“இங்கே பாரு மயிலு! முன்ன மாதிரி குதிச்சு ஓடியாடி விளையாட கூடாது சரியா! முக்கியமா ஆம்பிளை பிள்ளைங்க கூடலாம் விளையாட போகக் கூடாது. பசங்களை உன்னைத் தொட்டுகிட்டு பேச அனுமதிக்கக் கூடாது! குரலை உசத்தி பேசக் கூடாது. அடக்க ஒடுக்கமா ஸ்கூலுக்குப் போனோமா வந்தோமானு இருக்கனும். குமரன் தம்பிகிட்ட கூட விளையாண்டுட்டு திரியாத சரியா” பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த மகளின் கூந்தலைப் பின்னலிட்டவராய் இதனைக் கூறியிருந்தார் இளமயிலின் தாய் மரகதம்.
இளங்குமரனும் இளமயிலும் பத்தாம் வகுப்பில் காலாண்டு பரீட்சை முடிந்து விடுப்பில் இருந்த காலகட்டத்தில் பூப்பெய்தி இருந்தாள் இளமயில்.
அந்த விடுப்புக் காலத்தில் இளங்குமரன் வழமைப் போல் முத்து மாமாவின் மருந்தகக் கடையில் இருக்க, இளமயில் இளங்குமரனின் அன்னை அம்பிகாவுடன் வழக்காடியவாறு அடுப்படி வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில் தான் அவளின் உடுப்பைப் பார்த்துக் கண்டறிந்து அவள் பூப்பெய்தி இருந்ததை உறுதிப்படுத்தினார் அம்பிகா.
மரகதம் வீட்டிற்கு வருவதற்கு முன்பே இளமயிலுக்குத் தேவையானவற்றைச் சொல்லிக் கொடுத்துக் கவனித்துக் கொண்ட அம்பிகாவின் மேல் தனிப் பாசம் உண்டாயிற்று இளமயிலுக்கு. அன்றிலிருந்து தியாகராஜன் மாமா அளவிற்கு அம்பிகா அத்தையும் பிடித்தவராய் மாறிப்போனார் அவளுக்கு.
அடுத்து வந்த நாள்கள் முழுவதும் இளமயிலுக்குத் தேவையான உணவைச் சமைத்துக் கொடுத்து தனக்கு மகள் இல்லாத குறையை இவளுக்கு அனைத்தும் செய்து கொடுத்து தீர்த்துக் கொண்டார் அம்பிகா.
முதல் சில நாள்கள் இளமயில் அணையாடையை (napkin) சரியாக வைக்கத் தெரியாமல் ஆடையைக் கறையாக்கி வைக்க, “அவ்ளோ வாய் ஆடுறவளுக்கு இதை ஒழுங்கா பார்த்து வைக்கத் தெரியாதா?” என்று மரகதம் சிடுசிடுப்புடன் எரிந்து விழ,
“என்ன மரகதம்? எதுக்குப் பிள்ளையைத் திட்டுற? சின்னப் பொண்ணு தானே! அவளுக்கு என்ன தெரியும். நாம தானே சொல்லிக் கொடுக்கனும்” என்று இளமயிலுக்கு ஆதரவாகப் பேசி அதை எவ்வாறு சரியாக வைப்பது, உதிரப்போக்கிற்கு ஏற்றவாறு எந்தெந்த நேரத்தில் கவனித்து மாற்றுவது என்பதைச் சொல்லிக் கொடுத்ததோடு இல்லாமல் அவ்வப்போது அவளிடம் கேட்டு நினைவுப்படுத்தி மாற்றவும் வைத்து முதல் மூன்று நாள்கள் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டார் அம்பிகா.
தான் வயதுக்கு வந்த நாளிலிருந்து தாய் கூறும் அறிவுரைகளைக் கடுப்புடன் கேட்டிருந்தவளுக்குத் தற்போது தாய் கூறியவை அனைத்தையும் கசப்பு மாத்திரை உண்பது போல் பிடித்தமின்மையுடன் கேட்டுக் கொண்டிருந்தவள், இளங்குமரனுடன் கூட விளையாடக் கூடாது என்று கூறியதில் கடுப்பானவளாய்,
“ஏன்ம்மா இளா மச்சான்கிட்ட பேசினா என்ன தப்பு?” எனக் கேட்டாள்.
தலையைப் பின்னி மடித்து நீல நாடா (நீல ரிப்பன்) கட்டிக் கொண்டிருந்த மரகதம் நங்கென அவளின் நடுமண்டையில் குட்டியவராய், “குமரனை இனி மச்சான்னு கூப்பிடாதனு சொன்னேனா இல்லையா? குமரன்னு கூப்டு பழகு! சும்மா இருக்கப் பிள்ளை மனசுல ஆசை வளர்க்கிற மாதிரி உரசிக்கிட்டு பேசிக்கிட்டு திரியாத! தகப்பன் இல்லாத பொண்ணை ஆத்தா தறிகெட்டு வளர்த்துட்டானு கெட்டப் பேரு வாங்காத அளவுக்கு நடந்துக்கோ! அவ்ளோ தான் சொல்லுவேன்” என்றவராய் அவளைப் பள்ளிக்குக் கிளப்ப, முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு கிளம்பி வந்த இளமயிலுக்கு வெளியே தனக்காகத் தாய்ப் புதிதாக வாங்கி வைத்திருந்த மிதிவண்டியைப் பார்த்ததும் முகம் பளிச்சிட உள்ளம் துள்ளியது.
‘ஹய்யா இனி நான் என் சைக்கிள்ல ஸ்கூலுக்குப் போவேனே’ என்று மனத்தோடு குதூகலித்தவளாய் இளமயில் மிதிவண்டியில் ஏறிய சமயம், இளங்குமரன் தனது மிதிவண்டியில் ஏறியவனாய் வெளியே வந்தான். அவனுடன் அம்பிகாவும் வந்து நின்று குமரனிடம் மதிய உணவை ஒழுங்காக உண்ணுமாறு கூறிக் கொண்டிருந்தவர், இளமயில் மிதிவண்டியில் நிற்பதைக் கண்டதும்,
“மயிலு பாப்பா! குமரனோடவே ஒட்டுக்கா சைக்கிளை ஓட்டிட்டு போகனும்! தனியா போறேன்னு புதுசா ஓட்டுறவ விழுந்து வச்சிடாத! அவன் கூடவே பத்திரமா போய்ட்டு வா மா” என்றவராய் மகனிடம் திரும்பியவர்,
“குமரா! பாப்பாவைப் பத்திரமா பார்த்துக் கூட்டிட்டுப் போ” என்றார்.
மரகதம் அம்பிகாவின் பேச்சைப் பிடித்தமின்மையுடன் ஏறிட, தாயின் பேச்சில் கடுப்பாகியிருந்த இளமயில் அம்பிகாவின் பேச்சில் குளிர்ந்தவளாய், “சரிங்க அத்தை” என்று மகிழ்வுடன் தலையாட்டினாள்.
இளமயிலை நிமிர்ந்து பார்த்த இளங்குமரனின் மனத்தில் சந்தோஷச்சாரல்.
இளமயில் பூப்பெய்திய நாளிலிருந்து அவளின் வீட்டை விட்டு எங்கேயும் வராது இருந்ததினால் அவளைக் காணும் சந்தர்ப்பம் வாய்க்காமல் போனது இளங்குமரனுக்கு. ஏனோ அவளின் வீட்டிற்குச் சென்று காணவும் பெரும் தயக்கமாக இருந்தது அவனுக்கு. அதனால் அவளைக் காணும் நாளுக்காகக் காத்திருந்தவனுக்கு, தான் நெடுநாட்களாகத் தேடி கொண்டிருந்த ரகசியத்திற்கான பதில் இன்று இளமயில் மூலம் தனக்குக் கிடைக்கப் போகிறது என்று மனம் துள்ளிக் கொண்டிருந்தது.
பாதுகாப்பாய் அவளை அழைத்துச் செல்லுமாறு கூறிய தாயின் பேச்சுக்குச் சரியெனத் தலையசைத்தவனாய் அவளை ஏறிட்டு பார்த்தவனின் கண்களுக்கு அழகியாய் தெரிந்தாள் இளமயில்.
‘பெரிய மனுஷியாகிட்டானு சொல்றதுக்கு ஏத்த மாதிரி பெரிய பொண்ணா தான் ஆகிடுறாங்க இந்தப் பொண்ணுங்க’ என்று மனத்தோடு எண்ணிக் கொண்டவனாய் அவளைப் பார்த்து சிரித்தவன் மிதிவண்டியை மிதிக்க, அவளும் அவனுக்கு இணையாகத் தனது மிதிவண்டியை மிதித்துச் சென்றாள்.
சில நொடிகள் இருவருக்கும் மற்றவரின் முகத்தினைக் காணவும் பேசவும் தயக்கமும் கூச்சமும் தடைப் போட, இருவரும் மற்றவரைத் திரும்பி திரும்பி பார்த்தவர்களாய் ஏதும் பேசாது மிதிவண்டியை மிதித்துக் கொண்டிருந்தனர்.
சில அடி தூரம் கடந்து சென்றதும் மிதிவண்டியை மிதித்தவாறே இளங்குமரன் தனது சட்டைப்பையில் இருந்த தேன்மிட்டாயை எடுத்து அவளிடம் நீட்ட, அதைப் பார்த்துக் கண்கள் மின்ன சிரித்தவளாய், “தேங்க்ஸ் இளா மச்சான்” என்றவள் அந்தத் தேன்மிட்டாயை எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டாள்.
“நீ ஏன் இளா மச்சான் என்னைப் பார்க்க வரலை?” தேன்மிட்டாய் தித்திப்பாய் உள்ளே இறங்கிக் கொண்டிருக்க அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“நீ ஏன் எங்க வீட்டுக்கு வரலை?” அவளைப் பார்த்துக் கேட்டான் அவன்.
“அட நீ வேற இளா மச்சான்! என்னை வீட்டுக்குள்ள வச்சி பூட்டாத குறையா அம்மா எங்கேயும் விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க. இதுல காலைல வெறும் வயித்துல அவங்க குடிக்கக் கொடுத்த நல்லெண்ணெய்யும் பச்சை முட்டையும் ஏன்டா வயசுக்கு வந்தோம்னு ஆகிட்டு மச்சான். நல்ல வேளை அம்பி அத்தை தான் வந்து காப்பாத்தினாங்க. தினமும் முட்டை, மீனு, கறினு நல்லா சமைச்சு கொண்டாந்தாங்க அத்தை. உளுந்து களி, கஞ்சினு அம்மா ஒரு பக்கம் கவனிப்பு. இப்படி நம்மளை பார்த்து பார்த்து கவனிக்கிறதுக்காகவே அடிக்கடி வயசுக்கு வரலாம் இளா மச்சான்” என்று கண் சிமிட்டிச் சிரித்தவாறு அவள் கூற,
“அது மட்டுமா மச்சான். எனக்காக ஸ்பெஷலா ஃபங்ஷன் வேற நடந்துச்சே! தியாகு மாமாவும் அம்பி அத்தையும் எனக்கு மாலை போட்டுப் புதுத் துணி, கண்ணாடி, சோப்பு டப்பா, வளையலுலாம் வச்சி சீர் கொடுத்தாங்க. புடவைக் கட்டிவிட்டு போட்டோலாம் எடுத்தாங்க. நீ ஏன் வரலை இளா மச்சான்?” என மீண்டுமாய் அக்கேள்வியில் வந்து நின்றாள் இளமயில்.
“இல்ல உங்கம்மா என்னைக் கூப்பிடவே இல்லை மயிலு. அப்பா அம்மா கூப்பிட்டாங்க தான். ஆனாலும் ஆன்டி கூப்பிடாம வர பிடிக்கலை” நேரடியாகவே மனத்திலுள்ளதை அவன் கூறிட,
“அம்மா கூப்பிடலையா? ஆனா ஏன் கூப்பிடனும்? நீ என்ன வேற வீட்டு ஆளா உன்னைப் பத்திரிக்கை வச்சி கூப்பிடுறதுக்கு! ரொம்பத் தான் பண்ற இளா மச்சான். உன் வீட்டுல ஒரு ஃபங்ஷன்னா என்னைக் கூப்பிடனும்னு காத்துட்டு இருப்பேனா என்ன? நானே முன்னாடி வந்து எல்லா வேலையும் இழுத்து போட்டுச் செஞ்சிருப்பேன். நீயும் அந்த மாதிரி வந்து செஞ்சிருக்கனும். நீ வருவனு நான் எதிர்பார்த்து ஏமாந்து போனேன் தெரியுமா” என்று பொங்கிக் கொண்டு பேசியவள் சோகமாய் உரைத்து முடித்தாள்.
“சரி சரி இனி உங்க வீட்டுல நடக்குற ஃபங்கஷனுக்குலாம் முன்ன வந்து வேலை பார்த்துடுறேன் சரியா” அவளைச் சமாதானம் செய்தான்.
மிதிவண்டியை மெல்லமாக மிதித்தவாறே இருவரும் பேசிக் கொண்டு சென்றிருக்க,
“மயிலு நான் கேட்டேனே அந்தக் கேள்வி! அது ஞாபகம் இருக்கா?” சற்றுத் தயங்கியவாறே கேட்டான் இளங்குமரன்.
“என்ன கேள்வி? நான் தானே உன்கிட்ட எப்பவும் பாடத்துல கேள்வி கேட்பேன். நீ என்ன என்கிட்ட கேட்ட?” புரியாத பார்வையுடன் கேட்டிருந்தாள்.
“அதான் மயிலு! பொண்ணுங்க வயசுக்கு வரதுனா என்னது? அதுக்கு என்ன மாதிரி வயிறு வலி வரும்னு கேட்டிருந்தேனே” என்று அவன் கேட்டதும்,
“என்ன மயிலு? என்னாச்சு?” தனது மிதிவண்டியையும் நிறுத்தியவனாய் கேட்டான்.
“அது வந்து! அது.. வந்து மச்சான்” என்று ராகமாய் இழுத்தவளோ, ‘அய்யோ இதை எப்படி நான் இவன்கிட்ட சொல்லுவேன்’ என்று கூச்சத்தில் உள்ளுக்குள் நெளிந்து கொண்டிருந்தாள்.
“நான் அப்புறமா சொல்றேன் குமரா. ஸ்கூலுக்கு மணியாச்சு! வா நாம போகலாம்” என்று கூறியவளாய் அவனைத் திரும்பியும் பார்க்காது மிதிவண்டியை வேகமாய் மிதித்து முன்னே சென்றிருந்தாள் இளமயில்.
“மயிலு! ஹே மயிலு! நில்லு” என்று கூறியவாறே அவள் பின்னோடு சென்றிருந்தான் இளங்குமரன்.
அன்று மாலை அம்பிகாவுடன் அரட்டை அடித்தவாறு சமையலறையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்த இளமயிலின் ஜடையைப் பிடித்திழுத்து விட்டு இளங்குமரன் ஓடிச் செல்ல, “இளா மச்சான் உன்னை என்ன செய்றேன் பாரு!” எனக் கோபத்தில் கத்தியவளாய் அவன் பின்னே அடிக்கப் பாய்ந்து சென்றவளை நோக்கி,
“ம்ப்ச் ஆரம்பிச்சிட்டீங்களா உங்க சேட்டையை!” என்று அலுத்துக் கொண்டவராய், “மயிலு இங்க வா” என்று அழைத்தார் அம்பிகா.
“இன்னிக்கு காலைலருந்து என் ரிப்பனை அவுத்துட்டே இருக்கான் அத்தை. இன்னிக்கு அவனை விடுறதா இல்லை” வீட்டினுள்ளேயே அவன் பின்னே துரத்திக் கொண்டு ஓடியவாறே கத்தியவள்,
“இளா மச்சான் நில்லு! என் கையால ஒரு கொட்டு வாங்கிடு! விட்டுடுறேன்” என்று அவனிடம் கூறியது அச்சுப்பிசகாமல் தனது வீட்டிற்குள் நுழைந்த மரகதத்தின் காதினுள் விழ, கோபம் தலைக்கேறியது அவருக்கு.
“காலைல அவ்ளோ படிச்சு படிச்சு சொல்லி அனுப்பிருக்கேன். என்ன செஞ்சிட்டு இருக்கா இவ” என்று ஆத்திரம் கொண்டவராய் விறுவிறுவென இளங்குமரனின் இல்லத்தை நோக்கிச் சென்ற மரகதம்,
அங்கே இளங்குமரனின் இரு கைகளையும் தனது இரு கைகளால் பிடித்து அவனெதிரே நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்த மகளைக் கண்டதும் கோபத்தின் உச்சத்தைத் தொட்டவராய்,
“அடியேய் என்னடி செஞ்சிட்டு இருக்க?” என்று கேட்டவாறு மகளின் அருகே வந்தவர் அவளின் முதுகில் படபடவென அடித்திருந்தார்.
“ஆஆஆஆ அம்மா” என்று அலறியவளாய் முதுகின் பின்னே கைக்கொண்டு தேய்த்தவாறே தாயை அவள் நோக்க,
“அவன் கூட விளையாடக் கூடாது! மச்சான்னு கூப்பிட கூடாதுனு காலைல அவ்ளோ சொல்லி அனுப்பிருக்கேன். எதையும் காதுல வாங்காம உன் இஷ்டத்துக்கு ஆடிட்டு இருக்க” என்று மேலும் அவளை நோக்கி அவர் அடிக்கப் போக,
“நிறுத்துத் தங்கச்சி” என்று வீட்டு வாசலில் இருந்து தியாகராஜனின் குரலும், “மரகதம்” என்ற அம்பிகாவின் குரலும் தான் அவரைத் தடுத்து நிறுத்தியது.
தாயின் அடிக்குப் பயந்தவளாய் குமரனின் பின்னே சென்று நின்று அவனின் கைகளைப் பிடித்தவாறு மிரட்சியுடன் தாயைப் பார்த்திருந்த இளமயிலிடம் வந்த தியாகராஜன் அவளின் தலையை வாஞ்சையுடன் தடவியவராய், “பத்தாவது படிக்கிறீங்க இரண்டு பேரும். படிக்காம என்ன விளையாட்டு இது? உங்களுக்கு தினமும் காலைல ஸ்கூல்ல ரிவிஷன் டெஸ்ட் இருக்கு தானே. போங்க போய்ப் படிங்க” என்றதும் இளங்குமரனும் இளமயிலும் மாடியில் இருக்கும் இளங்குமரனின் அறைக்குச் சென்றனர்.
இருவரும் அங்கிருந்து நகர்ந்ததும் மரகதத்தின் அருகே வந்த தியாகராஜன், “என்ன தங்கச்சி இது? வளர்ற பிள்ளைங்க மனசுல நாமளே ஆசையை வளர்க்கிற மாதிரி என்ன பேச்சு இது. எதை நாம செய்யக் கூடாதுனு சொல்றோமோ அதை தான் செய்வோம்னு அவங்களை அடம்பிடிக்க வைக்கும் வயசு இது! இப்ப போய் அவனை இப்படிக் கூப்பிடாத! பேசாத பழகாதனு சொல்றதுலாம் அவங்களை நாமளே அதைச் செய்ய வைக்கிற மாதிரி ஆகிடும். இது நாம அவங்களைக் கண்காணிக்க வேண்டிய வயசு தானே தவிர அவங்களுக்கு அட்வைஸ் செய்ய வேண்டிய வயசு இல்லை. அவங்களை நம் பார்வை வட்டத்துக்குள்ள வச்சிக்கனும். எதுவும் தவறு செய்ற மாதிரி இருந்தா அதை எடுத்துச் சொல்லனும். அதுவும் அட்வைஸ்ஸா சொல்ல கூடாது. டீச்சரா இருக்க நீங்களே இப்படிச் செய்யலாமா” என்று ஆதங்கத்துடன் கேட்டிருந்தார் தியாகராஜன்.
“ஏன் மரகதம் என் பிள்ளை மேல் நம்பிக்கை இல்லையா உனக்கு? இல்லை எங்க மேல நம்பிக்கை இல்லாம போச்சா?” என்று ஆற்றாமையுடன் அம்பிகா கேட்க,
“அய்யோ அப்படி இல்லை அம்பி. ஒத்தையா நின்னு பொட்ட பிள்ளையை வளர்க்கிறேனே. நாளைக்கு ஊரு உலகம் என் பொண்ணைத் தப்பா பேசிட கூடாதேன்ற பயத்துல தான் இப்படி நடந்துக்கிட்டேன் அம்பி” என்று கண்ணீருடன் உரைத்தார் மரகதம்.
“ஏன் மரகதம்! நாளைக்கு நம்ம பிள்ளைங்க காதலிக்கிறேன்னு வந்து நின்னா நீ ஒத்துக்க மாட்டியா? என் மகனுக்கு உன் மகளைக் கட்டி கொடுக்க மாட்டியா?” அம்பிகா மரகதத்தின் கையைப் பிடித்தவாறு கேட்க,
“அடியேய் என்ன பேச்சு இது?” தியாகராஜன் அம்பிகாவை முறைக்க,
“இல்லங்க எனக்கு இவ மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சாகனும். இது நடக்கனும்னு நான் சொல்லலை. அப்படி நடந்தா இவளோட மகளை நம்ம மகனுக்குக் கட்டிக் கொடுக்கிற தகுதில நாம இல்லைனு இவ நினைக்கிறாளானு எனக்குத் தெரிஞ்சாகனும்” என்றார் அம்பிகா.
“அய்யோ அம்பி! தகுதி அது இதுனு ஏன் இப்படிப் பெரிய வார்த்தைலாம் பேசுற! அப்படிப் பார்த்தா எனக்குத் தான் தகுதி இல்லைனு சொல்லனும்” என்று கலங்கியவாறு உரைத்த மரகதம்,
“பொண்ணைத் தப்பா வளர்த்துட்டேன்ற பேச்சு வந்துட கூடாதேனு தான் கண்டிச்சு வளர்க்கனும்னு நினைச்சேனே தவிர உன் மகனுக்கு என் மகளைக் கட்டிக் கொடுக்க மனசில்லாம நான் அப்படிப் பேசலை அம்பி” அம்பிகாவின் கைகளைப் பிடித்து அழுத்தியவராய் மரகதம் உரைக்க,
“இது போதும் மரகதம். அவங்க இரண்டு பேருமே சின்னப் பசங்க. அப்படித் தான் அவங்க பழகுறாங்க. அவங்க வாழ்க்கை பத்தின முடிவு எடுக்க அவங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீயா ஏதாவது பேசி படிப்புல இருக்க அவங்க கவனத்தைத் திசை திருப்பி விட்டுடாத” என்று அம்பிகா தெளிவாகச் சொல்லவும்,
“சாரிடி அம்பி! சாரி அண்ணா” என்று மன்னிப்பு கேட்டார் மரகதம்.
இங்கே பெற்றோர்கள் ஒருவாறாகப் பிரச்சனையைப் பேசி சரி செய்து இருக்க, அங்கே இளங்குமரன் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தான்.
மரகதத்தின் இப்படியான பேச்சுகள் இளங்குமரனுக்குப் பிடித்தமில்லை. அதனாலேயே இளமயிலின் வீட்டிற்கு அவசர தேவையைத் தவிர முடிந்த வரை போகவே மாட்டான். அதனால் தான் இளமயிலின் விழாவிற்கும் செல்லவில்லை அவன்.
அதனால் இதையெல்லாம் பெரிதாகக் கண்டுகொள்ளாது இளங்குமரன் படிப்பில் கவனமாக இருக்க, அதே நேரம் புத்தகத்தில் கண் இருந்தாலும் கருத்தில் பதியாத இளமயிலின் உள்ளமோ, “நாம இளா மச்சானை லவ் பண்ணிடுவோமோனு அம்மா பயப்படுறாங்களோ? அதான் மச்சான்னு கூப்பிட கூடாதுனு சொல்றாங்களோ?” என்று சிந்தித்தவாறு இருக்க, கண்களோ இளங்குமரனின் முகத்தினை ஆராய்ந்து கொண்டிருந்தன.
அரும்பு மீசையும், பருக்கள் நிறைந்த ஒட்டிய கன்னமும், ஒடுங்கிய தேகமுமாய் இருந்த குமரனை பார்த்தவளோ, “இவனை நான் லவ் பண்ணுவேனா?” என்று தனக்குள்ளாகவே கேள்வி கேட்டுக் கொண்டாள்.
“ஏன் இவனை லவ் பண்ணா என்ன தப்பு?” உடலின் ஹார்மோன் மாற்றங்கள் அவன் மீது ஈர்ப்பை உண்டாக்கி உள்ளத்தில் ஆசையைத் தூவிட, மனத்தில் தோன்றிய குறுகுறு உணர்வுடன் அவனைப் பார்த்திருந்தாள் இளமயில்.
உடலின் பருவ மாற்றங்கள் இளமயிலின் உள்ளத்தினில் எதிர்வினையாற்ற தொடங்கியிருந்தன.