Skip to content
Post Views: 5,001
KKE N -3
மதுவின் கவனம் இவர்கள் மீதும் இருந்தது. லேசாக தலை குனிந்து பைலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
டீ வந்தது. அவள் கண்ணசைவில் வெற்றிக்கும் மலருக்கும் கூட பிஸ்கட்டும் டீயும் கொடுத்தார்கள். கணவனை காணாமல் தேடி அலைந்திருப்பாள். சிறு பெண். நிச்சயம் எதுவும் உண்டிருக்க மாட்டாள்.
அந்த ஆண்காவலர் அதெல்லாம் பார்க்கவில்லை. “உன் புருஷன் பேரு என்னமா?” அதிகாரமாகவே வந்தது குரல்.
Advertisement
“நல்லவன்”
“அவன் நல்லவன் தாம்மா . அவன் பேரு என்ன?”
முறுக்கிய மீசையும் சற்று பெரிய தொப்பையும் கொண்டு அடர்ந்த கருப்பில் இருந்தவரை பார்த்து ஏற்கனவே மலருக்கு சற்று பயமாகத்தான் இருந்தது.
Advertisement
“ஐயா! அவரு பேருதான் நல்லவன்” வெற்றி விளக்கினான்.
Advertisement
“யோவ்! நேத்து புடிச்சுட்டு வந்தோமே அந்தாளு பேரு என்ன?”
“பேரு தெரியல. ஆனா உள்ளேதான் இருக்கான்” அடக்கமாக விளக்கினார் அருகில் இருந்த கான்ஸ்டபிள்.
“இவனா பாரு”
Advertisement
“மலரு” மனைவியை பார்த்து தேம்பித்தேம்பி அழுதான் அவள் கணவன்.
“இவருதாங்கய்யா”அவளும் அழுது கொண்டே சொன்னாள். கேஸ் பைல்களை பார்த்துக் கொண்டிருந்தாலும் இவர்கள் மீதும் மதுவின் கவனம் இருந்தது.
“ஆளையும் பரையும் பாரு. கான்ஸ்டபிள் லத்தியால் இரண்டு அடி போட்டார்.
“உன் புருசன் என்ன பண்ணான் தெரியுமா?”
“என்ன செய்திருப்பான்?” யோசிக்கவே பயமாக இருந்தது. நிச்சயம் ஏதாவது ஏடாகூடமாக செய்திருப்பான். இன்னொருபுறம் அவமானமாக இருந்தது. கீழ் உதட்டாய் கடித்துக் கொண்டாள் . கண்களில் கண்ணீர் கோடாக வழிந்தது. பார்க்கவே பாவமாகத் தான் இருந்தது.
“புல்லா சரக்க போட்டுட்டு பஸ்ஸுக்கு முன்னாடி என் மேல பஸ்ஸ ஏத்து ஏத்து ன்னு ஒரே ரகளை . ட்ரைவர் ஏத்தி இருந்தாருன்னா? நட்ட நடு ரோட்டுல உக்காந்து ஒரே கலாட்டா . உன் மூஞ்சிய பார்த்து விடறேன். இல்ல இவனை எல்லாம் ….இந்தா இதுல ஒரு கை எழுத்து போடு. பேரு கேட்டா நல்லவன் நல்லவன்னு சொன்னான். நாங்க தான் நம்பலை “
“எங்கையாவது மறு வாழ்வு மையத்துக்கு கூட்டிட்டு போம்மா ” கை எழுத்து வாங்கி கொண்ட கான்ஸ்டபிள் தான் சொன்னார்.
மலரை பார்த்த மதுவுக்கு பாவமாகத்தான் இருந்தது. இருந்தும் என்ன செய்ய? ஒரு நாளைக்கு நூறு குற்றவாளிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விதவிதமான குற்றங்கள். சில சமயங்களில் ஊகிக்க முடிந்தாலும் இது போன்ற பல விஷயங்கள் நம்மால் அனுமானிக்க முடியாதது.நிறைய நேரங்களில் பெரிய குற்றங்கள் எளிதாக துப்பு துலங்கி விடும். இது போன்றவை, சொல்ல முடியாது. நிறைய குற்றவாளிகள் அடிக்காதீர்கள் என்று அழுவார்கள். என்ன செய்ய முடியும்? அடிக்கவும் முடியாது. தண்டிக்கவும் முடியாது. பல நேரங்களில் கோபம் வந்தாலும் நல்லவன் போன்றவன் விஷயங்களில் சிரிப்புத்தான் வரும்.கை எடுத்து கும்பிட்டு விட்டு கையோடு கணவனை அழைத்து வந்தாள் மலர்.
அக்காவை வீட்டில் விட்டு விட்டு ஹோட்டலில் சாப்பாடு வாங்கி கொடுத்து விட்டே வந்தான் வெற்றி. அக்காவின் பசி பற்றி யோசித்தவனுக்கு தனக்கும் பசிக்கும் என்பது கூட மறந்து போனது. வீட்டிற்கு செல்ல மனம் இல்லை. இருந்த பிரச்சனையில் காலை முதல் ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லை. கையில் இருந்ததையும் அக்காவின் கை செலவிற்கு கொடுத்து விட்டு வந்து விட்டான். இப்போதாவது வண்டி எடுக்க வேண்டும். நேரமாகி விட்டது. வித்யாவை அழைத்து வீட்டில் விட வேண்டும். சென்று வித்யாவை அழைத்துக் கொண்டான். “அக்கா பிரச்சனை என்னவானது?” இது வரை தந்தையும் கேட்கவில்லை. தங்கையும் கேட்கவில்லை.ஒரே ஒரு முறை தந்தையாவது போன் பண்ணி இருந்திருக்கலாம். வருத்தமாக இருந்தது . வித்யாவுடன் வண்டியில் வந்து கொண்டிருந்தான்.
“இங்க ஓரமா நிறுத்துங்க”
“என்ன மேடம் கடைக்கு போகணுமா?”
“ஆமா! நான் இல்ல. நீந்தான் போகணும். இந்தா போய் சீக்கிரமா சாப்பிட்டு வா. நான் வெயிட் பண்ணறேன்”
தான் இன்னும் உணவு உண்ணவில்லை என்பதே அவனுக்கு இப்போதுதான் உரைத்தது.
“பரவால்ல மேடம். நான் உங்கள விட்டுட்டு அப்புறமா சாப்பிட்டுக்கறேன்”
“அதெல்லாம் இல்ல. முதல்ல சாப்பிடு. உன் மூஞ்சிய கண்ணாடில பாரு “
அவனுக்கும் மிகவும் சோர்வாகத்தான் இருந்தது.
காசை வாங்கி கொண்டு தெருவோரத்தில் இருந்த கடையில் அவசரமாக ஒரு தோசையை வாங்கி சாப்பிட்டான். வேக வேகமாக சாப்பிடும் அவனையே அவள் ரசித்து பார்த்தாள் . இது பசியின் வேகமா இல்ல அவளை காத்திருக்க வைக்க கூடாது என்ற வேகமா? அவனுக்கு தெரியாது. வண்டியில் அமர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டான். முகம் தெளிந்திருந்தது .
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்”
“இருக்கட்டும் வெற்றி. நமக்குள்ள என்ன?
கேட்கலாமா வேண்டாமா? சற்று யோசித்து விட்டு கேட்டாள் .
“என்ன வெற்றி? என்ன பிரச்சனை?” குரலில் அத்தனை அன்பும் அக்கறையும் இருந்தது.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல மேடம்”
“உங்களுக்குத்தான் பொய் சொல்ல வரலையே . அப்புறம் எதுக்கு ட்ரை பண்ணறீங்க. சொல்ல இஷ்டமில்லன்னா விடுங்க. இட்ஸ் ஓகே” சாதாரணமாக சொன்னாலும் அவன் சொல்லாதது அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. கேட்டது தப்போ? வாய் மூடி இருந்திருக்கலாம் மனதில் மனதை மனதார திட்டிக் கொண்டாள் .
“அப்டின்னு இல்ல மேடம். சந்தோசமான விசயன்னா சொல்லலாம். கஷ்டத்தை எதுக்கு..?
வித்யா வீடு வந்து விட்டது.
“உங்களோட கஷ்டத்தை யாருகிட்டையாவது சொல்லணும். மனசுல இருக்கற பாரத்தை இறக்கனுன்னு தோணிச்சுன்னா நீங்க தாராளமா எங்கிட்ட சொல்லலாம். நானும் உங்களுக்கு பிரண்டு தான்” ஏனோ அவனை அப்படியே விட்டு விட்டு செல்ல மனம் வரவில்லை. மனதில் பட்டதை சொல்லி விட்டாள் .
“சரிங்க மேடம்” நல்ல தோழமை கிடைப்பதும் வரம்தான். அவளின் வார்த்தைகள் மனதிற்கு இதமாக இருந்தது.
அன்று பெரியதாக வருமானம் இல்லை. மாலையில் ஏதோ மத்திய மந்திரி வருவதாக சொல்லி வண்டிகளை நிறுத்தி இருந்தார்கள். அதில் அங்கே இங்கே என்று பயங்கர ட்ராபிக். பெரியதாக சவாரி கிடைக்கவில்லை. உடலும் சோர்ந்து போய் இருந்தது. இரவுக்கு உணவை முடித்துக் கொண்டு வந்து விட்டான். வீட்டில் இருக்கும் தங்கை மகளுக்காக இரண்டு சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி வந்தான். அவன் வீட்டிற்குள் நுழையும்போதே,
“மாமா !மாமா! பாப்பாக்கு என்ன வாங்கிட்டு வந்த?” என்று சுற்றி சுற்றி வருவாள். அவள் தந்தையை விடவும் இவன் மீதுதான் அவளுக்கு அதீத அன்பு. உடல் வலிக்கு கோரைப்பாயை விரித்துக் கொள்வான். மனதிற்கு? தங்கை மகளை நெஞ்சில் போட்டுக் கொள்வான். தாயும் இல்லை. அக்காவும் திருமணமாகி சென்றபின் சில வருடங்கள் அனாதை போல சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு அந்த குட்டி தேவதைதான் முகத்தில் சிரிப்பை கொண்டு வந்தவள்.
மகளும் மாமனுடனும் தந்தையுடனும் ஒட்டிக் கொண்டதில் பெற்றவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சிதான்.அவர்களுக்கு தேவையான தனிமை கிடைத்தது. குழந்தை பிறந்திருந்தாலும் இருவருமே இளையவர்கள்தானே? காதல் இருந்தது. காமமும் இருந்தது. அதை அனுபவிக்க நல்ல தனிமையும் கிடைத்திருந்தது. வேறு என்ன வேண்டும்?
தங்கை கணவன் ஒரு பிரைவேட் கம்பனியில் வேலை பார்க்கிறான். வருமானம் பெரியதாக எல்லாம் இல்லை. இருப்பினும் ஊதாரித்தனம் செய்ய வேண்டிய அளவு பார்த்துக் கொண்டார்கள். பன்னிரண்டாம் வகுப்பு முடிப்பதற்குள்ளேயே பள்ளிக்கு அருகில் இருக்கும் கம்பெனிக்கு வேலைக்கு வந்தவனுடன் நட்பு ஏற்பட்டு, அடிக்கடி தெரு முனையில் சந்தித்து காதலாகி …..
“தொட்டு தடவி சூடேற்றி விட்டு கட்டு கதைகள் சொல்லாதே!”
யாரை குறை சொல்ல முடியும். வேறு வழி இல்லாமல் திருமணத்தில் வந்து நின்றது. எல்லாமே ஆனதன் பிறகு எங்கே மேஜர் மைனர் பார்ப்பது?
தந்தையின் நல் ஆசியுடன் அருகில் இருந்த கோவிலில் திருமணம் நடந்தது. திருமணம் ஆன அன்று இவர்கள் வீட்டில் வந்து தங்கிய மாப்பிளைக்கு இன்று வரை தன் பிறந்த வீடு நினைவில் இல்லை.அல்லது மறு வீட்டு விருந்து முடியவில்லை. இவள்தான் மயக்கி பையனை திருமணம் செய்து கொண்டாள் என்று மாமியார் வீட்டில் திட்டினார்கள்தான்.பெரிய சண்டை நடந்தது. வேறு பெரிய இடத்தில இருந்து பெண் எடுத்திருக்கலாம். சொந்தத்தில் பெண்கள் இருந்தார்கள். குறைந்தது ஐம்பது சவரன் போட்டிருப்பார்கள். அதுவே இதுவே என்று கத்தினார்கள் தான். அதுவே குழந்தை பிறந்த பிறகு என்னதான் இருந்தாலும் தன் மகனின் உயிர்என்று ஏற்றுக் கொள்ளவே செய்தார்கள். அதையே சாக்காக வைத்து சீர் செய்ய வைத்தார்கள். அதற்கென்று மாதாமாதம் தந்தையும் மகனும் வேறு கடன் அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். வட்டிக்கு வாங்கியது. தங்கை போட்ட ஒரு குட்டிக்கு வட்டி பல குட்டிகள் போட்டது.
மாமியார் சாதாரணமாகத்தான் பேசினார்கள்.இருப்பினும் அங்கே சென்றால் வீட்டு வேலைகள் செய்ய வேண்டி வருமோ என்று பயந்து இங்கேயே நிரந்தரமாக தங்க ஆரம்பித்தாள். கூடவே கணவனும்தான். வியர்வை எட்டி கூட பார்க்க முடியாதபடிக்கு ஏசி போட்டுக் கொள்வார்கள். அது வெற்றியின் தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டபோது தந்தைக்காக மாதாந்திர கடனில் வெற்றி வாங்கியது. ஏனோ அது வாங்கியது முதல் முதலே தந்தையும் மகனும் உபயோகப்படுத்தியதே இல்லை. சொல்லப் போனால் பாப்பாவுமே ஏசியில் இருந்ததில்லை. மொட்டைமாடியில் தாத்தா மீது கால் போட்டுக் கொண்டோ இல்லை மாமனின் நெஞ்சில் ஏறி படுத்துக் கொண்டுதான் உறங்குவாள். திருமணமான இந்த ஐந்து வருடத்தில் அக்காவின் நிலை என்ன? தங்கையின் நிலை என்ன? அக்காவை பற்றி நினைத்தவனுக்கு கண்ணில் கண்ணீர் வழிந்தது.
“அப்பா! ப்ளீஸ் பா! அக்காவுக்கு இப்ப கல்யாணம் வேணாம்பா. அக்கா இப்பதான் ஸ்கூல் முடிச்சுருக்கு. அக்கா கொஞ்ச நாள் நம்ம கூட இருக்கட்டும்பா” காலை பிடித்து கெஞ்சும் மகனின் முகத்தை பார்த்தவருக்கு துளியும் இறக்கமில்லை .
“எனக்கு இந்த கல்யாணம் வேணாம் எனக்கு மாப்பிளையை புடிக்கல. தம்பி ப்ளஸ் டூ முடிக்கட்டும் அப்புறமா நான் கல்யாணம் பண்ணிக்கறேனே” சொல்வதற்கு துளியும் தைரியம் இல்லாதவள் மலர். பேசி தீர்க்க வேண்டியதை கூட தீர்த்துவிட்டு பேசும் தந்தையிடம் சிறு பெண் எப்படி தைரியமாக பேச முடியும். அவள் மட்டும் அல்ல. வெற்றியும் அப்படிதான். வயதிற்கு வந்ததன் பின்னும் வாய் திறக்க பயப்படும் அதிசய பிறவிகள். அப்படி என்றால் வெற்றியின் தங்கை மட்டும் எப்படி? அவள் மட்டுமே விதி விலக்கு . அவள் பிறந்த போது அவள் அன்னை நன்றாகத்தான் இருந்தாள் . ஆனாலும் வயிற்றில் வலி. அரசு மருத்துவமனை. நர்ஸுகளிடம் சொன்ன போது,
“அப்ப வலி இல்லை. சுகமா இருந்தது. இப்ப வலிக்குதோ?மூணு பெத்துக்கிட்ட? அசிங்கமாய் பேசினார்கள். மழை நேரம். மருத்துவர்கள் வரவே இல்லை. மருத்துவர்கள் வந்து பார்த்த நேரம் எல்லாம் கை மீறிப் போனது. வயிற்றில் மாட்டிக் கொண்டிருந்த நஞ்சுக் கொடியை அகற்றாமல் விட்டதன் விளைவு வெற்றியின் அன்னை இறந்து போனாள் . அதே நேரம் மந்திரி வந்து பார்த்ததால் வெளியில் விஷயம் கசியாமல் இருக்க நஷ்ட ஈடு கொடுத்து சரி கட்டினார்கள்.
குழந்தையை வீட்டுக்கு தூக்கி கொண்டு வந்தபோது,
“ஒனக்கு காச அள்ளி கொட்டி இருக்கா மகராசி! தாயில்லா புள்ள! வுட்டுறாத ராசா” ஆரத்தி எடுத்துவிட்டு ஏதோ ஒரு கிழவி சொல்லி விட்டு போனார்.
“நீதான் தாயி இனி தம்பி தங்கச்சிக்கு அம்மாவா இருந்து பார்த்துக்கணும்” தங்கைக்கு நல்லது செய்தவர் கூடவே அக்காவுக்கு ஆப்பு அடித்துவிட்டார்.
வெற்றியின் தந்தை அது வரை வாடகை ஆட்டோ ஒட்டிக் கொண்டிருந்தவர் புது ஆட்டோ சொந்தமாக வாங்கி கொண்டார். கடைசி மகள்தான் தன்னுடைய உலகம் என்று புவனா என்று பெயர் சூட்டினார். சீராட்டி பாராட்டி வளர்த்தார். மற்ற குழந்தைகளுக்கு சமைத்துப் போட மூத்தவள் படிப்பை பத்தாம் வகுப்புடன் நிறுத்தினார் . வெற்றி தான் அழுது அடம் பிடித்து எப்படியோ பன்னிரண்டாம் வகுப்பு வரை அவளை படிக்க வைத்து விட்டான். அக்காவின் படிப்புக்காக தானும் வீட்டு வேலைகளை கற்றுக் கொண்டான். அவன் எத்தனையோ கஷ்டப்பட்டும் நிறுத்த முடியாதது இந்த திருமணம்தான். அக்காவுக்கு சோப்பு அலர்ஜி உண்டு. அவளுக்காகத்தான் இந்த வாஷிங் மெஷின் வாங்கி போட்டான். ஆனால் இன்று கையெல்லாம் காய்த்து, தோல் உரிந்து புண்ணாகி இருந்த அக்காவின் கைகளை பார்த்தவனுக்கு தாங்கத் தான் முடியவில்லை.
“அக்கா எதுக்குக்கா இன்னும் இங்க இருக்க?வாக்கா! இனிமே இங்க இருக்க வேணாம். நான் பாத்துக்கறேன்கா”
“விடுடா கைய! அங்க வந்து எவண்டா நம்ப அப்பாகிட்ட பேச்சு வாங்கி கட்டிக்கறது?”இவராவது ஒரு நேரம் அடிப்பாரு . ஒரு நேரம் கொஞ்சுவாரு . அங்க?வார்த்தையால இருக்கறது பத்தாதுன்னு பெல்டல வேற அடிச்சு விளாசுவாரு. எப்படியாவது என்ன தள்ளி விட்டுடணுன்னுதானடா இங்க தள்ளி விட்டாரு. மறுபடியும் எப்பிடிடா அங்க வர முடியும்?”
“சரி! நீ என்ன தனியா கூட்டிகிட்டு போய்ட்டா? நமக்கு எவன் வீடு குடுப்பான்?வாழாவெட்டி . புருஷன சந்தோஷப்படுத்த தெரியாதவ. புழு பூச்சி இல்ல அதான் புருஷன்காரன் வெறட்டிட்டான் இன்னும் என்ன பேசுவாங்கண்ணே தெரியாது”
“அது மட்டுமா? அவன் போனா என்ன ஒனக்கு இன்னிக்கு நான் புருஷனா இருக்கேன்னு வந்து நாலு பேரு நிப்பாங்க”
“எதுக்குக்கா எதை எதையோ நினச்சு பயப்படற. அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா. நான் பார்த்துக்கறேன்கா. அப்பா கிட்ட நான் பேசறேன்கா. தங்கச்சி அங்க இருக்கற மாதிரி நீயும் வாக்கா. இந்த நரகத்துலேர்ந்து வெளில வாக்கா. எதுக்கும் பயப்படாதக்கா. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் நீ வாக்கா “
“என்ன சொன்ன? எதுக்கும் பயப்படாதவா? ஒரு புழுக்கு இருக்கற தைரியம் கூட எனக்கு இல்லையடா. அது இருந்தா என்னிக்கோ நான் செத்துருப்பேனே”
எத்தனை சொல்லியும் அவள் கேட்கவே இல்லை.
“அடியே மகாராணி! போதும் உன் தம்பிகிட்ட கொஞ்சினது. குளிக்கற புருசனுக்கு போய் டவல் குடு”
“நீ கிளம்பு வெற்றி” கண்ணீரை துடைத்துக் கொண்டு ஓடிப் போகும் தமக்கையை பார்த்தவனுக்கு மனம் ஏற்கவில்லை. அவளின் மன பாரத்தை அவள் கண்ணீர்தான் இன்று கரைத்துக் கொண்டிருக்கிறது.கையாலாகதனத்தை எண்ணி கோபம் வந்தது. அக்காவுக்கு என்றாவது ஒரு நாள் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்றால் அதற்காக அவன் எதையும் செய்வான். அப்போது அவன் யாருக்கும் எதற்கும் பயப்படப் போவதில்லை.
தொடரும்…….
error: Content is protected !!