விழுப்புரத்திற்கு ஒரு வேலை விஷயமாக செல்லவிருப்பதால் இரவு வீட்டிற்கு வருவதற்கு தாமதாமாகும் என்று சக்திவாசன் காலையிலேயே மனைவியிடமும் அன்னையிடமும் சொல்லிவிட்டு சென்றிருக்க, அதனால் அவளை சீக்கிரம் சாப்பிடச் சொல்லி தேவிகா அழைத்தார். அவளுக்கு இருந்த மனநிலைக்கும் உடல்நிலைக்கும் அவளுக்கு சாப்பிடவே பிடிக்கவில்லை. ஆனாலும் தேவிகா வற்புறுத்தவே பேருக்கு சாப்பிட்டுவிட்டு மீண்டும் வந்து படுத்துக் கொண்டாள்.
சொன்ன நேரத்தை விட சக்திவாசன் கொஞ்சம் தாமதமாகவே வீட்டிற்கு வந்தான். அப்போது தேவிகா விழித்திருக்க, “சாப்பிட்டீங்களா ம்மா? அப்பா சாப்பிட்டாரா? எதுக்கு இவ்வளவு நேரம் விழிச்சுட்டு இருக்கீங்க,” என்று அவரிடம் அனைத்தும் கேட்டு விசாரித்துக் கொண்டவன்,
காலையிலேயே சொல்லிவிட்டு சென்றாலும் வீட்டிற்கு வருவதற்குள் இரண்டு மூன்று முறை போன் செய்யும் மனைவி இன்று அப்படி ஏதும் செய்யாததால், “மித்ரா சாப்பிட்டாளா? தூங்கப் போயிட்டாளா?” என்று அவளைப்பற்றியும் அன்னையிடம் விசாரிக்க,
“நானே நீ வந்தா கேட்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன் சக்தி, மித்ரா நைட்டு சரியாகவே சாப்பிடல, நானும் ரெண்டுநாளா கவனிச்சிட்டு தான் இருக்கேன். மித்ரா ரொம்ப சோர்வா தெரியுறா? உன்னிடம் இதைப்பற்றி ஏதாச்சும் சொன்னாளா?” என்று தேவிகா அவனிடம் பதில் கேள்வி கேட்டார்.
அவர் கேட்டதன் அர்த்தம், மருமகள் கருவுற்றிப்பாளோ என்ற சந்தேகத்தில் தான், திருமணம் ஆனதுமே குழந்தை என்று எதிர்பார்க்கும் சராசரி மாமியார் இல்லை அவர், இருந்தாலும் மகனுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கவில்லையே, மகனுக்கு திருமணம் நடக்குமா நடக்காதா என்று ஏங்க வைத்து நடந்த திருமணம். அதனால் மத்ததும் காலாகாலத்தில் நடந்தால் நல்லது என்று அவர் நினைத்தார். அதை நேரடியாக கேட்கவும் அவருக்கு சங்கடமாக இருக்க, மறைமுகமாக கேட்டுப் பார்த்தார்.
ஆனால் அவர் கேட்பதின் அர்த்தம் சக்திக்கு புரியவில்லை. தினம் இரவு உறங்க தாமதாகிவிடுவதால் காலையில் அவள் சோர்வாக தானே தெரிவாள். அதைத்தான் அன்னை சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டவன். இரவு உறங்குவதற்கு தாமதமாகிவிடுகிறது. அதுதான் அவள் சோர்விற்கு காரணம் என்று அன்னையிடம் கூறுவதற்கு தயங்கியவன்,
“அப்படியா ம்மா, பெருசா ஒன்னும் இருக்காது. எதுக்கும் என்னன்னு நான் மித்ராவிடம் கேட்கிறேன்.” என்று சொல்லிவிட்டு அறைக்கு வந்தான். பார்த்தால் மித்ரா படுத்திருந்தாலும் இன்னும் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்க,
“என்ன மித்து, அம்மா நீ சரியா சாப்பிடலன்னு சொன்னாங்க, ஏதாச்சும் உம்புக்கு முடியலையா?” என்று அவள் அருகில் அமர்ந்தப்படி கேட்கவும்,
“எப்போதும் போல டயர்ட் தான் சக்தி. பசிக்கவும் இல்லை. மத்தப்படி பெருசா ஒன்னுமில்லை,” என்றவள், அவனிடமாவது விஷயத்தை கூறலாமா? என நினைத்து பின் வேண்டாமென்று விட்டுவிட்டாள்.
“அவ்வளவுத்தானே, சரி தூங்கி எழுந்தா சரியாகிடும், நீ தூங்கு, நான் போய் சாப்பிட்டுட்டு வரேன்.” என்று சொல்லி முகம் கை கால் கழுவி விட்டு சாப்பிடச் சென்றான்.
பின் மீண்டும் அறைக்குள் வரும்போதும் அவள் உறங்காமல் விழித்திருக்கவும், சட்டயை கழட்டிவிட்டு அவள் அருகில் வந்து படுத்தவன், அந்த பக்கமாய் ஒருக்களித்து படுத்திருந்தவளின் இடுப்பில் கைப்போட்டப்படியே, அவளின் காதருகினில் வந்து, “என்னடி, இன்னும் தூங்கலையா?” என்று கேட்க,
“ம்ப்ச், இன்னைக்காவது டிஸ்டர்ப் செய்யாம இருங்க,” என்று சிடுசிடுத்தாள்.
அவளின் பேச்சில் அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட, “இன்னும் தூங்காம ஏதோ ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கமாதிரி தோனுச்சு, அதான் கைப்போட்டு படுத்தா தூங்குவியோன்னு நினைச்சேன். மத்தப்படி உடம்பு சரியில்லாத உனக்கு தொந்தரவு கொடுக்கும் அளவுக்கு நான் மோசம் கிடையாது.” என்றவன், அவளிடமிருந்து தள்ளி படுத்துக் கொள்ள, அப்போது தான் அவள் பேசிய வார்த்தையின் அர்த்தம் புரிந்து அவன் பக்கமாக திரும்பி படுத்தவள்,
“சாரி சக்தி, நான் கொஞ்சம் மூட் அப்செட்டா இருந்தேன். அதான் எனக்கே தெரியாம இப்படி பேசிட்டேனே தவிர, கண்டிப்பா உங்களை ஹர்ட் செய்ய நினைக்கல,” என்று அவனிடம் மன்னிப்பு கேட்க,
அவனுக்குமே அது புரிந்ததால், “சரி விடு, பொதுவா பீரிய்ட்ஸ் டைம்ல தான் மூட் ஸ்விங்ல சிலநேரம் சிடுசிடுப்ப, இப்போ உனக்கு ரொம்ப முடியலன்னு நினைக்கிறேன்.” என்று உடனே சமாதானத்திற்கு வந்தவன்,
“ஆமாம் மித்து, இந்த மாசம் இன்னும் உனக்கு பீரியட்ஸ் வரல போல, லேட்டாகறதால இப்படி உடம்புக்கு முடியலையா?” என்று கேட்டான்.
அவன் கேட்டதும் தான் அவளுக்குமே இன்னும் இந்த மாதம் மாதவிடாய் வராதது ஞாபகத்திற்கு வந்தது. எப்போதும் மாதம் மாதம் நாலைந்து நாட்கள் தள்ளி தள்ளி வருமென்பதால் அவளுக்கு தேதியை சரியாக யூகிக்க முடியாது தான், ஆனால் இந்த மாதம் அதைவிட அதிக நாட்கள் தள்ளிப் போயிருக்கிறது என்பதை கணக்கிட்டு பார்த்தவள், இரண்டு நாளாக இருக்கும் அதிக சோர்வும், அசதியும், இன்று காலையிலிருந்து இருக்கும் தலைச் சுற்றலும் அவளுக்கு வேறொரு செய்தியை சொன்னது. ‘நான் கன்சீவ் ஆகியிருக்கேனா?’ என்று யூகித்தவளுக்கு, இப்போது அதை நினைத்து மகிழ முடியாமல் பள்ளியில் நடந்த பிரச்சனை பெரிதாக தெரிய, அதற்கு ஒரு தீர்வு தெரியும்வரை அவளுக்கு உறக்கம் வராது என்ற நிலையில் இருக்க, கணவனிடம் அதை பகிர்ந்து கொள்ள நினைத்தவள்,
“அதெல்லாம் ஒன்னுமில்ல சக்தி, ஆல்ரெடி எப்போதும் போல கொஞ்சம் சோர்வு தான், அதோட வேற ஒரு விஷயம் என் மனசை போட்டு உறுத்திக்கிட்டு இருக்கு,” என்று பள்ளியில் நடந்தை அவள் விவரமாக கூறவும், ஏதோ சாதாரணமாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டிருந்த சக்தி, அவள் சொன்ன விஷயத்தை கேட்டு பதட்டத்தோடு எழுந்து அமர்ந்தவன்,
“என்ன சொல்ற மித்து, நடந்த விஷயம் சாதாரணமா? ஏ.ஹெச்.எம் சொன்னாருன்னு நீ பாட்டுக்கு வந்துட்ட, அந்த குழந்தை உன்னை நம்பி அந்த விஷயத்தை எதுக்கு சொல்லுச்சு, நீ ஏதாவது உடனே ஸ்டெப் எடுப்பன்னு தானே, மிருகத்தை விட கேவலமா நடந்திருக்கான் அந்த நாய், இதுக்கு அவனை கண்டிச்சா மட்டும் போதுமா?” என்று அவன் கேட்க,
“அவனுக்கு எம்.எல்.ஏ சப்போர்ட் இருக்கு, இந்த பிரச்சனையை பெருசாக்கினா நமக்கெல்லாம் எம்.எல்.ஏ பிராப்ளம் கொடுப்பாரு, அந்த ரத்தினபாண்டி மேல ஆக்ஷனும் எடுக்க மாட்டாங்கன்னு ஏ.ஹெச்.எம் சொல்லவும், எனக்குமே ஒன்னும் புரியல, கூட கொஞ்சம் பயமாகவு இருந்தது.” என்றாள் அவள்,
“எம்.எல்.ஏ சப்போர்ட் இருந்தா அவன் என்ன பெரிய கொம்பனா? அவன் இந்த ஒரு குழந்தையிடம் மட்டும் தான் இப்படி நடந்துக்கிட்டானா? இல்லை இன்னும் எத்தனை குழந்தைக்கு தொல்லை கொடுத்திருக்கானோ தெரியல, உனக்கும் ஏ.ஹெச்.எம் க்கும் விஷயம் தெரிஞ்சுது தெரிஞ்சு அந்த குழந்தையை விட்டுட்டு மத்தவங்களிடம் அவன் வேலையை காட்டினா என்ன செய்வ? இல்லை அந்த குழந்தை உன்னிடம் விஷயத்தை சொன்னதால அதுக்கும் அந்த குழந்தையை அவன் மிரட்டின்னான்னு வச்சிக்க, அதில் அந்த குழந்தை ஏதாவது விபரீதமா முடிவு எடுத்தா என்னாகறது?” என்று அவன் கேட்கவும்,
“அய்யோ என்ன சக்தி சொல்றீங்க, அப்போ இருந்த பதட்டத்தில் எனக்கு இதெல்லாம் தோனலையே, இப்போ என்ன செய்றது?” என்று அவள் கேட்டாள்.
“இப்போ மணி பத்துக்கு மேல ஆகுது. நாளைக்கு காலையில் முதல் வேலையா அப்பாவிடம் விஷயத்தை சொல்லிட்டு, அந்த நாய் மேல ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுக்கணும், அந்த பொண்ணு வீட்டில் அவளைப் பார்த்து பேசணும்,” என்று அவன் சொல்ல, சிவமித்ராவிற்கும் அதுவே சரியென்றுபட்டது.
இப்போது அவனுக்குமே அந்த பிரச்சனையில் இரவு உறக்கம் வருமா? என்று தெரியவில்லை. “சரி படு,” என்று சொல்லிவிட்டு அவனும் படுத்த நேரம், வெளியே அழைப்பு மணி சத்தம் கேட்டது. அதுவும் விடாமல் அடிக்கவும், யாராக இருக்கும்? என்று ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர், பின் சக்தி அவன் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டதும், இருவரும் அறையை விட்டு வெளியே வர, அதேபோல் அழைப்பு மணி சத்தம் கேட்டு, கண்ணப்பனும் தேவிகாவும் அவர்கள் அறையிலிருந்து வெளியே வந்திருந்தனர்.
“யார் இந்த நேரத்தில் வந்திருப்பது?” என்று தேவிகா கேட்க,
“நான் போய் பார்க்கிறேன் ம்மா,” என்று சக்தி போய் கதவை திறந்து பார்த்தால், கும்பலாய் ஆணும் பெண்ணுமாக நான்கைந்து பேர் நின்றிருந்தவர்கள், கண்ணப்பன் வாத்தியாரை பார்க்க வேண்டும் என்றார்கள்.
“அப்பா, உங்களை தான் பார்க்க வந்திருக்காங்க,” என்றவனுக்கு, இப்போது மனைவியோடு பேசிக் கொண்டிருந்த பிரச்சனை குறித்தா என்பதுபோல் தோன்றவும் அவன் சிவமித்ராவை பார்க்க, அவளுமே அதே சந்தேகத்துடன் கணவனை பார்த்தாள்.
அவர்கள் யூகித்தது தான் என்பது போல், “அய்யா, நீங்க இருக்க பள்ளிகூடத்திலா இப்படியெல்லாம் நடக்குது? பொம்பள பிள்ளைங்களுக்கு எங்கப் போனாலும் பாதுக்காப்பு இல்லையா? கொஞ்ச லேட்டா பார்த்திருந்தாலுமே என் பொண்ணு இன்னைக்கு எங்களுக்கு இல்லை.” என்று வந்தவர்களில் ஒரு பெண்மணி புலம்பவும்,
“அய்யோ மலருக்கு என்னாச்சு?” என்று சிவமித்ரா பதற,
“என்ன சொல்றீங்க நீங்க, இப்போ அந்த குழந்தை நல்லா இருக்காளா?” என்று சக்திவாசன் கேட்டான்.
கண்ணப்பனும் தேவிகாவும் ஒன்றும் புரியாமல் பார்த்து கொண்டிருக்க, “என் பொண்ணு அந்த வாத்தியாரை பத்தி உன்கிட்ட சொல்லியும் இப்படி கண்டுக்காம விட்டுட்டியே ம்மா,” என்று மலரின் அன்னை சிவமித்ராவை பார்த்து கேட்க, அவளால் அதற்கு பதில் கூற முடியாமல் தலை குனிந்தாள்.
பள்ளி, வாத்தியார் என்ற பேச்சு வரவும், “நீங்களா பேசிக்கிட்டா எப்படி? என்ன விஷயம்னு சொன்னா தானே எனக்கு தெரியும்?” என்று கண்ணப்பன் கேட்டார்.
“வாத்தியாரே, உங்க ஸ்கூலில் வேலைப் பார்க்கும் கணக்கு வாத்தியார். என் பொண்ணுக்கிட்ட தப்பு தப்பா பேசியிருக்கான். அதை உங்க மருமகளிடம் என் பொண்ணு சொல்லியிருக்கா, அது அந்த நாய்க்கு தெரிஞ்சு, யாரிடமும் சொல்லாதன்னு சொல்லியும் நீ சொல்லியிருக்கல்ல, நீ தனியா என்னை சந்திக்கணும், இல்லை உன் போட்டோவை தப்பா நெட்ல போட்ருவேன்னு மிரட்டியிருக்கான். அதுக்கு பயந்து என் பொண்ணு தூக்கு மாட்டிக்க போயிட்டா, நல்லவேளை நான் பார்த்தேன். இல்லை இன்னைக்கு என் பொண்ணு எனக்கில்லை.” என்று அந்த மாணவியின் தாய் அழுதபடியே கூற, தான் யூகித்தது போல நடந்துவிட்டதே என்று சக்திவாசன் அதிர்ச்சியானான்.
கண்ணப்பனும் நடந்ததை கேட்டு அதிர்ச்சியானவர், “என்ன சிவா ம்மா, அந்த பொண்ணு உன்னிடம் விஷயத்தை சொன்னாளா?” என்று சிவமித்ராவிடம் கேட்க,
“அவங்க சொன்னது உண்மை தான் ப்பா. இப்போ தான் மித்ரா என்னிடம் விஷயத்தை சொன்னா, காலையில் எழுந்ததும் உங்களிடம் விஷயத்தை சொல்லி இதுக்கு உடனடியா நடவடிக்கை எடுக்கணும்னு நான் சொல்லிட்டு இருந்தேன்.” என்று பள்ளியில் நடந்த விஷயத்தை சக்தி கூற,
அதற்கு கண்ணப்பனோ, “என்ன சிவா ம்மா, இது கண்டிச்சு விட்ற விஷயமா? அந்த ஏ.ஹெச்.எம் சொன்னா நீயும் அமைதியா வந்துட்டீயே, என்கிட்ட இதைப்பத்தி வந்ததுமே சொல்லியிருக்கலாமே, இப்போ பெருசா ஒன்னும் நடக்கல சரி, ஒருவேளை ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தா என்னாகறது?” என்று கேட்கவும், சிவமித்ராவால் அதற்கு பதில் பேச முடியாமல் தலைகுனிந்து இருக்க,
“அந்த நாய்க்கு எம்.எல்.ஏ சப்போர்ட் இருக்கு, இந்த பிரச்சனையை பெருசாக்கினா, நமக்கு, இவங்களுக்கு, அந்த ஏ.எச்.எம் எல்லோருக்கும் எம்.எல்.ஏ பிரச்சனை கொடுப்பார்னு அவர் சொல்லவும் இவ பயந்துட்டா ப்பா,” என்று சக்தி கூறினான்.
“அந்த நாய்க்கு எம்.எல்.ஏ சப்போர்ட் இருந்தா, அதுக்கு என்ன வேணும்னாலும் செய்வானா? விஷயம் தெரிஞ்சதுமே நாங்க அந்த நாய் வீட்டுக்கு போய் அவனை உண்டு செய்திருப்போம், எதுக்கும் கண்ணப்பன் வாத்தியாருக்கு விஷயம் தெரியுமா? அவர் என்ன சொல்றாருன்னு தெரிஞ்சிப்போம்னு தான் முதலில் இங்க வந்தோம்,” என்று அந்த மாணவியின் சொந்தங்கள் கொந்தளித்தனர்.
“இதுபோதும் விஷயம் தெரிஞ்சு அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க நீங்க ஒத்துழைப்பீங்களா? இல்லையான்னு யோசனையா இருந்தது. இனி உடனே ஆக்ஷன் எடுக்க வேண்டியது தான்,” என்ற சக்தி,
“அப்பா உடனே போய் அவன் மேல கம்ப்ளியிண்ட் கொடுத்திடலாம் ப்பா,” என்று தந்தையிடம் கூற,
“ஆமாம் சக்தி, நீ சொல்றது தான் சரி. உடனே இதுக்கு நடவடிக்கை எடுத்தாகணும்,” என்று கண்ணப்பனும் அதை ஆமோதிக்க, அனைவரும் அடுத்து காவல் நிலையத்திற்கு சென்றனர்.