மணமேடையில் ராகுல் அமரவைக்கப்பட்டான். சில நிமிடத் துளிகளில் மணப்பெண்ணாய் கமலினியும் வந்து விட, அவளைக் காதலோடு பார்த்திருந்தான். இருவரும் மணமேடையில் அமர்ந்தபிறகு சடங்குகள் துவங்கியது.
கமலினிக்கு வியர்த்துக் கொண்டே இருக்க, கண்கள் வேறு சொருகியது. ஹோமகுண்டத்தில் இருந்த புகையால் அவள் மூச்சுத் திணற , அங்கே அவளால் அமர முடியவில்லை.
“ராகுல் ஒரு மாதிரி இருக்கு… ராகுல் ஐ ஃபீல் ஐ.. ஐ “என்றவளுக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.
உடலெல்லாம் மரத்துப் போனதொரு தோற்றம் அவளுள். மூளை தன் செயல்பாட்டை நிறுத்தியது கமலினிக்கு , நினைவில் எதுவும் இல்லை. உடல் வெட்டி வெட்டி இழுக்க, அப்படியே சாய்ந்து விட்டாள்.
“கமலி!” என்று அலறிய ராகுல் வேகமாய் அவளைத் தூக்க முயற்சிக்க, அதற்குள் ,”அச்சோ என் பொண்ணு!” என்று அலறியபடி கவின், மதிவாணன் இருவரும் அவளைத் தூக்கி இருந்தனர்.
வேகமாய் அவளை மேடையை விட்டு இறக்கிவிட்டனர்.
சரண்யா பூரணி ஒரு புறம் அழுது கொண்டு நிற்க, மற்றவர்கள் பதறிப் போய் நின்றிருந்தனர்.
திருமண மண்டபமே பரபரப்பாகியது. திருமணத்திற்கு வந்திருந்த மருத்துவப் பெண்ணொருத்தி துரிதமாக செயல்பட்டாள்.
“விடுங்க விடுங்க… தள்ளுங்க அவங்களை ஓரமா சாச்சு உட்கார வைங்க, காத்து வரட்டும் எல்லாரும் தள்ளுங்க கூட்டம் போடாதீங்க” என்றபடி அனைவரையும் விலக்கி விட்டு கமலியை பக்கவாட்டில் சாய்த்து விட்டார். வலிப்பு நிற்கும் வரை அமைதிகாத்து அருவறுப்பு படாமல் நுரைதள்ளிய வாயைத் துடைத்து விட்டார். அதற்குள் வலிப்பு நின்றிருந்தது கமலிக்கு. ஆனால் சுயநினைவு திரும்பவில்லை.
“கார்ல என் மெடிக்கல் கிட் இருக்கும் எடுத்துட்டு வாங்க” என்று கவினிடம் கார் சாவியைக் கொடுத்து கார் எண்ணையும் கூற, பதற்றத்துடன் ஓடிச் சென்று எடுத்து வந்தான் கவின்.
“குளிர் காய்ச்சல் வந்திருக்கு…அதனால கூட இருக்கலாம். இதுக்கு முன்னாடி இது போல வந்திருக்கா?” என கேட்க
“இல்லம்மா அதெல்லாம் எதுவும் வந்ததில்லை” என்றார் சரண்யா அழுதுகொண்டே .
“ஓகே. சிலருக்கு எதிர்பாராத விதமா வந்திடும், பயப்பட வேண்டியதில்லை.”என்றபடி காய்ச்சலுக்கு ஊசியை போட்டு விட்டார் அப்பெண் மருத்துவர்.
“எப்போ கண் முழிப்பா டாக்டர்?” ராகுல் தயக்கமாய் கேட்க ,”இன்னும் ஒரு பத்து நிமிஷத்தில் எழுந்திடுவாங்க. முகூர்த்த நேரம் இன்னுமிருக்கே . நோ வொர்ரீஸ் ,அவங்க எழுந்ததும் மேரேஜ் பண்ணிக்கோங்க” என்று இலகுவாய் சொல்லி விட்டு எழ ,
வனஜாவோ,” எது இனிமே கல்யாணமா?” என்றார் ஆங்காரமாய்.
சரண்யா, மதிவாணன், கவின், மூவரும் அவரை அரண்டு போய் பார்க்க, வனஜாவோ ,”இனி இந்தக் கல்யாணம் நடக்காது.” என்று சொல்லி விட்டார்.
‘அம்மா… வனஜா… சம்மந்தி…’ என்று அதிர்வாய் சில குரல்கள் ஒலிக்க ,அவரோ திமிராக ,”இந்தக் கல்யாணம் இனி நடக்காது. வலிப்பு வந்தவளை மருமகளாக்கி நான் என்ன செய்யப் போறேன்.? உங்க மகளுக்கு, காக்கா வலிப்பு வரும்னு நீங்க ஏன் எங்க கிட்ட சொல்லலை?, உண்மையை மறைச்சு ஒரு சீக்காளியை கட்டி வைக்கப் பார்க்குறீங்களா ?” என்று கத்தி விட்டார் வனஜா.
“என்ன பேசுறீங்க நீங்க…?, என் பொண்ணுக்கு இப்போ தான் ஃபர்ஸ்ட் டைமா ஃபிட்ஸ் வந்திருக்கு.” என சரண்யா கலங்கிய குரலில் சொல்ல ,வனஜாவிற்கு அதெல்லாம் காதில் ஏறவே இல்லை.
“எத்தனை தடவை வந்தா எங்களுக்கென்ன வந்தது…?இந்தக் கல்யாணம் இனி நடக்காது அவ்வளவு தான்.” என்றார் தீர்க்கமாக
“வனஜா என்ன பேசுற நீ…? அது ஏதோ ஸ்ட்ரெஸ் ல ஃபிட்ஸ் வந்திருக்கு. நீ பாட்டுக்கு அபசகுனமா பேசுற” என வனஜாவை கண்டித்த நடராஜன், மகனை மேடைக்குச் செல்லும்படி பணித்தார்.
“பூர்வி அண்ணியை அழைச்சிட்டு மேடைக்குப் போ. அம்மாடி தாலிக்கட்டின பிறகு நீ வந்து ரெஸ்ட் எடு” என்று கமலியிடம் சொல்ல ,வனஜா ராகுலின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார் .
“முடியாது என் பையன் அவ கழுத்தில் தாலி கட்ட மாட்டான்” என்று அழுத்தமாக சொல்ல,
அவனோ,” ம்மா என்ன பேசுறீங்க நீங்க?” என கமலியை பார்த்தான் படபடப்புடன்.
கமலிக்கு மருத்துவம் பார்த்த பெண் மருத்துவரும், ‘வலிப்பினால் திருமணத்தில் எந்த பாதிப்பும் வராது’ என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும், வனஜா ஏற்க மறுத்து விட்டார்.
“அது எதுவோ இருந்துட்டுப் போகட்டும் மா. என்னால இந்த கல்யாணத்தை நடத்த முடியாது. இந்தா பாருங்க உங்கப் பொண்ணை கூட்டிட்டு கிளம்புங்க.”என மதிவாணனிடம் சொல்ல
“மணமேடை வரைக்கும் வந்திட்டு கல்யாணம் நின்னா அவமானம் வனஜாக்கா. பொறுமையா இரு. நீ நினைக்கிற மாதிரி எதுவும் ஆகாது” என நிரூபனும் சொல்லிப் பார்த்தான்.
யார் பேச்சையும் கேட்கவில்லை வனஜா.
முன்பை விட இப்போது அதிகம் வியர்த்தது கமலிக்கு. ராகுலை பரிதாபமாக பார்த்து நிற்க, அவனும் தன் அன்னையை சமாதானம் செய்ய முயன்று கொண்டிருந்தான்.
“இது வேலைக்கு ஆகாது ராகுல். நீ போய் தாலியை கட்டு ,அம்மா நீங்க உங்க மகளை மேடையில் உட்கார வைங்க “என்று நடராஜன் சத்தமிட, வனஜா ஆங்காரியாய் நின்றார்.
“தெரியும்யா நீ என் மகனுக்கு ஏன் இந்த சீக்காளியை கட்டி வைக்க நினைக்கிறன்னு, எனக்கு நல்லாவேத் தெரியும் .”என்று நக்கலாக உரைத்து விட்டு வேகமாய் பூரணியிடம் வந்தவர்,” இந்தக் கடங்காரி கூட உனக்கு கூத்தடிக்கணும் அதுக்குத் தானே…?!,இந்தக் கல்யாணம் நடந்தா ரெண்டு பேரும் பழைய காதலை புதுப்பிக்கலாம்னு நினைச்சிங்களோ?” என்று கேட்டு விட
பூரணி முகம் சுளித்து,” என்ன உளர்றீங்க?” என்று கேட்டு விட்டாள்.
“ஏய் ! சும்மா நடிக்காதடி… இவர் தான் பையனோட அப்பான்னு தெரிஞ்சும் வந்திருக்க, அப்போ அவரை பார்த்து பேச ஆசையில்லாமையா…?,பதினாறு வயசிலேயே இவர் தான் வேணும்னு வீட்டை விட்டு ஓடி வந்தவ தான நீயி… இப்ப மட்டும் அந்த நெனப்பில்லாமலா இருப்ப “என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசி விட்டார் வனஜா.
“வனஜா இது தப்பு இப்படி பேசாதே” என்று எச்சரித்து விட்டான் நிரூபன் கோபத்துடன்.
“உனக்குத் தெரியாது நிரூபா, இந்தாளு இப்ப இந்த சீக்காளியை கட்டி வைக்க நினைக்கிறது எல்லாம் இவளுக்காக தான்.. இப்பவும் பழைய மவுசு மாறாம தானே இருக்கா “என்றதும்,” அய்யோ! போதும் நிறுத்துங்க “என்று கத்தி விட்டாள் பூரணி.
“நீங்க அதிகமா பேசுறீங்க வனஜா. என் தங்கச்சியை பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. “என சரண்யா கோபம் கொள்ள,
கவினோ ,அம்மா இதுக்கு மேலயும் இங்கே இருக்கணுமா… ராகுல் என் தங்கச்சியை கல்யாணம் பண்ண விருப்பம் இருக்கா இல்லையா ?,அதை மட்டும் சொல்லுங்க” என்று அவனிடம் முடித்தான் கவின்.
பூரணியை பற்றிய பேச்சிற்கு வனஜாவை கண்டிப்பாக ஏதாவது செய்தாகவேண்டும் என்று நினைத்தாலும், தங்கையின் காதலையும் பார்க்க வேண்டுமே என பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான் கவின்.
“அம்மா நீங்க பேசுறெதுவும் புரியல, தயவு செஞ்சு என் வாழ்க்கையை கெடுக்காதீங்க” என கையெடுத்துக் கும்பிட்ட ராகுல் கமலியை நோக்கிச் செல்ல, வனஜாவோ அவனை விட மறுத்தார்.
நடராஜன்,’ இதற்கு மேலும் பொறுமையாக இருந்தால் மகன் தன் காதலை இழந்து விடுவான் ‘என்று உணர்ந்து வனஜாவை அறைந்து விட்டார்.
“எவ்வளவு தைரியமிருந்தா இந்த பசப்புக்காரிக்காக என் தங்கச்சியை அடிச்சிருப்ப.?, இப்ப எனக்கே சந்தேகமா தான்யா இருக்கு. நீ இவளுக்காக தான் இந்தக் கல்யாணத்தை நடத்த நினைக்கிறியோன்னு “என்று சொல்லி விட, பூரணி முழுதுமாய் உடைந்து போனாள்.
“அண்ணே என்ன பேசுறீங்க நீங்க. சம்மந்தமே இல்லாமல் ஒரு பொண்ணை ஆளாளுக்கு அசிங்கப்படுத்துறீங்க” என்று திட்டி விட்டான்.
வனஜா ஆத்திரம் தாளாமல், “ஏய் ! உன்னால தான்டி என் புருஷன் என்னை அடிச்சாரு” என்று கத்தியபடி பூரணியை ஒரே தள்ளாக தள்ளி விட ,அங்கிருந்த சுவற்றில் மோதி விட்டாள் பூரணி.
“பூரணி !”என அவளைப் பதறிப் பிடித்துக் கொண்ட சரண்யா மீண்டும் அடிக்க வந்த வனஜாவை தள்ளி விட்டார்.
“ஏய் ! ஏன்டி இப்படி கேவலமா நடந்துக்கிற ?” நடராஜனால் அவமானத்தை ஏற்கவே இயலவில்லை.
“இந்த கல்யாணம் நடந்தது நான் செத்துப் போயிருவேன்” என விரல் நீட்டி எச்சரித்த வனஜா, ஹிஸ்டீரியா வந்தது போல கத்தினார்.
திருமணத்திற்கு வந்திருந்தவர்களோ அரைகுறையுமாக விஷயத்தை தெரிந்து கொண்டு ஆளாளுக்கு ஒன்று பேசினர்.
‘கல்யாணப் பொண்ணுக்கு ரெண்டு மூணு தடவை வலிப்பு வந்திருக்காம்! , ஏமாத்தி கல்யாணம் பண்ணி வைக்க பார்த்திருக்காங்க அதான் இப்படி’ என்றும்
‘மாப்பிள்ளையோட அப்பனுக்கும், பொண்ணோட சித்திக்கும் கள்ளத்தொடர்பு’ என்பது வரை பேசி விட்டனர்.
“பூரணிமா நீ இங்கேயே இரு. ரத்தத்தை துடைடி… வந்திடுறேன் கமலி தனியா நிக்கிறா அய்யோ நான் என்ன செய்வேன்னு தெரியலையே!?” என்று அழுதபடி மகளைத் தேடி ஓடினார் சரண்யா.
மதிவாணனும் ,கவினும் கமலியின் கையைப் பிடித்தவர்கள் விடவே இல்லை. கமலிக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.
யாரைக் குற்றம் சொல்லி நோவது என்றே எவருக்கும் தெரியவில்லை.
பூரணி மெல்ல எழுந்தாள். அநாதையாக நிற்பது போலத் தோன்றியது அவளுக்கு. ‘ஒரு காதல் அதை செய்து விட்டு இன்னும் எத்தனை பாடு படப்போகிறேன்’ என்று விரக்தியாக எண்ணியபடி , அங்கிருந்து சென்றாள். ‘இங்கே இருக்க வேண்டாம் இன்னும் பிரச்சினை நம்மால் வேண்டாம்’ என்று எண்ணினாளேத் தவிர,’ எங்கே எப்படி செல்வது?’ என்ற எந்த எண்ணமும் இல்லை அவளுக்கு. எப்படியாவது அய்யலூர் திரும்பி விடவேண்டும். சிவம் இருக்குமிடத்திற்கு போய்விடவேண்டும் என்ற எண்ணம் தான் அவளுக்கு. தன்னால் திருமணம் நின்று விட்டதே என்று எண்ணியதை விட ,தான் இல்லையென்றால் எப்படியாவது கமலி திருமணம் நடந்து விடும் , இனி அக்கா என்ற உறவும் நமக்கு இல்லை என்று தீர்மானித்துக் கொண்டே வெளியேறினாள்.
ராகுல் கலங்கிய முகத்துடன் வெளியே வந்தான். கமலியின் அருகில் செல்ல மதிவாணனோ,” மாப்ள பூரணியால எந்த பிரச்சினையும் வராது. என் மகளை வேண்டாம்னு சொல்லாதீங்க” என்றார் வேதனையுடன்
“அப்பா இதென்ன அபத்தமான பேச்சு.?” என கவின் கண்டிக்க,
” ராகுல்! நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க” என்றாள் கமலி இறுக்கமாக.
“அம்மா பேச்சை என்னால மீற முடியாது கமலி. அவங்க எனக்கு வேணும். இந்தக் கல்யாணம் வேண்டாம் லெட்ஸ் ப்ரேக்கப் “என்றான் தலைகுனிந்து கொண்டே.
“அப்பா வாங்க கிளம்பலாம்” என்றாள்.
“அம்மாடி நான்… நா பேசுறேன்டா” என்று பரிந்து வந்த மதிவாணனிடம்,” வேண்டாம்னு சொல்றவங்க கிட்ட என்னால் கெஞ்ச முடியாதுப்பா. அப்படி ஒண்ணும் உங்கப் பொண்ணு கீழானவ இல்லை. சீக்காளியும் இல்லை.” என்றவள் ,”அதே போல என் சித்தியும் எந்த அடுத்தவ புருஷனுக்கும் அலையறவங்க இல்லை. இதை உன் அம்மா கிட்ட தெளிவா சொல்லிடு. இத்தனை வருஷம் வாழ்ந்தும் தன் கணவனை நம்ப முடியாத அவங்க, என்னை மட்டும் நோயாளி இல்லைன்னு நம்பவாப் போறாங்க.?”என்று தன் தந்தை, தமையன் கைபிடித்து வெளியேறி விட்டாள்.
ராகுல் இயலாமையுடன் போகும் அவளைப் பார்த்திருந்தான்.