அன்று மாலில் தன் பொம்மாயியும் ரூபாவின் அக்காவும் ஒன்றென தீரஜ் அறிந்தப்பின்னர்,அன்றிரவு மொட்டைமாடியில் வினோத் நக்ஷத்ரா விஷயத்தை பற்றி தீரஜிடம் பேசிக்கொண்டிருந்ததை ரூபாவிற்கு ஃபோன் செய்ய மாடிக்கு வந்த மனோஜ் இவர்களுக்குத் தெரியாமல் கேட்டறிந்து அதிர்ந்தான்.
வேகமாக தன் வீட்டிற்குள் வந்து தன் அறையில் தாழிட்டுக்கொண்டவனின் மனம்முழுக்க அண்ணன் மற்றும் அவனின் வாழ்க்கை மட்டுமே. நீண்டநேரமாக யோசித்தவன் ஒருமுடிவெடுத்தவனாக ரூபாவிற்கு கால் செய்துப்பேசினான். அப்போது ரூபா கண்ணம்மாவுடன் தோட்டத்திலிருந்தாள்.
மனோஜ் கூறியது போல புதன்கிழமை அவர்கள் எப்போதும் சந்திக்கும் கஃபேயில், “ஏன் மனோஜ் இன்னும் டென்ஷனாவேயிருக்க?அன்னிக்கு நான் உன் அண்ணையாக்கிட்ட அவசரமா சொன்னது தப்பு தான் ஆனால் நம்ம கல்யாணம்” என்று ரூபா பாட்டுக்கு பேசிக்கொண்டிருக்கும் போதே, “நம்ம கல்யாணம் நடக்கணும்னா என் அண்ணையாவுக்கும் உன் அக்காக்கும் கல்யாணம் நடக்கணும்” என்று பட்டென்று கூறிய மனோஜ் தன் செவியில் கேட்ட அனைத்தையும் சொல்லிவிட,ருத்ரதாண்டவமே ஆடிவிட்டாள் ரூபா.
அது எதற்குமே வெளியில் மனோஜ் அசரவில்லை ஆனால் மனதிற்குள்ளே தன் காதலியை குமுறவைப்பதால் மனம் குன்றினான்.
“யு சீட்…நீ என்னை ஏமாத்திட்ட மனோஜ்” என்று அவள் அவனை அடித்தும்விட்டாள்,ஏசியும்விட்டாள். அப்போதும் தன் முடிவில் அசராது, “கல்யாணம்னு நடந்தால் அது நம்ம நாலு பேருக்கும் சேர்ந்துநடக்கணும் அதுக்கு நம்ம தான் பிளான் பண்ணனும்.அப்படி இல்லைனா நீயும் நானும் கடைசிவரை கல்யாணமே பண்ணாமல் பிரம்மச்சாரியா இருந்திடலாம்” என்று கனத்தமனதுடன் ரூபாவின் தலையில் பாறாங்கல்லை கூறிவிட்டு சென்றேவிட்டிருந்தான்.
தீரஜ் எப்படி தன் அக்காவை காதலித்திருக்கமுடியும்?இதெல்லாம் நம்பும்படியில்லையென நினைத்தவளின் மனம் இன்னொரு பக்கம் அப்படியே அவன் தன் அக்காவை காதலித்திருந்தாலும் ஆண்கள் வர்க்கத்தையே வெறுக்கும் தன் அக்காவை எப்படி விருப்பமில்லாமல் தீரஜை நம்பி பிளான் போட்டு கல்யாணம் செய்துவைக்கமுடியும்!
அடுத்த பத்து நாட்கள் ரூபாவும் மனோஜும் பேசிக்கொள்ளவேயில்லை.இருவரின் மனதிலும் அத்தனை ரணம்,வலி,வேதனை!இருவருமே அவர்களின் முடிவில் ஸ்திரமாகயிருந்தனர்.
எதற்கும் அசராத ரூபா இப்போது நிலைக்குலைந்தேவிட்டாள்.காதல் அத்தனை வலி கொடுத்தது. அவளின் நடவடிக்கையைக் கவனித்த கண்ணம்மா தனியாகயிருக்கும்போது அவளின் முகவாட்டத்தை குறிப்பிட்டு கேட்க,கண்ணம்மாவிடம் கதறியழுது வெடித்தேவிட்டாள்.
“நான் சரியாயிடுவேன் கண்ணம்மா.என் சுயநலத்துக்காக உமி வாழ்க்கையை பணயமாவைக்கமாட்டேன்.உனக்கு பிடிக்காததை மத்தவங்க சொன்னாலும் கேட்காதனு நானே உமிக்கிட்ட அத்தனைமுறை சொல்லிருக்கேன் அப்படியிருக்கும்போது நானெப்படி இந்த விஷயத்துக்கு ஒத்துப்பேன்” என்று அவள் அழுகையுடன் தீர்மானமாகக்கூற, “இல்லை சாலாம்மா,நீங்க நினைக்குறது தப்பு.மனோஜ் தம்பியோட அண்ணா ஒண்ணும் இல்லாதவர் கிடையாது.படிப்பிருக்கு,அழகிருக்கு இதெல்லாம் கார்த்திக்கேயன் கிட்டயும் இருந்ததுதான் ஆனாலும் இவர்கிட்ட ஒரு உண்மையிருக்குமா! உமையாம்மாவை மனசுல வெச்சுத்தான் காதல் தோல்வில கல்யாணம் பண்ணாமல் இருந்திருக்காரு.உமையாம்மாவுக்கும் பாப்பாக்கும் கடைசிவரை காவலாயிருக்க நினைக்குற இவர் கண்டிப்பா நல்ல கணவனாயிருப்பாரு” என்று கண்ணம்மா சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “ஆனால் அந்த ஆசை உமிக்கு இல்லையே அப்போ எப்படி இது சரி வரும். மனோஜ் மேல எனக்கு இப்போ கோவம் தான் ஆனாலும் அவன் ரொம்ப நல்லவன் கண்டிப்பா அவன் அண்ணனும் நல்லவரா தான் இருக்கமுடியும் ஆனாலும்” என்று இழுத்தாள்.
“நான் மனோஜ் தம்பிக்கிட்ட சில விஷயங்கள் கேட்கணும்மா அவர் அண்ணாவுடைய காதல் பத்தி” என்று கண்ணம்மா கூற,
“மனோஜ்கே ஒண்ணும் தெரியாது. அவருடைய ஃப்ரெண்ட் வினோத்க்கு தான் விஷயம் தெரியும்!ஆனாலும் இதெல்லாம் ரிஸ்க் கண்ணம்மா”
“வினோத்தைக் கூட்டிட்டு வரச்சொல்லுங்க. நான் நேர்ல பாக்கணும்” என்று கண்ணம்மா தீர்மானமாகச் சொல்வதை மறுக்க ரூபாவின் ஆழ்மனது இடம்கொடுக்கவில்லை.
மனோஜ் வினோத்திடம் விஷயத்தைக் கூறி வலுக்கட்டாயப்படுத்தி கூப்பிட்டுவர,கண்ணம்மா தீரஜின் காதலைப் பற்றி வினோத்திடம் கேட்க,
“அவன் காதல் விஷயம் உண்மை. அதுக்காக முழுக்கதையும் நான் சொல்லமாட்டேன்!இப்போ நான் இங்க தீரஜ்க்கு தெரியாமல் வந்ததுக்கே என்மனசு குத்திட்டிருக்கு”
“தம்பி!உமையாம்மாவும் சாலாம்மாவும் நான் பெக்காத புள்ளைங்க!ஒரு அம்மாவா என் பொண்ணு வாழ்க்கைக்காக கேட்குறேன்.நீங்க முழுசா சொல்லலைனாலும் மேம்போக்கா சொல்லுங்க அவர் காதலைப்பத்தி” என்று கேட்க,அவரின் பக்க நியாயத்தைவுணர்ந்து மேம்போக்காக விஷயத்தைச் சொல்ல,அங்கிருந்த மூவருக்குமே தீரஜின் காதலின் மீது அத்தனை மரியாதை வந்தது.
நீண்டநேரமாக யோசித்த ரூபா ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டு, “நான் இந்த பிளானுக்கு ஒத்துக்குறேன் இது நம்ம காதலுக்காகயில்லை.என் அக்கா வாழ்க்கைக்காக உன் அண்ணாவை நம்பத்தோணுது!அவரால உமியை சந்தோஷமா வெச்சிக்கமுடியும்னு தோணுது ஆனால் ஒரு கண்டிஷன்” என்று கூறும்போதே வினோதிருப்பதை சங்கடமாய் உணர்ந்தவளின் முகபாவனையிலேயே சற்றுத்தள்ளிச்சென்ற வினோத்தின் மனதில் தீரஜை நினைத்து பயம்.
“உமிக்கும் உன் அண்ணாக்கும் கல்யாணம் நடந்து அவங்க சந்தோஷமா வாழ ஆரம்பிக்கும்போது தான் நம்ம வாழ்க்கையும் தொடங்கும். இதுக்கு சம்மதம்னா நான் ஒத்துக்குறேன் கண்ணம்மா” என்று அவள் அழுத்தமாகக் கூற,
“எனக்கு ஓகே கண்ணம்மாக்கா நான் இவள்கிட்ட ஒரு அஞ்சு நிமிஷம்” என்று மனோஜ் ஆரம்பிக்கும்போதே, “நான் அங்கயிருக்கேன் தம்பி” என்று வேகமாக தள்ளிச்சென்ற கண்ணம்மாவின் மனதில் ரூபாவின் முடிவை நினைத்து சந்தோஷம் தான்!ஆனாலும் தன்னை வைத்து இவ்விஷயத்தை பேசியது மனோஜிற்கு சங்கடத்தை கொடுத்ததையும் உணர்ந்தாள்.
“அவங்க முன்னாடி நான் வேணும்னே தான் பேசினேன்!அப்போ தான் நான் சொன்னதை நீ சீரியசா எடுத்துப்ப இல்லைனா” என்று அவள் கூறி முடிக்கும் முன்னரே அவளையறைந்த மனோஜ், “உனக்கு உன் அக்கா வாழ்க்கை எவ்வளவு முக்கியமோ அதேயளவு எனக்கும் என் அண்ணா வாழ்க்கை முக்கியம் டி!நான் ஒண்ணும் கல்யாணத்துக்கு அப்பறம் உன்மேல பாய்ஞ்சிடமாட்டேன். இன்ஃபாக்ட் நம்ம பிளான் படி அவங்க கல்யாணம் நடக்கலைன்னா நமக்கும் கல்யாணமில்லை” என்று அவன் தீர்மானம் கலந்த வைராக்கியத்துடன் சொல்ல,
“எனக்கு டபுள் ஓகே. நாளைக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிடலாம்” என்று அதே வைராக்கியத்துடன் ரூபாவும் சொல்ல,இருவருமே தங்களின் காதலை பணயம்வைத்து தமக்கையர்களின் வாழ்வை வண்ணமயமாக்க முனைந்தனர்.
வினோத் இதற்கு ஒத்துக்கொள்ளவேமாட்டேன் என்று உறுதியாகயிருந்தான். ஆனால் மனோஜ் அவனின் காலில் விழுந்தேவிட்டான்.அதைக்கண்டு மெய் சிலிர்த்த வினோத், “சரிடா..பண்றேன்!இதனால அவன் வாழ்க்கையில பெரிய சந்தோஷமே கிடைக்கும்” என்று நண்பனிற்குத் தெரியாமல் முதல்முறை ஒரு காரியத்தில் இறங்கினான்.
மனோஜ் எழுதிய வசனங்களின் வீரியம் ரூபாவிற்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. நக்ஷத்ரா மற்றும் தீரஜின் நடத்தையை சந்தேகித்தால் நக்ஷத்ராவை அனைவரும் கேவலமாக பேசினால் தீரஜின் ரத்தம் கொதித்து அவனே அவளை திருமணம் செய்யுமளவில் இருந்தது மனோஜின் வசனங்கள். ஆனாலும் அவர்களுக்கு வேறுவழியுமில்லை என்பதைவுணர்ந்த ரூபாவின் மனசாட்சி ரொம்பவே குத்தியது. ஆனாலும் நக்ஷத்ராவின் எதிர்காலம்,சந்தோஷத்திற்காக மனதில் பாரத்தை சுமந்தபடியேயிருந்தாள்.
அதனால் தான் அன்றிரவு தன் அக்காவிடம் என்ன நடந்தாலும் சாகக்கூடாதென சத்தியத்தையும் வாங்கினாள்.அப்படியே கார்த்திக்கேயனை அவள் விரும்பவில்லை என்பதையும் கேட்டுணர்ந்து நிம்மதியடைந்தாள்.
எப்போது என்னென்ன நடக்கவேண்டுமென்று வினோத்,மனோஜ் மற்றும் கண்ணம்மாவிடம் ரூபா எடுத்துரைக்க அவர்களும் அதன்படி நடந்துக்கொண்டனர்.
கல்யாணநாளில் குளித்துமுடித்து ரெடியாகயிருந்த தீரஜின் மீது வேண்டுமென்றே மஞ்சள் தண்ணியை தவறிக்கொட்டுவது போல வினோத் ஊத்த,அவர்கள் நினைத்தது போல தீரஜ் குளிக்கச்செல்ல. அடுத்து ஆதிராவை நக்ஷத்ரா பார்க்காதபோது,“அங்கிள்கிட்ட சாக்லேட் வாங்கிக்கோமா” என்று வினோத்திடம் கொடுத்த கண்ணம்மா,ஆதிராவை காணுமென நக்ஷத்ராவிடம் கூறும்போது அவர்கள் வீட்டு மொட்டைமாடியில் தான் வினோத்திடம் சாக்லேட் வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் ஆதிரா.
அரக்குவேலியில் மூன்று பெண்களுக்கு பணம் கொடுத்து பேசச்சொல்லி மனோஜ் முன்ஏற்பாடு செய்துவிட,அவர்களும் தங்களின் வேலையை சிறப்பாக செய்தனர். அம்மன்சிலை கழுத்தில் எக்ஸ்ட்ராவாக ஒரு தாலியைக்கட்டாத நிலையில்வைத்து தீரஜ் எடுக்க வாகாகவைத்தனர். நக்ஷத்ரா உள்ளேச் சென்றபின்னர் வெளியிலிருந்து கதவைச் சாற்றியதும் வினோத் தான். ஸ்ரீநிவாசலு அனைவருடன் உள்ளேவரும்போது முன்னே சென்று வேகமாக தாழ்ப்பாளை எடுத்துவிட்டதும் வினோத் தான். இப்படியிருக்கையில் இவர்களே எதிர்பாராமல் அதிர்ச்சியாய் வந்தது நாகைய்யா மற்றும் சொர்ணவள்ளி பாட்டியின் கேவலமான வார்த்தைகள்!அவர்கள் கல்யாணம் நிற்கப்பேசி அது கடைசியாக இவர்கள் நினைத்ததுப்போல சுபமாக முடிந்தது.அன்று அப்பிரச்சனையில் ரூபா மற்றும் மனோஜ் அமைதி காத்ததின் காரணம் இதனால் தான்.அதற்கு பின்பு ரூபா நக்ஷத்ராவிடம் மௌனியாக மாறியதின் காரணமும் அக்காவின் வாழ்க்கைக்காகத்தான்.