மழை, கடல், நிலா, மலை, வெயில், தென்றல் என்று எதையும் கார்த்திகேயனால் வெறுக்க முடியாது. கவிஞனாக மட்டுமில்லை, ஒரு விஞ்ஞானியாகவும் அவருக்குக் கடலின் பிரமிப்பும், ஆழ்கடலின் உலகும் வியப்பில் ஆழ்த்தும். அப்படியிருக்க மகனை ‘கடல்’ என்ற சொல்லே கலங்க வைத்து, உள்ளத்தைக் கொந்தளிக்க வைக்க, எப்படி அவனை மீட்க போகிறோம் என்ற பெரும்பயம் அவரிடம்.
மெல்ல அவன் சென்ற திசையில் போக, கிடாரின் இசை காதை நிறைத்து நடையை நிறுத்தியது.
“ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யாரறிவார்” என்று கிடாரின் நரம்புகளில் விரலை மெல்ல மீட்டி இசையை அவ்வறையில் நிறைக்க விட்டான் ஆனந்தன். காற்றோடு கலந்தது இசை. அவன் வாசித்த பண்ணிசைப்புக்கு(tune) இணையாகப் பாட, ஆனந்தனின் விரல் அப்படியே கிடாரில் தன் மீட்டலை நிறுத்தியது.
எரிச்சலாக நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தான்.
“பெரிய எஸ்.பி.பி நினைப்பா? நீங்க எழுத்தோட உங்க கலையார்வத்தை நிறுத்துங்க கார்த்திக்கேயன், பாடுறார் சுருதியும் சேரல, ஒன்னும் சேரல.” பாடலின் லயம் கெட்ட கோபம் அவனிடம்.
“அடப்போடா ஆனந்தா! நான் என்ன கச்சேரியா பண்ணினேன், சும்மா பாடினேன்” என்று கார்த்திகேயன் சிரித்தாலும், அவரின் கண்கள் மகன் முகத்தை விட்டு அகலவில்லை. அப்பா தன்னையே பார்ப்பது ஆறுதலையும் அதே நேரம் அவன் ஏகாந்தம் கெட்ட எரிச்சலும் கூட,
மகன் வேண்டுமென்றே செய்கிறான் என கார்த்திகேயனுக்குத் தெரியாதா? அவரின் ஆதி அந்தம் ஆனந்தன்! அவனின் புருவ சுளிப்பிலிருந்து புன்னகை வரை ஆனந்தனின் அகராதி அவருக்கு அத்துப்படி.
“ஏகாந்தம் எஸ்.பி.பி குரல் அளவுக்கு எல்லாருக்கும் இனிக்கிறதில்ல ஆனந்தா! ஏகாந்தமும் தனிமையும் வேற வேற” என்றார் மிகவும் வாஞ்சையான குரலில். அவன் உலகில் அதிகம் கேட்ட குரல் கார்த்திகேயனுடையதே! அவனின் தேவாரம் அவர் குரலும் பேச்சும்.
அந்த குரல் நிச்சயம் எஸ்.பி.பியின் குரல் கொடுத்த நிம்மதியையும் நிறைவையும் ஆனந்தனுக்குக் கொடுத்தது. வெள்ளை நிற டீஷர்ட், ஜீன்ஸ் கையிலிருந்த கிடாரை நெஞ்சோடு சேர்த்தணைத்து அப்பாவின் பேச்சில் கண்மூடி அந்த பெரிய மர ஸ்டூலில் உட்கார்ந்திருந்த மகனை, அப்படியே அணைத்து ஆறுதல் சொல்ல தவித்தது கார்த்திகேயன் மனம்.
‘Pain is Personal’(பெயின் இஸ் பெர்சனல்) என்பதை அனுபவமாக உணர்ந்தவர் கார்த்திகேயன். ஆறுதல் என்பதெல்லாம் அரிதாரம் போல வார்த்தைகள் என்று நினைப்பார்.
“You can’t simply sit and stare at your wounds”(சும்மா உட்கார்ந்து உன் காயங்களைப் பார்த்துட்டே இருக்க முடியாது) என்றதும் ஆனந்தனுக்கு இதெல்லாம் கேட்டு அயர்ச்சியாக இருந்தது.
“என்ன வேணும் கார்த்திக்? யார் இங்க சும்மா இருக்கிறது, உங்களுக்குத்தான் இன்னிக்கு லீவ், எனக்கு வேலையிருக்கு…அண்ட் இட்..” என்று ஆரம்பித்தவன் வார்த்தையை முழுங்கினான்.
“டேய் நான் சொல்லலடா, ஹருகி முரகாமி(Haruki Murakami- Japanese writer) சொன்னதுனு சொல்ல வந்தேன்.”
ஆனந்தன் எதுவும் பேசாமல் அவனின் கிடாரை அதற்குரிய பையில் வைக்க,
“டேய் சொல்ல மறந்துட்டேன், ஈவினிங் தாத்தாவை ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுப் போகணும்டா” என்றதும் கிடாரை அவன் அறையில் வைத்தவன்,
“போங்க” என்றான்.
“டேய் கண்ணா! நீ அழைச்சிட்டுப் போடா” என்றதும்
“நோ” என்றான் காற்றின் வேகத்தில்.
“அடே ஆனந்தா! வயசானவர்டா, பெரியப்பாவுக்கு ஏதோ முக்கியமான மீட்டீங்காம். அதான் நம்மை அழைச்சிட்டுப் போக சொன்னாங்க. எனக்கு ஈவினிங் கொஞ்சம் வேலையிருக்குபா” என்று கார்த்திகேயன் சொல்ல, ஆனந்தன் அசைந்துகொடுக்கவில்லை.
தோளைக் குலுக்கியபடி இசைக்கருவிகள் இருந்த பிரிவிலிருந்து புத்தகங்கள் இருந்த பக்கம் நடக்க,
“டேய்! அவங்களைப் பார்க்கிற கடமை நமக்கு இருக்குடா” என்றதும்
சிறு வயதில் ஆனந்தனை புறக்கணித்து, காயப்படுத்தியதின் விளைவு, அவனுக்குத் தாத்தாவின் மீதும் மற்ற உறவுகள் மீதும் பெரிய பற்றில்லை. ஆனந்தன் அப்படித்தான்! பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை.
“அவங்களோட மத்த பேரப்பசங்க கிட்ட கேட்க வேண்டிதானே? இல்லை நீ வரியா ஆனந்த்னு என்னை கேட்க வேண்டிதானே? நீங்க சொன்னா நான் கேட்பேன் நினைச்சாங்களா? உங்கண்ணா தானே பெரிய பையன், தாத்தா பாட்டியைப் பார்க்கிறது கடமைனு மட்டும் நினைக்காம அதுக்கு எக்ஸ்ட்ரா ப்ராபர்டி வாங்கிட்டார்தானே? அப்போ அதை செய்யாம..” என்று பல்லைக் கடித்தவன்
“கே.கே’னு ப்ரூவ் பண்ணாத பா” என்றான்.
“நான் கே.கே தானே?” எதார்த்தமாக கார்த்திகேயன் சொல்ல, ஆனந்தன் தனக்குள் எழுந்த சிரிப்பை அப்படியே வெளியே விட்டான். மகன் சிரிப்பை கார்த்திகேயன் ரசிக்க, மகன் பேச்சில் அது நின்றது.
“கே.கேன்னா கேண கிறுக்கன் மாதிரி பண்ணாதீங்க சொன்னேன்” என்று கண்ணடித்த ஆனந்தன் கவுண்டரில் சென்று அமர்ந்து அவனின் லேப்டாப்பில் புத்தகங்களின் வரவுகளைப் பார்வையிட,
மகன் பக்கம் வந்த கோபமாக வந்த கார்த்திகேயன்,
“என்ன செய்றது என்னைப் பெத்தவங்களும் என்னை யோசிக்க மாட்டாங்க, நான் பெத்ததும் அப்படித்தான் இருக்கு” என்று வெறுப்பேற்றிவிட்டு, தன் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.
ஆனந்தனின் கோபத்தில் நியாயம் என்று கார்த்திகேயனுக்குத் தெரிந்தாலும், வயதானவர்கள் கொஞ்சம் விட்டுக்கொடுத்த போகலாமே என்ற எண்ணமன்றி வேறில்லை. ஆனந்தனுக்கு இரண்டரை வயதிருக்கும்போது அவருக்கு விவாகரத்தானது. மகனைப் பிரிய அவருக்கு மனமில்லை, அவரின் மாஜி மனைவி அதிலும் பிரச்சனை செய்வாரோ என்று பயம்கொள்ள, அடுத்து ஒரு வாழ்க்கைக்கு அவன் தடையாக அமைவானோ என்று பயந்து மகனை கார்த்திகேயனிடமே கொடுத்திவிட்டார்.
கார்த்திகேயனுக்கும் அவர் மனைவிக்கும் ஏன் விவாகரத்து என்று கேட்டால் இதான் பதில். சேர்ந்து வாழ தேவையில்லாத அத்தனையும் அவர்களை சேர்த்து வைத்திருந்தாலும், இருவருக்குமே பிடித்தமுமில்லை, பிடிப்புமில்லை. முழு நேர சண்டைகள், சேர்ந்து வாழ காரணம் தேட கூட துளியன்பில்லா நிலையில் பிரிவதே சிறந்தது என்று நினைத்துப் பிரிந்தனர். அவரின் மாஜி மனைவி மறுமணம் செய்து வேறு வாழ்க்கைப் பாதையில் சென்றுவிட்டார்.
கார்த்திகேயனுக்கு ஒரு முறை சுட்ட நெருப்பின் தாக்கம் அதிகமிருக்க, அடுத்துத் திருமணம் பற்றி அவருக்கு எண்ணமில்லை. வீட்டில் வற்புறுத்தினாலும் பிடிவாதமாக மறுத்தார். அதற்குக் காரணம் ஆனந்தன் என்று அவன் மீது பெரியவர்களுக்கு ஒரு அலட்சியம். கார்த்திகேயனின் தம்பி திருமணமாகி வேறு இடத்தில் வசிக்க, அண்ணன், அப்பா என்று நுங்கம்பாக்கத்திலிருந்த அவர்களின் வீட்டில்தான் கார்த்திகேயனின் வாசம்.
வேலை விட்டு வந்தபின் மகனோடு மட்டுமே கார்த்திகேயனின் பொழுதிருக்கும். வீட்டில் மற்றவர்கள் மகனை பாசமாக நடத்துவார்கள் என்று நினைத்திருந்தார்.
ஆனந்தனுக்கு அப்போது ஐந்து வயதிருக்கும். மத்திய அரசிலிருந்து முக்கிய பிரமுகர் வருவதால், மகனை அன்று பள்ளிக்கூடம் கிளப்பும் பொறுப்பை அம்மாவிடம் கொடுத்துவிட்டு அலுவலகம் சென்றுவிட்டார் கார்த்திகேயன்.
பெரியம்மா அவர் பிள்ளைகளுக்கு தோசை சுட்டுக்கொடுக்க, ஆனந்தனுக்கு இட்லி வைத்தார் பாட்டி.
“எனக்கும் தோசை வேணும்” ஐந்து வயது ஆனந்தன் பாட்டியிடம் கேட்க, அவர் பெரிய மருமகளிடம் கேட்டார். அவரோ அவர் மக்களைப் பள்ளிக்குக் கிளப்பும் அவசரத்தில் இருந்தார். மாமியாரை செய்ய சொல்ல, அவர் கிச்சன் பக்கம் சென்று வருடங்கள் ஆகியிருந்தன.
பாட்டியோ, “இட்லி சாப்பிடுடா” என்று பேரனை அதட்டினார்.
ஆனந்தனுக்குத் தனக்கு மட்டும் எப்போதும் தாத்தா, பாட்டி சாப்பிடும் உணவு. அண்ணனுக்கும் அக்காவுக்கும் மட்டும் தோசை, பூரி என்று செய்துகொடுக்க, அதனை வாய்விட்டு கேட்கவும் செய்தான்.
“அவங்களுக்கு அம்மா இருக்கா செஞ்சுத் தர, உன்னைத்தான் வேண்டாம்னு உங்கம்மா விட்டுப் போய்ட்டாளே, அடம்பிடிக்காம ஒழுங்கா சாப்பிடு” என்று கண்டிப்பாக சொல்ல, ஆனந்தனுக்கு அழுகை வந்தது. அடமாக உண்ண மாட்டேன் என்றான், பாட்டி இரண்டடி போட்டும் கேட்கவில்லை. மகனின் அலுவலகத்திற்கு அழைத்துச் சொல்ல நினைக்க, அன்று கார்த்திகேயனுக்கு நகர முடியவில்லை.
பாட்டியும் அதட்டிப் பார்த்தார், தாத்தாவும் திட்டினார். “இரண்டு தோசை தானே ஊற்றித்தா” என்று பெரிய மருமகளிடம் சொல்ல,
“உங்க மகன் தானே பையனை அவர் பார்க்கிறனு அழைச்சிட்டு வந்தார், அவரே பார்க்கட்டும். இன்னிக்கு செஞ்சா டெய்லி கேட்பான். ஏன் இட்லி சாப்பிட்டா என்ன? என்ன அடம் இந்த வயசுல?” என்று மருமகளும் பேச, தாத்தா ஒரு கட்டத்தில்
“ஹோட்டல்ல தாத்தா தோசை வாங்கித்தரேன் டா” என்று அழைக்க, பாட்டி அடத்தை வளர்க்காதீங்க என்று சொல்லி தடுத்தார்.
ஆனந்தனுக்கு அப்படியொரு பிடிவாதம், நாள் முழுவதும் உண்ணாமல் கிடந்தான். யார் சொல்லியும் கேட்கவில்லை.
“இப்படி அடம் பண்ணி என் பையன் வாழ்க்கையை இவங்கம்மா அழிச்சா, இவனும் உயிர வாங்குறான்” என்று தாத்தாவும் திட்டினார்.
மாலை கார்த்திகேயன் நாள் முழுக்க சோர்ந்து வர, வீட்டில் அப்பாவும் அம்மாவும் மகனைப் பற்றிப் பஞ்சாயத்து வைக்க, கார்த்திகேயனுக்கு அப்படியொரு கோபம். வந்து ஒரு காஃபி கூட குடிக்கவில்லை.
“ஏண்டா சாப்பிடாம அடம் பண்ற? தாத்தா பாட்டி சொல்றதைக் கேட்க மாட்ட?” என்று கார்த்திகேயன் மகன் பக்கம் கட்டிலில் உட்கார்ந்து சோர்வான குரலில் கேட்க, அவன் எங்கே கேட்டான்.
“கேட்க மாட்டேன்” என்றான் பட்டென்று.
“பார்த்தியா? செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சிருக்க” என்று அம்மா அறை வாசலில் நின்று சொல்ல, கார்த்திகேயன் மகன் முதுகிலே அடி வைத்தார். வலி தாங்காமல் ஆனந்தன் கத்த,
“சொன்னா கேட்க மாட்ட?” என்று மீண்டும் அடிக்க,
“கேட்க மாட்டேன்” என்று சொல்ல, கட்டிலில் சுருண்டு கிடந்தவனை தூக்கி நிறுத்தி மேலும் இரண்டு அடிகள் வைக்க, ஆனந்தன் அழுதானே தவிர கேட்க மாட்டேன் என்றே சொல்ல
“ஏண்டா இப்படி என் உயிரை வாங்குற?” கார்த்திகேயன் வாழ்க்கையின் வெறுப்பை எல்லாம் மகன் மீது வார்த்தையாகக் கடத்தினார். சொல்லிவிட்டு மகனைப் பார்க்க, அவன் அழுதபடி
“அதான் என்னைப் பிடிக்கல இல்ல, அம்மா மாதிரி நீயும் என்னை விட்டுப்போ” என்றான் ஆனந்தன் அழுகையோடு.