“அவங்க உண்மையில ஃபார்டி ப்ளஸ்தான், ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க. நான் நேர்ல பார்த்து கன்ஃபார்ம் பண்ணிட்டேன், டிடெக்டிவ் ஏஜென்சில சொல்லி இன்ஃபோ கூட கலெக்ட் பண்ணிட்டேன்.” என்றதும்
“டேய், நீ சொன்ன மாதிரி நான் ஒரு சயிண்டிஸ்ட், தேசத்தோட முக்கியமான ஆராய்ச்சி நிறுவனத்துல இருக்கேன், என் விஷயம் பேசும்போது அந்த ஆள் உண்மையா, நம்பிக்கையா இருக்காங்களா தெரியணுமில்லடா இல்லைனா நீ சொல்ற மாதிரி பிரச்சனையில சிக்கிட்டா” என்றதும்
“கலக்குறீங்க கார்த்திகேயன், மேல சொல்லுங்க” என்றான் மகன். உண்மையில் கார்த்திகேயனுக்குத் துணையெல்லாம் தேவையில்லை, அவர் தேடவுமில்லை. அதே நேரம் மகனின் வாழ்க்கையும் முக்கியமாகப்பட, ஒரு வாய்ப்பாக அந்த செயலியில் என்ன இருக்கிறது என்று பார்க்க திறந்தார். அவரின் நல்ல நேரம் ஒரு தமிழ்ப் பெண்ணிடம் முதலில் பேச வாய்ப்புக் கிடைத்தது. முதல் முறை பேசியபோதே நேரில் சந்திக்கக் கேட்டுவிட்டார் கார்த்திகேயன்.
நேரில் சந்தித்து அவரின் விவரங்களைக் கேட்டு பின் அவற்றின் உண்மையை ஊர்ஜிதப்படுத்தியப்பின்னே உதவி கேட்டார், அவர் மகன் திருமணம் செய்ய ஒத்துக்கொள்ள வைக்க, அவரை திருமணம் செய்ய விரும்புவதாக ஒரு பொய்.
“ஆனாலும் நம்ம ஊர்ல அதெல்லாம் யூஸ் பண்ற ஆளுங்க இருக்காங்களா? அண்ட் சிங்கிள் பேரண்ட் மீன்ஸ் அவங்களுக்கு எத்தனை பசங்க?” ஆனந்தனுக்கு ஆச்சரியமாக இருந்தது, இதெல்லாம் இந்த நாட்டில் நடக்கிறதா என்பது போல்.
“எனக்கு நீ இருக்கடா, அவங்களுக்கு யாருமில்லை. மே பீ அதனால அவங்க ஒரு பார்ட்னர் தேடியிருக்கலாம். தப்பா என்ன? அவங்க கணவர் பல வருஷம் முன்னாடி இறந்துட்டார்”
“ச்ச, ச்ச தப்பெல்லாம் இல்லை. ஓகேப்பா, நாளைக்கு நான் பார்த்து ஓகே சொன்னாதான் மேல பேசணும். புரிஞ்சதா?” என்று கண்டிப்பாக மகன் கேட்க
“அது சரி, உனக்கு ஓகேன்னா நீ எனக்குப் ப்ராமிஸ் பண்ணின மாதிரி உனக்குப் பிடிச்ச பொண்ணோ இல்லை நான் பார்க்கிற பொண்ணையோ கட்டணும். மறந்திடாத ஆனந்தா” என்றார் கார்த்திகேயனும் கண்டிப்பான குரலில்.
இறுக்கத்தோடு தலையசைத்த ஆனந்தன் இருமுக(ambivalent) உணர்வில் தவித்தான். அப்பாவுக்கென்று ஒரு துணை என்பது அவனுக்கு நிச்சயம் நிறைவே! அதே நேரம் அவனுக்கென்று ஒரு துணை? அப்படியான கற்பனைக்குத் தொடக்கப் புள்ளி கூட வைக்க இயலவில்லை அவனால்.
மழை ஊரை நனைத்திருக்க, காலை பொழுது வழக்கத்தை விட இதமானதாக ஈரமானதாக விடிந்தது.
“மழையின் பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில் நீர் வழிந்து கொண்டிருக்கிறது” மழைக்கென்று ஒரு குரல் இருந்தால் அது வானொலியில் வருகின்ற வாரிதியின் குரலாக இருக்கும். மழையின் சத்தத்தோடு வானொலியில் கவிதைப் படித்தாள் ஆர் ஜே வாரிதி கதிரவன்.
“ஹலோ மக்களே! தேவதச்சன் அவர்களின் கவிதை போல் இன்னிக்கு நம்ம சென்னையை நனைச்சிட்டிருக்க மழை எல்லாருக்கும் சந்தோஷம் கொடுக்கும் நம்புறேன். இது ‘இனிது இனிது’ வித் மீ ஆர்ஜே வாரிதி கதிரவன். இந்த விடுமுறை நாள் உங்களுக்கு விருப்பமானதாக அமையட்டும்! தொடர்ந்து கேட்டுகிட்டு இருங்க, இன்னிக்கு முழுக்க மழை பாட்டுதான்”
“மழையும் நீயே வெயிலும் நீயே பாடல், அழகன் படத்துல இருந்து. கீரவாணி அவர்களின் இசையில், எஸ்பிபி அவர்களின் குரலில்… இதோ உங்களுக்காக” என்றபடி வாரிதியின் பேச்சைத் தொடர்ந்து பாடல் ஒலிபரப்பாக, அதை கேட்ட ரேவதிக்கு முகத்தில் அனிச்சையாக ஒரு புன்னகை.
ரேவதி! ஒளிராத ஒரு நட்சத்திரம், ஒளியில்லாத பெண் சித்திரம் என்றிடலாம். அவர் பெரிதாக ஒளிரவில்லை என்றாலும் அவரின் மாணவர்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு மேலான தனிமையைத் துணைகொண்டு வாழ்கிறவர். காலையில் காஃபி கலக்கிக் கொண்டு அவரின் ஒற்றைப்படுக்கை அறைகொண்ட அந்த பழைய வீட்டில், வீட்டின் காற்றை வாரிதியின் குரல் நிறைக்க, ஹாலில் இருக்கும் ஜன்னல் வழி மழையைப் பார்த்து காஃபியைக் குடித்தார்.
அந்த அறையில் காற்றோடு பேசும் கதையாக வாரிதியின் குரல், அடுத்து ஏகாந்தத்தின் நிறைவை குரலில் கொட்டிய எஸ்பிபியின் பாடல்.
‘ஏகாந்தம் இந்த ஆனந்தம்’ ஏகாந்தம் ஆனந்தம் என்று எஸ்.பி.பி சொல்ல நாற்பத்தாறு வயதாகிறது, இதுவரை அந்த சொல்லின் பொருள் அவர் உணர்ந்ததில்லை. ஏகாந்தம் என்றால் தனிமை, இல்லை இனிமை கொண்ட தனிமையா? தனியே இருப்பது ஏகாந்தமா, தனிமையில் இனிமையைத் தன்னுள் உணர்வதுதானே ஏகாந்தம். அப்படி தன்னை பிடித்து ரேவதி வாழ்ந்தாரா என்று கேட்டால் இல்லை.
இதையெல்லாம் யோசித்திருக்கக் கூட மாட்டார். இருபத்தொன்றில் ‘கல்யாணப்பெண்’, இருபத்திரண்டு முடியும்போது ‘கைம்பெண்’. மறுமணம் பற்றியெல்லாம் அவருக்குத் தோன்றியதே இல்லை, அப்படி தோன்ற கூட நேரமில்லா ஒரு வாழ்வு. அவர் கணவர் நல்லவர், அவர் இருந்தவரை நல்லவிதமாக இருந்தது வாழ்க்கை, பிடித்து புரிந்து வாழ ஆரம்பித்து சில மாதங்களில் விபத்தில் அவர் மறைந்துவிட, அதனோடு ரேவதியின் அத்தனை சந்தோஷங்களும் மறைந்துபோயின.
பெற்றவர்களுக்கும், அண்ணனுக்கும் மகள் மீண்டும் பாரமாக வந்துவிடுவாளோ என்ற கவலை, புகுந்த வீட்டினர் ரேவதியை விட்டுத்தர தயாராக இல்லை. ரேவதி கணவரின் அண்ணனுக்கும், தங்கைக்கும் அவர்களின் அப்பா, அம்மாவை பார்த்துக்கொள்ள ஒரு ஆள். ரேவதியும் பள்ளி ஆசிரியராக இருக்க, பெரும்பணம் இல்லாவிட்டாலும் அந்த சமயத்தில் அது போதுமானதாக இருந்தது.
காலை எழுந்தது முதல் பரபரப்பாக தொடங்கிவிடும் ரேவதியின் பொழுதுகள். காலைக்கும் மதியத்துக்கும் சமைத்து, பள்ளிக்குச் சென்று நாள் முழுவதும் நின்றபடி பாடம் நடத்தி, மீண்டும் மாலை வந்து தேனீர் முதல் இரவு உணவை வரை செய்து, வீடு துடைப்பது, பாத்திரங்கள், துணிகள் என்று அத்தனையும் செய்து அயர்ந்து உறங்கும் ரேவதிக்குக் கனவுகள் கூட வராது. பின்னே எங்கே தன் நிலைப்பற்றிய ஒரு கேள்வி பிறக்கும்?
அப்படியே காலங்கள் சென்றுவிட, நான்கு வருடம் ஆகிறது மாமியார் மறைந்து. அவரை மிகவும் அன்பாக கவனித்துகொண்டார், மாமியாருக்கு ரேவதி மீது பெரிய பாசமெல்லாம் இல்லை. அது ரேவதிக்குத் தெரிந்தாலும், திட்ட மட்டுமாவது ஒரு துணை என்ற ஆறுதல் போலத்தான் இருக்கும்.
வாரிதி! அவள் எப்படி இருப்பாள் ரேவதிக்குத் தெரியாது, அவளின் குரல் மட்டுமே வாரிதிக்கும் ரேவதிக்குமான வாராவதி!(பாலம்- வார்( நீர்) வதி(வழி))
நான்கு வருடமாக அவளின் குரல் காலையும் இரவும் அவர் வீட்டை நிறைக்கிறது. ஒரு நாளின் ஒரு மணி நேரம் அவளின் குரல் துணையாக இருக்கும், அதுவே ரேவதிக்கு ஆனந்தமான நிமிடங்கள். மனிதன் மிகவும் மோசமான ஒரு கட்டத்தில் இருக்கும்போது எந்த கலையும், எந்த கலைஞனும் அவனை மீட்டெடுக்கிறார்களோ, அந்த கலை மீதும் கலைஞன் மீது மகத்தான பிரியம் தோன்றிவிடுகிறது இயற்கை! வாரிதி மீதான ரேவதியின் பிரியம் அப்படியானது.
“இனிது இனிதோட இறுதிபகுதிக்கு வந்துட்டோம்.. எனக்குப் பிடிச்ச ரைட்டர் கேகே சாரோட ஃபேவரைட் ரைட்டர் ரூமி அவர்கள். அவர் சொல்லித்தான் ரூமியோட வரிகளை வாசிக்க ஆரம்பிச்சேன். ‘எனக்குத் தெரிந்து வாழ்க்கையில் எல்லாரும் இறப்பை சுவைக்கிறார்கள், ஆனால் வாழ்க்கையை சுவைப்பவர்கள் சிலர் மட்டுமே!’ அப்படினு ரூமி தாத்தா சொன்ன மாதிரி வாழ்க்கையை சுவைத்து வாழ்வோம்!”
“அது கசப்பான பாவக்காயா இருந்தாலும் சரி இனிப்பான பால்கோவாவா இருந்தாலும் சரி. ஒரே ஒரு வாழ்க்கை! யாரையும் கெடுக்காம உங்களுக்குப் பிடிச்சதை செய்ங்க, இந்த நாள் நீங்க மறக்க முடியாத நாளா கூட இருக்கலாம். மீண்டும் இரவு சந்திக்கிறேன், டாட்டா” என்று வாரிதி சொல்லி போக, அவள் சொன்னது எத்தனை சரி வாழ்க்கையை சுவைப்பதாம்?
வாழ்க்கையில் நான் என்ன சுவை கண்டேன் என்ற கேள்வியே ரேவதியை அந்த வயதிலும் தனக்கென ஒரு துணையைத் தேட சொன்னது.
மாலை நேரம் நகரின் மத்தியில் இருந்த உணவகத்தில் காஃபிக்காக காத்திருந்த நேரத்தில் கார்த்திகேயன் தன் முன் இருந்த ரேவதியிடம் பேசினார்.
“நீங்க எனக்கு ஹெல்ப் செய்ய ஒத்துக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் மேம். உங்களுக்கு ரொம்பப் பெரிய மனசு”
“அதெல்லாம் இல்லை சார், துணையில்லாம இருக்கிறது எவ்வளவு கொடுமைனு எனக்குத் தெரியும். உங்களுக்குத் துணை தேடாம உங்க மகனுக்காக நீங்க யோசிக்கிறீங்க, எனக்கு ஒரு மகன் இருந்திருந்தா நான் செஞ்சிருக்க மாட்டேனா? நீங்க சொன்ன மாதிரியே நான் சொல்றேன்”
ஆகாய நீல காட்டன் புடவையில் பாலு மகேந்திராவின் கதாநாயகி போல இருந்தார் ரேவதி. ஆனால் கார்த்திகேயன் கவனமெல்லாம் அவரிடமில்லை, மகனை காணுமே என்று குறுஞ்செய்தி அனுப்பினார்.
ஆனந்தன் பத்து நிமிடத்தில் அங்கு வந்தவன், ரேவதியை எதிர்ப்பார்க்கவில்லை.
‘நெருப்பில இருந்து தப்பிச்சு கார்த்திக் எரிமலை கிட்ட சிக்கிட்டாரே’ என்று முணுமுணுத்தபடி மெல்ல அவர்கள் இருந்த இடம் போனவன் நேராக ரேவதியிடம்,
“ரேவதி மிஸ், எப்படியிருக்கீங்க?” என்று வினவ
ஒரு நிமிடம் கண்ணை சுருக்கி யோசித்த ரேவதி, “ஹே கே.ஆனந்த்? எப்படிப்பா இருக்கா?” என்று சந்தோஷமாகக் கேட்டவர் தன் முன் இருந்த கார்த்திகேயனிடம்
“என் ஸ்டூடண்ட் சார்” என்று அறிமுகம் செய்ய,
“என் மகன் மேடம்” என்றார் கார்த்திகேயன். ஆனந்தன் சிரிப்பை அடக்கிக் கார்த்திகேயனைப் பார்க்க, அவரோ ரேவதியையும் மகனையும் மாறி மாறி பார்த்தார். ரேவதிக்குச் சட்டென்று ஒரு சங்கடம்.