“போய்யா யோவ் !”என்று முனகிவிட ,”ஓய்! ஒதை கிடைக்கும் பொண்ணே” என்று மிரட்டியவன்,
“இரணியனைப் பார்க்கப் போறேன். ரெண்டு நாளில் வந்திடுவேன். குட்டீஸைப் பார்த்துக்கோ” என்றபடி குழந்தைகளுக்கு முத்தம் வைத்தபடி விடைபெற்றான்.
“சீக்கிரம் வந்திடுங்க, முடிஞ்சா கூடவே அழைச்சிட்டு வந்திடுங்க. “என்றாள் வேகமாக.
“வந்துட்டு தான் மத்த வேலைப் பார்ப்பான்.” என முணுமுணுத்தவன்,” சரி கிளம்புறேன். டேக் கேர்டா பொண்ணே… !”
‘ஏன் திடீர்’னு கிளம்புறாரு?’ என்ற யோசனையில் அமிழ்ந்தவள், குழந்தைகளை கவனித்தாள்.
மகிழன் மனதிலோ ,’எதுக்கு வரச் சொல்றான்னு தெரியலையே?’ என்று நினைத்தபடி கிளம்பினான்.
அவன் கிளம்பும் நேரத்தில் மரகதநாயகி வந்துவிட, அவரிடமும் இரணியனைப் பார்க்கச் செல்வதாக கூறி விட்டுச் செல்ல, அவர் தன் மனதில் இருந்த ஆசையை வெளிப்படுத்தினார்.
“எப்படியாவது மருமவனை சம்மதிக்க வைப்பா. அவனும் குடும்பம் குட்டினு இருந்தா நல்லா இருக்கும்ல” என்றார்.
“ஸ்வீட்டிக்கு சம்மதமானு கேட்டீங்களா?” என அடுத்து அவன் வினவ
“அவ என்ன சொல்லப் போறா?, அதெல்லாம் சம்மதிப்பா!” என்றார் பட்டென்று.
“அதுதான் தப்பு. ஸ்வீட்டிக்கு பிடிச்சா மட்டும் தான் மேற்கொண்டு பேசணும், இல்லாட்டி வேற மாப்பிள்ளை பார்க்கலாம்.” என்று கூறி விட்டு விடைபெற்றான்.
***********
சென்னை சென்று சேர்ந்தவனுக்கு இரணியன் மிகப் பெரிய அதிர்ச்சியை வைத்திருந்தான்.
“என்னடா இது?”என்று கேட்க
“எதுவும் கேட்காத, எதையும் சொல்ற மனநிலையில் நானில்லை. இவளைக் கூட்டிட்டுப் போ, சீக்கிரம் நான் ஊருக்கு வர்றேன்” என்று கைகாட்ட ,
மகிழன்,”என்னென்னவோ நினைச்சுட்டு வந்தேன்டா!” என்று சொல்ல
“மகி!” என்று அழைக்க,” ம்ம்ம் “என்று திரும்பினான் மகிழன்.
“ரொம்ப டென்ஷனா இருக்கு. ப்ளீஸ்” என்று இருகையையும் நீட்ட , மகிழன் புன்னகையுடன் வாவென்று அணைத்துக் கொண்டான்.
உடன் பிறக்கவில்லை, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளில்லை. பழக்கமும் வருடக்கணக்கில் இல்லை. ஆனாலும் ஏதோவொரு இனம்புரியாத இணக்கம் இருவருக்குமிடையில்.
“ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸா இருந்தேன்டா. ட்ரஹ்ஸ் எடுக்கத் தோணுச்சு அதான்” என்றபடி அணைப்பிலிருந்து விலகி,” டேக் கேர் ஆஃப் ஹர்!” என்று கைகாட்டினான்.
“கண்டிப்பா பார்த்துக்கிறேன். நீ சீக்கிரம் வர்றேன்னு சொன்னா மட்டும் “என நிபந்தனை விதிக்க
இரணியன் புன்னகைத்தபடி,” ஸ்யூரா வந்திடுவேன். தாலி கட்டிருக்கேனே !”என்றான் சூசகமாக.
அவன் கைகாட்டிய இடத்தில் பரிதாபமாக அமர்ந்திருந்தாள் இயலருவி.
இரணியனின் சிந்தனை இரண்டு நாட்கள் முன்பு நடந்த நிகழ்விற்குச் சென்றது.
*********
இரணியன் கோபத்தில் முகம் சிவக்க நின்றிருக்க, எதிரே ராஜி பரிதாபமாக நின்றிருந்தாள்.
“சார், அவ இப்படி செய்வானு நினைக்கலை சார் !”என்று சொல்ல
“உன் சிஸ்டர் ஸ்ஸப்பா தாங்கலை. சொல்லிப் புரிய வை. இல்ல எனக்கு வர்ற கோபத்திற்கு ஏதாவது ஏடாகூடமா பண்ணிட்டா, கேட்கக் கூடாது” என்று மிரட்டலாக சொல்ல
“நான் கண்டிச்சு வைக்கிறேன் சார் !”என்று கிளம்பியவள் இரண்டு நாட்களில் மருத்துவமனையில் சுக்கலாய் கிழிந்த காகிதமாய் கிடப்பாள் என்று கிஞ்சித்தும் எண்ணவில்லை அவன்.
மருத்துவமனைக்குச் சென்று விட்டான் மனம் கேளாமல். அதுமட்டும் காரணமில்லை. இயலருவியின் அழுகையில் அடித்துப் பிடித்து மருத்துவமனைக்கு ஓடி வந்திருந்தாலும், இரணியன் ராஜியை பார்க்கும் போது அவனுக்கும் சற்று மன கலக்கமாகத்தான் இருந்தது.
‘நன்றாக தானே இருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்பு’ என்ற எண்ணியவன்,” எப்படி ?”என்று தயக்கமாய் கேட்க
“வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு கிளம்புனா ,ஒரு மணி நேரம் கழிச்சு ஃபோன் வந்தது” என்று அழுகையின் ஊடே தவிப்பாக உரைத்தவள்,” யார் கிட்ட சொல்றதுன்னு தெரியல, அதனால தான் உங்களுக்கு கூப்பிட்டேன் “என்றாள்.
“ஓகே ரிலாக்ஸ் ரிலாக்ஸ் !எதுவும் ஃபீல் பண்ணாத சரியாயிடுவாங்க சரியா ?!”என்றவன்,” யூ ஆர் எ டாக்டர் கேர்ள், உனக்கு தெரியும் தானே இந்த சிச்சுவேஷன் ஹேண்டில் பண்ண ?”என்றான் தலையை வருடிவிட்டபடி
அழுகையை நிறுத்தியவளோ,”அக்கா பிழைக்க மாட்டாள், அது கண்டிப்பா தெரியும், ஆனா உங்க கிட்ட ஒன்னு கேட்க தோணுச்சு ப்ளீஸ் அவளுக்காக செய்வீங்களா?”என்றாள் இறைஞ்சதலாக
‘என்ன கேட்க போகிறாளோ?’ என்று அவன் அவள் முகத்தை பார்க்க ,
“என் அக்கா இந்த மாதிரி சாக வேண்டாம் “என்று சொல்ல,
” நீ என்ன சொல்ல வர்ற?,எனக்கு புரியல.” என்றான் குழப்பமாக
“என் அக்காவை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்று பட்டென்று கேட்டு விட்டாள்.
” வாட்?!”என்று அதிர்ந்தவன்,” என்ன உளர்ற நீ ? அவ சாகக் கிடக்கிறா, ஏன் இந்த நேரத்தில், ப்ப்ச் என்னப் பேச்சு பேசுற நீ? “என்று கடிந்து கொண்டான்.
அருவியோ அவன் கைகளைப் பிடித்துக் கொண்டவள்,” நிஜமா தான் கேட்கிறேன், என் அக்கா இப்படி சாக வேண்டாம், ஐ மீன் கன்னிப் பொண்ணா, அவளுக்கு காரியத்தை எங்க அப்பா பண்ணக்கூடாது ,நீங்களே புருஷனா இருந்து பண்ணிடுங்க அவ உடம்பு தொடுற உரிமையைக் கூட அந்த ஆளுக்கு தரக்கூடாது” என்றாள் அழுத்தமாக
” இதை தாலி கட்டாமலும் நான் செய்யலாம் இல்லையா?” என்று அவன் மறுக்க
” இல்ல கண்டிப்பா எங்க சொந்தம் எல்லாம் நீங்க யாருன்னு கேட்பாங்க? உங்களை செய்ய விட மாட்டாங்க, ஆம்பள பிள்ளையா இருந்தா நானே இதை செஞ்சிடுவேன், ஆனா பொம்பள புள்ளையா பொறந்துட்டேனே, என்ன தான் முற்போக்குவாதியா பேசினாலும் சில காரியங்களை இந்த சமூகம் செய்ய விடாதே !, இந்த விஷயத்தை மட்டும் செஞ்சு கொடுத்தீங்கன்னா… நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். “என்றாள் சட்டென்று
“ஏய்! பைத்தியம் மாதிரி உளறாதே, நீ டாக்டரானே எனக்கு சந்தேகமா இருக்கு, சின்ன புள்ளத்தனமா பேசுற , இல்ல நீ முதல்ல போய் அவளுக்கு ட்ரீட்மென்ட் பார்க்கிற வேலையை பாரு” என்றான் அதட்டலாக
“அந்த கட்டத்தை எல்லாம் அக்கா எப்பவோ தாண்டிட்டா , காப்பாற்ற மாதிரி ஒரு சூழ்நிலை இருந்திருந்தால் நான் ஏன் உங்க கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கப் போறேன்.? இந்நேரம் அவள் உயிரை காப்பாற்ற வேலையில் இறங்கி இருப்பேன், உங்கள் கால்ல வேணுன்னா நான் விழட்டுமா?” என்று அவன் காலை பிடிக்கப் போக,
“இவ்வளவு பிடிவாதம் எதற்கு இருக்கிறாய் ?”என்று கேட்டு விட்டான்.
“இனஃப் ! போதும் விடுங்க சார், நீங்க எதுவும் செய்ய வேண்டாம். நான் எங்க அக்காவை எப்படியோ அடக்கம் பண்ணிக்கிறேன், அந்த ஆள் கையால தான் கொல்லி வாங்கணும்’னு எங்க அக்காவுக்கு தலையெழுத்து இருந்தா யார் என்ன செய்ய முடியும் ?”என்று விட்டாள் வேகமாக
” உன்னை எந்த லிஸ்ட்ல சேர்க்கறதுன்னு எனக்கு புரியல, இப்ப என்ன அவளுக்கு தாலி கட்டணும் ,அவளோட கணவனா நான் இறுதி காரியம் செய்யணும் அவ்வளவுதானே?!” என்று இரணியன் கேட்கவும், ஆமென்று தலையாட்டினாள்.
“சரி செய்கிறேன் ,ஒன்னும் பிரச்சனை இல்ல,இப்ப நான் உள்ள பார்க்க போகலாமா?” என்று கேட்டதும் வேகமாக தலையாட்டியவள், ஐசியூவின் உள்ளே அழைத்துச் செல்ல, தேவையான ஏற்பாட்டை செய்து பின்னர் அழைத்துச் சென்றாள்.
ஊதா துணிக்குள் சுருட்டி வைக்கப்பட்ட காகிதத்தை போல் கிடந்தாள் ராஜி.
அவளை எப்போதும் சர்வ அலங்கார பூஜிதையாக பார்த்த இரணியனுக்கு, இந்தக் கோலம் சற்று மன வருத்தத்தை அளித்தது தான்.
” ராஜி !” என்றும் மெல்ல அழைக்கவும்,
இயலருவி,” அவள் நிதானத்தில் இல்லை.உங்கள் குரல் கூட கேக்குதோ என்னவோ தெரியல” என்றாள்.
” இட்ஸ் ஓகே !”என்றவன் ,”கண் விழிக்க வாய்ப்பு இருக்கா?” என்று கேட்டான்.
” வாய்ப்பு ரொம்ப ரொம்பக் குறைவு “என்றவளும் கண்கள் கலங்க ,தன் அழுகை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
” இப்ப எதுக்கு அழற, இதுதான் நிதர்சனம் அப்படின்னும்போது ஏத்துக்க தான் வேணும், முடிஞ்சா அவளை வலி இல்லாம அனுப்பி வைக்கப் பாரு” என்றான்.
“எவ்வளவு ஈஸியா சொல்லிட்டீங்க , கூடவே இருந்தவளுக்கு தானே தெரியும் வேதனையும், வலியும்” என்றாள் கோபமாக.
இரணியனோ,” இடியட் திங்க் பிராக்டிகல் , உன் அக்கா உயிரோட வருவா அப்படின்னு தெரிஞ்சா கண்டிப்பா எந்த வழியிலாவது அவளை காப்பாற்ற முயற்சி செய்யலாம், ஆனா பிழைக்கவே மாட்டா எனும்போது அவளை வலி இல்லாம அனுப்பி வைக்கிறது தான் சிறந்தது, சாகவும் முடியாம வாழவும் முடியாம ,வலியையும் அனுபவிச்சிட்டு இப்படியே இருந்தா அது உனக்கு நல்லா இருக்கா ?”என்றவன்
” ஒரு டாக்டரா திங்க் பண்ணு.” என்று சொல்லி விட்டான் .
“இப்போ டாக்டரா யோசிக்கிறதை விட அவளோட தங்கச்சி அதானே யோசிக்க வருது, நான் என்ன செய்ய ?” என்று அழுகையை அடக்க முயற்சித்தாள்.
அதற்குள் ராஜியின் உடலில் அசைவு தெரியவே, இரணியன் பரபரத்தான்,”ஹே அவளுக்கு கான்சியஸ் வருது அசையிறா” என்று சொல்லவும்,
” நீங்க வெளியே இருங்க நான் பார்க்கிறேன்” என்று பரபரத்தவள், அவனை வெளியே அனுப்பி விட்டு செவிலியர்களையும், அழைத்து மற்ற டாக்டரையும் அழைத்து பரிசோதிக்கும் படி கேட்டுக் கொள்ள ,அவர்களும் உடனடியாக செயல்பட்டனர்.
“இயல், உன் அக்கா கிட்ட ஏதாவது சொல்லனும்னா சொல்லு. இல்ல பேசணும்னா பேசிடு. இதுக்கு மேல ம்ஹூம் இன்றைக்குள் முடிந்து விடும்” என மருத்துவர் கைவிரிக்க
இயலருவி இரணியனை பாவமாகப் பார்த்தாள்.
அவளின் பார்வை புரிந்தவனாக ,”ஓகே நீ சொல்றது நான் செய்கிறேன்” என்று வாக்களித்து விட்டான் .
எத்தனையோ பெண்களை கடந்த போதிலும், ஏனோ இவளின் அழுகையை கடக்க இயலவில்லை அவனால் ,
இயலோ, தன் அருகில் இருந்த செவிலியரை அழைத்தவள் ,காதில் ஏதோ முணுமுணுக்க, அவரும் சரி என்று தலையாட்டி விட்டு ஓட்டமும் நடையுமாக வெளியேறினார்.
சற்று நேரத்தில் மீண்டும் வந்தவரோ, கையில் மஞ்சள் கிழங்கில் கட்டப்பட்ட தாலியும், குங்குமமும் கொண்டுவர இரணியனுக்கு புரிந்து போனது நிச்சயம் இயலருவி கூறியதை செய்து தான் ஆக வேண்டும் என்று
இதை அவனால் உண்மையை கூறி மறுக்கவும் இயலும், ஆனால் சாவின் விளிம்பில் இருப்பவளை விபச்சாரி என்று அவளின் தங்கையிடம் உண்மையை கூறி அவமானப்படுத்த அவன் விரும்பவில்லை .
எத்தனையோ முறை தன் ஆவலடக்கிய பெண்’ என்ற வகையில் அவளுக்கு செய்யும் ஒரு பிரதி உபகாரமாகவே இதை நினைத்தான் . உள்ளே சென்று மறு நொடி ராஜி விழி விரித்து இருவரையும் பார்க்க ,அக்காவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
இயலருவியிடம் மாஸ்கை அகற்றும்படி ராஜி பணித்திட, மெதுவாக இரணியனை கைகாட்டி சைகையில் ,ஏன் வாவென்று அழைத்தாள்.
” உன்னை பார்க்க வந்திருக்கிறார்” என்று அருவி கூறவும் ,லேசான புன்னகை ராஜியிடத்தில்.
விழிகளின் ஓரம் கண்ணீர் கசிந்து சென்றது.
சங்கடமாய் உணர்ந்த இரணியனோ, அவளருகில் சென்று தன்னைப் போல கண்ணீரை துடைத்து விட , அருவியை பார்த்து இன்னொரு கையை அசைத்தவள் ,”இல்லை !”என்று சைகை காட்ட அழுது விட்டிருந்தாள் பெண்ணவள்.
“அருவி அருவி”என்று ஏதோ சொல்ல முற்பட,” ஐ வில் டேக் கேர் ஆஃப் ஹர்” என்றவன் ,
மீண்டுமாய் ,”நான் பார்த்துக்கிறேன்” என்று உறுதி கொடுக்க, கண்களை மூடி திறந்தாள் ராஜி.
அருவியை பக்கமழைக்க அவளருகில் சென்றதும் ஏதேதோ முணுமுணுத்தாள்.
அருவி பின்னர் தாலியை இரணியன் கையில் கொடுக்க, அவனும் தயக்கமாக இருந்தாலும் வாங்கி விட்டான்.
என்னவென்று உணர்ந்த ராஜியோ,’ வேண்டாம் ‘என்று தலையை வேகமாக அசைத்து மறுக்க ,
இரணியன் அருவியை பார்த்தான்.
“அக்கா எனக்காக!” என்று கெஞ்சிய தங்கையை கையைப் பிடித்துக் கொண்டவள் , மீண்டும் வேண்டாம் என்றே தலையை அசைத்தாள் இங்கும் அங்குமாக
இரணியன் அதற்குள் அவள் அருகில் சென்றவன், ராஜியின் கட்டுப்போட்ட அந்த நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டு , மாங்கல்யத்தையும் அணிவித்து விட்டான்.
ராஜி அதிர்ந்து கண்ணீரை உகுக்க, இரணியன் முதல் முறையாக அவள் நெற்றியில் இதழ் பதிக்க , இயலருவிக்கு அத்தனை சந்தோஷம்.
ராஜியோ தன் மாங்கல்யத்தை பிடித்துக் காட்டி ,”இது வேண்டாம்!” என்று மறுத்தவள் அழுகையும் தொடர, இரணியன் மனம் பொறுக்காமல் வெளியேற முற்பட ,அதற்கும் தடுத்தால் இயலருவி ,”சார் ப்ளீஸ்!” என்று மானிட்டரை கை காட்ட ,அது இதயத்துடிப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து காட்டிக் கொண்டிருந்தது.
கனத்த நெஞ்சத்துடன் அங்கேயே நின்றிருந்தவன், ராஜியின் உயிர் பிரிதலை தன் கண் கொண்டு பார்த்திருந்தான்.
வலது கையை இறுக்கமாக பிடித்திருந்தவன் நன்றாகவே உணர்ந்தான் அதன் தளர்வை ஒரு புறம் இரணியன், கையும் மறுபுறம் அருவியின் கையையும் பிடித்திருந்த ராஜி இரண்டையும் ஒன்றாய் கோர்த்தபடி கண்களை மூடினாள்.