இப்படியே நாட்கள் மாதங்களாகக் கடக்க, அவர்களுக்கான படிப்புச் சான்றிதலும் அவர்கள் கையில் வந்து சேர்ந்திருக்க, சம்யுக்தா நினைத்ததுபோலவே திருநெல்வேலியிலே முதலாம் இடம்பிடித்துத் தேர்ச்சி பெற்றிருந்தாள்.
ப்ரித்திவ் அப்படி எந்த நல்லகாரியமும் செய்யவில்லை ஆனாலும் அவனும் ஓரளவு நல்ல மதிப்பெண்களே எடுத்திருக்க, அவனின் யுகிக்குதான் அது போதாமல் இருந்தது.
ஆனால் அவளவனோ அதைப்பற்றி எல்லாம் கவலையே கொள்ளாது அவள் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்றதை குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடித் தீர்த்துவிட்டான் ப்ரித்திவ்ராஜ்.
சம்யு அளவுக்கு மகனின் மதிப்பெண்கள் இல்லாவிடினும் அவன் தேர்ச்சி பெற்றதே பெரிது என்று எண்ணிய யுவா, “உனக்கும் கொஞ்சம் வச்சுதான் படச்சிருக்கார் கடவுள். மூளைய” என்று பாராட்டையே திட்டலாய் செப்பியவன் மருமகளை அழைத்து, அவளுக்கு என்ன ஆசை என்று கேட்டு அதை நிறைவேற்றுவதாக வாக்கும் கொடுத்தான்.
அப்படியே அடுத்தடுத்த நாட்களும் கடக்க, ப்ரித்திவும் சம்யுவும் பயிற்சிமருத்துவர் பணியிலும் தங்கள் திறமைகளை செயலாற்றிக்கொண்டிருந்தனர்.
வழக்கம்போல் அன்றும் பரபரப்பாகத் தொடங்கிய காலை வேளையில் உள்நோயாளிப்பிரிவுகளில் அவர்களுக்குப்பணி அமைத்திருக்க, இருவரும் வெள்ளைஅங்கியும் கழுத்தில் தொங்கிய ஸ்டெதஸ்கோப்புமாய் மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.
சம்யுவிற்கு மகப்பேறு பிரிவிலும், ப்ரித்திவிற்கு குழந்தைகள் பிரிவிலும் பணி என்றிருக்க இருவரும் எதிர்எதிர் இருந்த வாயிலிற்க்குள் பிரவேசித்தனர்.
“லேபர்வார்டு” என்ற பகுதியை ஒட்டி தனித்தனி அறைகளிலும், ஹால் போன்ற பெரிய அமைப்பிலும் போடப்பட்டிருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட படுக்கைகளில் பிரசவத்திற்கு வந்திருந்த கர்ப்பிணிப்பெண்களில் தொடங்கி பேறுகாலம் முடிந்து குழந்தையோடு இருப்பவர்களும், திருமணமாகியும் குழந்தைகள் தரிக்காது வைத்தியத்திற்கு வந்திருப்பவர்களும் என்று பலத்தரப்பட்ட பெண்கள் அங்கு சிகிச்சைக்குக் காத்திருக்க, சம்யுவும் அவளோடு பயின்ற இன்னும் பல மாணவமாணவிகளும் ஒவ்வொரு பெண்களிடமும் சென்று அவர்களின் தற்போதைய உடல்நலனை சோதித்து படுக்கையில் தொங்கிக்கொண்டிருந்த சுயகுறிப்பு அட்டையையும் பார்த்து அவர்களுக்குண்டான ஆலோசனைகளை வழங்கினர்.
இங்கே ப்ரித்திவும் மிகப்பெரிய மண்டபம் அளவிலான இடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படுக்கைகள் போடப்பட்டு, அதனோடு சிறு மேஜையும் படுக்கையோரம் ஒரு ஐவி ஸ்டாண்டும் வைக்கப்பட்டு ஒவ்வொரு படுக்கைக்கு இடையிலும் வேண்டிய இடைவெளியில் சிறு சிறு தடுப்புகளோடும் காணப்பட்ட குழந்தைகள்பிரிவுக்குள் நுழைந்தான்.
அந்த பரந்த இடத்தின் சுற்றுச்சுவர்களில் குழந்தைகளின் உடல் மற்றும் மனவளர்ச்சிக் குறிப்புகள், அவர்களுக்கான உணவுமுறைகள், அவர்களின் பாதுகாப்புக் குறிப்புகள் என்று வண்ண வண்ணப் படங்களோடு கூடிய விளக்கம், மற்றும் அட்டவணைகள் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டிருக்க, மீதி இருந்த இடங்களில் எல்லாம் டோரா புஜ்ஜியும், மிக்கி மௌசும், சோட்டா பீமும், சின்சான் என்று கார்ட்டூன் அலைவரிசைகளின் கற்பனை படைப்புகளின் வண்ணப் படங்களும், பூக்கள், பட்டாம்பூச்சி மரம் செடி, காய்கள், பழங்கள் என்று அந்த பெரியபகுதி முழுதுமே குழந்தைகளை மட்டுமல்ல அனைவரையும் கவரும் வகையில் மிகவும் அழகான சூழலாய் அமையபட்டிருந்தது அந்த குழந்தைகள் பிரிவு.
மூன்று மாதக் குழந்தையில் தொடங்கி பதினெட்டு வயது பிள்ளைகள் வரை பல்வேறு வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் அந்த சிறப்புப் பகுதியில் இருக்க, ப்ரித்திவ்வோடு வேறு சில மாணவர்களும் கூட அங்கிருந்த குழந்தைகளை நெருங்கி தங்களின் மருத்துவப்பணியைத் தொடங்கினர்.
பொறுமையாக ஒவ்வொரு படுக்கையாகச் சென்று இன்முகத்தோடு குழந்தைகளிடம் நலன்விசாரித்து அவர்கள் அன்னையிடமும் பேசி அவர்கள் சந்தேகங்களையும் தீர்த்து வைத்த ப்ரித்திவ் இடது பக்க வரிசையில் இருந்த குழந்தைகளை பார்த்து முடித்து வலதுபுறம் இருந்த படுக்கைகளை நெருங்க, அங்கு முதல் படுக்கையில் பனிரெண்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஊரையே கூட்டுவது போல் வாய்மூடாது அலறிக்கொண்டிருந்தான்.
அருகில் நின்றிருந்த செவிலிப்பெண் ஒருவர் கையில் காய்ச்சலுக்கான மருந்து நிரப்பப்பட்ட ஊசியை வைத்துக்கொண்டு நிற்க அந்த சிறுவனோ அதைப்பார்த்து கையும் காலும் உதைத்துக் கொண்டு இன்னும் இன்னும் அழுதான்.
அங்கிருந்த அனைவரின் கவனமும் அங்கே குவிய
சிறுவனின் அருகில் இருந்த செவிலிப் பெண்ணோ, “என்னம்மா பையன் ஒரு ஊசிக்குப் போய் இப்டி அடம் பண்றான்?” என்று கேட்க அருகில் நின்ற சிறுவனின் அன்னையோ, “சின்னப்புள்ளயிலிருந்தே ஊசின்னா இப்படித்தான் சிஸ்டர் அழுவான்” என்றவர், “தம்பி கொஞ்சம் நேரம் பேசாம இருடா. இந்த ஒரு ஊசிமட்டும் போட்டுட்டு வீட்டுக்கு போய்டலாம்” என்று மகனிடமும் கெஞ்சினார்.
அதைக்கேட்டு இன்னும் கத்திய சிறுவனோ, “இப்டி சொல்லி சொல்லி தான் நேத்து நைட் இருந்து மூனு ஊசி போடவச்சிங்க. எனக்கு ஊசிவேணாம்” என்று படுக்கையில் இருந்தும் இறங்க முயற்சித்தான்.
ஏதோ வைரல் காய்ச்சலால் இரவு அனுமதிக்கப்பட்டிருப்பவனுக்கு இன்னும் காய்ச்சல் மட்டுப்படாமல் இருக்க சிறுவனின் உடலோ நெருப்பாய் கொதித்தது. சற்றுமுன்னர் தான் நீரில் பஞ்சைத் தோய்த்து துடைத்துவிட்டு அவன் உடல் சூட்டை சற்றே தணித்திருந்த அந்த செவிலியர் சிறுவனின் ஆர்ப்பாட்டத்தால் இப்பொழுது ஊசியை போட்டுவிட முடியாது கையைப் பிசைந்து கொண்டு நின்றார்.
அவர்களையே பார்த்தபடி அங்கு சென்ற ப்ரித்திவின் நண்பனோ செவிலியிடம் அவனுக்கு என்ன பிரச்சனை என்று விசாரித்தவாறே அவன் கழுத்தில் கை வைத்து தொட்டு பார்த்துவிட்டு, “டேய் தம்பி இது சின்ன ஊசிதான் வலிக்காது போட்டுக்கோ” என்று சமாதானம் செய்ய… ப்ரித்திவும் அருகே இருந்த குழந்தைக்கு வாந்திபேதி நிற்பதற்கான மருந்துகளை தாளில் எழுதி குழந்தையின் அன்னையிடம் கொடுத்துவிட்டு அழுதுகொண்டிருந்த சிறுவனிடம் விரைந்தான்.
ஆனால் அச்சிறுவனோ சுற்றி இருந்த எவரையும் கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு தொண்டைகட்டுமளவு கத்திக் கொண்டே இருக்க, சட்டென்று அவன் அருகில் அமர்ந்த ப்ரித்திவோ வெள்ளை அங்கியையும் ஸ்டெத்தையும் அவிழ்த்து கையில் வைத்துக்கொண்டு அவன் செவிக்கருகில் சென்று,
“எனக்கும் ஊசி வேணாம்” என்று அவனுக்கு மேல் சப்தமாய் கத்தினான்.
அதில் கத்துவதை நிறுத்திய சிறுவனோ “யார்ரா இவன்” என்பது போல் ஏறிட்டுப் பார்க்க…
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ப்ரித்திவும், “உனக்கு ஊசின்னா பயமா? எனக்கும்தான்” என்று பாலகன் போலவே பேசினான்.
கடப்பாரைக்கே பயப்படமாட்டேன் என்று சொல்லாது சொல்லிய உருண்டு திரண்ட புஜங்களையும் உரமேறிய உடற்கட்டையும் கொண்டவனை ஏற இறங்கப் பார்த்த சிறுவனும், “இவ்ளோ பெருசா இருக்கீங்க. ஊசிக்கு போய் பயப்புடறீங்களே” என்று தயங்கி தயங்கி கேட்டவனுக்கு தன் அழுகை எல்லாம் மறந்து சிறிதான சிரிப்பும் எட்டிப்பார்த்தது. நாம பரவாயில்ல போல என்ற நினைப்பில்.
அதைப் பார்த்து இதழ் மறைவில் சிரித்துக் கொண்டவனும், “நீயும்தான ஊசிக்கு பயந்து அழுத?” என்று கேட்க…
அவனோ, “ஹான்… நான் சின்னபையன் அதான் அழுதேன்” என்று சட்டென்று பதில் சொன்னான். ப்ரித்திவின் தோற்றமும் பேச்சும் சிறுவனை இலகுவாக்கி இருந்தது.
அதில், ‘வா ராசா வா’ என்று சிரித்துக் கொண்டவனும், “நீ சின்ன பையன்னா அப்போ அங்க இருக்கது?” என்று கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்த ஆறுமாதக் குழந்தையைக் காட்டியவன் அவன் திரும்பிப் பார்த்துவிட்டு பேந்தபேந்த விழிப்பதைக் கண்டு மேலும் தொடர்ந்து அங்கு சுற்றி இருந்த இன்னும் ஒருசில சிறிய குழந்தைகளையும் காட்டி அதே கேள்வியை வினவினான்.
அதில் தவறு செய்தவன் போல் தலையைக் குனிந்து கொண்டவன், “அவங்கள்ளாம் எப்டி அழாம இருக்காங்க? அவங்களுக்கு போட்ட ஊசி வலிக்காத ஊசியா?” என்று ஆச்சரியமாக கேட்டான்.
உடல் உபாதையாலும் மருத்துவமனைச் சூழலாலும் நேற்று இரவு வந்ததிலிருந்து பயந்து அழுது கொண்டிருந்தவன் அப்பொழுதுதான் சுற்றி இருந்த தன்னைவிட சிறு சிறு குழந்தைகளையும் கவனித்து தன் துருதுருப்பை மீட்டிருந்தான் சிறுவன்.
சிறுவனின் கேள்விக்கு ஒரு புன்னகையை பரிசளித்த ப்ரித்திவும், “வலிக்கிற ஊசி வலிக்காத ஊசினெல்லாம் எதுவும் இல்லை தம்பி” என்றவன், “இப்போ காய்ச்சல் வந்தா ஊசி போடமுன்ன மாத்தரை போடுறோம்ல. அது கசக்கும்னு தெரிஞ்சும் ஏன் போடுறோம். அது போட்டாதான் காச்சல் போய் சீக்கிரம் நாம ப்ரண்ட்ஸோட விளையாட முடியும். சீக்கிரம் ஸ்கூல் போகமுடியும்னு போடுறோம். அதுபோலதான் ஊசியும். நம்மளோட நல்லதுக்குத்தான் போடுறோம்னு மனசில பிக்ஸ் பண்ணிட்டன்னா உனக்கு வலியே தெரியாது. அத விட்டுட்டு நீ இப்டி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டிருந்தன்ன உனக்கு காய்ச்சலும் விடாது. அப்றம் பெரிய ஊசிபோடவேண்டி நிலம வந்தாலும் வரலாம்” என்றும் நீண்ட விளக்கம் கொடுத்து தோளை குலுக்கிக் கொண்டு எழும்பினான்.
அதற்குள் அவன் கையை பற்றி இழுத்திருந்த சிறுவனும், “அப்போ இந்த ஊசிய போட்டுக்கிட்டா நானும் சீக்கிரம் வீட்டுக்கு போய் ப்ரண்ட்ஸ்லாம் பாக்கலாமா அங்கிள்?” என்று ஆர்வமாகக் கேட்க…
“கண்டிப்பா” என்ற ப்ரித்திவும், “அப்டி நீ நம்பிக்கை வச்சு போட்டுக்கிட்டின்னா அந்த பாசிட்டிவ் வைப்பே உனக்கு புது தெம்பு கொடுக்கும். ஊசியும் வலிக்காது. காய்ச்சலும்” “வ்வ்ஸ்ஸ்ஸ்” என்று பறந்து செல்வது போல் சைகை செய்தவன் செவிலியிடம் ஊசி போடுமாறும் விழியசைக்க, இப்பொழுது சிறுவனும் மறுக்காது ஊசியைப் போட்டுக்கொண்டு சிரித்தான்.
ஒரு மருத்துவனாக இருந்தாலும் எந்த பாசாங்குமின்றி சிறுவனோடு சிறுவனாய் அமர்ந்து சிறுவனுக்குப் புரியும்படியாய் பேசி அவனுக்கு ஊசியும் போடவைத்தப் பின்னரே, “குட் பாய்” என்று அவன் தோளில் தட்டிய ப்ரித்திவ் அங்கிருந்து திரும்ப…
“பாப்லஸ் அப்ரோச் போர் சில்ட்ரன், மேன்” என்ற கைத்தட்டலோடு அங்கே நின்றிருந்தார் அவர்களின் பேராசியர் ஒருவர்.
ப்ரித்திவ் அந்த சிறுவனிடம் பேசதொடங்கிய சமயம் எதற்சையாக அங்கு வந்து நடந்ததை கவனித்தவர்,
“சார்…” என்று தன்னை நெருங்கியவனிடம்,
“சூப்பர் மேன் சூப்பர். உன்ன நான் இவ்ளோ நாளா விளையாட்டுப்பையன்னு தான் நினைச்சேன். ஆனா நானும் டாக்டர்தான்னு நீ நிரூபிச்சிட்ட. பென்டாஸ்டிக் ஜாப்மேன். யூ ஹாவ் எ குட் பியூச்சர் இன் பீடியாட்ரிக்ஸ் பீல்ட்” என்றும் அவன் தோளில் தட்டிக்கொடுத்து கூறிவிட்டுச் சென்றார்.
அப்பொழுதுதான் அங்கேவந்து அவன் செயல்களை பார்த்து திகைத்து நின்ற சம்யுவுக்கு ஆசிரியர்வேறு அவனை பாராட்டிவிட்டுச் செல்லவும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
இத்துணை வருடப்படிப்பில் அவனுக்கென்று கிடைத்த முதல் முதல் பாராட்டு இது.
எப்பொழுதும் பாடத்தில் முதல் மதிப்பெண்கள் எடுப்பவளுக்கு இதைவிடப் பெரிதாக எத்துணையோ பாராட்டுக்கள் கிடைத்திருக்கிறது தான். ஆனால் அப்பொழுதுகளில் கூட சம்யு இத்துணை பரவசம் கொண்டதில்லை.
தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவப்படிப்பில் நுழைந்தவனின் விளையாட்டுப் புத்தியில் இன்றளவும் சிறிதான அதிருப்தியில் இருப்பவளுக்கு சற்று முந்தைய ப்ரித்திவின் செயல்முறையும், அதற்கான ஆசிரியரின் பாராட்டும் அத்துணை குதூகலத்தைக் கொடுத்திருந்தது.
ஆசிரியரிடம் நன்றி கூறிவிட்டுத் திரும்பியவனிடம், “திவ்வா” என்ற கூவலோடு ஓடி வந்த சம்யுவோ அவன் புஜத்தை இறுக்கப் பற்றிக்கொண்டவள், “திவ்வா சூப்பர்டா. செம்மடா. சான்சே இல்லைடா. என் செல்லம்டா என் புஜ்ஜிபையாடா.” என்று அவன் கன்னங்களை பிய்த்து பிய்த்து வாயில் போட்டுக்கொள்ள…
அதில், “யுகீ…” என்று அவள் கையைப் பற்றி நெருங்கியவனுக்கு பெண்ணவளின் வெகுநாளைக்குப்பிறகான இத்துணை அண்மையில் கூர்விழிகள் இரண்டும் கார்மேகமாய் குளிர, ஆடவனின் தேகச்செல்கள் மொத்தமும் தேரோடும் வீதியாய் ஆர்ப்பரித்துக் கிளம்பியது.
ஆம் வெகுநாட்களுக்குப் பிறகான அண்மைதான். அவன் வாய் வார்த்தையாய் எதுவும் கூறாவிடினும் அவனுடைய பார்வைகள் பேச்சில் சேர்ந்திருக்கும் புதுவித மாற்றத்தை பெண்ணின் உள்ளுணர்வுகள் கணித்ததோ, அல்லது மாமன்மனைவியின் அறிவுரையிலோ ஒரு கிராமத்துப்பெண்ணாய் அவனிடம் சிறிதான இடைவெளியை அவளையும் அறியாமலே அவர்களுக்குள் கொண்டுவந்திருந்தாள் சம்யுக்தா.
அவனுக்கும் நவீன் பற்றிய உறுத்தல் இருந்ததாலோ என்னவோ சம்யுவின் ஒதுக்கத்தை பெரிதாக எடுக்காவிடினும் அவனளவில் அவன் உணர்வுகளை அவளிடம் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருந்தான். பலவித செயல்களால்.
ஆனால் இக்கணம் அவளாக வந்து அவன் கையை இறுகப்பற்றிக்கொண்டதும்,
“திவா சான்ஸே இல்லைடா. யாரையுமே பெருசா பாராட்டாத ராஜேஷ்சாரே உன்ன பெஸ்ட் பீடியாட்ரிக்கா வருவன்னு சொல்லிட்டுப் போறாருடா. எனக்கு எவ்ளோ பெருமையா இருக்கு தெரியுமா” என்று ஏகத்துக்கும் ஆர்ப்பாட்டம் செய்து அது மருத்துவமனை என்றும் பாராமல், “சோ ஸ்வீட்டா. என் செல்லக்கண்ணாடா நீ”
என்றும் தன் கன்னம் கிள்ளிக் கொஞ்சியவளைக் கண்டு சிறுவயதில் பட்டாம்பூச்சி பிடித்து கொடுக்கும்போது துள்ளிக் குதித்த ஏழுவயது அத்தை மகள்தான் அவன் கண்முன்னே வந்து நின்றாள்.
அன்று சிறுபெண்ணாய் பாவாடை சட்டையில் அவனைவிட ஒரு இஞ்ச் அதிக உயரத்தில் இருந்தவள், இன்று அவன் வாங்கிக்கொடுத்த செவ்வந்திப் பூ வண்ண சில்க்காட்டன் புடவையில் தன் தோளுக்கு கீழ் குனிந்து பார்க்கும் உயரத்தில் அன்று அவன் கண்ட அதே குதூகலம் நிறைந்த முகத்தோடு தன் முகம் நோக்கி நின்றவளைப் பார்த்தவனுக்கு விழியை அவளில் நின்றும் விலக்கவே இயலவில்லை. விலக்கும் நிலையிலும் அவன் இருக்கவில்லை.
தனக்குக்கிட்டிய பாராட்டை அவளுக்கு கிட்டியதாய் அகம்மகிழ்ந்து ஆர்ப்பாட்டம் செய்தவளின் அன்பில், அழகில் சிறிது சிறிதாக தன்னை இழக்கத் தொடங்கியவனுக்கு அன்று ஆய்வகத்தில்போல் அவளை நெஞ்சுக்குள்ளே புதைத்து, தினம்தினம் அவள் ஓவியத்திற்கு இடும் முத்தத்தை ஓவியம்போல் செதுக்கிவைத்த பெண்ணின் நிலா நெற்றியிலே இன்று இட்டுவிடேன் என்று அவன் இதழ்களோ அவனோடு மல்லுக்கு நின்றது.
அவன் மனம்படும் பாட்டை அறியாது அப்படியே அவனோடு பேசிக்கொண்டே வந்தவள் அவர்கள் எப்பொழுதும் அமரும் கொன்றை மரத்தடிக்கு வந்துநிற்க
அப்பொழுதும் அவளின் பற்றிய கையைவிடாமல், “யுகீ…” என்று குரல் குழைந்து அழைத்தவன்,
“ரொம்ப ஹாப்பியா இருக்கியா மச்சி?” என்று கேட்டான்.
அவளும், “ஹாப்பியா??? அப்டியே பறக்கறபோல இருக்குடா. இன்னிக்கு நீ பண்ணது உண்மைலயே கிரேட்டா” என்று மீண்டும் கண்கள் மின்னக்கூறியவளின் விழியழகை ரசித்தவனோ,
“அப்போ மச்சானுக்கு அன்னிக்குபோல ஒரு க, பி, வை கொடுக்கலாம்ல” என்றான் சிறுவனின் சினுங்களோடு.
அதற்கு, “க, பி, வையா? அப்டின்னா? காபிவாங்கிக் கொடுக்க சொல்றியா?” என்று புருவம் நெறித்தவள், “ஆமா அதென்னடா புதுசா மச்சான்?” என்றும் முறைக்க…
“கபிவைனா கட்டிப்பிடி வைத்தியம். வசூல்ராஜா எம்பிபிஎஸ்ல கமல் சொல்வாரே சந்தோசம், கோபம், துக்கம் எந்த உணர்ச்சின்னாலும் அதுக்கு கட்டிப்பிடிவைத்தியம் பண்ணனுமாம். அந்தபடத்துல அவரும் டாக்டர் இங்க நாமலும் டாக்டர். அதனால அன்னிக்கு பல்லிக்கு பயந்து லேப்ல கட்டிக்கிட்டில்ல அதுமாறி இந்த ஹாப்பி மூமண்ட்ல ஒரு டைட் கக் கொடுடி மச்சானுக்கு” என்றும் நீள விளக்கி கிறக்கமாய்க் கேட்டவனின் பாவனையும் அவன் உதாரணம் காட்டியபடமும் அவன் கூற்றை நகைச்சுவையாய் எண்ணவைக்க
“ஹேய் எரும எப்போபாரு உனக்கு விளையாட்டுதானா?” என்று சட்டென்று சிரித்துவிட்டாள் சம்யுக்தா.
அத்தோடு நில்லாமல், “அப்றம் என்னசொன்ன நான் உன்ன மச்சான்னு கூப்பிடனுமா? ரொம்ப பேராசை தான்டா உனக்கு” என்று அவன் காதைப்பிடித்து திருகியவள், “மொதோ கேண்டின் வந்து சிக்கன் கட்லட்டும் கேப்பச்சினோவும் வாங்கி எனக்கு ட்ரீட் வைடா…” என்று அவனை கேண்டினை நோக்கி இழுத்துச்செல்ல…
தையலாளின் தத்தை மொழியிலே மேலும் மயங்கியவனும் தான் கேட்ட “க, பி, வை” யைக்கூட மறந்து ஹட்ச் விளம்பரத்தில் வரும் நாய்குட்டிபோல் அவள் பின்னோடே சென்றான்.
அவர்களின் நாட்கள் அப்படியே அழகினும் அழகாகக்கழிய, சம்யுவும் ப்ரித்திவும் பயிற்சி மருத்துவர் பணியின் இறுதிகட்டத்தை நெருங்க, அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனைகளும் அவர்களிடம் தோன்றி இருந்தது.
அன்று ஆசிரியர் பாராட்டிய அன்றே “நீ பீடியாட்ரிக்ஸ்ல மாஸ்டர் பண்ணியே ஆகனும்” என்று சம்யு ப்ரித்திவிடம் கண்டிப்பாகச்சொல்லி இருக்க…
அவனும், “நீ கைனோ பண்ணா நானும் பண்ணுறேன்” என்று விட்டான்.
இருவரும் மருத்துவப்பயிற்சி முடிந்ததும் மேற்படிப்பைத் தொடரலாம் என்று முடிவெடுத்திருக்க, அவர்கள் வீட்டிலோ நவீனுக்கும் சம்யுவிற்கும் திருமணம் செய்யலாம் என்ற பேச்சைத் துவங்கி இருந்தனர்.
அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் அனைவரையும் வீட்டில் இருக்கச் சொன்ன மலரோ ஜானுவிடமும் அலைபேசியில் தகவல் தெரிவித்து அவர்களையும் வீட்டிற்கு வரச்சொல்ல, காரணமின்றி அண்ணி அழைக்கமாட்டாள் என்று அறிந்த ஜானுவும் கணவன் பிள்ளைகளோடு வந்து சேர்ந்தாள்.
குடும்பத்தில் அனைவரும் ஒரே இடத்தில் குழுமிஇருக்க, மலர்விழி துவங்கியதின் பேரில் சம்யு நவீன் திருமணம் பற்றி பலவித உரையாடல்களின்பின் சம்யுவிடமும் கருத்துக்கேட்கப்பட்டது.
அதற்கு அவளும், “நான் கைனோ மாஸ்டர் படிக்கனும்மா” என்று சுரத்தே இல்லாமல் சொல்ல…
யுவாவும், “அத்த சொல்றதும் சரிதானேடா?” என்று மருமகளின் தலையைத் தடவவும், “ம்ம்ம்…” என்று அன்னிச்சையாக அசைந்தது சம்யுவின் தலை.
யுவா மலரின் கூற்று மற்றவர்களுக்கும் சரியாகவே இருக்க, நவீனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும் சேர்ந்து அடுத்து வந்த ஞாயிறில் குடும்ப ஜோசியரிடம் சென்று ஜாதகம் பார்த்துவிட்டு நாள்குறிக்கலாம் என்று முடிவெடுத்து அனைவரும் கலைய…
அதைக்கேட்டு உறைந்து நின்றது ப்ரித்திவ் மட்டுமல்ல அவனது யுகியும்தான்.