“கண்டிப்பா தெரியும். அதேநேரம் உங்களை மீறி நான் போவேன்னு சொல்லையே டாடி. வேற யாரோடையும் எனக்கு கல்யாணம் வேண்டாம்…”
“ஆகர்ஷன் முடிஞ்சு போன சேப்டர் உன் லைப்ல…”
“அப்படின்னு நீங்க நினைச்சா அமைதியா போக நான் ஒன்னும் காவேரி இல்லை….”
“பிரத்யு…”
“டாடி இப்ப வரைக்கும் உங்க சம்மதத்துக்காக தான் நான் வெய்ட் பன்றேன். ஏன் நான் நினைச்சா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணியிருந்திருக்க முடியாதா? ஏன் டாடி புரிஞ்சுக்கமாட்டேன்னு சொல்றீங்க?…”
“நோ, நோ. நீ என்ன சொன்னாலும் நான் சொன்னது சொன்னது தான். பேசாம ரூம்க்கு போ பிரத்யு. இந்த ஆர்க்யூமென்ட் இத்தோட ஸ்டாப் பண்ணிட்டு நான் சொல்றதை கேட்டு நட…” என்று இப்படியாக இருபுறமும் கடுமையான வாக்குவாதம்.
அந்தநேரம் அந்த பேச்சுக்களை அவசியமற்றது என்று ஸ்ரீவத்சன் தவிர்த்திருக்கலாம்.
ஆனால் ராம்நாத் வந்து பேசிவிட்டு சென்றது, தயாளராஜ் கொடுக்கும் நெருக்கடி என்று தடுமாறி போனார் ஸ்ரீவத்சன்.
தான் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும் தன் குடும்பத்தினர் என்னும் அகந்தை வேறு தலைதூக்க அவருக்கு இணையாய் நின்றாள் பிரத்யுக்ஷா.
“நீங்க சொல்றதை எல்லாம் கேட்டுட்டு நிக்க நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை. இப்படி கொஞ்சமும் என்னையும் புரிஞ்சுக்காம உங்க ஈகோவை திருப்திபடுத்த, உங்க முடிவுல ஜெயிக்க நான் பொம்மையாக முடியாது…” என்றவள்,
“மம்மி, நான் சென்னை போறேன். இப்பவும் சொல்றேன், உங்க சம்மதம் இல்லாம என் கல்யாணம் நடக்காது…” என்று காவேரியை அணைத்து விடுவித்தவள் ஸ்ரீவத்சன் பார்த்துக்கொண்டிருக்கையில் தன் கைப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு சடுதியில் வெளியேறி இருந்தாள் பிரத்யுக்ஷா.
இப்படி ஒரு முடிவிற்கு மகள் செல்வாளென்று ஸ்ரீவத்சன் துளியும் எதிர்பார்க்கவில்லை.
“அவ்வளோ திமிரா இவளுக்கு? போனவளை எப்படி வரவைக்கன்னு எனக்கு தெரியும்…” என்று அசமந்தமாக இருந்தவர் மகள் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்தவர்களை தொடர்புகொண்டு அவளை கவனிக்க கூற,
“ஸார் மேடம் எங்க போனாங்கனேன் தெரியலை. ஃபாலோ பண்ணிட்டு இருக்கும் போதே சிக்னல்ல கண்ணை விட்டு மறைஞ்சிட்டாங்க….” என குண்டை தூக்கி போட இதயத்துடிப்பே நின்றுவிட்டது ஸ்ரீவத்சனுக்கு.
“உன் பொண்ணு என்னைக்குனாலும் என் மகனுக்கு. உன்னை என் காலடில போடறேன் பாரு…” என்ற தயாளராஜின் குரல் வேறு ஸ்ரீவத்சனை அபாயத்தின் உச்சகட்டத்தில் கொண்டு நிறுத்தியது.
மகன், மருமகளிடம் காவேரியை பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு புகார் கொடுக்க கிளம்ப ஆயத்தமானார்.
அதற்கு முன் தயக்கமாக சில நொடிகள் தவிப்புகளை மேலும் கூட்ட நெஞ்சோரம் சிறுவலி.
கண்ணீருடன் கலங்கி நின்ற தன் மகள். தன்னிடம் திமிர்ந்து நின்ற தன் மகள். தன் கைகளுக்குள் வைத்து வளர்த்த தன் மகள்.
நினைக்கையில் நெஞ்சமெல்லாம் ரண வேதனையை மேலும் மேலும் அதிகமூட்ட உடனே அழைத்துவிட்டார் ஆகர்ஷனுக்கு.
வேறு எதுவும் தோன்றவில்லை. துணிந்து இதனை தயாளராஜ் செய்திருக்கையில் நேரடியாக காவல்துறை என்று சென்றுவிடலாம் தான்.
ஆனால் அதற்கும் முன் தனக்கொரு தோள் தேவைப்பட்டது. அந்த உண்மையை மனம் உணர்ந்தாலும் அவர் வெளிக்காண்பிக்கவில்லை.
ஆகர்ஷன் அழைப்பை ஏற்பானா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. தன் எண் உள்ளதா என்றும் யோசிக்கவில்லை.
அந்தநொடி அவனை தவிர வேறு ஒருவரையும் அவருள்ளம் தேடாததில் அத்தனை வியப்பு.
ஆம், ஈகோ. அவரின் ஈகோ அதனை திருப்தி படுத்த மட்டுமே மகளின் விருப்பத்தை மறுத்தது. அதனை பரிபூரணமாக உணர்ந்துகொண்டார்.
“ஹலோ…” என ஆகர்ஷன் குரல் செவியில் விழுந்ததுமே வார்த்தைகள் வராமல் கண்கள் கலங்கியது.
“நீங்க யார் பேசறீங்கன்னு தெரியுது. சொல்லுங்க…” என்றான் ஆகர்ஷன் அடுத்ததாய்.
குரலில் என்ன முயன்றும் அவன் காண்பிக்கும் அந்த சொந்தத்தை அவரால் உணராமல் இருக்கமுடியவில்லை.
“பிரத்யு…” என வார்த்தைகள் இடறியபடி தொண்டை அடைக்க வெளிவர,
“பிரத்யு, பிரத்யுக்கு என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?…” அதுவரை ஆகர்ஷன் குரலில் இருந்த தன்மையும், நிதானமும் தொலைய கண்டார் ஸ்ரீவத்சன்.
“என்ன விஷயம்ன்னு சொல்லுங்க. அவளோட நீங்க சண்டை போட்டீங்களா?…” என்றான் இப்போது கோபமாக.
“பிரத்யு இருக்கிற இடம் இன்னும் கொஞ்சநேரத்துல தெரிஞ்சிரும். நீங்க புறப்பட்டு சென்னை வாங்க…” என்றவன் எந்த நேரம் கிளம்பினாள், எதுவரை அவளை கவனிப்பவர்கள் தொடர்ந்தனர் என்பது வரை தகவல்களை சேகரித்துக்கொண்டான்.
“இல்லை, இப்ப குடுக்கவேண்டாம். அதுவும் கண்டிப்பா அங்க குடுக்க கூடாது. எங்க பேசனுமோ அங்க பேசலாம்….” என்றவன்,
“நீங்க கிளம்புங்க. பிரத்யுக்ஷா என்னோட சென்னைக்கு தான் வருவா. நீங்க இங்க வாங்க. பேசிக்கலாம்…” என்று சொல்லிவிட்டான் ஆகர்ஷன்.
இதற்குமேலும் தங்களின் திருமணத்தை தள்ளிப்போடும் எண்ணம் அவனுக்கு இல்லை.
ஸ்ரீவத்சன் சம்மதத்தை பெறுவது என்று காத்திருப்பிற்கு எல்லாம் இடமில்லை என்றது அவனிதயம்.
அதன்பின் ஸ்ரீவத்சன் சென்னை கிளம்ப ஆயத்தமாக அவர் சென்னை சேர்ந்த இரண்டுமணிநேரங்களில் ஆகர்ஷனிடம் வந்து சேர்ந்தாள் பிரத்யுக்ஷா.
துரிதகதியில் தேடுதல் பணி. ரகசியமாய் காவல்துறை உதவியுடன் சத்தமின்றி தேடியவர்களுக்கு அந்தியூர் அருகில் பிரத்யுக்ஷா கிடைக்கப்பட அவளிருந்த நிலையில் தினேஷின் மீதான கொலைவெறியில் கட்டுக்கடங்காத கோபத்தில் இருந்தான் ஆகர்ஷன்.
உண்ணாமல், உறங்காமல் எச்சிலை மட்டும் விழுங்கிக்கொண்டு அரைமயக்க நிலையில் கன்னத்தில் அடிபட்ட தடத்துடன் கிடந்தாள் பிரத்யுக்ஷா.
“பிரத்யு…” என்று அவளை அணைத்துக்கொண்டு பதறியவனின் சட்டையை பிடித்திழுத்தவள் கண்ணெல்லாம் தாகத்திலும், பசியிலும் மயங்கியது.
“தண்ணி…”என்ற தீனமான குரல்.
“இதோ இதோ….” என்றவன்,
“தண்ணி தண்ணி தாங்க…” என அழைத்த சத்தத்தில் குடிக்க நீர் கொண்டுவர அவளின் முகம் கழுவி, தண்ணீரை குடிக்க கொடுத்தவன் தன் தோளில் சாய்த்திருந்தான் அவளை.