அத்தியாயம் 5
வயகட்டூர் பெயருக்கு தகுந்தாற்போல வயலும் காடும் இணைந்து இருக்கும் கிராமம்…எங்கு பார்த்தாலும் பசுமை மட்டுமே கண்ணுக்கு விருந்தளிக்கும்…அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் தானே…ஆம் இங்கும் ஆபத்து இருக்கிறது… இரவு 1மணியில் இருந்து 3மணி வரை கிராமத்தில் உள்ள எந்த வீட்டின் கதவும் திறக்காது… இங்கு ஒரு கொடூரமான ஆண் மகனின் ஆன்மா வெறி கொண்டு சுற்றி கொண்டு இருப்பதாக நம்புகின்றனர் அந்த நேரத்தில் வெளியே வரும் எவரும் இதுவரை உயிருடன் இருந்ததில்லை…
இரவு 9மணி ஆனால் அனைவரது வீட்டின் கதவும் மூடப்பட்டு விடும்…
வெண்மதியின் அப்பா இருந்த வரை இந்த கிராமத்தில் தான் அவர்களும் குடியிருந்தார்கள் வெண்மதியின் அப்பாவை எப்பொழுது அந்த சாத்தான் பழிவாங்கியதோ அதன் பின் தன் குழந்தையை கூட்டிக்கொண்டு சாந்தி அந்த ஊரை விட்டு நகர்ப்புறம் குடி பெயர்ந்தார்…
அந்தக் கிராமத்தை நெருங்க நெருங்கவே வெண்மதிக்கு மனதில் ஒருவித பயத்தை கொடுத்தது…தன் தந்தை இறந்த பிறகு அந்த கிராமத்திற்கு வராமல் இருந்த வெண்மதி மற்றும் அவள் அன்னை சாந்தியை…சந்தோஷ் மற்றும் வெண்மதியின் திருமணம் கிராமத்தில்தான் நடக்க வேண்டும் என்று செங்கமலம் கட்டளையாக கூறி விடவே மறுத்து பேச முடியாமல் இங்கு வந்தனர் அன்று நடந்த நிகழ்வுகள் இன்னும் வெண்மதிக்கு கண் முன் தோன்றி உடலை நடுங்க செய்தது…
வேனில் இருந்து ஒவ்வொருவராக கீழிறங்க கடைசியாக வெண்மதிக்கு முன் கீழே இறங்கினான் மகேந்திரன்…தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை அறியாமல் அந்த அழகின் பின் இருக்கும் ஆபத்தை உணராமல் அந்த ஊரின் அழகை வியந்து பார்த்துக் கொண்டு நின்றான் மகேந்திரன்
அதே நேரம் அந்தப் பகல் பொழுதிலும் வானம் திடீரென்று கரு மேகங்கள் சூழ
“ஹா ஹா ஹா ….வந்துட்டியா உன் மரணத்தை தேடி வந்துட்டியா” என்று ஒரு கொடூரமான குரல் கேட்டது அந்த சுடுகாட்டில்….
“நகர்ந்து நில்லுடா …இப்படி நின்னா நான் எப்படி இறங்குறது… “என்று கூறி மகேந்திரனை தள்ளிவிட்டு இறங்கினாள் வெண்மதி
“இங்கு எந்த வீடுமே இல்ல சுத்தி வரமும் வயல் தோப்பு காடுமா இருக்குது இங்கே எதுக்கு இறக்கி விட்டு இருக்காங்க ” என்று மகேந்திரன் வெண்மதியிடம் கேட்க
“அதான் எல்லாம் பின்னாடி போயிட்டு இருக்காங்க இல்ல அவங்க கூட போனா தெரிஞ்சிடும் “என்று கூறிவிட்டு அவளும் நடக்க ஆரம்பிக்க
“ஏய் நம்ப லக்கேஜ் எல்லாம் வேன்லியே இருக்குது அதை எப்ப எடுக்குறது “என்று கேட்டான் மகேந்திரன்
“அதெல்லாம் வீடு வந்து சேர்ந்துரும் வாடா ” என்று கூறி முன்னே நடக்க அவள் பின்னே நடந்து வந்தான் மகேந்திரன் …
லேசான மேகமூட்டத்துடன் சில்லென்று வீசும் தென்றல் காற்றுடனும் அந்த வயல்வெளிகளுக்கு நடுவே இருந்த ரோட்டில் நடந்து வருவது சுகமான புத்துணர்ச்சியை தந்தது மகேந்திரன் அந்த தென்றல் காற்றை ஆழ்ந்த சுவாசித்துக்கொண்டே தன் முன்னாள் நடந்து கொண்டிருந்த வெண்மதியின் தோளில் கை போட்டு
“ஏய் செம்மையா இருக்குதுடி உங்க ஊரு அப்படியே இங்கேயே இருந்தரலாம் போல இருக்குது…. “என்று கூறிக்கொண்டு அவளுடன் இணைந்து நடக்க
“எரும கையை எடுடா “என்று கையை தட்டி விட்ட வெண்மதி
“இது ஒன்னும் நம்ம ஊர் மாதிரி கிடையாது இது கிராமம் ஒட்டி உரசாம கொஞ்சம் தள்ளி நடந்து வா “என்று கூறினாள்
“போடி” என்று முகத்தை திருப்பியவன்
“மாப்பிள்ளை வந்துட்டாங்க அந்த வேட்டை போடுங்கடா ” என்ற சத்தம் கேட்டு அங்கு பார்க்க
பட் …. பட் …. பட… பட….என்று ஒரே புகைமூட்டமும் பட்டாசு சத்தமும் பாதை அடைத்தது ….புகைமூட்டம் விலக அங்கு ஊரே கூடி இருந்தது பொண்ணு மாப்பிள்ளையை வரவேற்க …
அந்த ஊரின் பெரிய குடும்பம் என்று அழைக்கப்படும் வெண்மதியின் குடும்பம் …அந்த ஊருக்கு வாரி வழங்கி கொடுத்த குடும்பம் … இப்பொழுதும் அந்த கிராமம் பெரிய வீட்டின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்கும்… தாத்தா ரங்கராஜன் ஐயா,செங்கமலம் அம்மாவுக்கு மூன்று ஆண் மகவுகள் ஒரு பெண்…முதலில் சுந்தரபாண்டி இரண்டாவது தங்கப்பாண்டி மூன்றாவது முத்துப்பாண்டி அந்த வீட்டின் இளவரசி தேவகி… அந்த ஊரின் பரம்பரை பரம்பரையாக ஆண்டு வந்த ராஜ பரம்பரையை சேர்ந்தவர்கள்…
ரங்கராஜன் ஐயா இறந்த பின்பு அனைத்து அதிகாரங்களும் சுந்தரபாண்டி ஐயா தலைமை ஏற்றார் தங்கப்பாண்டி மற்றும் முத்துப்பாண்டி இருவரும் அவருக்கு துணையாக இருந்து வந்தார்கள்…
சுந்தரபாண்டி மனைவி ராணி அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்…மூத்தவன் கணேஷ் அக்ரிகல்ச்சர் படித்து முடித்து தன் சொந்த ஊரிலேயே விவசாயம் பார்க்கிறான் 27 வயது கட்டிலங்காளையவன் இளையவன் ராஜன் கணினி படிப்பை முடித்துக் கொண்டு சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்
தங்கபாண்டி மனைவி சாந்தி அவர்களுக்கு ஒரே பெண் நம்ப நாயகி வெண்மதி
முத்துப்பாண்டி மனைவி திலகவதி அவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் மூத்தவன் நரேந்திரன் கல்லூரி படிப்பை முடித்துக்கொண்டு தங்களுக்கு சொந்தமான அரிசி ஆலை, எண்ணெய் குடோன் போன்ற வேலைகளை பார்த்துக் கொள்கிறான்..இரண்டாமவன் சுரேந்திரன் இரண்டாம் ஆண்டு கல்லூரி படி பயின்று கொண்டிருக்கிறான் …மூன்றாவது இந்த வீட்டின் கடைக்குட்டி சுசிந்திரன் இப்பொழுதுதான் 12வது படித்து கொண்டிருக்கிறான்
தேவகி கணவர் வேதாச்சலம் அவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள்…மூத்தவள் கனிமொழி அதே கிராமத்தில் ஸ்கூல் டீச்சர் ஆக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்… வர்ஷினி மற்றும் தர்ஷினி இரட்டை குழந்தைகள் இருவரும் கடைசி வருடம் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறனர்
ஊர் மக்கள் கூடி நிற்க மகேந்திரன் மற்றும் வெண்மதி இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து ஆலாத்தி சுற்றி மேல தாளங்கள் முழங்க ஊருக்குள் அழைத்து வந்தனர் …ஊர் மக்கள் அனைவரும் பெரிய வீட்டிற்கு வந்துள்ள புது மாப்பிள்ளை பார்க்கும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் …
அவர்களின் வரவேற்பில் பயந்து போனான் மகேந்திரன் ….
அவனின் முகத்தை வைத்தே இதையெல்லாம் பார்த்து அவன் சற்று மிரண்டு இருக்கிறான் என்று புரிந்து கொண்ட வெண்மதி அவனின் கையை பற்றி நடந்தாள்…
அந்தக் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு வெண்மதி…என் வாழ்க்கை பறிபோனதை எண்ணி கவலையில் இருந்த அனைவருக்கும் அவளின் கல்யாணம் மகிழ்ச்சியை கொடுத்தது…
பெரிய குடும்பம் என்று சொல்லுவதற்கு ஏற்ப அவர்களின் வீடும் மிகவும் பெரியதாக அந்த காலத்து ராஜாக்கள் வாழ்ந்த அரண்மனை வீட்டை ஒத்து இருந்தது …பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த அந்த அரண்மனையை இக்காலத்திற்கு தகுந்த மாதிரி சில மாற்றங்கள் மட்டுமே செய்து அங்கு வாழ்ந்து வந்தனர் …
அரண்மனை வாசலுக்கு வந்தவர்களை மீண்டும் ஒருமுறை ஆலத்தி சுத்தி … பெரிய பூசணிக்காயை சுற்றி உடைத்து திருஷ்டி கழித்து இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றனர் ….
அரண்மனைக்கு அருகே இருந்த பெரிய மண்டபத்தில் அந்த ஊருக்கே கறி விருந்து தடபுடலாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது …
வெண்மதியையும் மகேந்திரனையும் உள்ளே அழைத்துச் சென்று பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி பின் பால் பழம் போன்ற சடங்கு செய்து அந்த ஊரில் இருக்கும் அவர்களின் குலதெய்வமான அய்யனார் கோவிலுக்கு அழைத்து வந்தனர் …
அய்யனாருக்கு பொங்கல் வைத்து படையல் போட்டு வெண்மதி மற்றும் மகேந்திரன் இருவரும் நன்றாக வாழ வேண்டும் என்று அனைவரும் வேண்டிக்கொண்டு இருந்து நடக்கும் இடத்திற்கு வந்தனர் …
இருவரும் விருந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்…
அந்த அரண்மனையில் வெண்மதிக்கு என்று இருந்த தனி அறையில் மகேந்திரனும் வெண்மதியும் ஓய்வெடுக்க கூறி அனுப்பி வைத்தனர்….
எப்பொழுதும் வாயாடி கொண்டே இருக்கும் மகேந்திரன் ஊருக்குள் வந்த நொடியில் இருந்து இதுவரை வாய் திறக்கவில்லை அவன் மனதில் ஆயிரம் குழப்பங்கள் குடிவந்து இருந்தது …
அவனை கவனித்துக் கொண்டு தான் இருந்தால் வெண்மதி எப்பொழுது தனிமை கிடைக்கும் என்று காத்துக் கொண்டு இருந்தவளுக்கு …அப்பொழுது தான் இருவருக்கும் தனிமை கிடைத்தது …
வெண்மதியின் அறையில் பெரிய தேக்கு மரத்தால் ஆன கட்டில் போடப்பட்டிருக்க…இந்த காலத்திற்கு தகுந்தாற்போல அட்டாச்சிடு பாத்ரூம் உடன் இருந்தது …பெட்டில் வந்து அமர்ந்த மகேந்திரனை கண்ட வெண்மதி அவன் அருகில் சென்று
“மகேன் என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கிற “என்று வெண்மதி கேட்க
“சாரி மதி ” என்று கூறினான் மகேந்திரன்
அவன் கூற வருவது புரியாமல்
“எதுக்கு சாரி கேட்கிற …ஊருக்குள்ள வந்ததுல இருந்து உன முகமே சரியில்ல என்னாச்சுடா “என்றாள் அவன் பக்கத்தில் பெட்டில் அமர்ந்தபடி கேட்டாள்….
“நீ இவ்வளவு பெரிய பணக்காரங்களா இருபிங்கன்னு நான் நெனச்சு பாக்கல மதி…நான் ஊர் பேர் தெரியாத ஒரு அனாதை உனக்கு தாலி கட்டி உன்னோட வாழ்க்கைய கெடுத்துட்டேனோ தோணுது… “தலை குனிந்து அவன் பேசிக்கொண்டு இருக்க
நங்கு நங்கு என்று அவன் தலையில் குட்டு வைத்தாள் வெண்மதி
“அம்மா… ஏண்டி எருமை என்னை குட்டுற…”என்று தலையை தடவிக் கொண்டு கேட்டான் மகேந்திரன்
“இல்லடா ஊருக்குள்ள வந்ததிலிருந்து உன்னோட மண்டையில் இருக்கிற மூளை குழம்பிடுச்சு அதான் இப்படி இன்னும் ஒரு பத்து கொட்டு வெச்சேன் வச்சுக்கோ எல்லாம் சரியா பழைய நிலைமைக்கு வந்துரும் ” என்று கூறி மீண்டும் அவனை கொட்ட வர
“வேணாடி… மீ பாவம் இல்ல… உன் நட்பு பாவம் இல்ல ….போதும் இதோட நிறுத்திக்கோ… “என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூறினான் மகேந்திரன் …
அவனை முறைத்து பார்த்து ” இன்னொரு டைம் உன்னை நீ அனாதைன்னு சொன்ன உன் தலைய கொட்டி கொட்டியே மண்டையில் மூளை இருக்குதான்னு பார்த்திடுவேன் “என்று கூறியவள்…
அவளையே பார்த்தவன்
“பொண்டாட்டி ” என்று அவன் அழைக்க
தன்னுடைய பெட்டியில் இருந்து குளிப்பதற்காக உடை எடுத்துக் கொண்டிருந்த வெண்மதி
ஏதோ ஞாபகத்தில்
“சொல்லுடா ” என்று கூற
“அப்போ நீ என் பொண்டாட்டின்னு நீ ஒத்துக்குற “என்று அவன் சிரிப்புடன் கேட்க…
தன் கையில் உள்ள துணியாலையே அவனை அடித்தாள்…
“எரும எரும கொஞ்ச நேரமா அமைதியா இருந்தயேனு பேசினால் …உன் வாய் கொழுப்பு அடங்க மாட்டிக்குது… ” என்று கூறி திட்டிவிட்டு உடையை எடுத்துக்கொண்டு குளியல் அறையை நோக்கி சென்றாள்
கண்களை மூடி படுத்த மகேந்திரன் இன்று காலையிலிருந்து அலைச்சல் காரணமாக அடுத்த நிமிடம் தூங்கி போனான் …
அவன் அருகில் வெண்மதி தன் லக்கேஜில் இருந்து துணியை எடுக்க கலைத்துப் போட்டுவிட்டு சென்ற அனைத்து துணிகளும் தன்னால் காற்றில் மிதந்து மடித்து மீண்டும் லக்கேஜில் வைத்தது …
சிறிது நேரத்தில் குளித்துவிட்டு வெளியே வந்த வெண்மதி லக்கேஜ் மூடி இருப்பதை பார்த்து அருகில் படுத்து இருந்த மகேந்திரனையும் பார்த்தவள் சிறு புன்னகையுடன் அந்த அறையை விட்டு வெளியே சென்றாள் தன் அன்னையை பார்ப்பதற்கு …
தன் அன்னையின் அறைக்கதவை திறந்து உள்ளே செல்ல அவள் நினைத்தது போலவே அவள் அம்மா சாந்தி அழுது கொண்டு இருந்தார் அந்த அறையில் மாற்றப்பட்டிருந்த ஆள் உயர புகைப்படத்தின் முன்பு …அந்த புகைப்படத்தில் தங்கபாண்டி கம்பீரமாக சிரித்த முகத்துடன் நின்றிருந்தார் …
சாந்தியை பின்னிலிருந்து அணைத்து கண்டால் வெண்மதி…தன்னை அணைத்தது யார் என்று திரும்பிப் பார்க்காமலேயே உணர்ந்த சாந்தி அமைதியாக கண்களை மூடி நின்று இருந்தார்
“அம்மா … “என்று வெண்மதி அழைக்க அவரிடம் மௌனம் மட்டுமே பதிலாக வந்தது …
“அம்மா …சாரிமா… மகேன் திடீர்னு தாலி கட்டுவானு நான் நினைக்கலமா …அவன் என்னோட பெஸ்ட் பிரண்டு மா ரொம்ப நல்ல பையன் அன்றைக்கு ராகினி கல்யாணத்துல அவங்க பாட்டி என்ன திட்டிட்டாங்க அம்மா …அதைத் தாங்க முடியாம தான் அவன் இப்படி பண்ணிட்டான்… ப்ளீஸ்மா என்கிட்ட பேசு மா … “
என்று தன் அம்மாவிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் வெண்மதி
“முதல்ல நாங்களா பாத்து உனக்கு அமைச்சு கொடுத்த வாழ்க்கை தான் நிலைக்கல இந்த வாழ்க்கை ஆச்சு உனக்கு நிலைச்சு சந்தோஷமா நீ இருக்கணும் மதி மா …உனக்கு தெரியாதது இல்ல… ஒரு பையனோட காதலால தான் நம்ம குடும்பமே ரெண்டு தலைமுறையா சாபத்துல இருக்குது…
அதனால நம்ம ஊருக்குள்ள எத்தனை உயிர்கள் இழந்திருக்கிறோம் …என்னோட வாழ்க்கை உன்னோட வாழ்க்கை எல்லாம் போனது அந்த சாத்தான்னால தான் இப்ப அந்த கடவுள் உனக்கு இன்னொரு வாழ்க்கை அமைச்சு கொடுத்திருக்காரு திரும்பவும் வாழ்க்கையில அந்த சாத்தானாலே எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்துர கூடாது அப்படிங்கிறது தான் இப்போ என்னுடைய கவலை “
“நாம இன்னைக்கு சாயந்திரமே இங்கிருந்து கிளம்பி விடலாமா பயப்படாத அதுவுமில்லாம காதலித்து திருமணம் செய்தால்தான் அந்த சாத்தான் பழி வாங்கும் … மகேந்திரன் என் கழுத்துல தாலி கட்டியிருந்தாலும் நாங்க ஒன்னும் காதலித்து கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை அவன் என்னுடைய நண்பன் நீ பயப்படாதம்மா ஒன்னும் ஆகாது ” என்று அவருக்கு ஆறுதல் கூறினாள்…
“சரி நீ போய் கொஞ்ச நேரம் போய்விடு சீக்கிரமா இங்கிருந்து கிளம்பி போகலாம் ” என்று கூறினார் சாந்தி
“சரிம்மா “என்று கூறி அவளுடைய அறைக்கு சென்றாள் பெட்டில் ஒரு ஓரம் மகேந்திரன் படுத்திருக்க மறு ஓரம் சென்று படுத்த வெண்மதிஉறங்கிப் போனாள்…
அதேநேரம் அந்த சுடுகாட்டில் அந்த சாத்தான் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான்
“ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா காதலித்து மணம் முடிக்கவில்லையா பைத்தியக்காரி…உன் கணவனின் மனதில் துளிர்விட்டிருக்கும் காதலை நீ அறியவில்லையே….இன்று தான் அவனுக்கு கடைசி நாள் என்பதையும் நீ அறியவில்லையே…உன்னை அனுப்பி வைப்பதற்காகவா நான் இங்கு உன்னை வரவைத்தேன்… ” என்று தன் கொடூரமான குரலில் கூறி சிரித்தது …
தூங்கி எழுந்த மகேந்திரன் மற்றும் வெண்மதி இருவரும் மீண்டும் கிளம்பி அரண்மனையின் ஹாலிற்கு வர அங்கு அவர்களுக்கு முன்பே கிளம்பி வந்து இருந்தார் சாந்தி…
மூவரும் கிளம்பி வந்து நிற்பதை பார்த்த செங்கம்பலம் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கேள்வியாக அவர்களை நோக்க…
“நாங்க எங்க வீட்டுக்கு கிளம்பறோம் அத்தை விருந்து எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சு… “
“என்ன சொல்ற சாந்தி இந்த வாரம் நம்ம குலதெய்வம் கோயில் சாற்றாங்க திருவிழா முடியுற வரைக்கும் எல்லாரும் இங்கதான் இருக்கணும் ” என்று கூறினார் செங்கமலம்…
“இல்ல அத்தை இந்த ஊரை பத்தி தெரிஞ்சும் நீங்க எங்கள இங்கு இருக்க சொல்றது நியாயம் இல்ல…அன்னைக்கு வெண்மதியோட கல்யாணத்தப்ப இங்க நடந்தது நான் சொல்லி உங்களுக்கு ஞாபகப்படுத்தனும்னு அவசியம் இல்ல ” என்று கூறினார்
ஆம் வெண்மதி சந்தோஷ் இருவருடைய திருமணமும் இந்த ஊரில் தான் நடந்தது …
சாந்தி கூறவும் அந்நாளின் ஞாபகம் வர செங்கமலத்தின் உடல் நடுங்கியது…
“நாங்க இங்க இருக்கிறது சரியா இருக்காது நாங்க கிளம்புறோம் அத்தை “என்று கூற செங்கமலத்தின் முகம் வாடி போனது அவர் மட்டுமல்ல அந்த குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் சோகமானார்கள்
அவர்கள் கூறுவதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த மகேந்திரன் அங்கிருந்து அனைவரின் முகம் வாடவும் அதைப் பார்த்த மகேந்திரன் …
“பாட்டி உங்க விருப்பப்படி திருவிழா முடிஞ்சுதா நாங்க ஊருக்கு போவோம் கவலைப்படாதீங்க ” என்று கூறினான்…
அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர் சாந்தி மற்றும் வெண்மதி இருவரும் …
வெண்மதி தான் சட்டென சூதரித்துக்கொண்டு “நம்ம இன்னைக்கு கிளம்பறோம் மகேன் உனக்கு இந்த ஊரை பத்தி தெரியாது…நம்ம இங்க இருக்கிறது உன்னோட உயிருக்கே ஆபத்து நம்ப சீக்கிரம் இங்கிருந்து கிளம்பலாம் ” என்று கூறினாள்….
“என்ன பேசற வெண்மதி அதெல்லாம் எனக்கு எதுவும் ஆகாது நம்ப இங்கு இருந்து திருவிழா முடிஞ்சு தான் வீட்டுக்கு போறோம்…எனக்கு இந்த மாதிரி குடும்பமா இருக்கணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை ப்ளீஸ் வெண்மதி மறுத்து பேசாத “என்று கூறினான் மகேந்திரன்
மகேந்திரன் இந்த அரண்மனைக்கு வரும்பொழுது கவனித்தான் பெரியப்பா சித்தப்பா அத்தை அவர்களது பிள்ளைகள் என அனைவரும் ஒரே வீட்டில் வசிப்பதை அவனுக்கு அதை பார்த்ததும் இவர்களுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்தது …
“மாப்பிள்ளையே ஆசைப்படுறாரு நம்ம எல்லாரும் பத்திரமா பாத்துக்கலாம் ஒரு வாரம் தானே சரின்னு சொல்லுங்க சித்தி ” என்று கணேஷ் கூற மறுப்பு கூற முடியாமல் சாந்தி சரி என்று தலையசைத்தார் …
மகேந்திரன் மிகவும் மகிழ்ந்து போனான்
அடுத்த நாள் காலை தலை இல்லாமல் கை இல்லாமல் உடலில் ஒரு சொட்டு கூட ரத்தம் இல்லாமல் உயிரற்ற ஒரு உடல் அந்த அரண்மனையின் முன் கிடந்தது ….