“ஹ்ம்ம்ன்னா? என்ன அர்த்தம் அவந்திகா?…” அவன் சாதாரணமாய் கேட்பது கூட அவளுக்கு கண்டிப்பாகவே உருவெடுத்து காண்பித்தது.
‘கல்யாணமாகி இவ்வளோ நாள்ல கொஞ்சமாச்சும் ஆசையா பேசறாங்களா இவங்க?’ அவ்வளவு சலிப்பு அவள் மனதினுள்.
எதையும் முகத்தில் காண்பித்துவிட முடியாது. கண்டுபிடித்துவிடுவான் காவலதிகாரி.
“உன்னோட திங்ஸ் எல்லாம் பேக் பண்ணியாச்சா?…” அடுத்ததாய் கேட்க,
“ஹாங், பேக் பண்ணி ரெடியா இருக்கு…” என்று வேகமாய் அங்கிருந்த இரண்டு ட்ராலியை காண்பித்தாள் அவந்திகா.
அதனை திரும்பி பார்த்தவன் புருவங்கள் சுருங்க கண்ணோரம் சின்னதாய் புன்னகை ஒட்டிக்கொண்டது.
மீண்டும் அவந்திகாவை பார்க்க அவனை எங்கே அவள் பார்த்தாள்? கடிகாரத்தின் நேரத்தை சபித்தபடி அமர்ந்திருந்தவள் மீது கனிவோடு ஒரு பார்வை அவனிடம்.
“வாமிட்டிங் இன்னும் இருக்குன்னு அம்மா சொன்னாங்களே? இன்னைக்கு எதாச்சும் அப்படி இருந்ததா?…”
“ம்ஹூம், இல்லை…” கேட்டதற்கு மட்டும் தான் பதில் என்பதை போல் அவளின் பாவனை.
ப்ரியதர்ஷனுக்கும் அதற்குமேல் எப்படி இவளிடம் நடந்துகொள்வது என்று தெரிந்திருக்கவில்லை.
“சரி, கொஞ்சம் நேரம் படுத்திருக்கேன்….” என்று அவளின் பக்கவாட்டில் வந்து படுத்துக்கொண்டவன் கைகளை கண்ணுக்கு மறைவாய் வைத்து உறங்க முற்பட, அவந்திகாவிற்கு எழுந்து செல்வோமா என்றிருந்தது.
“பத்துநிமிஷம். நானே முழிச்சிடுவேன். எங்கயும் போகாம இங்கயே இரு…” அவள் எண்ணமறிந்துகொண்டவன் சொல்ல,
“இருக்கேன். போகலை…” என்றாள் உடனே.
“ஹ்ம்ம், கையை குடு…” என்றவன் அவளின் இடதுகையை பிடித்துக்கொள்ள கை நிறைய வளையல் சப்தம் அவனின் செவிகளுக்குள் சங்கீதமாய் ரீங்காரமிட்டது.
“இவ்வளோ வளையல், யார் யார் போட்டாங்க?…” என்றான் அவளிடம் திரும்பி பேச்சுக்கொடுத்து.
“தூங்கனும்ன்னு சொன்னீங்களே?…” தயக்கமாய் கூற,
“ஹ்ம்ம், ஆமா. பேச கூடாதா என்ன?…” என்றவன் அவள் விரல் அசைவுகளில் தன் விரல் கோர்த்து,
“ஓகே, டென் மினிட்ஸ்…” என்று சொல்லி கண்ணை மூடிக்கொள்ளவும் பெருமூச்சு எழுந்தது அவந்திகாவிடம்.
அவளை பாராமலே அவள் என்ன செய்கிறாள், என்ன நினைக்கிறாள் என்று ஓரளவு அனுமானம் தான் ப்ரியதர்ஷனுக்கு.
பத்துமாதத்திற்கு முன் பெண் பார்க்கும் படலம். பார்த்ததும் குடும்பத்தினருக்கு பிடிக்க, பெண்ணிற்கு தன்னை பிடிக்க, மறுக்க காரணமில்லாத உடனடி ஒப்புதல் அவனிடம்.
அவனுக்கு பெண்ணை பிடித்துள்ளதா என்று கேட்க கூட அங்கைக்கு அத்தனை யோசனை.
திருமண பேச்சை ஆரம்பிக்கும் பொழுதே தெளிவாய் சொல்லியிருந்தான் ப்ரியதர்ஷன்.
“நம்ம குடும்பத்துக்கு சரின்னு வர்ற மாதிரி பொண்ணை பாருங்க. பிடிச்சா ஓகே…” என்று சொல்லியிருந்தான்.
அதைப்போலவே பெண்ணை பார்த்து எல்லாம் சரி என்று ஒத்துவந்ததும் மகனுக்கு தெரிவிக்க பெண் பார்க்க வந்துவிட்டான்.
பார்த்து பேசி அடுத்த இரண்டு மாதத்திற்குள் திருமணம். திருமணம் முடிந்து பத்துநாட்களில் மனைவியுடன் திருச்சி செல்ல இருந்தவனுக்கு அவளின் உடல்நிலை பெரிதும் தடையாய் இருந்தது தன்னோடு அழைத்து செல்ல.
“கல்யாணமாகி பத்துநாள்ல மருமகளுக்கு காய்ச்சல். எல்லாம் உன் தம்பியை நினைச்சே வந்திருக்கும்…” என்று அங்கை தான் புலம்பி தீர்த்துவிட்டார்.
அந்த சூழ்நிலையில் அவளை அழைத்து செல்ல முடியாதெனும் நிலை ப்ரியதர்ஷனுக்கு.
பேசி, பழக கூட முடியாதளவிற்கு அவனின் கடுமையும், கண்டிப்பும். அதிலேயே மனைவி ஒதுங்கி நிற்க தன்னோடு வந்தபின் சரியாகிவிடும் என்று நினைத்தவனுக்கு அடுத்ததாய் கிடைத்த செய்தி அவளின் தாய்மை.
“முதல் மாசமே குழந்தை தங்கிருச்சு. எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?…” என்று அமலாவும்,
“ஆமா, இந்த சூழ்நிலையில அவளை அங்க அனுப்ப முடியாதுப்பா. பத்திரமா பார்த்துக்க சொல்லியிருக்காங்க. இப்பவே வாமிட், மயக்கம்ன்னு சரியா சாப்பிடாம செய்யாம இருக்கா….” என அங்கையும் தனியே அனுப்ப மறுத்துவிட்டார்.
“உனக்கு இங்க இருக்க ஓகே வா? இருந்துப்பியா?…” என்று கேட்டவனிடம் வேகமாய் தலையசைத்து சரி என்ற மனைவியை என்ன செய்வது?
தான் கேட்டதும் தன்னோடு வர விருப்பம் கொள்வாள் என்று நினைத்திருக்க அங்கேயும் முட்டுக்கட்டை.
வற்புறுத்தி அழைத்து செல்ல முடியாதபடிக்கு அவளோடு அவனிருந்த இரண்டு நாட்களில் அவள் பட்ட பாட்டில் ப்ரியதர்ஷனால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
அதன்பின் மாதம் ஒருமுறை என்றுதான் அவனின் வரவும். அவன் அழைக்கும் நேரம் அவள் ஓய்வில் இருப்பாள்.
“எழுந்ததும் கூப்பிட சொல்லுங்க…” என்று தாயிடம் பேசி வைப்பவன் மனைவி அழைக்கும் நேரம் வேலையாய் இருந்து அழைப்பை ஏற்பதில்லை.
இப்படியாக அவனின் திருமண வாழ்வு பெரிதாய் பேச்சுக்களோ, புரிதல்களோ இல்லாமலே நகர்ந்திருந்தது.
பேசும் நேரங்களில் கூட கேள்விகள் தான் அணிவகுக்கும். இதை செய்தாயா, அது என்னாகிற்று’ என்று துளைப்பவனிடம் விசாரணையை தான் உணர முடிந்தது அவந்திகாவால்.
“ஹப்பா என் புருஷன் சரியான கம்ப்ளைண்ட் பாக்ஸ்…” என்று தரணியிடம் புலம்பி தீர்ப்பாள் அவந்திகா.
“போதாததுக்கு என் மாமியார் நாலு மடக்கு தண்ணியை நான் வேகமா குடிச்சா கூட சிசிடிவி கேமரா ரேஞ்ச்ல அப்படியே மகன்கிட்ட ஒப்பிச்சிடுவாங்க. பேசற நேரமும் இப்படி பண்ணிருக்க, அப்படி ஏன் செய்யலைன்னு திட்டு. இதுல டாக்டர்கிட்ட வேற கேட்டு அவங்க எதாச்சும் இஷ்யூஸ்ன்னு சொல்லிட்டா அவ்வளோ தான்…” என்று அலுப்புடன் தான் பேசுவாள்.
“முதல்ல இப்படித்தான் இவங்கன்ற இமேஜை அழிச்சிட்டு நார்மலா பேச பாரு. புருஷனோட வாழற மாதிரியா நீ நடந்துக்கற. எவ்வளோ கம்ப்ளைண்ட் பன்ற நீ. உன்னையும் கம்ப்ளைண்ட் பாக்ஸ்னு சொல்லுவோமா?…” என்று தரணி தான் அடக்கி வைப்பாள் அவந்திகாவை.
“கல்யாணமாகி எட்டே மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள வாழ்க்கையை வெறுத்த மாதிரி இதென்ன பேச்சு?…” என்று சிலநேரம் அவந்திகா பேசுவதில் பயந்துதான் போவாள் தரணி.
எங்கே? எத்தனை பேசினாலும் இவன் இப்படித்தான் என்று அவளாகவே ஒரு வட்டத்திற்குள் ப்ரியதர்ஷனை நிறுத்தி வைத்திருக்க, அதற்கு ஏற்றார் போன்று அவனுமே அப்படித்தான் நடந்துகொண்டான்.
“ஹீமோக்ளோபின் லெவல் இப்பவே கம்மியா இருக்காம்? வாமிட் வந்தாலும் சாப்பிட வேண்டியது தானே? நீ என்ன குழந்தையா? உனக்கு பீட் பண்ணிட்டே இருப்பாங்களா?…” என காய்பவனை தலையை பிடித்து ஆட்டும் அளவிற்கு கோபம் வரும் அவந்திகாவிற்கு.
“இவங்க பொண்டாட்டி நான், எப்படிம்மா இருக்க, மிஸ் பன்றேன். என்னை நினைச்சியா? தேடினியா? பேபி என்ன பண்ணது? இதெல்லாம் கேட்க தோணவே செய்யாதா அண்ணி?…” என அமலாவிடமும் பேசி தீர்ப்பவள் அதை அவனிடம் கேட்க தான் முடியவில்லை.