு பார்க்க,
“வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி சின்ன ட்ரீட்…” என்றவனை யோசனையுடன் பார்த்தாள் வித்யா.
“எங்கன்னு நான் இடம் பிக்ஸ் பன்றேன். நெக்ஸ்ட் மந்த் நீ யோசிச்சு வை…” என்று சொல்லி காரை எடுத்து சாலையில் செலுத்த, வித்யா புருவமுயர்த்தி பார்த்தாள் அவனை.
“ஹேய், என்ன லுக் இது?…” என்று சிரித்தவன்,
“நீ நம்ம கம்பெனிக்கு வந்தப்போ கூட தான் உன்னோட முதல்மாச சம்பளத்துல எல்லாருக்கும் டின்னர் வாங்கி தந்த. அப்போ எல்லாருமே இருந்தோமே? தாமரைக்குளம் பக்கத்துல தான எல்லாரும் உக்கார்ந்து சாப்பிட்டோம்…” என்று வேறு ஞாபகப்படுத்தினான்.
முரளி சொல்லவும் ஒவ்வொன்றாய் ஞாபகம் வந்து இறுதியாய் அவர்கள் கிளம்பி வந்த விஷயமும் சேர்த்தே மனக்கண்ணில் வந்து நின்றது.
வித்யாவின் முகமாற்றத்தில் அவளின் மனவோட்டத்தை கணித்தவன் முகத்திலும் வேதனையுடன் கூடிய மென்மை.
அதன்பின் எதுவும் பேசவில்லை. மௌனத்திலேயே அந்த குறுகிய நிமிட பயணம் முடிவுக்கு வர, பதினைந்து நிமிடத்தில் உணவு விடுதியின் முன் வாகனத்தை நிறுத்தினான் முரளி.
“ரொம்ப எல்லாம் செலவு வைக்கமாட்டேன். பாரேன், சின்ன டிபன் சென்டர் தான். வா வா…” என்று இலகுவாய் சொல்லி காரின் கதவை திறந்துவைத்தபடி அழைக்க சங்கடமாய் பார்த்தாள்.
“உன்னை என்ன பண்ணிடுவேன்னு இவ்வளோ யோசிக்கிற திவ்யா?…” என்று கேட்டவன் குரலில் இருந்ததென்னவோ?
அந்த பேதத்தை அதன் உணர்வுகளை அவளால் தொடர முடிந்தது. அதற்குமேல் பிடிவாதம் காண்பிக்காமல் இறங்கி நிற்க,
“அண்ணாக்கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். நீ எதுவும் நினைக்காம வா…” என்றும் சொல்ல இன்னுமே அவனை பார்க்கவில்லை அவள்.
அதிக கூட்டமில்லாத அந்த உணவகத்தில் உள்ளே சென்று ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டதும் இருவருக்குமான உணவை சொல்லியவன் வித்யாவின் புறம் திரும்பினான்.
கண்ணாடியின் வழியே வெளிப்பக்கத்தை வேடிக்கை பார்த்தபடி அவளிருக்க சிலநொடிகளுக்கு பின்,
“திவ்யா…” என்றவன் அழைப்பில், ஆயாச பாவனையில் அவனை திரும்பி பார்த்தாள் வித்யா.
“நீ இங்க வந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாசம் ஆகிடிச்சுல?…” என்றான் முரளி.
இதென்ன சம்பந்தமில்லாத ஒரு கேள்வி என்பதை போல் தான் அவனை பார்த்தாள் வித்யா.
“வேலைக்கு சேர்ந்து ஒருமாசம், அதுக்கு முன்ன ஒரு பதினைஞ்சு நாள் முன்னவே நீ சென்னை வந்தாச்சு இல்லையா?…” என்றான்.
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவள், ‘இப்போ ஏன்?’ என்றாள்.
தன்னை ஊருக்கு வரும்படி எதுவும் அழைப்பானோ என்றொரு யோசனை வேறு. நிச்சயம் மறுத்துவிடவேண்டும் என்னும் உறுதி இன்னொருபக்கம்.
அழுத்தமாகவே அவனை அவள் பார்க்க, முரளி சொல்லியிருந்த உணவுமே துரிதமாக வந்துவிட்டது.
“பர்ஸ்ட் சாப்பாடு. அப்பறமா பேசலாம்…” என்றவன் உண்ண ஆரம்பித்தாலும் அவனுடனே வித்யாவையும் சாப்பிட வைத்துக்கொண்டே அவளின் வேலையை பற்றி பேச்சுக்களை தொடர்ந்தான்.
தன்னை பற்றி எவ்வித கேள்வியும் அவன் கேட்டுக்கொள்ளவில்லை. தன் ஞாபகமின்றிய அவளின் நாட்கள் கிடையவே கிடையாது என்பதில் அத்தனை திண்ணம் முரளிக்கு.
தன்னிடம் பேச நினைக்காமல் இருக்க இருக்கவே அந்த எண்ணங்கள் தன் நினைவுகளை அவளில் ஆழமாக விதைக்கும் என உறுதியாய் நம்பினான்.
அவனின் மேல் உள்ள நம்பிக்கையல்ல. அவளின் மேல், அவள் தன் மேல் கொண்டிருக்கும் அன்பின் மீதான நம்பிக்கை அது.
அதன் பெயர் காதலாகவும், நேசமாகவும் எதுவோ ஒன்று. அதன் அடிப்படை அன்பில் தானே ஆழம் பெரும் என வாழ்ந்துகொண்டிருந்தான்.
இப்போதும் என்னை தேடினாயா? நினைத்தாயா? பிடிக்கிறதா? என்ற எவ்வித கேள்விகளும் இல்லவே இல்லை.
அவன் அதை கேட்காததில் வித்யாவிற்குமே அத்தனை நிம்மதி. கேட்டுவிட்டால் நிச்சயம் தன் இயல்பு அவனிடம் பொய்யுரைக்க விடாதே?
காதல் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஆனால் அவனின் நினைவு இருந்தது உண்மை தானே? இவனுக்கு ஏன் தன் மீது இந்த எண்ணம் என்று மருகாத நாளில்லையே?
“ஓகே, எல்லாம் பினிஷ் பண்ணியாச்சு. பில் செட்டில் பண்ணிடு…” என்றான் அவளிடம்.
வித்யாவின் முகத்தில் மீண்டும் சிந்தனை. முரளியை தான் பார்த்தாள் கேள்வியாய்.
“என்னவாம்? கேளேன்…” என்று சிரிப்புடன் மார்பின் குறுக்கே கைகட்டிக்கொண்டு அவளிடம் ஆழ்ந்த பார்வையில் கேட்க, அந்த பார்வையினால் படபடப்புடன் பார்த்தவள், ‘காபி?’ என்று கையசைத்தாள்.