சில அத்தியாயங்களுக்கு முன்பு இயற்பியல் புத்தகத்தை மூடி வைத்து தனது நட்பியல் புத்தகத்தை திறந்து வைத்திருந்தாள் யாழினி. அவளது நட்பியல் புத்தகத்தை வாசகர் ஆகிய நாமும் வாசித்துவிட்டோம். அவளுக்கான வாசகன் யார் என்பதை யாழினியும் அறியவில்லை, இன்னும் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தவில்லை. ஆம். நட்பியல் சிந்தனைகள் கண்ணீர் துளிகளை யாழினிக்கு வரவழைத்துக் கொண்டிருந்தன. அந்நேரம் மண்வாசனையுடன் அலாதி மழைத்துளிகள் யாழினியை தனது துளிகளை நோக்கும்படி வருவித்துக் கொண்டிருந்தன.
அடுத்தடுத்து மண் சட்டிகளில் வைக்கப்பட்டிருந்த துளசிச்செடி, தூதுவளையின் மணம் கமழும் மாடிப்படிகளைக் கடந்து பால்கனிக்கு வந்திருந்தாள் யாழினி. மழைத்துளிகளுள் பார்வையை நோக்கி கொண்டிருந்தவள் பால்கனியிலிருந்து வானோக்கியவள் பூமியையும் நோக்க தவறவில்லை. பூமி நோக்கிய யாழினி ஒரு விழிப் பார்வையால் திடீரென்று வியப்புற்றாள்.
மனதில் வட்டமிடும் எண்ணங்களுடன் யாழினியின் விழிப்பார்வைகள் அவனை வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அனிச்சையாக பார்வையை அவனை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தவள் இனம்புரியாத எண்ண ஓட்டங்களை தன் மனதிலிருந்து தவிர்த்துவிட்டு தனது மின்னோட்டம் பற்றிய பாடங்களை படிக்க தயாராகிக் கொண்டிருந்தாள்.
இவளின் பார்வையையும் இயற்கையோடு இயைந்த இவளின் நேர்த்தியையும் நோக்கிக்கொண்டிருந்தான் அவன். “இனியன்” என்ற அழைப்பிற்கு சுய நினைவு வந்தது போல், மழைத்துளிகள் தெளித்துச் சென்ற சாரல்களுக்கு இடையில் தன் அக்காவின் அழைப்பை ஆமோதித்து நடக்கலானான். “வெண்பாஆ” என்று இனியன் அழைத்தபோது, “நானும் கவனித்தேன் உன்னுடைய எண்ணமும் பார்வையும் மாடியில் நின்ற அந்த பெண்ணிடம் சென்றதை…” என்றாள் வெண்பா.
“இல்லை வெண்பா பல முறை நான் அந்தப் பெண்ணைப் பார்த்ததுண்டு. மழையுடன் அவளைக் காண்பது இது இரண்டாவது முறை முதல் முறை மாடியில் இருந்து அவள் இறங்கிவந்தபோதும், இப்போது அவளைப் பார்க்கும் போதும் ஒரே விதமான எண்ணம்தான் உதிக்கிறது” என்று பேசிக்கொண்டே சென்றவர்கள் அவர்களது வீட்டைக் கடந்து சில தொலைவில் வடக்கு வீதியின் அந்தத்தில் ஐந்து அடுக்கு சுற்றுச்சுவர்களும், நந்தவனம் பூத்துக் குலுங்கும் “லட்சுமி நரசிம்மர்” ஆலயத்தை நோக்கி வந்திருந்தனர்.
நரசிம்மரின் தரிசனம் முடிந்து சுற்றுப்பிராகரத்தில் அமர்ந்திருக்கையில் மீண்டும் வெண்பாவிடம் தொடர ஆரம்பித்தான் இனியன். “யாழினியை மூன்று மாதங்களுக்கு முன்பே தெரியும். பள்ளி முடிந்து அவள் வரும் வழியில் ஒருநாள் பார்த்தேன். அன்று மாலை அவள் படிகளில் இறங்கி வரும்போது என் மனம் கிறங்கியது உண்மைதான். நாட்கள் செல்ல செல்ல அவள் என் மனதுள் பதிய ஆரம்பித்தாள். அவளது செய்கைகள், குணம் எல்லாவற்றையும் தாண்டி அவளை என்னுள் பதித்த நிமிடங்கள்…” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்…..
“இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது நினைவில் இருக்கட்டும். மீண்டும் அம்மா, அப்பாவிற்கு தலைகுனிவு என்பது ஒருபோதும் வரவேண்டாம்” என்று வெண்பா கூறியபோது இனியனின் மனம் ஒரு நிமிடம் இரணியன் பெற்ற துன்பத்தை அனுபவிப்பது போல் நரசிம்மருக்கு தோன்றியதோ என்னவோ அங்கே நரசிம்மன் தரிசனத்திற்கு வந்திருந்த யாழினியின் தரிசனம் இனியனுக்கு கிட்டியது.
(இரணியன் வதைப்படலம் அரங்கேறும் போது பிரகலாதன் மனதுள் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓம் நமோ நாராயணா… என்ற ஓசை சூழ்ந்திருப்பது எதார்த்தமான ஒன்று !
இனிய யாழிசை போல் “யாழினியின் இனியன்” என்ற காதல்நயம் என்றும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்…)