சிவரஞ்சனி கேட்ட கேள்விக்கு முரளிதரன் மௌனமாய் நின்றான். அக்கேள்விக்கு பதில் தெரிந்திருந்த தேவன் மனைவியின் கரத்தை இறுக பற்றவும், அவனை திரும்பிப் பார்த்தாள் அவள். தேவனின் கண்களில் இருந்த கலவரம் அவளுக்கான பதிலைச் சொன்னது.
“அவங்க நம்மள ஃபாலோ பண்ணல. டார்கெட் பண்ணியிருக்காங்க” அந்தக் கேள்வியையே அறிவிப்பாக தான் சொன்னாள். தேவனின் தேகத்தில் ஓடிய பய சிலிர்ப்பில் அதன் தாக்கம் தெரிந்தது. அவனின் பல நாள் பயத்தை படமாக கண்டிருந்தான் இன்று. அவர்களை குறி வைத்து தானா இந்த விபத்து திட்டம் என்று யோசித்து சினந்து அதனுள் அமிழ்ந்து கொண்டிருந்தவனால் நிகழ்வுக்கு திரும்ப முடியவில்லை. மனைவி இருந்த பக்கத்தை அவர்களின் கார் உரசியது நினைவிற்கு வர கொதித்துப் போனான் அவன்.
அவர்களை அடித்து நொறுக்கும் ஆத்திரமும், ஆவேசமும் அவனுள் வர, கார் கதவை ஓங்கிக் குத்தினான்.
“தேவன், ஆர் யூ ஓகே?” என்று முரளிதரன் கேட்க, “எஸ்” என்ற தேவனின் பார்வை எதிரில் சாலையில் சாய்ந்து கிடந்த காரின் மேலேயே பதிந்திருந்தது. கோபத்தை அடக்கியதில் அவன் தாடை இறுகியது. அந்த காரில் மொத்தம் நான்கு நபர்கள் இருந்தனர். காரின் பின் பகுதியில் இருந்து கத்தி, அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களை கர்ணாவின் நண்பன் எடுத்து பார்வையிட, அதைக் கண்டதும் கொலை வெறியுடன் காரின் கதவைத் திறந்தான் தேவன்.
அவனை வெளிப்பக்கம் இருந்து கதவை திறக்க விடாமல், “கார்லேயே இருங்க தேவன். கீழ இறங்க வேணாம்.” என்று முரளிதரன் கட்டளையாக சொன்னான்.
“என்ன தைரியம் இருந்தா பட்டப்பகல்ல எங்களை ஃபாலோ பண்ணி..” என்று பல்லைக் கடித்தவனால் தான் சொல்ல வந்ததை சொல்லிக் கூட முடிக்க முடியவில்லை.
“நீங்க ரொம்ப நேரம் இங்கருக்க வேணாம். பத்திரமா வீட்டுக்கு கிளம்புங்க. இங்க எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கறோம்.” என்ற முரளிதரன், தேவன் மறுத்து பேசவே வாய்ப்பளிக்கவில்லை. அவர்களை அங்கிருந்து அகற்றுவதிலேயே குறியாக இருந்தான் அவன்.
“ஃபர்ஸ்ட் போலீஸுக்கு இன்பார்ம் பண்ணிடலாம். அவங்க வந்ததும் நாம இங்கருந்து கிளம்பலாம்” மெல்லிய குரலில் என்றாலும் தெளிவாக சொன்னாள் சிவரஞ்சனி.
“என்ன சிவரஞ்சனி, எங்களை பார்த்தா போலீஸ் மாதிரி தெரியலையா?” சன்ன சிரிப்புடன் கேட்ட முரளிதரன் திரும்பி மற்ற காரில் இருந்தவர்களை விசாரித்துக் கொண்டிருந்த நண்பனையும் பார்வையால் சுட்டிக் காட்டினான்.
“நீங்க போலீஸா? நேத்து கர்ணா கூட இருந்தீங்க. இன்னைக்கு எங்க கூட. ஆமா, நீங்களும் எங்களை ஃபாலோ பண்ணீங்களா? எதுக்கு? வாட்ஸ் ஹேப்பனிங் ஹியர்?” அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடந்த கேள்விகளை, நிகழ்வுகளை இணைக்க முனைந்தாள். இப்பொழுது தொடர்பு பிடிப்பட்டது.
“இவ்வளவு கேள்வி கேட்கிற உங்களால, பதிலும் கண்டுபிடிக்க முடியும் சிவரஞ்சனி. இப்போ வீட்டுக்கு போங்க. மத்ததை அப்புறமா பேசிக்கலாம்” என்றான் முரளிதரன்.
“அதெப்படி…” என்று அவள் ஆரம்பிக்க, தேவன் தன் அலைபேசியை எடுத்தான். அப்பாவிடம் இருந்து தவற விட்ட எண்ணற்ற அழைப்புகளை காண்பித்தது திரை. உடனடியாக அவருக்கு அழைத்தான்.
“ஜெய், எங்க இருக்கீங்க நீங்க? உங்களை தனியா வெளில போகாதீங்கன்னு சொன்னேனா இல்லையா? என் பேச்சைத் தான் கேட்க கூடாதுன்ற முடிவுல இருக்கன்னா, போன் பண்ணா அதையும் எடுக்க மாட்டியாப்பா? நீ போனை எடுக்கலைன்னதும் பதறிட்டு கிடக்கேன் நான். என்னால உங்கம்மாவுக்கு வேற பதில் சொல்ல முடியல. என்னடா தம்பி இப்படி பொறுப்பில்லாம இருக்க? நான் எம்புட்டு கத்துறேன் ஏதாவது பதில் சொல்றியா நீ? உயிர் பயமே இல்லாம போச்சா உனக்கு?” அழைப்பை ஏற்றதும் கத்தத் தொடங்கி விட்டார் சேதுராமன்.
“நத்தம் போற ரோட்ல இருக்கோம் ப்பா.”
“என்கிட்ட கோவிலுக்கு தானே போறேன்னு சொன்னீங்க. அதை விட்டு நத்தம் ரோட்டுக்கு எதுக்கு ஜெய் போனீங்க? உங்களுக்கு ஒன்னுமில்லையே? மருமக எப்படியிருக்கா?” சேதுராமன் படபடக்க, “எங்களுக்கு ஒன்னுமில்லப்பா. சும்மா ஒரு ட்ரைவ் வந்தோம் ப்பா. நீங்க ஏன் இவ்வளவு டென்ஷனா பேசறீங்க? என்னப்பா ஆச்சு?” தேவன் நிதானமாக பேசினான்.
“என்னாச்சுன்னு என்னைய கேட்கறியா நீ? என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியாதா? உங்களுக்கு ஒன்னுமில்லன்னு அசால்ட்டா சொல்ற? சொல்ல மாட்ட பின்ன? அவனுங்க நினைச்சுருந்தா இந்நேரத்துக்கு உங்களை ஒன்னுமில்லாம பண்ணியிருப்பானுங்க ஜெய்.” அப்பாவின் குரலில் ஓடிய நடுக்கத்தை அவனால் உணர முடிந்தது.
சட்டென அவனால் சமாளிக்க முடியவில்லை. “பிளீஸ் டென்ஷன் ஆகாதீங்கப்பா. உண்மையா எங்களுக்கு ஒன்னுமில்ல. நாங்க பத்திரமா இருக்கோம். அப்புறம் அம்மாக்கு எதுவும் தெரிய வேணாம்ப்பா. நாங்க வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கோம். அங்க வந்து பேசிக்கலாம்” முடிந்தவரை இயல்பான குரலில் சொன்னான் தேவன்.
சேதுராமன் அவர்களை கவனமாக வர அறிவுறுத்தி விட்டு இணைப்பை துண்டித்தார்.
“நீங்க டிரைவ் பண்ண வேணாம். நான் உங்களோட வர்றேன்” என்று தேவனிடம் முரளிதரன் சொல்ல, மறுத்து விட்டான் தேவன்.
சிவரஞ்சனி இருக்கையில் சாய்ந்து கண் மூடியிருந்தாள். தேவன் மனைவியை கனிவாக பார்த்தான். அவன் மனத்தின் கலவரம் எல்லாம் அவள் முகம் பார்த்ததும் முழுமையாக வடிந்தது. அவளையே இமைக்காமல் பார்த்து இதயத்திற்குள் நிறைத்துக் கொண்டிருந்தான் அவன்.
அவர்கள் இருவருக்கும் தனிமை தேவைப்பட்டது முரளிதரனுக்கும் புரிந்தது.
“ஓகே தேவன். கவனமா டிரைவ் பண்ணுங்க” என்று அவன் சொல்லும் போதே, அங்கே புதிதாக ஒரு இன்னோவா கார் வந்து நின்றது. அதில் இருந்து ஆட்கள் இறங்கி பழனிவேலின் ஆட்களை கவனிக்க, முரளிதரன் சென்று தன் காரில் ஏறினான்.
அவன் அங்கிருந்து நகர்ந்ததும் தேவனின் கரம் நீண்டு மனைவியின் தோள் தொட்டது. அவள் மெல்ல கண் திறக்க, மென்மையாய் அவளின் கழுத்தெலும்பை வருடியது அவன் விரல்கள்.
அவளின் பாதுகாப்பை குறித்து மீண்டும் மீண்டும் கணவன் பேசியதன் அர்த்தம் அந்த கணம் தான் அவளுக்கு நன்றாக விளங்கியது.
சில நிமிடங்கள் அதிவேகத்தில் கார் பயணம் செய்ததின் விளைவாய் இரத்த அழுத்தம் தாறுமாறாக ஏறியிருந்தது. விபத்தை தவிர்க்க தேவன் காரை ஒடித்து திருப்பி நிறுத்தியிருந்ததால் இருக்கையில், கதவில் என நன்றாக மோதியிருந்தாள். அந்த அதிர்வும் அது தந்த பதட்டமும் இன்னமும் அவளின் உடலில் மிச்சமிருக்க, அதை ரிக்டர் அளவில் கூட்டியது கண் முன்னே அவர்களுக்கு நிகழவிருந்த விபத்தும், அதை திட்டமிட்டவர் பற்றிய உண்மையும்.
“ஏன் ஏன் ஏன்? அதுவும் இப்போது? இத்தனை மாதங்களுக்கு பிறகு? ஏன்?” என்ற கேள்விகளே அவள் மனதை அரித்து கொண்டிருந்தது.
அவளிடம், “சாரி” என்று தேவன் சொல்லவும், விழிகளை முழுமையாக திறந்து அவனைப் பார்த்தவளின் விழிகளில் நிரம்பிக் கிடந்தது குற்ற உணர்ச்சி.
“நீங்க இதுக்குதான் பயந்தீங்களா?”
“இதுக்கும் பயந்தேன்” அவள் கன்னத்தை தாங்கிப் பிடித்துச் சொன்னான் தேவன்.
அவள் கண்களில் தொக்கி நின்ற கேள்வியை அவனால் படிக்க முடிந்தது. ஆனாலும், அக்கணம் அவளின் பாதுகாப்பு மட்டுமே அவனுக்கு பெரிதாக பட, “என் பக்கத்துல நீ பத்திரமா இருக்க. அது போதும் எனக்கு” இம்முறை அவனது பல வருட குரல் பயிற்சி கைக் கொடுக்கவில்லை. தளுதளுத்த குரலில் அவன் சொல்ல, அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் தளும்பி நிறைந்தான் தேவன். ஈர விழிகளுடன் புன்னகைத்தாள் சிவரஞ்சனி.
அந்த புன்னகையை பார்த்தபடியே விலகி நேராக அமர்ந்து காரை இயக்கினான் தேவன்.
மிதவேகத்தில் அவன் காரை செலுத்த அவனைப் பின் தொடர்ந்தது முரளிதரனின் கார்.
சிவரஞ்சனி சிந்தனை வயப்பட்டாள். மெல்ல மெல்ல தன்னை சுற்றி பின்னப்பட்டிருக்கும் வலையை பிரித்துணர முயன்றாள். ஆனால், முடியவில்லை.
“ஜஸ்ட் ரிலாக்ஸ். சீட்டை சாய்ச்சு கண்ணை மூடி படு. வீடு வந்ததும் எழுப்பி விடுறேன்” என்று தேவன் சொல்ல, இதற்கு மேலும் கணவன் சொல்லை மீறுவது சரியல்ல என்ற முடிவுடன் இருக்கையை பின்னே சாய்த்து கண் மூடினாள்.
தேவனின் கண்கள் சாலையில் இருந்தாலும் அவன் கவனமெல்லாம் மனைவி மேலயே இருந்தது. இதயத்தை ஏதோ இறுக்கி பிடிக்கும் உணர்வில் தத்தளித்தான் அவன்.
அவர்கள் இருவருக்குமே இசை தான் சரணாகதி. சிவரஞ்சனிக்கு கணவனின் குரலும், அவன் பாடிய பாடல்களும் தான் வலி நிவாரணி. தற்போது அவர்கள் இருக்கும் சூழலில் அவனைப் பாட சொல்ல முடியாது. தேவனுக்கும் அது புரிந்தது. ஆக, அவர்களின் மௌனத்தை இசையால் நிரப்பி பயணத்தை லகுவாக்க முயன்றான்.
“நீ தரும் காதலில்
வாழ்பவள் நான் தான்
நீயில்லாமல் நானும் இல்லையே….
அதிகாலை நேரம் கனவில் உன்னை பார்த்தேன். அது கலைந்திடாமல் கையில் என்னை சேர்த்தேன்..” என்று அவனுக்கு பதிலாக எஸ்பிபியை உருக விட்டான் தேவன். அந்தப் பாடலும் சிவரஞ்சனி ராகம் என்பதே அவள் இதழ்களில் இதமாய் மென்னகையை படர விட்டது.
“நீயில்லாமல் நானும் இல்லையே” என்று தேவனும் இணைந்து பாடினான். இதே வரிகளை வேறொரு சமயத்தில் அவன் பாடியிருந்தால் நிச்சயமாய் கேலி செய்திருப்பாள். ஆனால், அந்த நொடி அவன் பாடிய வரிகளும், அதன் அர்த்தமும், சிவரஞ்சனி ராகமும், கணவனின் குரலும் என அனைத்தும் சேர்ந்து அவளை நெகிழ்த்தியது.
அரை மணி நேர பயணத்தில் வீடு வந்திருந்தார்கள். அவர்களின் கார் வீட்டினுள் செல்வதை உறுதி செய்த பிறகே திரும்பி சென்றான் முரளிதரன். தேவன் அவனுக்கு நன்றி சொல்லும் முன் அங்கிருந்து கிளம்பியிருந்தான் அவன்.
காரில் இருந்து இறங்கிய தேவன் ஓடிச் சென்று மனைவியின் பக்க கதவை திறந்து அவள் இறங்குவதற்காக பிடித்து நின்றான்.
சிவரஞ்சனியால் காலை அசைக்கவே முடியவில்லை. அவ்வளவு நேரமும் வலியை பொறுத்துக் கொண்டிருந்தவளுக்கு இப்பொழுது ஒன்றுமே செய்ய முடியாத நிலை. காலை மெதுவாக நகர்த்தவும், முகத்தை சுளிப்பதுமாக இருந்தாள் அவள்.
அந்நேரம் சேதுராமனின் கார் அதிவேகமாக வீட்டினுள் நுழைய, வலியை பொறுத்துக் கொண்டு பட்டென்று இறங்கி விட்டாள் அவள்.
தேவன் அனிச்சையாக மனைவியை தாங்கிப் பிடித்து, அவளின் தோளை சுற்றி கைப் போட்டுக் கொண்டான். அவன் மேல் தன் உடலின் பாரத்தை போட்டு நின்றாள் அவள்.
அதற்குள் சேதுராமன் அவர்களை நோக்கி விரைந்து வந்தார். “அப்பாடா வீட்டுக்கு வந்துட்டீங்களா? எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்? கர்ணா மட்டும் அவனோட ஆளுங்கள அனுப்பலன்னா என்னாகியிருக்கும்?” என்று பதறினார் அவர்.
“அப்பா பிளீஸ். டென்ஷன் ஆகாதீங்க” என்று தேவன் சொல்லவும், மகனையும் மருமகளையும் மாறி மாறிப் பார்த்தவரின் கண்களில் கோபமும் ஆதங்கமும் கொட்டிக் கிடந்தது.
“ஜெய் எங்களுக்கு ஒத்த புள்ளை மா ரஞ்சனி. அவன் தான் எங்க உயிர். ஆனா, அவனுக்கு நீ தான் எல்லாமே. இன்னொரு முறை எங்களை இப்படி பயமுறுத்தாதம்மா..” என்று சேதுராமன் சொல்ல சொல்ல, சிவரஞ்சனியின் கரம் தேவனின் முதுகில் படர்ந்து அவனை இறுக்கமாக பற்றியது.
தேவன் அப்பாவை கெஞ்சுதலாகப் பார்த்தான்.
“ரெண்டு பேரும் முதல்ல உள்ள வாங்க” என்று சொல்லி தானும் அவர்களோடு நடந்தார் சேதுராமன்.
“உங்கம்மாக்கு இன்னும் விஷயம் தெரியல. நடந்தது மட்டும் அவளுக்கு தெரிஞ்சதுன்னு வச்சுக்கோ..” என்று சேதுராமன் சத்தம் போட, சிவரஞ்சனி அப்படியே நின்று விட்டாள்.
“ப்ச், நீ நட” என்று அவளை அணைவாக பிடித்து நடக்க வைத்தான் தேவன்.
“அந்த ஆளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா என் பையன் மேலயே கையை வைக்க துணிவான். என்னை யாருன்னு நினைச்சுட்டு இருக்கானுங்க அவனுங்க. அரசியல்ல இருந்தா பெரிய கொம்பனுங்களா, அவனுங்களை ஆள் அடையாளமே இல்லாம பண்ணிடுவேன் நான்..” சேதுராமன் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.