“லேசா சிரிச்சார். திரும்ப இந்த போட்டோவை பார்த்தார். என் எதிர்காலம் எப்பவோ உருவாகிருச்சு. அதை நான் உணர தான் நாளாகிடுச்சு. அதுக்குள்ள எல்லாம் கைவிட்டும் போயிருச்சுன்னு சொன்னார்…” என்றவன்,
“அதுமட்டுமில்ல, ஒரு பிரச்சனை அப்போ உண்மை, பொய் பிரிச்சு பார்க்க முடியலை. அதை எதிர்கொள்ள முடியாம, எனக்கு நானே ஒரு வட்டத்தை போட்டுட்டு இது வேண்டாம்ன்னு இங்க இருந்து ஓடத்தானே செஞ்சேன். நான் நினைச்சிருந்தா அப்பவே சரி பண்ணியிருக்கலாமேன்னு சொன்னார் த்தை…”
“ஹ்ம்ம், அவனும் என்ன செய்வான்? அதுவும் இன்னைக்கு கேட்டுட்டு போன விஷயத்துக்கு அப்பறமும் கூட…” என்றார் பெருமூச்சுடன்.
“அதுக்காக இப்படியே விட்டுடறதா? நாம தான் எதாச்சும் பண்ணனும்…”
“எப்படி? இப்ப மறக்கமுடியாம தவிச்சவன்கிட்ட இன்னும் கொஞ்சம் நினைச்சிட்டே இருன்னு இந்த போட்டோவை கொண்டுபோய் குடுத்தியே, அப்படியா?…” என்று சுகன்யா முறைக்க,
“சித்தி உங்களை கூப்பிடறாங்க…” என்றழைத்தாள் ஹரிணி.
ஹாலுக்கு செல்ல அன்றைய நிகழ்வுகளை எல்லாம் சொல்லி நிச்சயதார்த்த விவரம் எல்லாம் பேசிக்கொண்டனர்.
மறுநாளில் இருந்து ஹரித்திரனின் ஓய்வு நேரத்தில் அவனை அழைத்துகொண்டு ஹரிணிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று பேசிவிட்டு வந்தனர்.
அதில் எல்லாம் ஹரித்திரன் எவ்வித ஒதுக்கமும் காண்பிக்கவில்லை. தன் ஸ்தானத்தில் இருந்து அவன் விலகவும் இல்லை.
அதேநேரம் உங்களுக்கு விருப்பமா செய்யுங்கள் என்று நின்றுகொண்டான். தன் விருப்பமோ, தன் ஆலோசனைகளையோ அங்கே முன்வைக்கவில்லை.
எதுவாவது சரியில்லை என்று மனதிற்கு தோன்றினால் மட்டும் சுகன்யாவிடம் தெரிவித்துவிடுவான்.
அதில் சந்தனநம்பிக்கு வருத்தமான வருத்தம். தன்னிடம் மகன் பகிர்ந்துகொள்ளவில்லையே என்று.
“இல்லைங்க, இவங்க யாருன்னே தெரியலை. வேற யாரையோ தேடறாங்க போல. அது நாங்க இல்லை…” என்ற தீக்ஷாவின் அழுத்தமான குரலில் ஹரித்திரனின் மனது சில்லுசில்லாய் நொறுங்கியது.
‘நிஜமாகவே ஞாபகம் இல்லையா?’ என்று நம்பமுடியாமல், அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவனின் கால்கள் அங்கேயே வேரூன்றிவிட்டதை அலமலந்து அவன் நின்ற கோலம் வேதனைக்குரியதாய் இருந்தது.
“வேற யாரும் வர்றாங்களா மாப்பிள்ளை?…” என்றவர் தன் கைபேசியை பார்த்துவிட்டு,
“நமக்கு தான் போன் வாங்க…” என்று அழைக்க அதற்குள் சம்ருதிக்ஷா ஹரித்திரனின் பார்வையை விட்டு விலகி சென்றிருந்தாள்.
மனமெல்லாம் அவளுடன் பின்னே செல்ல இன்னும் தன்னை அவள் மறந்திருக்க கூடும் என்பதனை அவனால் ஏற்க முடியவில்லை.
ஹரிணியின் நிச்சயதார்த்தம் நல்லவிதமாய் நடந்தேறிவிட்டாலும் ஹரித்திரன் முகம் முன்பை விட இறுகிக்கிடக்க இதோ ஊருக்கு கிளம்பும் சமயம் மீண்டும் கமலன் மூலம் பிரச்சனை வெடித்தது.
வெடித்த விஷயத்தின் இறுதியில் நடந்த அனர்த்தங்களின் காரணி என்னவென்று நடந்தவற்றை உடைத்து மதிவாளனை முன்னிறுத்தி தானுமே முன்வந்துவிட்டாள் கங்கா.