பொன்னச்சன், நசீர், பிரதாபன் மூவரும் வீடு வந்து சேர மதியம் மேல் ஆனது. மின்மினி உணவு சமைத்து வைத்துக் காத்திருக்க, வினயனை உண்ண சொல்ல அவனும் காலை உணவை தாமதமாக உண்டதால் வேண்டாம் என்றான்.
பிரதாபன் வீடு வந்ததும் உள்ளே சென்றவன் வீட்டில் மாட்டியிருக்கும் பகவதி அம்மனின் படம் முன் நின்றான். உள்ளுக்குள் அத்தனை உணர்வு ததும்பல், அவர்கள் தரவாட்டினை மீட்டது மகிழ்ச்சியானாலும் இழந்ததை மீண்டும் உரியதாக்கும்போது மகிழ்ச்சி என்ற உணர்வு கிட்டாது, ஒரு நிறைவும் கலவையான உணர்வுமே மிஞ்சும். பிரதாபன்
‘அம்மே நாராயணா’ என்று கண்மூடி நின்றான். மின்மினி ஏட்டன் வரவும் விளக்கேற்றினாள். நசீர் வினயன் செய்த வேலையை வெளியே மேற்பார்வையிட, உள்ளே குடும்பத்தினர் மட்டுமே.
பிரதாபன் பத்திரத்தை பொன்னச்சனிடம் நீட்டி, “இந்தாங்க அச்சச்சா, நம்ம தரவாடு இனி நமக்கு மட்டும்தான்” என்றான்.
பொன்னச்சனோ அதனை வாங்க மறுத்தார்.
“இல்ல பிரதாபா, உனக்கு இதை நான் கொடுத்திருக்கணும். என்னோட முட்டாள்த்தனம் உன்னை இத்தன வருசம் கஷ்டப்படுத்திடுச்சு, நீதான் அதுக்கு எப்பவும் சொந்தக்காரன். நல்ல நாள் பார்த்து சொல்றேன், தரவாட்டை உன் பெயர்ல ரெஜிஸ்டர் பண்ணிடலாம். நான் இதை சந்தோஷமாத்தான் சொல்றேன், நீயே அதை பத்திரமா வச்சிக்க. உனக்கும் மினிமோளுக்கும் ஒரு கல்யாணம் பண்ணிட்டா நான் சந்தோஷமா போய்டுவேன்” என்ற அச்சச்சன் பிரதாபனின் தலையில் ஆதுரமாக கை வைத்து ஆசிர்வதித்துத் தன்னறைக்குள் புகுந்தார்.
பிரதாபனுக்கு அவன் திருமணம் பற்றியெல்லாம் யோசனையில்லை. மின்மினிக்கு நல்ல வரனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே, அந்த வேலையும் ஒரு பக்கம் நடந்தது.
மின்மினி எல்லாருக்கும் மதிய உணவு பரிமாற, பிரதாபன் தனியாக நின்ற சமயத்தில் அவனிடம் பிறந்த நாளன்று தோழிகளோடு சுற்ற அனுமதி கேட்க, பிரதாபன் அனுமதி கொடுத்தான்.
*********
அன்று மின்மினியின் பிறந்த நாள். வழக்கம்போல் வைகறையில் எழுந்தாள் பெண். வினயச்சந்திரனும் அவனின் ஆஸ்தான சின்னப் பாறையில் உட்கார்ந்திருந்தான். மெல்லொளிப் பொழுதில் மின்னிக்கொண்டிருந்தாள் மின்மினி. வினயச்சந்திரன் பாறையில் உட்கார்ந்து உறங்க, அவனை அவ்வப்போது பார்ப்பதும் பால் கறப்பதில் கவனமாகவும் இருந்தாள்.
மின்மினியின் விழிகள் அந்த மெல்லிய வெளிச்சத்தில் தன்னைக் காண்பதும், பின் பால் கறப்பதில் கவனமாக இருப்பதை கவனித்தான் வினயன். மின்மினிக்கு இவன் தூங்கினால் எதையும் நினைக்க மாட்டானா என்று சுணக்கமாக இருந்தது. மின்மினி பாலைக் கறந்து முடித்து அதற்கான வாளியில் வைத்துவிட்டு, வினயன் அருகே போய் அவன் உறங்குகிறானா என்று பார்த்தாள்.
“என் மின்மினிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று இன்னும் பாக்கெட்டினுள் வைத்திருந்த பூக்களைத் தூவ, பவிழமல்லி பூத்தூவலோடு பிறந்த நாள் வாழ்த்து. பிரியத்தின் பரிமளத்தோடு பவளமல்லியின் பரிமளமும் பாவையை ஒரு நிமிடம் கிறங்கடித்தது. மழலையாய் மனதில் துள்ளல்.
“நன்னி” என்றவளுக்குக் குரலடைத்தது.
“ஹேய் என்ன?” என்று வினயன் நெருங்க, அதற்குள் நசீரின் குரலின் கேட்டு விலகி நின்றவன் பாலை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.
அவன் நகர்ந்தாலும் மின்மினி மேல் விழுந்திருந்த பவிழமல்லி பூவினை கையில் எடுத்தாள். பூவினைப் பார்க்கவும் புன்னகை உதயமானது.
பிரதாபன் காலையில் ஐந்து மணிக்கு வழக்கம்போல் எழுந்தவன் தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு அம்பலம் போய் வந்தான். அவன் வீடு வந்ததும் மின்மினியை அழைத்தான்.
வாசலில் நின்ற வினயன், “அட! மினிக்குப் பர்த்டேவா?” என்று ஆச்சரியமாகக் கேட்டவன்
“ஹாப்பி பர்த்டே மின்மினி” என்றவன் கண்சிமிட்ட, நல்லவேளை பிரதாபன் பின்னே வினயன் நின்றதால் அவன் பார்வையில் இருந்து தப்பினான்.
“சேட்டா! எனக்கு ஊர்ல ஒரு வேலையிருக்கு, நான் போயிட்டு ராத்திரி வரேன்” என்று வினயன் சொல்ல, பிரதாபனும் சரியென்றான்.
மின்மினி தன்னை ஆலப்புழாவில் பிரதாபனை விட சொல்ல, அவனும் தங்கையை அங்கே விட்டு ஊர் திரும்பினான். வினயச்சந்திரன் மின்மினிக்கு அழைத்து ரெயில் நிலையம் அருகே வர சொல்ல, மின்மினி ஆட்டோ பிடித்து அங்கு சென்றாள். அங்கே காரில் காத்திருந்தான் வினயச்சந்திரன்.
“அடடே! மின்மினி சுந்தரியே…” என்றவன் வார்த்தைகளில் அப்பட்டமான களவாடல். பாசி பச்சை நிற சல்வாரில் கண்களில் பசுமையாக விழுந்தாள் மின்மினி.
“போதும், லேட்டாகாம வீட்டுக்குப் போகணும்” என்று மின்மினி ஏறியதும் சொல்ல,
“ஷ்! மிண்டாதிரு மின்மினி. இன்னிக்கு வினய் டே, வினயனோட உன் டே. ஈவினிங் வரைக்கும் டைமிருக்குல்ல, ஆறு மணிக்கு உன்னை விட்டுடுறேன்” என்றவன் அரை மணி நேரத்தில் அவளோடு அம்பலப்புழா ஆலயத்தில் இருந்தான்.
“அப்படியா? அப்போ நம்ம குழந்தைக்கும் இங்கயே சோறுண்ணு நடத்திடலாம்” என்று வினயன் தீவிரமாக சொல்ல
“அச்சோடா, போடா” என்று மின்மினி முகம் திருப்பிட,
“மின்மினியே! இதென்ன புதுசா கம்மல்?” என்று கேட்க
“ஏட்டன் கிப்ட்” என்றாள் சந்தோஷமாக.
“பார்டா, தங்கச்சிக்குக் காஸ்ட்லியா கோல்ட்லாம் தராரா உன் ஏட்டன். எனக்கும் இருக்கானே ஒருத்தன், தங்கமான தம்பிக்கு ஒரு தங்கசெயின் போட்டிருக்கானா?” என்று புலம்பினான்.
அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் அம்பலம் பதினைந்தாம் நூற்றாண்டில் செம்பகஸேரியின் மகாராஜாவான பூராடம் திருநாள் தேவ நாராயணானால் கட்டப்பட்டது. ‘சுட்டம்பலம்’ எனப்படும் கட்டிட முறையில் கட்டப்பட்ட ஆலயம். பூராடம் திரு நாள் தம்புரானும் வில்வமங்களம் ஸ்வாமியாரும் படகில் பயணம் செய்துகொண்டிருந்தனர், அச்சமயத்தில் குழலிசை வில்வமங்களம் ஸ்வாமியின் செவியை வந்தடைந்தது. வில்வமங்களம் ஸ்வாமிகள் அதனை ஸ்ரீ கிருஷ்ணரின் குழலோசை என்று சொல்ல, அதன்படி தம்புரானால் அங்கே ஆலயம் எழுப்பப்பட்டது.
ஸ்ரீ கிருஷ்ணரின் சிலையைப் பிரதிஷ்டை செய்யும்போது அதில் பிழையிருப்பதை உணர, வில்வமங்களம் ஸ்வாமிகள் தெக்கும்கூர் அரசவைச் சேர்ந்த ‘குறிச்சி’ என்ற ஊரிலிருக்கும் பார்த்தசாரதி பெருமானின் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ய சொன்னார். அவ்வூரோடு இவர்களுக்கு நல்லுறவு இல்லையென்றாலும் அவர்களும் சிலையைச் சுமந்து சென்ற படகினை தடுக்கவில்லை. அதனை போற்றும் வகையில் வருடாவருடம் மிதுன மாதத்தில் வரும் ‘மூலம்’ திரு நாளில் சம்பகுளம் வள்ளம்களி நடைபெறுகிறது.
பேசியபடி இருவரும் கோவிலுக்குள் நடந்தனர். மின்மினிக்கு முதல்முறை வினயச்சந்திரனோடு வந்திருக்கிறோம் என்ற படபடப்பு, அதே நேரம் அந்தவுணர்வில் திளைத்துமிருந்தாள். வினயனுக்குப் பரவசம் மட்டுமே, படபடப்பெல்லாமில்லை. மின்மினியோடு அவன் தனித்திருக்கும் முதல்பொழுது. மறக்க முடியாத, வாழ்நாள் முழுமைக்கும் நினைத்து களிக்கும் பிறந்த நாளாக அவளுக்கு இருக்க வேண்டும் என்பதே அவனின் அன்றைய ஆவல்.
தேங்காய் வாங்கி வேண்டிகொண்டு அதற்கான இடத்தில் உடைத்தவன், மின்மினியோடு சேர்ந்து அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணனை வணங்கினான். மின்மினி விளக்கு வாங்கி ஏற்ற, மின்னிய அத்தனை விளக்குகளையும் விட, அவனோடு இருப்பதால் மின்னிய மின்மினியே அவனை அதிகம் கவர்ந்தாள். எப்போதும் அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சங்கல்பம் எடுத்தான்.
பின் இருவரும் மஞ்சாடி குறுவை(ஆனை குண்டுமணி விதைகள்) வேண்டிகொண்டு அதற்கான இடத்தில் போட்டனர். குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணனை காண சென்ற மூதாட்டி ஒருவர் காணிக்கையாக மஞ்சாடி குறு எனப்படும் ஆனை குண்டுமணி விதைகளை எடுத்துச் சென்றுள்ளார், அதே நேரம் அரசனும் அங்கு வர மூதாட்டியைக் காவலர்கள் விரட்டியிருக்க, வானில் இருந்த கேட்ட அசரீரி காரணமாக மீண்டும் அவரை குருவாயூர் அம்பலத்துக்குள் அழைத்துள்ளனர். அவர் கிருஷ்ணனுக்குப் பிரியமாக கொண்டு வந்த மஞ்சாடி குறுவை கொண்டு வேண்டினால், நினைத்தவை நடக்கும் என்பது அங்குள்ள நம்பிக்கை. அதன்படி கேரளம் முழுவதும் பெரும்பான்மையான கிருஷ்ண அம்பலத்தில் மஞ்சாடி குறுவினை தூவி வேண்டிகொள்வது வழக்கமானது.
அடர் சிவப்பு நிறத்திலிருந்த விதைகளைத் தூவிய மின்மினி காதல் கை கூட வேண்டிட, வினயன் மின்மினி எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வேண்டினான். விதைகளைத் தூவியவர்களின் பார்வைகள் புன்னகையோடு சந்தித்தன. எல்லா சன்னிதியிலும் வணங்கிவிட்டு பிரகாரத்தில் வந்தமர்ந்தார்கள். துலாபரத்தில் குழந்தைகளை வைக்கும் சடங்கு, சோறூட்டல் ஒரு பக்கம் நடக்க அதனை வேடிக்கைப் பார்த்தனர்.
“பால் பாயசம் வாங்கிட்டு வரேன்” என்று வினயச்சந்திரன் வாங்கி வந்தவன்,
“போகும்போது சாப்பிடலாம், இன்னொரு இடம் போகணும். லேட்டாகிடும்” என்று சொல்லவும் இருவரும் அம்பலத்திலிருந்து கிளம்பினர்.
காரில் அமரவும், “யார் கார்?” என்று மின்மினி விசாரிக்க
“என் ப்ரண்டோடது. பஸ்ல போனா லேட்டாகிடும்ல”
“எங்க போறோம், ப்ளீஸ் பரயு” என்று மின்மினி கேட்க
“பசிக்குதுடி, பாயசத்தைக் கொடு” என்றான் வினயன்.
மின்மினி அவன் பதிலை எதிர்ப்பார்க்க, அவனோ பாயசத்தை எதிர்ப்பார்த்தான். மின்மினி நீட்ட,
“எண்ட பகவதியம்மா! கிடிலம். என்ன டேஸ்ட்” என்று பாயசத்தை ரசித்துண்டான்.
“பர்த்டே கேர்ள், நீ சாப்பிடு” என்று அவளிடம் கொடுக்க, மின்மினியும் கண்மூடி கடவுளை நினைத்தவள் பாயசத்தை உண்டாள்.
“நிங்கள் முன்னாடியே இவிட வந்திருக்கா? பாயசம் சாப்பிட்டிருக்கா?” என்று மின்மினி கேட்க
“ம்ம், அதெல்லாம் சாப்பிட்டிருக்கேன். அதுவும் ஊர்மி அவ டேனியல் தாத்தா பார்க்க வரப்ப எல்லாம் நான் அவளை அழைச்சிட்டு வந்து காயம்குளத்துல விட்டுட்டு தனியா அம்பலம் வந்து பாயசம் வாங்கிருக்கேன். அவளுக்கும் ரொம்பப் பிடிக்கும். நம்ம ஒரு நாள் காஞ்சிபுரம் போகலாம், அங்க வரதராஜபெருமாள் கோவில் இட்லியிருக்கே செம டேஸ்ட்.” என்று ரசனையாக சொன்னவன் காரை கிளப்பினான்.
“பக்ஷண பிரேமன்(உணவுப்பிரியன்)” என்று மின்மினி கிண்டலாக சொல்ல
“பக்ஷண பிரேமன் மட்டுமில்ல மின்மினி மேல கூட நிறைய பிரேமம்தான்” என்றான் வினயன் சிரிப்போடு.
“எங்க போறீங்க?” மின்மினி ஆர்வமும் பயமும் கலந்த குரலில் கேட்க
“ஆலப்புழா அழகிக்கு அழகான இடம் காட்ட போறேன், சர்ப்ரைஸ்” என்றிட
“எந்தோ சர்ப்ரைஸ்? ஆலப்புழ ஜில்லாவிலே எல்லா ஸ்தலமும் ஞான் அறியும்” மின்மினி சொல்ல
“ஓஹ் பின்னே? பாப்போம் இந்த இடத்தை நீ பார்த்திருக்கியான்னு?” என்றவன் காரில் பாடல்கள் ஒலிக்கவிட்டான்.
‘ஆலப்புழ முல்லகள்
ஆலப்புழ முல்லகள்
முல்லப்பூ மணமுள்ள பெண்ணினே கண்டேன் ஞான்..’ என்று பாடல் ஓட வினயன் முகத்தில் கள்ளச்சிரிப்பு. மின்மினிக்கு அது புரியவில்லை.
“ஆஹ்ன்! நிங்களுக்கு இந்த பாயசம் கத தெரியாதுல…?” என்று கேட்டவள் ஆர்வமாக சொல்லத்துவங்கினாள்.
“பிராமண ரூபத்தில் ப்ரதீஷப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் சதுரங்கத்தில் செம்பகஸேரி ராஜாவை வின் பண்ணி, அவர் தோற்றால் கொடுக்காமின்னும் பறஞ்ச தான்யம் பால்பாயசமாக்கி ஓரொரு திவசமும் அம்பலத்துல தராங்க..” என்று சொல்ல வினயன் பார்வை சாலையில் கவனமாக இருந்தாலும், முகத்தில் ரசனையிருந்தது. ஆனால் கதை கேட்கும் ஆர்வமில்லை.
பிராமணனாக வேடமிட்டு வந்த கிருஷ்ணன் செம்பகேஸரியின் அரசனோடு சதுரங்கம் விளையாட வேண்டும் என்று விரும்பினார். சதுரங்கத்தில் மிகுதியான ஆர்வமுள்ள அரசனும் உடனே ஒத்துக்கொண்டான். போட்டியில் ஜெயித்தால் தானியங்கள் வேண்டும் என்று ஏழை பிராமணனாகக் கோரிக்கை வைத்தார் ஸ்ரீ கிருஷ்ணர். அரசன் தோற்றால் சதுரங்க கட்டத்தில் ஒவ்வொரு சதுரத்துக்கும் தானியம் கொடுக்க வேண்டும். முந்தையை சதுரத்தை விட அடுத்த சதுரத்தில் இரு மடங்காக தானியங்கள் கொடுக்க வேண்டும்.(1+2+4+8+16…) இதற்கு ஈடாக கருவூலத்திலிருந்து அரிசி கேட்டார்.
முதலில் ஒத்துக்கொண்ட அரசனுக்கும் பின் பெருக்குத்தொடரில்(geometric progression) அப்படி ஒவ்வொரு சதுர கட்டத்துக்கும் கொடுத்தால் அரசு கருவூலம் காலியாகிவிடும் என்று அஞ்சிட, கிருஷ்ணர் தன் அவதாரத்தைக் காட்டி நிபந்தனையை உடனே நிறைவேற்ற வேண்டாமென்றும் காலப்போக்கில் செய்ய சொல்ல, அதன்படியே அம்பலப்புழாவில் தினந்தோறும் பால்பாயசம் செய்யப்படுகிறது. அதனை கிருஷ்ணரே தினமும் அருந்துவதாக நம்பப்படுகிறது.