“நான் சேட்டா கூட சேர்ந்து விவசாயம் கத்துக்க போறேன். இன்னிக்கு மாடு மேய்க்கிற வேலையெல்லாம் நீங்க பாருங்க” என்று வினயன் சொல்ல, நசீர் பிரதாபனிடம்
“எந்தா பிரதாபா? இவன் பயங்கர குருத்த கேடு (சரியான வாலு). இவனுக்கு வேலை தெரியாது” என்றார்.
“தெரியாததைதானே சேட்டா தெரிஞ்சிக்க முடியும்?” என்று வினயச்சந்திரன் வீரவசனம் பேசிட
பிரதாபன் தலையசைத்தபடி, “சேட்டா, இங்க பாருங்க. எனிக்கு அவிட ஜோலி உண்டு” என்றவன் வினயனோடு தன் புல்லட்டில் புறப்பட்டான். மாவேலிக்கரா வரை புல்லட்டில் சென்று அங்கிருந்து ரயிலில் ஆலப்புழா சென்றனர். அங்கே பிரதாபனுக்கு சொந்தமாக ஷிகாரா, சிறு படகுகள் சுற்றுலாவுக்கென உண்டு, அதை மேற்பார்வை செய்ய ஷிபு இருந்தான்.
பிரதாபன் ஷிபுவோடு பேசிக்கொண்டிருந்தவன், வினயனை காலை உணவை முடித்து வர சொல்ல, வினயன் உண்டு முடித்து அப்படியே ஆலப்புழாவின் வீதிகளை சுற்றி வந்தான். பிரதாபன் ஷிபுவிடம் வேலை விஷயமாக பேசியதும் சங்கனாஷேரி(changanessery) செல்லும் பேருந்தில் ஏறியவர்கள் அரை மணி நேரத்தில் ஆலப்புழாவிலிருந்து ‘கைனகரி’ கிராமம் வந்திருந்தார்கள். கைனகரியில் பொன்னச்சனுக்குப் பூர்வீக நிலங்கள் இருந்தன.
“மோசம் சேட்டா!” என்று முகத்தைத் தூக்கி வைத்தபடி கைனகரியின் வீதியில் நடந்தான் வினயச்சந்திரன்.
“எந்தாடா மோசம்?”
“கேரளத்தோட ஸ்பைஸ் கார்டன் எந்த ஊருனு சேட்டனுக்குத் தெரியுமா?”
“இடுக்கிக்காரனுக்கு என்ன பிரச்சனை இப்போ?” கைகளை வீசி நடந்தபடி, பார்வையை வினயன் பக்கம் செலுத்திக் கேட்டான் பிரதாபன்.
“எங்க ஊர்ல விக்குறதை விட அநியாய விலைக்கு மிளகு, ஏலக்காய் எல்லாம் இங்க விக்குறாங்க. டூ மச்” என்று புலம்ப
“விளையுற இடத்துல பொருளோட மதிப்பு கம்மிதானே வினயா? அதைவிட அங்க இருந்து இங்க வர ட்ரான்ஸ்போர்ட் காஸ்ட் எல்லாம் உண்டல்லே?”
“அதெல்லாம் சரிதான் சேட்டா, சாப்பிட்டு அப்படியே பக்கத்துல இருக்க கடையில போய் விலை விசாரிச்சா, இடுக்கிக்காரன் எங்கிட்டயே அப்படி பொய் பொய்யா பேசுறானுங்க, சேட்டா நீங்க உங்க வீட்டுக்கு இனி இந்த பொருள் எல்லாம் வாங்கனும்னா சொல்லுங்க. நான் எங்க ஊர்ல இருந்து அனுப்பி வைக்கிறேன், நாங்க ஹோல்சேலா வாங்குவோம்” என்று வேகமாக சொன்னான் வினயச்சந்திரன்.
பிரதாபன் பல் தெரியாமல் சிறு புன்னகை சிந்தியவன், அந்த தெருமுனையில் இருக்கும் பஷிரின் தேனீர் கடையில் இரண்டு சாயா சொன்னான். அது வீட்டை ஒட்டிய ஒரு தேனீர் கடை, காயலில் படகுகளில் பயணம் செய்பவர்கள் படகினை நிறுத்தி தேவையானதை வாங்கி செல்வார்கள், இப்படி சில கடைகள் இருந்தன.
வினயனின் பார்வை அவ்விடத்தை சுற்றியது. அவனும் கிராமத்திலிருந்து வருபவன்தான், ஆனால் மலைகிராமத்திற்கும் கைனகரிக்கும் வேறுபாடு இருந்தது. வினயன் ஊர் தேவிகுளத்தை சுற்றிலும் பச்சை மலைகளும் காலை பனியும் தொட்டு செல்லும் மேகமும் இருக்கும். இங்கு கைனகரியில் சுற்றிலும் நீர், மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடங்கும் ஆறுகள் எல்லாம் கைனகரியின் முனையிலிருக்கும் இந்தியாவின் மிக நீளமான ‘வேம்பநாட்டு’ ஏரியில்தான் வடியும். ‘குட்டநாட்டி’ன் பகுதியான கைனகரியில் பிரதான தொழில் விவசாயமும் மீன்பிடித்தலுமாகும்.
பஷீரின் வீட்டைத் தொடர்ந்து அங்காங்கே சில வீடுகளிருக்க, ஏரியிலிருந்து பாதுகாப்பாய் இருக்கும் வண்ணம் சுவர்கள் எழுப்பப்பட்டிருக்க, சிறிய படகுகளில் சிலர் மீன்பிடித்தனர். அங்கு படகுகள், ‘கட்டுவள்ளம்’ எனப்படும் படகுவீடுகள், ferry என்றழைக்கப்படும் அரசால் நடத்தப்படும் உள்நாட்டு நீர்வழித்தடத்தின் கீழ் வரும் பயணப்படகுகள் என்று போக்குவரத்தே வேறாக இருந்தன. மலைப்பிரதேசத்திற்கென பிரத்யேகமாக ஜீப்கள் இருக்க, இங்கு தரைவழி, நீர்வழி, ரயில்வழி என்று இந்த உப்பங்கழி(பேக்வாட்டர்ஸ்) பிரதேசத்திற்கேற்றவகையில் போக்குவரத்து இருந்தன. சில ஷிகாரக்கள் சுற்றுலா பயணிகளை அழைத்தபடி நீரில் அவர்களை கடந்து சென்றன.
வினயன் புது இடத்தை பரசவமாக அவனுக்குரிய ஆர்வத்துடன் பார்த்தான். நீரை கிழித்தபடி சிறிய நாட்டுப்படகில் வயதானவர் துடுப்பு போட்டு சென்றார், அவர் படகில் புதிதாய் பிடித்த மீன்கள் இருந்தன. அந்த புலர்ந்திருந்த காலை பொழுதில், நீரின் குளுமையோடு இடத்தைப் பார்க்க நன்றாக இருந்தது, ஆலப்புழாவில் நீரின் நிறத்தைப் பார்த்தவன் கண்களும் முகமும் சுருங்கின, ஆனால் இங்கே வந்து நீரைப் பார்க்க, கண்கள் பிரகாசித்தன. சூரியன் கிரணங்கள் நீரில் பட்டுத் தெறிக்க, பொன்னிறத்தில் விருந்தளித்தன. இந்த கால செய்கையாய், கண் பார்த்ததை மனதில் நிறைத்ததோடு நிற்காமல் தன் அலைப்பேசியிலும் படம் பிடித்தான் வினயன்.
“சேட்டா! அங்க பாருங்களேன் மீன்” என்று வினயன் பிரதாபனை அழைத்து சொல்ல, அவன் வினயனின் பாவனையில் சிரித்தான்.
“போகும்போது நம்ம வீட்டுக்கு வாங்கிட்டு போகலாம் வினயா” என்ற பிரதாபன்
“இங்க நம்ம வயல்லயே வெயில் காலத்துல மீன் வளர்ப்போம், பக்கத்துல கூட எல்லாரும் செய்வாங்க”என்றான்.
“ஆனா எனக்கு ஆச்சரியமா இருக்கு சேட்டா, ஒரு பக்கம் தண்ணீ, அதுவும் உப்பு தண்ணீ, ஒரு பக்கம் நெல் விளையுது. நம்ம ஊர்ல வர வெள்ளத்துக்கு எப்படி இங்க எல்லாரும் தண்ணி பக்கத்துல வீடு கட்டியிருக்காங்க, நினைக்கிறப்ப எனக்கு பக்குனு இருக்கு, இடுக்கில மழை வந்தா மலைச்சரிவு வரும், அங்கேயும் வஞ்சம் வைக்காம மழை வேலையைக் காட்டிடும், ஆனாலும் இங்க இத்தன வெள்ளம் வந்தும் எப்படி இன்னும் இங்கயே இருக்காங்க? நீங்களும் தாமரக்குளத்துல இருந்து இங்க வந்து விவசாயம் பண்றீங்க. ” என்று வினயன் உண்மையான ஆர்வத்தோடு கேட்டான்.
“குட்டநாட்டுக்காரன் கிட்ட கேட்கிற கேள்வியா இது? இதான் நம்ம இடம்னு பதிஞ்ச பின்ன கஷ்டம் நஷ்டம் எது வந்தாலும் நம்ம இடத்தை விட்டுட கூடாது, உப்பு தண்ணி கேட்டியே அது பெயர் பயோ சலைன் ஃபார்மிங்(Biosaline Farming – growth of plants in saline groundwater or soil). உலகத்துல கடல் மட்டத்துக்குக் கீழ விவசாயம் பண்ற சில இடங்கள்ல குட்டநாடும் ஒன்னு, இப்படி கஷ்டப்பட்டு விவசாயம் பண்றதாலதான் குட்டநாட்டை கேரளத்தோட ரைஸ் பவுல்னு சொல்றாங்க, அறியுமா மோனே?” என்ற பிரதாபனின் பேச்சிலிருந்த பெருமை அவன் குரலில்லை. மிக சாதாரணமாக சொன்னான்.
“ஓஹ், இவ்வளவு இருக்கா? ஆனா சூப்பர் சேட்டா ஒரு பக்கம் நெல் விளையுது, இன்னொரு பக்கம் மீனு, அடிபொலி” என்ற வினயன்
“அப்புறம் எனக்கு என்ன வேலை சொல்லுங்க?” என்றான் மிடுக்காக.
“இப்போ நம்ம ஹவுஸ்போட் ஷிபு எடுத்துட்டு வருவான், அதை சுத்தம் பண்ணனும். நாளைக்கு அதை புக் பண்ணியிருக்காங்க, ஈவினிங் நம்ம அதுல ஆலப்புழா போயிடுவோம், மனசிலாயோ?” என்று அன்றைய வேலையை பிரதாபன் சொல்ல, அடுத்த சில மணி நேரத்தில் ஷிபு பிரதாபனுக்கு சொந்தமான கட்டுவள்ளத்தை ஓட்டி வந்தான்.
“ஆலப்புழா பீச் வந்திருந்தாலும் ஒரு நாள் கூட நான் இந்த போட் அவுஸ்ல எல்லாம் தங்கினதே இல்லை சேட்டா, எங்கப்பா காயல்ல சுத்த வந்துட்டு போட் அவுஸ்ல அடைஞ்சி கிடக்கணுமா’ன்னு கேட்டே விட்டதில்ல, இன்னிக்கு ஜாலியா போட் அவுஸ்ல இருக்க போறேன்” என்ற வினயனிடம்
“ஜாலியா இருந்துக்கோ, ஆனா ஒழுங்கா சுத்தம் பண்ணனும். பெட், கார்பெட் எல்லாம் க்ளீனா இருக்கா பாரு. நான் மேல போய் பார்க்கிறேன்” என்றவன் படகின் இரண்டாம் அடுக்குக்குச் சென்றான்.
வினயன் கீழே சுத்தம் செய்து முடித்துவிட்டு பார்த்தால் ஷிபு சமைத்துக் கொண்டிருந்தான்.
“ஷிபு, நான் ஹெல்ப் பண்ணவா?” என்று வினயன் கேட்க, ஷிபுவோ வினயனை முறைத்து
“ஜோலி செய்யன்னல்லே வந்தது?(வேலை செய்யத்தானே வந்த?) என்றான் கோபமாக. வினயனிடம் பிரதாபன் நன்றாக பழகுவது போல் தெரிய, மூன்றாண்டுகளாக வேலைக்கு இருக்கும் ஷிபுக்கு அது பிடிக்கவில்லை, உண்மையில் வினயச்சந்திரன் எல்லாரிடமும் எளிதாக பழகிவிடுவான், அவன் இயல்பு பிரதாபனை ஈர்த்திருந்ததால் பிரதாபன் அவனிடம் நன்றாக நடப்பது போல் தெரிந்தது. காலையில் வினயனுக்குத் துபாயில் வேலை வாங்குவது பற்றி ஷிபுவிடம் பேசியிருக்க, அவனுக்குக் கோபம்.
“எண்ட பகவதி அம்மே! இந்த உலகத்துல ஹெல்ப் பண்ணவா கேட்டா முறைச்சிட்டு திட்டுறதெல்லாம் இங்கதான் நடக்குது” என்ற வினயனுக்கு ஷிபுவுக்குத் தன்னை பிடிக்கவில்லை என்பது புரிந்து போக, வாய்க்குள்ளயே முணுமுணுத்தவன் இரண்டாம் அடுக்கு சென்றான்.
“உங்க போட் செமயா இருக்கு சேட்டா! ஆனா எங்கப்பா சொன்ன மாதிரி ஒரு நாள் முழுக்க இங்க தங்கி என்ன பண்றதுனு தெரியல, ஒரு மணி நேரம் போதும் சுத்தி பார்க்க. எனக்கு ஒரு ஆசை இருக்கு சேட்டா வெண்ணிலா சந்தன கிண்ணம் பாட்டுல மம்முக்கா வர மாதிரி, நிறைஞ்ச பௌர்ணமியில நிலாவை பார்த்துட்டே ஒரு சின்ன படகுல இந்த ஏரில போகணும். அதுக்கு முன்னாடி நான் இங்க நின்னு நாலு போட்டோஸ் எடுத்துக்கிறேன்” என்றவன் விதவிதமாய் தன்னை படம் எடுத்துக்கொண்டான்.
“நாட்டுப்படகுல போகணும் அதானே, நீ சொல்ற மாதிரி குட்ட நாட்டை நாட்டுப்படகுல சுத்தி வரதை விட அழகான விஷயம் வேற இல்ல, ஒரு நாள் ஃப்ரீயா இருக்கப்ப உன்னை அழைச்சிட்டுப் போறேன்” என்று வாக்குத் தந்தான் பிரதாபன்.
முன்மாலை வரை கைனகரியில் பிரதாபனுடன் இருந்தான் வினயன், மதிய உணவுக்கு சோறும் மீன் கறியும் ஷிபு செய்து வைத்திருக்க, நிறைவான உணவு. புது இடம், புது மனிதர்கள் வினயனுக்குப் புது உணர்வை தந்தார்கள். மனதின் ஓரத்தில் அவன் வந்த வேலை ஓடிக்கொண்டே இருந்தது, வீட்டு நினைவு வேறு வாட்டியது.
ஐந்து மணிக்கு முன்னரே தாமரக்குளம் வந்தனர் வினயனும் பிரதாபனும். வீடு வந்ததும் பிரதாபன் அவன் கட்சி வேலை காரணமாக மாவேலிக்கரா சென்றுவிட, வினயன் தாமரக்குளத்தை சுற்றிவந்தான், வீட்டுக்குப் பேசியவன் சட்டென்று தன் நடையை நிறுத்தி, அந்த நீண்ட வாசல் கொண்ட ‘பூவம்பள்ளி’ வீட்டினை பார்த்தான்.
இருபக்கமும் பச்சை பாசி படர்ந்த சுவர் தெரிய, மெல்ல நகர்ந்து எட்டி பார்த்தால் இரு பக்கமும் நீண்டு வளர்ந்த மரங்கள். உள்ளே மிகப்பெரிய தரவாடு. அதனை பார்க்கவும் நேற்றிரவு நசீர் சொன்னதை நினைத்தான்.
“ஏன் நசீரேட்டா நம்ம சேட்டா ஏன் அந்த வீட்டை அப்படி பார்க்கிறார்?” என்று கேட்க, நசீர் பூவம்பள்ளி வீட்டை பற்றி சொன்னார்.
“இந்த உலகத்துல கஷ்டப்பட்டு ஒன்னுமேயில்லாம முன்னேறி ஒரு நல்ல நிலைமைக்கு வரவங்களை பத்தி எல்லாரும் பெருமையா பேசுவாங்க வினயா. ஆனா நல்ல நிலைமையில இருந்துட்டு ஒன்னுமே இல்லாம போறது இருக்கே, அது எதிரிக்கு வந்தாலும் கொடுமை! அந்த வீடுதான் உண்மையில பூவம்பள்ளி தரவாடு, பொன்னச்சனோட தாத்தா காலத்துல கட்டினது. பிரதாபனோட அப்பா ஷங்கரனுக்கு இருந்த குடி பழக்கம், சூதாட்டம் எல்லாம் பொன்னச்சன் சம்பாரிச்ச பெயரோட சேர்த்து அவர் சொத்தையும் முக்கால்வாசி கரைச்சிடுச்சு.”
“ஷங்கரன் இழந்ததை மீட்கிறேன் சொல்லியே இன்னும் இழந்துட்டு நின்னான், இப்போ பூவம்பள்ளி வீட்டை வச்சுருக்கது ஷங்கரனோட கூட்டுக்காரன் தலவாடி ராஜகோபாலன், அவன் கூட்டுக்காரன் இல்ல பச்ச துரோகி. ஷங்கரனை ஏமாத்தியே அவ்வளவு பெரிய வீட்டை வாங்கிட்டான். அந்த வீடு போனதும் பொன்னச்சனும், பிரதாபனும் இடிஞ்சு போய்ட்டாங்க. பிரதாபன் காலேஜ் படிக்கும்போது நடந்தது. அதுக்கு அப்புறம் கூட ஷங்கரனை பொன்னச்சன் கண்டிச்ச அளவு கூட, பிரதாபன் அவங்கப்பாவை பேசல. அந்த சமயம் ஷங்கரனோட உடம்பும் முடியல மொத்தம்மா அந்த வீடு ராஜகோபாலனுக்குப் போயிடுச்சு. அந்த வீடு பிரதானுக்கு எவ்வளவு முக்கியம்னு எனக்குக் கூட தெரியும், அவன் சின்னதுல இருந்து வளர்ந்து, வாழ்ந்த வீடு! அதைவிட்டு இந்த சின்ன வீட்ல வந்து தங்க வேண்டியதாகிடுச்சு. பிரதாபன் அவனோட வருத்தத்தை கூட காட்டினதில்ல, ஷங்கரனுக்கு செஞ்சது புரிஞ்சாலும், என்ன செய்ய முடியும்? அவன் உடம்பு கெட்டு உயிர் போனதுதான் மிச்சம்.”
‘காலி பெருங்காய டப்பா’ என்ற எண்ணம் வினயனுக்கு.
“சில நேரம் இருக்கிறதை இழக்கிறதுக்கு, இல்லாம இருக்கிறதே மேல்னு தோணுது” என்று பெருமூச்சு விட்ட நசீர்
“எப்ப கேட்டாலும் பூவம்பள்ளி பிரதாபவர்மானு பெருமையா சொல்லுவான், ஊர்ல அவங்களுக்கு நல்ல பெயர், பொன்னச்சன் யார்கிட்டயும் ரொம்ப பழகாம இருந்தாலும் மரியாதையா வாழ்ந்தார், ஷங்கரன் மேல வச்ச கண்டிப்பில்லாத பாசம் எல்லாத்தையும் கெடுத்துடுச்சு. நீ முந்திரிகொட்டையா பிரதாபன் கிட்ட இதை கேட்டு வைக்காத, மனசு கஷ்டப்படுவான்” என்று எச்சரிக்கவும் செய்தார்.
“கேட்காதனு சொல்லுங்க, முந்திரிக்கொட்டையா நான்?” என்று முறைத்தவன் போர்வையை இழுத்துப் போர்த்தி உறங்கிவிட்டான். இப்போது நினைத்துப் பார்க்க காலையில் பிரதாபன் சொன்னது மனதில் உலா போனது, நம் இடத்தில் எத்தனை இடர் வந்தாலும் விட்டுப்போக மனம் வராதுதானே? ஏனோ பிரதாபனை கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது. அப்பா, அண்ணன் என்று இருவரின் அரவணைப்பில், எனக்கு எதுவென்றாலும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை வார்த்தையால் சொல்லாமலே வினயனுக்கு உண்டு.
அப்படியிருக்க அப்பா இல்லாத பிரதாபனின் மீது இரக்கம் பிறந்தது, இவனுக்கும் கிட்டதட்ட என் அண்ணன் வயதுதானே இருக்கும். ஆனால் எத்தனை வேலைகள் செய்கிறான்? ஏனோ வயதுக்குரிய ஒரு பேச்சோ, உற்சாகமோ வினயனால் பிரதாபனிடம் காணவே முடியவில்லை.
நேற்றிரவு காலி பெருங்காய டப்பா என்று இயல்பாக நினைத்தவனுக்கு, காலை முதல் பிரதாபனுடன் இருந்த பின், அவன் குணம் புரிய பிடிக்கவும் செய்தது. இப்போது பூவம்பள்ளி வீட்டை பார்க்கையில் பிரதாபனின் இழப்பு வினயனுக்கும் இழப்பாகத் தெரிந்தது. வீடு என்பது வெறும் உடைமை இல்லையே, சிலருக்கு அது உரிமையாக உணர்வாக இருக்கிறது. பிரதாபனுக்கு அப்படியே! வளர்ந்த வீட்டை இழந்து, அதை வேறொருவர் உரிமை கொண்டாடுவதை நித்தமும் பார்ப்பது, பிரதாபனுக்கு எவ்வளவு வேதனை என்று பிரதாபனை சுற்றியது வினயனின் மனம்.
வெகு நேரம் பூவம்பள்ளி வீட்டை பார்த்தபடி யோசனையில் நின்றவன், தெருவின் எதிர் திசையில் கேட்ட சத்தத்தில் நடந்து அங்கு சென்றான்.
அங்கு இரண்டு இளைஞர்கள் மின்மின்குட்டியின் ஸ்கூட்டரை மறித்து ஏதோ சீண்டலாகப் பேச, தட்டி கேட்போம் என்று இரண்டடி வைத்திருப்பான் வினயச்சந்திரன். ஸ்கூட்டரின் முன் வேகமாக ஒரு பைக் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கினான் உன்னிகிருஷ்ணன்.
முழுக்கை சட்டையின் கையை மடித்து விட்டபடி அங்கு நின்ற இளைஞர்களைப் பார்க்க, அவர்களோ மின்மினியிடம் பேச்சுவளர்க்காமல் செல்ல, உன்னி அவளிடம்
“ஆளுங்க வம்பு பண்ணா கத்தி கூப்பிட மாட்டியா?” என்று மலையாளத்தில் திட்ட
மின்மினியோ அவனை முறைத்தவள் “நீங்க வரலன்னாலும் என் களரி எனக்குக் கை கொடுத்திருக்கும், உங்க வேலையைப் பார்த்துட்டு போங்க” என்று உன்னிக்குப் பதில் கொடுக்க
“அஹங்காரி! பிரதாபன் தங்கச்சி இல்ல, அதான் அவன் கோவம் அப்படியே இருக்கு” என்று உன்னி பேச, மின்மினிகுட்டி முறைத்தபடி வண்டியை வீடு நோக்கி செலுத்த வினயச்சந்திரனும் நடந்தபடி வீடு வந்தான்.
மின்மினிகுட்டி வண்டியை நிறுத்த, வினயச்சந்திரன் அவளிடம் “பரவாயில்ல மின்மினி, நீ அந்த பசங்களை பேசி சமாளிச்சிட்ட. அப்படி என்ன சொன்ன?” என்று எதார்த்தமாக கேட்க
அதற்குப் பதில் சொல்லாத மின்மினி “ராஜகுமாரன் வந்து காப்பாத்துவான்னு நினைக்கிற சின்ட்ரெல்லா நானில்லை” என்று தனக்குள் முணுமுணுத்தபடி அவள் அறைக்குப் போனவள்
“மினி! மினி” என்ற பொன்னச்சனின் அதட்டலில் வெளியே வந்தாள்.
“அந்த தெம்மாடி உன்னியோட உனக்கென்ன பேச்சு?” என்று பொன்னச்சன் மின்மினியை ஒரு வார்த்தை கூட கேட்காது திட்டினார்.
பார்த்த வினயனுக்கு வருத்தமாக இருந்தது. அவன் பேசினாலும் பொன்னச்சன் கேட்க மாட்டார் என்று நினைத்தவன் பிரதாபனிடம் சொல்லலாம் என்று நினைக்க, பிரதாபன் வந்ததும் பொன்னச்சன் உன்னியிடம் மின்மினி பேசியதை சொல்ல, அவனும் தங்கையைத் திட்டினான். ஏனோ அதுவரை மின்மினியைப் பெரிதாக கவனிக்காத வினயனுக்கு இப்போது அவள் மீது இரக்கம் வந்தது, அதற்கு மாறாக பிரதாபன் மீதான பிம்பம் மாறிப்போனது.
மின்மினிகுட்டி அச்சச்சனிடமும், சேட்டனிடமும் திட்டு வாங்கி அவள் கண்கள் இரண்டிலும் கண்ணீர் சேர்ந்திருந்தாலும், இயல்பு போல் இரவு உணவுக்கு வேலை செய்தாள். பிரதாபனை திட்ட வேண்டும் என்று வினயன் காத்திருக்க, அவனோ வினயனை வாயடைக்க செய்திருந்தான்.
பிரதாபன் பேசியதைக் கேட்ட நசீர் கொஞ்சம் தள்ளி வந்து, “ஏன் பிரதாபா? அந்த பையனை ஒரு பத்து நாளா தெரியுமா? அவனுக்கு எதுக்கு இதெல்லாம் செய்யணும்? நல்ல பையன்தான், ஆனா அவன் பெருசா வளைஞ்சு வேலை செய்றதில்லை” என்று சொல்ல, பிரதாபன் உடனே
“அவனுக்கு எல்லாம் புதுசேட்டா, ஆனா ஆர்வமா இருக்கான். ஏன் செய்றேனு கேட்டீங்கன்னா என்னமோ செய்யணும்னு தோணிச்சு. அவனுக்கு அப்பா, அண்ணா சரியில்லை, அம்மா இல்லாத பையன். அவன் இடத்துல நான் இருந்திருக்கேனே ஏட்டா? அதான் என்னால முடிஞ்சதை செய்ய நினைச்சேன்” என்று பிரதாபன் சொல்லி போக நசீர் அவனை ஆதுரமாக பார்த்தார்.
தன்னிடத்தில் அடுத்தவரை வைத்து பார்ப்பதும் அன்பின் செயல்தான்! வினயன் மீது பிரதாபன் வைக்கும் நல்லெண்ணமும், நம்பிக்கையும் பின்னால் வினயனுக்கு வினயமாகும் என்று அவன் அறியவில்லை.