எல்லாவற்றையும் பார்த்து பேசிய அன்றே பகிர்ந்துவிடுவதா?எ துவும் தன்னிடமே இவன் இத்தனை எல்லை வைக்கையில் என்று வார்த்தைகளை விழுங்கிக்கொண்டாள்.
“நிலா…” என கௌரவ் அழைக்கவும்,
“ஹ்ம்ம், முக்கியமான விஷயம். நான் ஒரு ரைடர். தெரியுமா?…” என கேட்க, கண்ணமர்த்தி தலையசைத்தான்.
“எப்படியும் வருஷத்துக்கு ஒருதடவையாவது நான் லாங் ட்ரைவ் போவேன்…”
“ஹிமாலையன் ரைடர்…” என்றவன்,
“யூர் விஷ்…” என்று சொல்லி நகர,
“நெக்ஸ்ட் வீக் போகனும்…” என்றதும் மீண்டும் அவளை பார்த்தான்.
“கல்யாணத்துக்கு அப்பறமும்…” என கூறி அவன் முகம் பார்க்க, ஒரு பெருமூச்சுடன் திரும்பி ஹாலில் இருந்தவர்களை எட்டி பார்த்தான் கௌரவ்.
இன்னும் தீவிரமாய் காலெண்டரை பார்த்துக்கொண்டு என்னவோ பேசிக்கொண்டிருந்தனர்.
போட்டிருந்த திரை அவர்கள் இருவரையும் மறைத்திருக்க அவர்களை பார்த்த வேகத்தோடு விழிகளை திருப்பியவன் பார்வையின் கூர்மையில் என்ன கூற போகிறானோ என எதிர்பார்ப்புடன் நின்றாள் வெண்ணிலா.
“லுக்…” என்று சொல்லியதோடு தானும் நகர்ந்து அவளையும் ஒற்றை விரலால் தோள் தொட்டு நகர்த்தி நெருங்கி நின்றவன்,
“நான் ஒருதடவை தான் சொல்லுவேன். காதுல விழலை?…” என கிசுகிசுத்த குரலில் அழுத்தமாக கேட்க வெண்ணிலா ஸ்தம்பித்து பார்த்தாள் அவனை.
அத்தனை நெருக்கம். மூச்சடைத்தது. அதுவும் அவனின் அந்த பார்வை சுண்டியிழுக்க, விழியகற்றாது அவனையே பார்த்திருந்தாள்.
“யூர் விஷ், சொன்னேனே, கேட்கலை?…” என்று இன்னும் கண்டிப்புடன் கேட்டு,
“ஆன்ஸர் மீ…” என்றான்.
என்ன பதில் சொல்ல? வாயடைத்து, பேச்சற்று போய் நின்றவளிடம் அவன் பதிலை எதிர்பார்த்திருக்க, அந்த தன்மை கௌரவ்வை ஈர்க்க, மெலிதாய் அவன் இதழ்கள் வளைந்தது.
அவளின் முகத்திலிருந்து விலகி நிமிர்ந்து நின்றவன் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒன்றை எடுத்து அவளின் கரங்களில் திணித்தான்.
“டென்ஷனானாலும் ஆசை. டேக் இட்…” என்று சொல்லி தலையசைப்புடன் அங்கிருந்து செல்லவும் தான் நிலாவினால் தெளியவே முடிந்தது.
ஒருநொடி என்னவோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டுவிட்டதை போல் அல்லவா அவன் அவளை ஸ்தம்பிக்க செய்துவிட்டான்.
லேசாய் கண்களை மூட, மூடிய விழிகளுக்குள் அவனின் நெருக்கமான முகம்.
எப்போதும் உணர்வை காண்பிக்காத அந்த விழிகள் அந்தநொடி உயிரோட்டம் கொண்டிருக்க, இப்போதும் அதன் சிலிர்ப்பை அவளால் உணரமுடிந்தது.
நின்ற இடம் விட்டு இன்னும் அசையாதிருந்தவள் அவன் தன் கரத்தினுள் திணித்து சென்ற சாக்லேட்டை பார்த்தாள்.
இதழ்களில் குறுநகை மின்ன, உள்ளமும் குறுகுறுத்தது. ஆசையை ஆசையாய் பார்த்தபடி நிற்க, டொக் டொக் என்னும் சபதம்.
நிமிர்ந்து பார்க்க கௌரவ் தான் நின்றிருந்தான் நிலாவை பார்த்துக்கொண்டே.
என்னவென்று கேட்கும் முன், சுட்டுவிரலால் அவளின் அறையை காண்பித்தவன், அறையை அடைத்து வை என்பதை போல சைகையில் காண்பித்துவிட்டு சென்றுவிட, ‘என்னடா இது?’ என்று சென்று பார்த்தாள்.
பார்த்த பின்னர் தான் தெரிந்தது அதில் இருந்தவற்றை கண்டுவிட்டான் என்று.
“போச்சு…” என்று நெற்றியில் அறைந்துகொண்டவள் கதவை அடைத்துவிட்டு தானும் உள்ளே அமர்ந்துவிட்டாள்.
ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். அதற்குள் சுனந்தா வந்துவிட கதவை திறந்து சென்றாள் வெண்ணிலா.
“நிலா அவங்க கிளம்பறாங்க. டைம் ஆகிடுச்சாம். உன்கிட்ட சொல்லிட்டு போகனும்ன்னு கூப்பிடறாங்க…”
“ம்ஹூம். கிளம்பட்டும். நான் வரலை…”
“என்னாச்சு நிலா? என்ன சொன்னார்? நான் வந்துட்டு போனதுல எதுவும் கோவமா?…”
“ப்ச், என்ன உளர்ற நீ?…” என்றவள்,
“சரி வா…” என்று சென்றாள்.
நிலா வரவேற்பறைக்கு செல்ல அனைவருமே எழுந்து நின்றிருந்தனர். கௌசல்யாவின் கையை பிடித்தபடி சாவித்ரி பேசிக்கொண்டிருக்க, சாருலதா வெளியே சென்று நின்றுவிட்டாள்.
“நிலா வா…” என வளர்மதி அழைக்கவும் அனைவரும் அவளை திரும்பி பார்த்தனர்.
கௌரவ்வும் பார்க்க, எத்தனை முயன்றும் குப்பென்று முகத்தில் ரத்தவோட்டம் பாயும் உணர்வை அடக்கமுடியவில்லை.
சிவந்துவிட்ட வதனத்துடன் மெல்லிய சிரிப்புடன் கௌசல்யாவின் அருகே வர, மற்றவர்கள் பார்வைக்கு அவனின் பார்வை சாதாரணம் தான்.
ஆனால் வெண்ணிலாவினால் கௌரவ்வின் பார்வையை அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை.
‘எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன்றது இதுக்கும் பொருந்தும் போல’ என உள்ளுக்குள் புலம்பிக்கொண்டே சங்கடத்துடன் நின்றாள் அவள்.
“பை சொல்லு நிலா…” என்ற சுனந்தா,
“இனிமே நம்மளை யாரும் ட்ராவல்ஸ்ல கேட்க முடியாது…” என்று சிரித்துக்கொண்டே திரும்ப கௌரவ் முறைத்தான்.
“நீங்க சாதாரணமா தான பார்க்கறீங்க?…” என்று சந்தேகம் வேறு. சுனந்தா அவனிடம் கேட்டும்விட,
“என்ன கௌரவ்?…” என்றார் கௌசல்யா.
சுனந்தாவிடம் இல்லை என்பதனை போல தலையசைத்துவிட்டு கௌசல்யா பார்க்கையில் அமைதியாய் அவன் பார்க்க,
“இப்ப தான் நந்தா சொன்னா. நம்ம ட்ராவல்ஸ்ல நடந்த விஷயத்தை…” என்றும் கௌசல்யா கூற,
“ஹைய்யய்யோ, நான் கம்ப்ளைன்ட் எல்லாம் பண்ணலை பாஸ். சும்மா டைம் பாஸ். போய்ருச்சு…” என்று அவனின் பார்வையில் அரண்டவள் தானாக கூறிவிட்டு,
“என்னடி நிலா சொல்லேன்?…” என அவளையும் கை பிடித்து இழுத்தாள்.
“எந்த ட்ராவல்ஸா இருந்தாலும் அப்படித்தான் இருக்கும். வர்ற பேசஞ்சர்ஸ் தான் கரெக்ட்டா இருக்கனும்….” என்று சொல்லிவிட்டு, மற்றவர்களிடம் தலையசைத்துவிட்டு கிளம்பினான் கௌரவ்.
“போய்ட்டு வர்றேன்னு கூட சொல்லலை இந்த ஐகான்?…” என்று நிலாவை பார்க்க,
“கிளம்பிட்டாங்களா?…” என்றவளுக்கு என்னவோ இன்னுமே அங்கே அவனிருப்பதை போன்றொரு பிரம்மை.
மௌனமாய் உள்ளே வர கௌரவ்வின் வாசனை திரவியத்தின் மணம் அவளை சுற்றிக்கொண்டிருந்தது.
உள்ளங்கை சூட்டில் அவன் தந்துவிட்டு சென்ற சாக்லேட் உருக துவங்க, வெண்ணிலாவும் கரைய ஆரம்பித்தாள்.