மதிய உணவை உண்டு விட்டு வேண்டுமென்றே படுத்து உறங்க முற்பட்டாள் நிவேதா. விழிகளை இறுக மூடிக் கொண்டாலும், உறக்கம் தழுவவில்லை அவளை. புரண்டு புரண்டு படுத்தவள், ஒரு கட்டத்தில் வெறுப்பாய் தோன்ற, ‘சே! தூங்கிட்டு, அம்மா கிட்ட காரணம் சொல்லாம்னு பார்த்தா, கிரகம் இன்னைக்குன்னு தூக்கமே வர மாட்டுது!’ என நொந்துக் கொண்டாள்.
மணி நாலைத் தொட்டு, பதினைந்து நிமிடங்களாகியிருக்க, எழுந்து குளித்து விட்டு வந்தாள். அலமாரியை திறந்து, அவளிடம் இருப்பதிலே நிறம் மங்கிய, அவளுக்கு பிடிக்காத உடையை தேர்வு செய்தாள். ‘ஏய்! அவங்க வீட்டுக்குப் போகும் போது கொஞ்சம் நல்லா போ. இல்லைன்னா, நமக்கு மதிப்பா இருக்காது டி!’ ஜோதியின் குரல் காதில் ஒலிக்க, வேண்டும் என்றே நல்ல உடையை தேர்வு செய்யவில்லை நிவேதா.
பரவாயில்லை என்ற வரிசையில் வரும் ஒரு ஆடையை எடுத்து அணிந்தவள், தலையை பின்னலிட்டாள். முகப்பூச்சு எதுவும் பூசாதவள், நெற்றியில் ஒரு பொட்டை வைத்து, அதற்கு மேலே ஒரு குங்குமத்தை கீற்றாக வைத்துக் கொண்டாள்.
‘போதும்! போதும். அவனுக்கு பர்த்டே பார்ட்டி ஒன்னு தான் குறை!’ என தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டாள். நேரத்தைப் பார்க்க, அது ஐந்து என காட்டியது. இன்னும் அரைமணி நேரம் கழித்து கிளம்பினால் கூட, ஆறுமணிக்கு முன்பே அங்கு செல்லலாம் என நினைத்தவளின் சுவை மொட்டுகள் குளம்பியின் சுவையை உணர ஆசைப்பட, அடுக்களைக்குள் நுழைந்து குளம்பியை தயாரிக்க ஆரம்பித்தாள்.
சூடான குளம்பியின் சுகந்தத்தை நுகர்ந்தவள், ‘வந்து பதினைஞ்சு நாளைக்கு மேலாகிடுச்சு. இப்ப தான் காபியே ஒழுங்கா போட்றேன். என்னைக்கு சமைக்க கத்துக்கப் போறேனோ?’ என தன்னை நினைத்தே சிரித்துக் கொண்டவள், அவளின் பிரதான இடமான பால்கனியில் நின்று அதை சுவைக்க துவங்கினாள்.
வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. ‘இந்த நேரத்துல யாரா இருக்கும். ஹவுஸ் ஓனரா இருக்குமோ?’ என எண்ணிக் கொண்டே நிவி கதவை திறக்க, யுகி புன்னகையுடன் நின்றிருந்தான்.
அவனை எதிர்பாராதவள், “மாமா” என அவன் கையைப் பிடித்துக் கொண்டவளின் மறுகையில் இருந்த குவளை மேஜைக்கு மாறியது.
“ச்சு… சொல்லவே இல்லை. போ மாமா. நான் கூப்பிட்டப்போ வர மாட்டேன்னு சொன்ன… போ!” சின்ன குழந்தை போல கோபம் கொண்டு மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.
அதில் யுகியின் இதழ்களில் புன்னகை ஜனித்தது. “ம்ப்ச்!” என்றவன், அவளைக் கண்டு கொள்ளாது உள்ளே நுழைந்து நாற்காலியில் சாவகாசமாக அமர்ந்தான். சட்டையின் கையை மடித்து விட்டவன், முதல் இரண்டு பொத்தான்களை அவிழ்த்து விட்டு சற்றே மேலே ஏற்றி விட்டான்.
“ஷப்பா! காத்தே வர மாட்டுது. அந்த ஃபேனை போடு நிவி மா” என்றவனின் குரல் குறும்பாய் வெளிப்பட, உதடுகள் சிரிப்பில் துடித்தது.
“மாமா! நான் கோபமா இருக்கேன். நீ ஃபேனை போடுன்னு சொல்ற?” என அவன் தலை முடியை பிடித்து ஆட்டினாள்.
“ஆஆஆ… வலிக்குதுடி. விடு டி. வந்த வேலை முடிஞ்சது. வேற ஒரு ப்ரெண்ட்க்கு இங்க ஒரு வேலை. அதான் நானும் அவனும் அவன் வீட்டுக்கு வந்தோம். அவன் பைக்கை வாங்கிட்டு வந்துட்டேன் நான். அவன் ஊருக்கு கிளம்பிடுவான். நான் பைக்லயே பாண்டி போய், அவங்க வீட்ல கொடுத்துட்டு வீட்டுக்குப் போற ஐடியா!” என அவன் கூறி முடிக்க, அடியை நிறுத்தினாள். அவன் இரண்டு நாட்கள் தங்க போகிறேன் என கூறியதுமே கோபம் எல்லாம் வடிந்து விட்டது பாவைக்கு. இருந்தும் முகத்தை கோபமாக இருப்பது போல வைத்துக் கொண்டாள்.
அவளைப் பக்கவாட்டாக பார்த்து சிரித்தவன், “கஷ்டப்பட்டு உனக்காக அவ்ளோ தூரத்துல இருந்து வந்துருக்கேன். மேடம் என்னன்னா கோபமா இருக்கீங்க. சரி, எனக்கு ஒன்னும் இல்லை பா. நான் கிளம்புறேன்!” என போலியாய் யுகி எழ,
“சரி… சரி. ரொம்ப பண்ணாத மாமா!” என்றவள், ஒரு உடன்படிக்கைக்கு வந்தாள்.
“ஆமா, எங்க கிளம்பிட்ட இவ்ளோ கேவலமா ட்ரெஸ் பண்ணிட்டு?” உதட்டை சுழித்துக் கொண்டே கேட்டான் யுகேந்திரன். என்ன சொல்வது என தெரியாமல் விழித்தவள், உண்மையை கூறினால் திட்டுவான் என நினைத்து, “அது அன்னைக்கு கோவில்ல பார்த்தோம் இல்ல அம்மாவோட ப்ரெண்ட். அவங்க பையனுக்கு பெர்த்டேவாம். அதான் அம்மா போய்ட்டு வர சொன்னாங்கன்னு கிளம்புனேன்” என்றாள்.
“அதுக்கு ஏன் இந்த ட்ரெஸை போட்டிருக்க? போய் நல்ல ட்ரெஸ்ஸா மாத்திட்டு வா. நானும் குளிச்சுட்டு வரேன்” என்றவன், “சேர்ந்தே போவோம். அங்க போய்ட்டு அப்படியே வெளிய எங்கேயாவது சாப்பிட்டு வரலாம்!” என கூறி மற்றொரு அறைக்குள் நுழைந்து கொண்டான். பத்து நிமிடங்களில் இருவரும் தயாராகி வெளியே வந்தனர். யுகியுடன் நீண்ட நாள் கழித்தான பயணம் என்பதால் குஷியுடன் கிளம்பினாள் நிவேதா.
“ஆங்… இப்ப தான் நல்லா இருக்கு” என்றவனின் பார்வை புன்னகையுடன் அவளது ஊதா வண்ண உடையை தொட்டு மீண்டது.
“ஆறு மணிக்கு வர சொன்னாங்க இல்லை? இப்பவே மணி ஆறாச்சு” என்றவன் இருசக்கர வாகனத்தை இயக்க, அவன் பின்னே ஏறி அமர்ந்து கொண்டாள் நிவேதா.
“என்ன கிஃப்ட் வாங்கி இருக்க நிவி?” யுகேந்திரன் வினவ,
“என்ன? எதுக்கு கிஃப்ட் மாமா?” புரியாது வினவினாள் பெண். முன்பக்க கண்ணாடி வழியே அவளை முறைத்தான் ஆடவன். அதில் நினைவு வந்தவள், நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
அருகில் உள்ள பரிசுப் பொருட்கள் கடையில் யுகி வண்டியை நிறுத்த, இரண்டே நிமிடத்தில் ஒரு கைக்கடிகாரத்துடன் வெளியே வந்தாள் மாது.
“என்னடி… போய் அரைமணி நேரமாச்சு ஆக்குவன்னு பார்த்தேன்” யுகி ஆச்சரியப்பட, ‘உள்ளப் போகும் போதே பர்ஸ்ட் எது கண்ல படுதோ, அதுவே அவனுக்குப் போதும்னு நினைச்சேன். அதான் கண்ல பட்ட வாட்ச்சை வாங்கிட்டேன்!’ என நினைத்தவள், “டைமாச்சு மாமா, கிளம்பு நீ” என அவனை அரட்டி, பத்து நிமிடத்தில் அங்கு சென்று விட்டனர். நிவிக்கு செல்ல விருப்பமில்லை எனினும் ஆனந்தியின் முகத்திற்காக தான் சென்றாள்.
“நிவி! வாம்மா. வா!” என வரவேற்றார் ஆனந்தி. கூடத்தில் உள்ள நீள்விருக்கையில் அமர்ந்து அருகிலிருந்த வித்யாவிடம் பேசிக் கொண்டிருந்த சந்த்ரு, அவள் பெயர் கேட்டதும், திரும்பிப் பார்த்தான். புன்னகையுடன் ஆனந்தியிடம் எதோ பேசிக் கொண்டிருந்தவளின் ஜமிக்கி அவளுக்கேற்றது போல அசைந்து அவனையும் கொஞ்சம் அசைத்தது. உதட்டில் புன்னகை மிளிர, கண்கள் அவளை ரசனையாய் தொட்டு மீண்டது.
‘என்ன செய்து கொண்டிருக்கிறாய்!’ என்ற மூளையின் கேள்விகளுக்கு எல்லாம் அவளது அருகில் பதில்லாது போனது ஆடவனுக்கு. பார்த்த முதல் சந்திப்பில் சுளித்த முகத்தில் என்ன கண்டானோ? சிறிது நேரம் கழித்து புன்னகைத்து பேசிக் கொண்டிருந்த முகத்தில் என்ன கண்டானோ? மறுநாள் வீட்டில் அவளை எதிர்பாராது கண்ட நிகழ்வு மனதில் பதிந்து போனது. எதோ அவளருகில் மனம் கொஞ்சம் தடுமாறியதை சந்த்ரு உணரத்தான் செய்தான்.
இனிமையான நினைவில் அவன் புன்னகை மேலும் விரிய, தலை முடியை கோதிக் கொண்டவனின் பார்வை அவளை மொத்தமாய் மொய்த்துக் கொண்டிருந்தது. பிடித்தம் என்ற வரையறைக்குள் வந்து விட்டாள் பெண். ஆனால், இது அடுத்த கட்டத்திற்கு நகருமா என விடை தெரியாத கேள்வி அவனை சுற்றிக் கொண்டிருந்தாலும், மனம் அவளை, அவளது அருகாமையை உணர்ந்தது.
“மாமா… ம்ப்ச்… நான் சொன்னது ஓகே வா?” என வித்யா அவனை உலுக்க, அவள் என்ன கூறினாள் என சந்த்ரு செவியில் நுழைந்தாலும் மூளையில் பதியவில்லை. வெறும் தலையை மட்டும் ஆட்டினான்.
“சரி… அப்போ இதை பாரு” என அவன் முகத்தை தன் அலைபேசியை அவன் முகத்திற்கு நேரே நீட்டினாள். ‘ச்சு…’ உச்சுக் கொட்டியவன், நிவியின் மீதிருந்த பார்வையை விலக்கிக் கொண்டான்.
“அடடே! யுகி நீயும் வந்து இருக்கீயா? வாப்பா?” தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அப்போது தான் உள்ளே நுழைந்த யுகேந்திரனை வரவேற்றார் ஆனந்தி.
அவன் பெயரை கேட்டதும் எங்கிருந்தோ ஒரு பொறாமை உணர்வு அடியாழத்திலிருந்து வெளிவர, அவனை முறைத்தான் சந்த்ரு. சற்று முன்னே அவன் முகத்திலிருந்த சிரிப்பு தொலைந்து விட்டிருந்தது.
“எப்படி இருக்க பா? நல்லா இருக்கீயா? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” ஆனந்தி யுகியிடம் வினவ, சிறிய புன்னகையுடன் அவருக்கு பதிலளித்தான் ஆடவன். அவன் வந்ததும் அவனருகில் சென்று நின்று கொண்டாள் நிவி. அவள் கைகள் அன்னிச்சையாய் யுகியின் விரல்களோட பிணைந்த போது, இங்கே சந்த்ருவிற்கு புகைந்து போனது. சட்டென துளிர்த்த கோபத்தில் முகமெல்லாம் சிவந்து விட்டது சந்த்ருவிற்கு.
ஆனந்தியின் குடும்பம் மட்டும் தான் இருப்பதாய் எண்ணி நிவி வந்திருக்க, அழகர்சாமியின் அக்கா குடும்பமும் வந்திருந்தது. சுற்றி யாவரும் புது முகங்களாய் இருக்க, தெரியாத இடத்தில் குழந்தை போல தவித்தவள், யுகி வந்ததும் அவனுடன் சென்று நின்றாள்.
“உக்காருங்க ரெண்டு பேரும். ஏன் பா நிக்குறீங்க?” என்ற அழகசர்சாமி அவர்களுக்கு பழச்சாறை கொண்டு வருமாறு வேலைக்கார பெண்மணியிடம் பணித்தார்.
நேரம் ஏழைத் தொட, “எல்லாரும் வந்தாச்சு இல்லை. கேக் கட் பண்ணலாம் வாங்க!” என வித்யா ஆர்பரிக்க, யுகியின் கண்கள் அன்னிச்சையாய் அவள் மீது விழுந்தது. அவளருகில் நின்றிருந்த விஜயும் குழந்தை போல தான் இருந்தான்.
“டேய்! வா கேக் வெட்டலாம். டைம் ஆகிடுச்சு!” என சந்த்ருவின் கையைப் பிடித்து இழுத்து வந்தார் ஆனந்தி. நடுக்கூடத்தில் அணிச்சல் மேல் மெழுகுவர்த்தியை ஏற்றினாள் வித்யா.
“ஹம்ம்… வெட்டு டா” என அழகர்சாமி அவனுக்கு இடதுபுறம் நிற்க, வலது புறம் ஆனந்தி நின்றார். சிறிது நேரத்திற்கு கோபத்தை ஒதுக்கி வைத்தவன், மெழுகுவர்த்தியை அணைத்து விட்டு, இனிப்பு அணிச்சலை வெட்டி தன் தாய்க்கு முதலில் ஊட்டினான். பின் தந்தைக்கு ஊட்டினான்.
“ஹேப்பி பர்த்டே டா கண்ணா!” என ஒரு சாவியை அவன் கையில் கொடுத்தார் அழகர்சாமி.
“ப்பா…” என சந்த்ரு கேள்வியாகப் பார்க்க, “இதுவரை என் காரை தான் யூஸ் பண்ணிட்டு இருந்த. இப்போ உனக்குன்னு புதுசா ஒரு கார் வாங்கியிருக்கேன். இனிமே நீ இதை தான் யூஸ் பண்ணணும்” என அழகர் கூறியதும், அவரை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான். அந்த காட்சியில் நிவியின் இதழ்கள் விரிய, யுகி அதை வெற்றுப் பார்வை பார்த்தான். நொடியில் யுகியின் நினைவு எதையோ சுற்ற, அவன் முகத்தை திரும்பி கலக்கத்துடன் பார்த்தாள் நிவி.
“எனக்கு ஒன்னும் இல்லை டி” என கூறிய யுகியின் கைகளுடன் தன் கைகளை இறுக்கமாக பிணைத்துக் கொண்டவளின் ஆறுதலில் ஆடவன் இதழ்கள் புன்னகையை உதிர்த்தது.
“ஹேப்பி பர்த்டே டா!” ஆனந்தி அவன் கழுத்தில் ஒரு மெல்லிய சங்கிலியைப் போட, லேசான குறும்பு சிரிப்பு ஒட்டிக் கொண்டது நிவியின் உதட்டில். ‘இன்னும் ஒரு செயின் போட்டா, பக்கவா எல்லா பொருத்தமும் இருக்கும் அத்தை!’ என மனதில் நினைத்துக் கொண்டாள். அடுத்தாக வெட்டிய துண்டை நிவிக்கு ஊட்ட சொல்லி மனம் சண்டித் தனம் செய்ய, அதை பொருட்படுத்தாமல் விஜய்க்கும் வித்யாவிற்கும் ஊட்டி விட்டான். ஆனால், பார்வை என்னவோ, நிவியின் மீது தான் படர்ந்தது.
அடுத்தடுத்து ஒவ்வொருக்கும் சந்த்ரு இனிப்பை வழங்கினான். நிவியின் அருகில் வந்தவன், அவளுக்கும் யுகிக்கும் ஒரு சிறிய காகித தட்டில் கொடுத்தான். யுகியின் புறம் அவன் பார்வை செல்லவே இல்லை. அவனைப் பார்த்தால் எழும் பொறாமை உணர்வை சந்த்ருவால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை.
“தேங்க்ஸ்!” என்றவள், அவன் முகத்தைக் கூட காணது அணிச்சலை வாங்கிக் கொண்டாள். அவள் மீது ஒரு நொடி பார்வையை பதித்த சந்த்ரு சட்டென வேறுபுறம் நகர்ந்து விட்டான். உள்ளே எதோ உணர்வுகள் குவிய துவங்கியது. அவளருகில் சொல்லமுடியாத, விளக்க முடியாத உவகை ஒன்று எழுந்தது.
“மாமா, கேக் சாப்பிடு!” என யுகிக்கு நிவி ஒரு வாய் ஊட்டி விட்டு, பின் தானும் உண்ண, சந்த்ரு என்னும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொண்டது.
“அப்புறம் உன் பிஸ்னஸ் எப்படி பா போகுது?” என அழகர் வினவ, அவரிடம் பதில் கூறிக் கொண்டிருந்தான் யுகேந்திரன்.
கையை கழுவிவிட்டு வந்த நிவிக்கு அப்போது தான், தான் வாங்கி வந்த பரிசு நினைவு வந்தது. அதை கையில் எடுத்தவள், சந்த்ருவை விழிகளால் துழாவினாள். ஒரு நாற்காலியில் அமர்ந்து இருந்தவனின் அருகே வித்யா அமர்ந்து இருந்தாள்.
யுகியை கொடுக்க சொல்லாம் என நினைத்தவள், பின் தானே அவனருகில் சென்றாள். குனிந்து இருந்தவன், அவளது அரவத்தை உணர்ந்தாலும் நிமிரவில்லை. சற்று முன் அவள் யுகிக்கு ஊட்டிய அணிச்சலின் விளைவு தான் இது.
அவனை எப்படி அழைப்பது என தெரியாமல் விழித்தாள். ‘ஒரு மனுஷி வந்து நிக்குறது கூட தெரியலை. திமிர்!’ என மனதிற்குள் கறுவியவள், அவனை அழைக்க விழைய, “நிவி, இங்க வா டா. ஒரு பீஸ் கேக் தானே சாப்ட? போதுமா? இது உன் வீடு மாதிரி. நல்லா சாப்பிட வேண்டியது தானே?” என ஆனந்தி வினவினார்.
“ஐயோ! போதும் அத்தை. ஸ்வீட் ரொம்ப சாப்ட மாட்டேன் நான்!” என கூறிக் கொண்டிருந்தவள் அருகில் வந்தான் யுகி.
‘ஐயோ! அவ எப்படி என்னைக் கூப்டுவான்னு வெய்ட் பண்ணா, இந்த அம்மா வேற?’ என மனதில் நொடித்துக் கொண்டான் சந்த்ரு.
நிவி காதருகே குனிந்த யுகி, “டைமாச்சு டி… நம்ம கிளம்பலாமா?” என குரலை தழைத்து வினவ, அவனை பார்வையால் எரித்துக் கொண்டிருந்தான் சந்த்ரு.
“போகலாம் மாமா… இந்த கிஃப்டை மட்டும் நீயே கொடுத்துட்டு வா!” அவன் கைகளில் பரிசை ஒப்படைத்தவள், நிம்மதியாய் உணர்ந்தாள்.
யுகி தன்னருகே வருவதை உணர்ந்த சந்த்ரு வேண்டும் என்றே வராத அழைப்பை ஏற்று காதில் வைத்து பேசினான். அவனை காக்க வைப்பதில் அற்ப சந்தோஷத்தை சந்த்ரு மனது அனுபவித்தது. ஐந்து நிமிடங்கள் வரை பேசுவது போல நடித்தவன், அலைபேசியை சட்டைப் பையில் வைத்தான்.
“ப்ரதர்! ஹேப்பி பர்த்டே!” யுகி சிறிய புன்னகையுடன் பரிசை சந்த்ரு கையில் கொடுத்தான்.
‘யாருக்கு யாரு டா ப்ரதர்? யார்? ஹம்ம்?’ என கேட்டு அவன் அளித்த பரிசுப் பொருளை உடைக்கும் வேகம் வந்தாலும் வலுக்கட்டாயமாக வரவழைத்த புன்னகையுடன் அதைப் பெற்றுக் கொண்டான் சந்தரு.
யுகி நகர்ந்ததும் விறுவிறுவென தனதறைக்கு சென்று விட்டான் ஆடவன். அவனுடைய அலைபேசி நீள்விருக்கையிலே விட்டு சென்றிருக்க, அது ஒலிக்க ஆரம்பித்தது.
கையிலெடுத்த ஆனந்தி, “வித்யா, விஜய் யாராவது இதை சந்த்ரு கிட்ட கொடுங்க!” என கூற, அவர்கள் இருவரும் தங்களுக்குள்ளே பனிப்போரில் ஈடுப்பட்டிருந்தனர்.
ஆனந்தியின் சொற்கள் அவர்கள் காதில் விழவே இல்லை.
“நிவி மா, அந்த லெப்ட் சைட் சந்த்ரு ரூம் இருக்கு. இதை மட்டும் குடுத்துட்டு வா டா” என அவள் பதில் பேசும் முன் அவள் கையில் அலைபேசியை திணித்திருந்தார்.
‘ச்சு… இவனுக்கு வேலைக்காரி ஒன்னு தான் கேடு!’ என நினைத்து முனங்கியவள், அவன் அறைக்கு சென்றாள். பாதி சாற்றியும் சாற்றாமலும் இருந்த கதவில் கையை வைக்கப் போனவள், அப்படியே நின்றாள். சற்று முன் சந்த்ரு அவனுக்கு கொடுத்த கைக்கடிகாரத்தை சுக்கு சுக்காக உடைத்து குப்பைக் கூடையில் போட்டுக் கொண்டிருந்தான். கதவிடுக்கில் அதைப் பார்த்த நிவிக்கு கோபம் கரையை கடக்க துவங்கியது.
‘எல்லாம் பணத்திமிர்… எவ்ளோ தைரியம், காசுப்போட்டு வாங்குன பொருளை இப்படி உடைப்பான். சொந்தமாக சம்பாரிச்சு இருந்தா தெரியும். அப்பா சொத்துல சொகுசா வாழ்றான் இல்லை? அதான்!’ என நினைத்தவளுக்கு அவன் செயலை மன்னிக்கவே முடியவில்லை. கோபம் ஆற்றாமையாகி விழிகளை சுரக்க செய்ய, மனம் லேசாய் அடிபட்டு போனது சந்த்ருவின் செயலில். பணமில்லை என்ற காரணத்திற்காக இத்தனை அவமானப்படுத்துவானா இவன்? இனிமே இவன் முகத்தில் விழிக்கவே கூடாது என சபதம் எடுத்தவள், விறுவிறுவென கூடத்தை நோக்கி நடந்தாள். ஆனால், விதி அவர்கள் இருவரையும் இணைத்துப் பார்த்து சிரித்தது.
“அத்தை, அவர் ரூம் லாக்ல் இருக்கு. தட்டுனேன், திறக்கலை. எங்களுக்கு டைமாச்சு. நாங்க கிளம்புறோம்!” படபடென அவர் முகத்தை பார்க்காமல் கூறினாள் நிவேதா.
“நிவிமா, இன்னைக்கு நைட் டின்னர் அரேஞ்ச் பண்ணி இருக்கோம். சாப்ட்டு தான் போகணும்!” அவளுடைய கையைப்பிடித்து கொண்டார் ஆனந்தி.
“அத்தை, யுகி மாமா ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்காரு. அவர் கூட வெளிய போய் சாப்டலாம்னு பிளான் அத்தை” நாசுக்காய் மறுத்து விட்டாள். ஆனந்தியும் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.
“மாமா, போகலாம் வா!” என கூறி நொடியில் பெண் வெளியேர, அழகரிடம் விடைபெற்று அவளுடன் சென்றான் யுகி.
இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த யுகியின் பார்வை நிவியை தொட்டு மீள, “நிவி, என்னாச்சு? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என வினவினான்.
“ச்சு… ஒன்னும் இல்லை மாமா. லைட்டா தலைவலி. நீ வீட்டுக்குப் போ முதல்ல!” என்றவளை கேள்வியாக பார்த்தவன், அருகில் உள்ள உணவகத்திற்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி உண்ண வைத்தான். கடமைக்கு உணவை உண்டவளின் மனம் நடந்த நிகழ்வையே நினைத்து வலம் வந்தது.
அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டவன், நேரே சென்றது சென்னை மெரீனா கடற்கரை. குளிர்ந்த காற்று முகத்தில் கோதி கூந்தலை கலைத்து விளையாடும் போது தான் தன்னுணர்வு பெற்றவள், தன் முன்னே உள்ள கடற்கரையை பார்த்தாள். புன்னகை இதழ்களில் ஒட்டிக் கொண்டது.
“வாங்க மேடம்!” என அவள் கைகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு, தண்ணீரை நோக்கி சென்றான் யுகி. இருவரும் ஓரிடத்தில் அமர, மனம் லேசாய் அந்த சூழலை அவதனிக்க, நடந்த நிகழ்வுகள் காற்றோடு கலந்து விட்டது. இரவின் அழகை பிரதிபலித்து முழுநிலவு கண்ணைக் கவர்ந்தது. அதன் பிரதிபிம்பம் நீரில் எதிரொலிக்க, நொடிக்கு ஒரு முறை வந்து செல்லும் அலைகள் அதை அழித்து அழித்து விளையாட, நிலவு மீண்டும் மீண்டும் உருவம் பெற்று கொண்டிருக்க, அந்த காட்சி அத்தனை அழகாய் மனதில் பதிந்தது.
“சரி சொல்லு, என்னாச்சு? ஏன் திடீர்னு டல்லாகிட்ட?” என யுகி வினவ, “ஹ்ம்ம், அது.. ஆனந்தி அத்தை, அவங்க குடும்பத்தை பார்த்ததும் நம்ம வீடு ஞாபகம் வத்துடுச்சு. திங்கள் கிழமை நீ கிளம்பிட்டா, மறுபடியும் யாருமில்லாம ரொம்ப லோன்லியா இருக்கணும் இல்ல. அதான்” பொய் என தெரிந்தும் அவனிடம் கூறினாள்.
“ம்ப்ச்… அதான் மந்த்லி ஒன்ஸ் நான் வரேன் இல்ல. அப்ப அப்ப நீயும் வீட்டுக்கு வா டி. உன்னை என்ன இங்க கட்டிப் போட்டா வச்சிருக்காங்க” என செல்லமாய் திட்டியவன், சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து சென்றான்.
தன் அறையிலிருந்து சிறிது நேரம் கழித்து வெளியே வந்த சந்த்ரு, நிவியை விழிகளால் தேடினான். அவள் அகப்படாமல் போகவே, “ம்மா… எல்லாரும் கிளம்பிட்டாங்களா?” என கேட்டான் ஆனந்தியிடம்.
“அதான் இங்க தான் எல்லாரும் இருக்காங்களே டா!” கோகிலாவின் குடும்பத்தை கைக்காட்டினார்.
“ம்ப்ச்… ம்மா…” என நெற்றியை சுருக்கியவன், “அது… அந்த பொண்ணு கிளம்பிட்டாங்களா? ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலை. அதான் கேட்டேன்” என்றான்.
“அவ அப்பவே கிளம்பிட்டா டா” என்ற ஆனந்தி நகர, ‘போய்ட்டாளா? அடுத்து எப்போ மீட் பண்றது?’ என அவன் மூளை யோசிக்க, அவனை இனிமேல் காணவே கூடாது என பெண் சபதம் எடுத்திருப்பதை அறியாது.