அந்த வாரக் கடைசியில், அஜயின் தம்பி சஞ்சயும் சென்னை வந்து விட்டான். வந்த உடனேயே,
“ஏன் அஜ்ஜூ , உடம்ப பார்க்க வேண்டாமா?” என ஆரம்பித்து விட்டான்.
சஞ்சய் அஜயிடம் நேரடியாகக் கேட்டாலும், அம்ருதாவுக்கு சற்று வருத்தமே. பொதுவில் அஜய், யாரும் அவனை ஒரு சொல் சொல்ல முடியாதபடி அவனளவில் சரியாகத் தான் இருப்பான்.
ஆனால் இந்த நிகழ்வுக்குப் பிறகு ஒரு வாரமாக, தெருவில் போகும் நாயோ, பூனையோ மட்டும் தான் அவர்கள் வீட்டிற்கு வந்து அறிவுரையை அள்ளித் தெளிக்கவில்லை.
வீடு வந்த சில நாள்களிலேயே கோபத்துடன் அமுதன் தூத்துக்குடி திரும்பி இருக்க, தமயந்தியும், செல்வியும் இன்னும் சென்னை வாசம் தான். கருணாகரன் செல்வியை எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும், அவர் மறுத்து விட்டார்.
சஞ்சய் வருவதாக சொல்லி இருக்க, சின்ன மகன் வரும் வரையிலாவது இங்கேயே இருக்கலாம் என்று விட்டார். இவர்கள் எல்லாருக்கும் நடுவில் மாட்டிய அம்ருதா பாடு திண்டாட்டம் தான்.
ஒவ்வொரு நாளும், மூன்று வேளை என்ன சமைப்பது, யாருக்கு என்ன கொடுப்பது என்று யோசித்தே ஒரு வழி ஆகி விட்டாள். அஜயும், அவள் கூறுவதை ஏற்காமல் போவதற்கு தினமும் ஏதாவது ஒரு காரணம் வைத்திருந்தான்.
சஞ்சய் வேறு சும்மா இருக்காமல்,
“அஜ்ஜூ, நீ என்கூட கிளம்பி சிங்கப்பூர் வந்துடுறியா? அங்க பெஸ்ட் ட்ரீட்மெண்ட் இருக்கும். இப்போ உடம்பைக் குறைக்குறதுக்கு நிறைய மெடிசின்ஸ் வந்திருக்கு. சர்ஜரி கூட இருக்கு. நீ என்னிக்கு டயட்லேர்ந்து வெயிட் குறைக்க? அதெல்லாம் நடக்காத விஷயம்” என்று வேறு விபரீத யோசனை சொன்னான்.
இங்கு வெளியில் எல்லாரிடமும் அக்கறையாகப் பேசியவன், அவன் மனைவி காவ்யா அழைக்கும் போது சமாளிக்கத் திணறினான். அவன் கிளம்பி சென்றதில் அவளுக்கு ஏக கடுப்பு. போக வேண்டாம் என்று தடுத்தவளை சரிக்கட்டி வருவதற்குள்ளேயே சஞ்சய் ஒரு வழி ஆகி இருந்தான்.
“ஏன் சஞ்சய், அது தான் அத்தான் இப்போ நல்லா இருக்காரே. நீ எதுக்கு போகனும்? நம்ம எப்பவும் போல லீவுக்கு போகலாம்” என்று பலமுறை கூறி விட்டாள்.
“ஏய், என் அண்ணன்டி அவன். அவனுக்கு ஒன்னுன்னா நான் பார்க்காம யாரு பார்ப்பா? நான் உன்னைக் கூப்பிடலை. நான் மட்டும் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுறேன். நாளைக்கு எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா இப்படி தான் சொல்லுவியா?” என்க, அதற்குப் பதில் இல்லை அவளிடம்.
இன்னும் அலைபேசியில் அர்ச்சனை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. அவன் காவ்யாவிடம் பேசுவதைக் கேட்ட ஆர்த்தி,
“ஐ, சித்தியா? குடுங்க நான் பேசுறேன்” என அலைபேசியை வாங்கி ஸ்பீக்கரில் போட்டு விட்டாள்.
சரியாக அந்த நேரம், காவ்யா
“நம்ம கட்டுப்பாட்டை மீறி உடம்புக்கு நோய் வர்றது வேற விஷயம். வாயைக் கட்டாம தின்னே வினைய இழுத்து வைச்சா அது யார் தப்பு?” என்க, அந்த நிமிடம் அங்கு பெரும் நிசப்தம்.
எல்லாரும் வரவேற்பறையில் தான் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, காவ்யா பேசியது துல்லியமாகவே கேட்டது.
சஞ்சய் அவசரமாக அண்ணனைப் பார்க்க, பெரியவர்கள் முகத்திலோ சங்கடம். ஆனால் அஜய் முகத்தில் எதையும் காண்பிக்கவில்லை.
“என் தப்பு தான் காவ்யா. அதுக்கு என்ன பண்ணலாம்?” என்று விட,
அங்கு அவளுக்கு,
“அத்த்தான்ன்ன்ன்…..” என்று தந்தி அடித்தது.
“நல்லா இருக்கியாமா? ப்ரக்யா எப்படி இருக்கா?” என்று அவர்களின் நலம் விசாரிக்க, சஞ்சய்க்கு முகத்தை எங்கு கொண்டு வைப்பது என்று தெரியவில்லை.
“ஆ, ந….நல்லா இருக்கோம் அத்தான்” என்றவள் குரல் அவளுக்கே கேட்டதா இல்லையா என்று தெரியவில்லை.
“சித்திட்ட சாரி சொல்லு ஆரு. இந்த மாதிரி பெர்மிஷன் கேட்காம ஃபோன வாங்கி ஸ்பீக்கர்ல எல்லாம் போடக் கூடாது” என்று அவளைத் திருத்தினான்.
“சாரி சித்தி” என்ற சிறு குரலில் கூறி விட்டு அலைபேசியை சஞ்சயின் கைகளில் திணித்த ஆர்த்தி, அன்னையின் மடிக்குச் சென்று விட்டாள்.
“நீ பேசிட்டு வாடா, நாம அப்புறம் பேசலாம்” என அஜயும் எழுந்து விட,
“அஜ்ஜூ சாரி, அவ ஏதோ தெரியாம சொல்லிட்டா. அவளை விட்டுட்டு வந்துட்டேன்னு கோவம், வேற ஒன்னும் இல்லை” என்று சஞ்சய் தமையனிடம் மன்னிப்பு வேண்ட,
“டேய் சீ, இதெல்லாம் ஒரு விஷயமா, ஃப்ரீயா விடு. நீ பொறுமையா பேசிட்டு வா” என்று விட்டு மகளை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றான்.
அம்ருதாவுக்கு வருத்தமும், கோபமும் ஒரு சேர இருந்தாலும், எதையும் யாரிடமும் கேட்கும் சூழல் இல்லை. தமயந்தியும் மகளை வருத்தமாகப் பார்க்க, அவளும் எழுந்து அஜயைக் காண சென்று விட்டாள்.
“அது ஒன்னுமில்லை சம்பந்தி, சின்ன மருமக மனசில எதுவும் வைச்சிக்க மாட்டா. படபடன்னு பேசிடுவா. ஆனா கல்மிஷம் இல்லாத பொண்ணு” என செல்வி வேறு காவ்யாவுக்கு வக்காலத்து வாங்க, தமயந்தி ஒரு புன்னகையுடன் அதைக் கடந்து விட்டார்.
சஞ்சய் வந்ததும், செல்வி அவனைக் காய்ச்சி எடுக்க,
“மா, விடும்மா. அவளைப் பத்தி தான் தெரியும்ல. என்னைய என்ன பண்ண சொல்ற? அவ வாயை யாராலயும் அடைக்க முடியாது. சும்மாவே ஆடுவா. இப்போ அவளுக்கு ஒரு காரணம் வேற கிடைச்சிருச்சு. இனிமே சலங்கை கட்டிட்டு தான் ஆடுவா” என சலிப்பாகக் கூறினான்.
அறைக்கு வந்த அம்ருதா, அஜயின் முகத்தையே பார்க்க, அது எப்பவும் போல தான் இருந்தது. அவனது அலைபேசியில் ஆர்த்திக்கு எதையோ காட்டிக் கொண்டிருந்தவன், மனைவியின் பார்வை தந்த குறுகுறுப்பில் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
அதில் இருந்த வாட்டம் புரிய,
“ஆரும்மா, அப்பாக்கு தண்ணீ எடுத்து வர்றீயா?” என்க, ஆர்த்தி வேகமாக தலையசைத்து விட்டு வெளியேறினாள்.
“என்ன அம்மு யோசனை?” என மனைவியிடம் கேட்க,
“காவ்யா எப்படி பேசினா பார்த்தீயா? உனக்கு கொஞ்சம் கூட கோவம் வரலியா அஜ்ஜூ?” என்றாள்.
“எதுக்கு கோவப்படனும்? அவ சொன்னது கரெக்ட் தானே?”
“கரெக்ட், தப்புன்னு சொல்ல வரலை அஜ்ஜூ. இது தேவையில்லாத பேச்சு தானே? நம்மள ஹர்ட் பண்ற மாதிரி எதுக்கு இப்படி பேசனும்?”
“உன்னை மாதிரி என்னால இதெல்லாம் ஈசியா எடுத்துக்க முடியாது அஜ்ஜூ. ஏன் இதுக்கெல்லாம் நாம் இடம் கொடுக்கனும்? அடுத்தவங்க நம்மளை கை நீட்டி குறையா ஒன்னு சொல்ல முடியாதபடி தான் அஜ்ஜூ நம்ம வாழ்க்கை இருக்கனும்” என்றவளுக்கு மனம் ஆறவில்லை.
“நாம ஒன்னும் உங்க தம்பிய வர சொல்லலியே. அவரா தானே வந்தாரு. அவர் இங்க வரக்கூடாதுன்னா அவ பிடிச்சு வைக்க வேண்டியது தானே. அதுக்கு எதுக்கு உங்களைப் பேசனும்” என்று அம்ருதாவும் அதை விடுவதாக இல்லை.
“அப்பவும் நீ அவங்க மூஞ்சில கரியைப் பூசுற மாதிரி உன் வெயிட்டைக் குறைக்க மாட்ட. அதானே?” என்று மனைவி கோபமாகக் கேட்க, கணவனோ கலகலவென சிரித்தான்.
“நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீ என்ன காமெடி பண்ண மாதிரி சிரிச்சிட்டு இருக்க?”
“இங்க பாரு அம்மு. எந்த விசயத்தையும் நமக்காகத் தான் பண்ணனுமே ஒழிய ஊருக்காகப் பண்ணக் கூடாது. இதெல்லாம் ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடனும்”
கணவன் சமாதானம் எல்லாம் ஒன்றும் எடுபடவில்லை அம்ருதாவிடம். அதற்குள் ஆர்த்தி வந்து விடவும், அவனை முறைத்துக் கொண்டே வெளியேறினாள்.
மனைவியிடம் ஆறுதலாக பேசி விட்டாலும், அஜய்க்கு அவளைக் குறித்து வருத்தம் தான். மாற்ற முடியாத விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது தானே சிறந்த வழி. எந்நேரமும் அடுத்தவர் விருப்பத்தை நிறைவேற்றுவது போல வாழ வேண்டுமானால் வாழ்க்கை நரகமாகி விடுமே.
அஜய்க்கு நன்றாக தெரியும், அம்ருதா அவனுக்காக தான் இவ்வளவு யோசிக்கிறாள் என்று. அவளை யாரையும் ஒரு குறையும் சொல்ல முடியாத படி தான் எல்லாவற்றிலும் நேர்த்தியாக இருப்பாள். அதை கணவனிடமும் எதிர்பார்ப்பதில் தவறொன்றும் இல்லையே.
அஜய் இந்த யோசனையிலேயே இருக்க, சஞ்சய் அவனைத் தேடி வந்தான். தமையனின் யோசனை படிந்த முகத்தைக் கண்டவன்,
“அஜ்ஜூ, கவலைப்படாத. சரி பண்ணிடலாம். கிருபா அண்ணா டாக்டர் சொன்னதெல்லாம் சொன்னாங்க. சீக்கிரமா ரிசல்ட்ஸ் வேணும்னா இந்த மாதிரி தான் ஏதாச்சும் பண்ணனும். சிங்கப்பூர் வர முடியாதுன்னா நாம இங்கயே *** கம்பெனி பிராஞ்ச்ல விசாரிப்போமா?
நான் நிறைய ரிசர்ச் பண்ணி பாத்துருக்கேன். அவங்களோட பேக்கேஜ் எல்லாம் விசாரிச்சேன், நல்ல ரிவ்யூ போட்டு இருக்காங்க. ஒரு மாசத்துல பத்து கிலோ குறைச்சிடலாமாம். ஏதோ பெல்ட் மாதிரி போட்டுட்டு சுத்தினா கொழுப்பெல்லாம் கரைஞ்சிடுமாம்.
நீ டயட், எக்சர்சைஸ்னு எதுவும் செய்ய தேவை இல்லை. அதுக்கப்பறம் லிப்போசக்ஸன்னு கூட ஒன்னு சொன்னாங்க. அது பண்ணா கொழுப்பை உறிஞ்சு எடுத்துடுவாங்களாம். சோ, ஒரு ரெண்டு மாசத்துல 20 – 25 கிலோ குறைச்சிடலாம். அப்புறம் உனக்கு எல்லாம் நார்மலா ஆகிடும்” என தான் ‘கூகுள்’ செய்து திரட்டிய தகவல்களை வேத வாக்காக எடுத்துக் கொண்டு கூறினான்.
சஞ்சய் கூறியதைக் கேட்ட அஜய்க்கு ஒரு பக்கம் முயன்று பார்த்தால் என்ன என்று தான் தோன்றியது. அவனுக்கு பெரிதாக கவலை இல்லை என்றாலும், கடந்த வாரம் முழுவதும் கலங்கிய மனதுடன் சுற்றிய மனைவியின் முகம் தான் அவன் மனக்கண்ணில் தோன்றியது.
உணவுக்கட்டுப்பாட்டில் உடல் எடையைக் குறைப்பது எல்லாம் அவனால் முடியாத விஷயம். அதுவும் இப்பொழுது தீவிர உடற்பயிற்சி எல்லாம் உகந்தது இல்லை என்று வேறு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்க, இது போல் ஏதாவது செய்தால் தான் உண்டு.
அவனுக்குமே அவன் பலம், பலவீனம் எல்லாம் தெரியுமே. எனவே இந்த வழியை முயற்சிப்பது அவன் திட்டத்தின் கடைசி கட்டத்தில் இருந்தது தான். சஞ்சய் சொல்லவும் இன்னுமே உத்வேகம் கூடியது. இழக்க ஒன்றுமில்லையே என்பது போல் அவனாக ஒரு கணக்கு வைத்துக் கொண்டான்.
அவனும் சஞ்சய் கூறிய சில சிகிச்சை முறைகள் குறித்துத் தேடி படித்திருந்தான். ஆனால் பக்க விளைவுகள் குறித்த ஒரு பயம் இருக்க, அதை ஒதுக்கி வைத்திருந்தான்.
‘முதலில் உணவுக் கட்டுப்பாட்டு முறைகளை முயற்சி செய்து பார்க்கலாம். சரி வரவில்லை என்றால் சஞ்சய் கூறியது போல் முயற்சிக்கலாம்’ என்று முடிவு செய்தவன் அம்ருதாவுக்குத் தெரியாமல் இதை செய்து அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தான்.
அடுத்த சில தினங்களில், பெரியவர்கள் மூவரும் தூத்துக்குடி திரும்பி இருக்க, சஞ்சயும் அவர்களுடன் சென்று விட்டான். அதன் பின்பே அம்ருதாவுக்கு மூச்சு விட முடிந்தது. அவர்கள் வீட்டிலும் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பிக் கொண்டிருந்தது.
அம்ருதா அவளது பேக்கரியை மீண்டும் திறந்திருக்க, ஆர்த்தியும் பள்ளி செல்ல ஆரம்பித்து விட்டாள். மருத்துவர் ஆலோசனைப்படி அஜய் இன்னும் ஒரு வாரம் நன்றாக ஓய்வு எடுத்து அவனும் அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டான்.
அலுவலகம் திரும்பியதும், பார்ப்பவர்கள் எல்லாருக்கும் பதில் சொல்லி அஜயே கொஞ்சம் சோர்ந்து விட்டான் தான். உண்மை அக்கறை ஒரு பக்கம் என்றாலும், சில கேலி, கிண்டல்களும் இல்லாமல் இல்லை.
அவன் இடைவேளை நேரத்தில், ஏதாவது பழங்கள் உண்பதைப் பார்த்தால்,
“என்ன அஜய் சார், ஒரே டயட்டா? இனிமே இன்ஸ்டால (Instagram) உங்க பத்தியச் சாப்பாடு தான் ரீல்ஸா போடுவீங்களோ?” என்ற நக்கல் பேச்சுகளையும் புன்னகையுடன் கடந்து வர முனைந்தான்.
அது ஒன்றும் அவ்வளவு சுலபமாக இல்லை. வீட்டில் இருந்த வரை, அம்ருதா அவனைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டாள். முழுதாக அவள் சொல்வதைக் அஜய் கேட்காவிட்டாலும், ஓரளவு சத்தான, எளிதான உணவுகளைத் தான் கொடுத்தாள்.
அவள் பேக்கரியை மறுபடியும் திறந்த உடனேயே அவனுக்கு சோதனைக் காலம் ஆரம்பித்து விட்டது எனலாம். வெண்ணையும், சர்க்கரையும் சேர்ந்து ஒவ்வொரு கேக்கும் அவள் ‘பேக்’ (bake) செய்யும் போது, வாசனை மூக்கைத் துளைக்கும். அதிலும் அந்த ஆரஞ்ச் கேக் செய்தாள் என்றால், வீதிக்குள் நுழையும் போதே மணக்கும்.
வீட்டில் இருக்கும் போது, சில நேரம் உதவி செய்கிறேன் பேர்வழி என்று அங்கேயே கூட அமர்ந்து கொள்வான். ஒவ்வொன்றையும் ருசி பார்க்கிறேன் என்று வேறு அவளைப் பாடாய்ப் படுத்துவான். அம்ருதா அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளாத குறை தான்.
அதனால் அவன் அலுவலகம் திரும்பிய பின்னர் தான், அம்ருதாவுக்கு கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு. ஆனால் அலுவலகம் அஜய்க்கு உதவிக்கரம் நீட்டவில்லை போலும். மனைவியின் உணவுப் பட்டியல் எல்லாம் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல், முன்னாள் நேசங்கள்(?) கணக்கே இல்லாமல் கண்ணிலும், கருத்திலும் வலம் வந்து இம்சித்தது.
திரும்பவும் காலை, மாலை தேநீர் இடைவேளைகளில் வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா, இன்னும் இதர இதர, அஜயை ஏக்கமாகப் பார்க்க, வேறு வழி இல்லாமல் அவைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டியே ஆக வேண்டிய கட்டாயம் அவனுக்கு!
விளைவு, சில வாரங்களில் சற்றே சரியத் துவங்கி இருந்த எடை மீண்டும் ஏறத் துவங்கியது. தினமும் அம்ருதா தான் காலையில் அவனை எடை பார்க்க சொல்வாள். ஏற்றம் கண்டு அவள் புரியாமல் அவனைப் பார்க்க,
“அது இந்த மாதிரி டயட் இருக்கப்போ, வெயிட் ஏறி தான் குறையும் போல” என்று வேறு புதிதாக ஒரு கதை அளந்தான்.
அவள் நம்பாமல் அவனைப் பார்த்து,
“இல்லையே..அது….பிறந்த குழந்தைகளுக்கு வேற மாதிரில்ல சொல்வாங்க” என்று யோசனையாகக் கூறினாள்.
அதற்குள் அஜய்,
“ஹேய் அம்மு நிஜமா தான் சொல்றேன்” என்று சத்தியம் செய்யாத குறையாக அவளை சமாளித்தவன், நேராகப் போய் நின்றது, தாம்பரத்தில் இருக்கும் **** எடைகுறைப்பு நிறுவனம் முன் தான்.
அதி தீவிர எடை குறைப்பு பேக்கேஜ் ஒன்றில் பெயரை பதிவு செய்தவன், அவர்களிடம் அவனது தற்போதைய உடல் நிலை பற்றி எதுவும் விரிவாகத் தெரிவிக்கவில்லை. அவர்களும் பணம் வந்தால் போதுமென்று பல பொறுப்பு துறப்பு படிவங்களில் கையெழுத்து வாங்கி அவனை அவர்களது கிளையில் சேர்த்துக் கொண்டனர்.
இரு மாதங்களில் இருபது கிலோ குறைத்து விடலாம், மனைவியின் கண் முன் நின்று அவள் கண்களில் வரும் பாவனையைப் பார்க்க வேண்டும் என்ற பேராவலுடன் (!) அந்த எடை குறைப்பு நிறுவனத்தில் இருந்து கிளம்பினான் அம்ருதாவின் அன்புக் கணவன்.
சஞ்சயிடம் மட்டும் விவரங்கள் தெரிவித்திருக்க, அவனுக்கு ஒரே குஷி. சில வாரங்கள் முன்னர் தான் சிங்கப்பூர் திரும்பி இருந்தான் சஞ்சய். அஜயைப் பார்த்து விட்டு தான் கிளம்பி இருந்தான். தான் சொன்னதை அண்ணன் செவி மடுத்ததில் அப்படி ஒரு உவகை தம்பிக்கு.
“சூப்பர் அஜ்ஜூ. அவங்க சொல்ற இன்ஸ்டெரெக்ஷன் எல்லாம் சரியா ஃபாலோ பண்ணு. பாரு சீக்கிரமே உனக்கு சிக்ஸ் பேக் வந்துடும்” என்று ஆர்வத்தில் கூற, அஜய்க்கு தம்பியின் ஆர்வத்தில் ஒரே சிரிப்பு.
“டேய், நீ வேற ஏன்டா? சிக்ஸ் பேக் எல்லாம் எனக்கு வேண்டாம். இருக்குற சிங்கிள் பேக் வச்சிகிட்டு மூச்சு வாங்காம நடந்தாவே போதும். சின்ன வேலை செஞ்சா கூட டயர்ட் ஆகாம கொஞ்சம் ஸ்டெமினா இருந்தா போதும். அவ்ளோ தான். வேற பேராசை எல்லாம் இல்லை” என்க,
“கண்டிப்பா அஜ்ஜூ. பாரேன் சீக்கிரமே நீ கல்யாணத்தப்போ இருந்தேல்ல அது மாதிரி சும்மா, ஜம்முனு ஆயிடுவ” என்று தன்னால் இயன்ற வரை தமையனை உற்சாகப்படுத்தினான்.
அண்ணனுக்கும், தம்பிக்கும் இதற்கும் மருத்துவ ஆலோசனை இன்றியமையாதது என்று தோன்றாதது பெரும் துரதிர்ஷ்டம். அதி விரைவு தீர்வை தேடினார்களே ஒழிய அது நிரந்தரமானதா, சரியானதா என்ற கேள்விகளே கேட்கவில்லை. நிகழ் காலத்தில் நெருக்கிக் கொண்டிருக்கும் பிரச்சனையில் இருந்து தற்காலிகமாக வெளி வரத்துடிப்பது மட்டுமே மனித மனத்தின் இயல்பு போலும்.
அஜய் அம்ருதாவுக்குத் தெரியாமல் முயற்சி செய்யப் போவதாகச் சொல்ல சஞ்சயும் அண்ணியிடம் வாயைத் திறக்கவில்லை. அலுவலகத்திற்கு அருகிலேயே அஜய் பதிவு செய்த உடல் எடைக் குறைப்பு நிறுவனம் இருக்க, சில நாள்கள் மதிய உணவு இடைவேளை நேரத்தில் அங்கு செல்வது போல் பார்த்துக் கொண்டான்.
அவர்கள் பரிந்துரைத்த பயிற்சிகள் எல்லாவற்றையும் கேள்வியே கேட்காமல் செய்தான். உணவுக் கட்டுப்பாடு தேவை இல்லை என்பது தான் இங்கு பதிவு செய்த முக்கியக் காரணம், ஆதலால் அதைக் குறித்துப் பெரிதாக கேள்விகள் இல்லை அவர்களிடம்.
பெரும்பான்மையான நேரம் இடுப்பில் தடிமனான பட்டையைக் கட்டி பல மணி நேரங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அதற்கு முன் அவர்கள் வைத்திருக்கும் கருவிகளில், பருமனான சதைப் பகுதிகளை இணைத்து அதிக அளவு வெப்பம் பரவும் படி செய்வது கொழுப்பைக் கரைப்பது ஒரு வகை பயிற்சி. அதை முடித்து வேக வேகமாக உணவை உண்பவன், இடுப்புப் பட்டையைக் கட்டிக் கொண்டே மதியம் முழுவதும் வேலையைத் தொடர்வான்.
எடை ஏதோ லேசாகக் குறைவது போல் இருந்தாலும், உடலில் வேறு சில அசௌகரியங்கள் ஏற்பட்டது. அதிக சூட்டினால் நீர்ச்சத்து குறைந்து இன்னுமே சோர்வைக் கூட்டியது. அவ்வப்போது மூச்சு விடவும் சிரமமாக இருந்தது.
இதை எல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது என்று அஜய் விடாது முயற்சிக்க, அம்ருதா கூட வேறுபாட்டை உணர்ந்து கேட்டு விட்டாள்.
அம்ருதாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவள் அறிந்த வரையில், உடல் எடை குறையக் குறைய இன்னுமே சுறுசுறுப்பாகத் தானே இருக்கும் என்று குழம்பிப் போய் அவனைப் பார்த்தாள்.
பின் அவளே, ஒரு வேளை உணவு முறை மாற்றத்தினால் அப்படித் தெரிகிறது போலும் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள். மாவுச் சத்து அதிகமாக இருக்கும் உணவு வகைகளை அதிகமாக உண்டு பழகி விட்டால், நமது மூளையும் அதற்குப் பழகி அதற்கு எதிர்பார்த்துக் காத்திருக்கும் தானே.
ஒரு வேளை அதனால் தான் அப்படி உணர்கிறானோ என்று யோசித்தவள்,
“அதெல்லாம் இல்லை அஜ்ஜூ. சாப்பாடு டைப் மாத்திருக்கோம்ல அதுக்கு உடம்பு அட்ஜெச்ட் ஆக டைம் எடுக்கும், வேற ஒன்னும் இல்ல” என்று கணவன் செய்து கொண்டிருக்கும் வேலை தெரியாமல், அவனுக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தாள் அஜ்ஜூவின் அம்மு!