எந்தகாலத்திலும், ஏன் இனி இவள் தான் உன்னை பெற்றவள் என்று ஒருவரை கொண்டுவந்து முன்னிறுத்தினாலுமே மனமென்னவோ கௌசல்யாவின் மடியை தான் தேடும் என்று புரிந்துபோனது.
எதுவும் தோன்றவில்லை. வேகமாய் தன் அறையை விட்டு வெளியேறியவன் பூஜை அறையின் அருகிலிருந்த அறையினுள் நுழைந்தான்.
ராம்நாத் ஆடிய ஆட்டத்தில் அவரின் சல்லடை உடல் இன்னுமே வலிமை இழந்திருந்தது. கண்ணோரம் நீரெல்லாம் காய்ந்து உப்பு பிடித்ததை போலிருந்தது.
தொண்டை அடைக்க அவரருகில் சென்றமர்ந்தான் கௌரவ். சிலநொடிகள் கூட நகரவில்லை.
பிள்ளையின் அண்மையில் உயிரில் சுமந்தவளின் உறக்கம் களைய மெல்ல விழி மலர்ந்தார் கௌசல்யா.
“கௌரவ்…” என பதறி எழுந்தார் அவனை பார்த்ததும்.
“ம்மா, பார்த்து….” என்று அவனை பிடித்தபடி அவரருகில் நன்றாய் அமர்ந்தவன்,
“இங்க தானே இருக்கேன்…” என கடிய,
“இல்லை, இதுவரைக்கும் நீ இப்படி உக்கார்ந்ததில்லையா அதுதான்…” அவனின் கன்னம் வருடி மீண்டும் துக்கத்துடன் பார்த்தார் அவனை.
“என்னம்மா, கல்யாணம் நின்னுடுமோன்னு அழுகையா?…” மெல்லிய சிரிப்புடன் அவரின் கண்ணை துடைத்தவன்,
கௌசல்யாவின் முகத்தினை பார்த்தபடி இதோ அவருக்கு உயிர் கொடுத்திருந்தான் மகன்.
அவனின் முகத்தினையே அசையாது பார்த்தவரால் நம்ப முடியவில்லை. அத்தனை பேச்சுக்கள் பேசியிருந்தாரே ராம்நாத்.
தலைக்குமேல் வளர்ந்த வயது பையன் வீட்டில் இருக்க அவனை வைத்துக்கொண்டே நாராசமான வார்த்தைகள்.
‘ச்சீ’ என்றாகிவிட்டது விக்ரம்மிற்கு. அவ்வளவு கோபம். ஆனாலும் எதிர்த்து பழக்கமில்லையே.
தாயை பார்ப்பது ஒன்றே அவனின் செயலாகி போக, அவரை சமாதானம் செய்வதில் தான் இருந்தான்.
இத்தனை பேச்சுக்களுக்கு பின்பும் கூட எப்படி அவர்கள் வீட்டில் ஒத்துக்கொள்ள கூடும்?
அதுவும் ஷ்யாமளா மனம் வருந்தி வெதும்பி போய் பேசியதை கேட்டதில் இன்னுமே வெலவெலத்து போனார்.
ஒரு மனித உருவம் பெற்று நடமாடும் அந்த ராம்நாத்தின் பேச்சுக்களில் எல்லை என்பதே இருந்திருக்கவில்லையே.
அதிலும் கொஞ்சமும் மரியாதை இன்றி, இடம், பொருள் இன்றி, மற்ற மனிதர்களின் பார்வை பட, யாரை எங்கே பேசுகிறோம் என்னும் புத்தியின்றிய அற்பத்தனமான செய்கைக்கு பின்னுமா?
நம்ப முடியவில்லை. ஆனாலும் கூறுவது மகனாகிற்றே. முழுமையாய் அவரால் நம்பாமலும் இருக்க முடியவில்லை.
“எப்,,,, எப்படி கௌரவ்?…” என்றார் மகனின் கையை பிடித்துக்கொண்டு.
கைகளின் நடுக்கத்தினை அவரின் தொடுகை மகனுக்கு கடத்த ஏற்கனவே உள்ளுக்குள் உழன்றுகொண்டிருப்பவனை இன்னும் உலுக்கி போட்டது அந்த அன்பு.
முன்பெல்லாம் தாய் தானே. அவருக்கு இருக்கக்கூடிய அன்பு இயல்பானது தானே என்று தோன்றினாலும் கௌசல்யாவின் அன்பில் அவனுள்ளம் அதீத சிலிர்ப்பை உணரும்.
ஆனால் உண்மை அறிந்ததில் இருந்து சிலிர்ப்புடன் ரணமாய் ஒரு வேதனை மனதை அறுக்க ஆரம்பித்தது.
பால் குடி மறவா பிஞ்சை அவரிடமிருந்து பிரித்திருக்க, கண் திறவா கன்றை போல தன்னை அவரிடம் திணிக்கப்பட்ட உறவாய் தந்திருக்க, அதன் பின்னும் எதிர்பார்ப்பில்லா இந்த அன்பு எப்படி?
தாய் இதைவிட பெரும் சக்தி உண்டா இவ்வுலகில். என்னதான் அவர் தன் உருவில் அவரின் மகனை தேடினாலும் தன்னிடம் காண்பித்த அன்பு பொய்யில்லையே.
தாயிழந்த அவனுக்கும், மகனிழந்த அவருக்கும் பற்றுகோலாய் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொண்ட உன்னத உறவு.
ஆனாலும் இரவல் உறவு தானே? இன்னொருமனம் அவனின் வலியை அதிகமாகவே கூட்டியது.
இதனை தனக்கு தெரியப்படுத்திய அந்த கடவுளை சபிக்காத நாளும் இல்லை. இப்போதாவது தெரியப்படுத்தியதே என வேண்டாத தினங்களும் இல்லை.
வேதனை மிஞ்சும்பொழுது முதலாவதும், ஆகர்ஷன் கௌசல்யாவின் முகம் காணும்பொழுது இரண்டாவதுமாய் அவனை பந்தாடிக்கொண்டிருந்தது அவ்வுணர்வுகள்.
இப்போதும் மொத்த சக்தியும் வடிந்ததை போலொரு மனநிலை. அவனின் பலம், பலவீனம் இரண்டும் அவர் ஒருவரே.
கௌசல்யா. அவரின் உயிர் மூச்சு என்றும் கூறலாம். தாயின் மீதான அபரிமிதமான அன்பு, அவர் தனக்கு மட்டுமானவர் இல்லை என்றதில் உண்டான பெரும்வலி.
அத்தனைக்கும் மேல் அவருக்கான நியாயத்தை தந்துவிட தனியொருவனாய் அவன் நின்றிருந்தான்.
ஒவ்வொருமுறையும் கௌசல்யா, ஆகர்ஷன் சந்திப்புகளில் அவனுள் ஊடுருவும் துயரம் சொல்லில் அடங்காதது.
“என்ன கௌரவ், கேட்டுட்டே இருக்கேன். அமைதியா இருக்கியே?…” என்றவர் உடனே அவனின் நெற்றியில் கை வைத்து பார்த்து,
“உடம்புக்கு ஒன்னும் இல்லையே?…” என்றார் கனிவுடன்.
“ம்ஹூம்…” என்றவன் தாயின் கரத்தினை பிடித்துக்கொள்ள,
“கண்ணெல்லாம் என்ன இப்படி கலங்கி இருக்கு கௌரவ்?…” என்றவர்,
“முகமும் வாட்டமா இருக்கே? இந்த பிரச்சனையாலையா கௌரவ்?…” என்று வார்த்தைக்கு வார்த்தை அவனை பெயர் சொல்லி அழைப்பவர்.
பெற்ற பிள்ளையை பெயர் சொல்லி அழைக்கும் மார்க்கம் இருந்தும் இப்போது வரை தனக்காக அழைக்காமல் ‘கண்ணா’ என்று அழைப்பதில் இப்போதும் உடைந்து தான் போனான் கௌரவ்.
‘அவங்க தான். கௌரவ் அப்பாவும், அவர் அம்மாப்பாவும். கௌரவ் தலையில அடிச்சு சத்தியம் செய்ய சொன்னாங்க. பச்சை குழந்தை. அவன் என் கைக்கு தரும்போது ரெண்டுமாசம். அவன் மேல’ என்று அன்றைக்கு ஷ்யாமளாவிடம் சொல்லியவர் அழுகையை அடக்கமுடியாமல் போராடிய அந்தநிமிடம்.
இப்போதும் நெஞ்சை கூறுபோட்டது. எச்சிலை விழுங்கிக்கொண்டு தாயை பார்க்க,
“நைட் சாப்பிடலையா கௌரவ்?…” என்றார் மகனிடம்.
“ம்ஹூம். இல்லையே…” என்றான் அவரிடம் தொண்டையை செருமிக்கொண்டு.
“அதுதான், அதுதான் தூக்கமும் வராம முகமும் வாடி இருக்கு. வா…” என்று அவனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.
“அன்டைம் ம்மா…” என்று சொல்லியும் அவரின் கைகளுக்குள் சிறுபிள்ளையாய் மெல்ல நடையிட்டு நடந்தான் கௌரவ்.
பிஞ்சு பாதங்களுடன் அவரின் மாரோடு ஒன்றிக்கொள்ளும் அந்த அறியாத பிள்ளையாய் தத்தி தத்தி நடமாடிய நாட்களோடு தன் வாழ்க்கை நின்றுவிடாதா என இப்போதுமே துளிர்விட்டது அந்த எண்ணம்.
“உக்கார் இங்க. இப்ப வர்றேன்…” என்று அவர் சோபாவில் அமர சொல்லி மகனின் கையை விட்டதும்,
“ம்மா…” என அவரின் கைகளை பதட்டமாய் பற்றிக்கொண்டான் கௌரவ்.
பற்றி எரிந்த உணர்வுகளின் மத்தியில் எரிமலை சீற்றத்தினை உள்ளடக்கிய கௌரவ்வின் உணர்வுகள் தாயை விட்டுக்கொடுக்கவும் மனதின்றி தத்தளித்தது.